அத்தியாயம் 15
ஆழிக்கண்ணன் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ந்து நிற்க அதற்கு மேலும் தாங்கள் அமைதியாய் இருந்தால் சரியாக இருக்காது என்று உணர்ந்த செந்தில்நாதன் மனைவியை பார்க்க அவரும் புரிந்துக் கொண்டு தலையசைத்தார்.
“சம்பந்தி..நமக்குள்ள ஏதேதோ நடந்து போச்சு..பழசை விட்டுடுவோமே..உங்க மக உதயாவை எங்க பையன் உதயிக்கு மனபூர்வமா கேட்கறோம்..நீங்க எல்லாரும் யோசித்து நல்ல முடிவா சொல்லுங்க..நாங்க இப்போ கிளம்புறோம்..”
என்று அவரை சங்கடப்படுத்த விரும்பாமல் விடைபெறும் விதமாய் கூற,
“இருங்க மாமா..ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க..வாசலோட போக நினைச்சால் எப்படி..சாப்பிட்டு போலாம் இருங்க..”
என்று மதி சொல்லவும் ஆழிக்கண்ணனும்,
“ஆமா..ஆமா..வாங்க உட்காருங்க..”
என்று சொல்ல,
“இல்ல பரவாயில்லை..ஏற்கெனவே ரொம்ப லேட் ஆகிடுச்சு..கிளம்பறோம்..”
என்று அவர்கள் தயங்கவும்
“அப்போ உங்க பொண்ணு வீட்டுல சாப்பிட மாட்டீங்க..இன்னும் உங்க மனசுல அதெல்லாம் இருக்கு அப்படி தான..”
வெண்பா சண்டைக்கு கிளம்ப,
“இல்ல இல்ல..” அவரசமாய் மறுத்த சரண்யா,
“என்ன சொன்னாலும் குத்தம் சொல்றீயே..”
என்று பாவமாய் பார்க்க அவர் பாவனையில் சிரித்துவிட்டாள் வெண்பா.
அவள் சிரிப்பில் தான் அவர்கள் மனம் சற்று லேசாக அங்கே சோபாவில் வந்து அமர வெண்பா அவர்களுக்கு உணவு தயாரிக்க கிட்செனிற்கு சென்றாள்.
கல்யாண விசயமாய் பேசியதால் அதனை குறித்து என்ன சொல்வது என்று ஆழிக்கண்ணன் தயங்க அதனை உணர்ந்தார் போல்,
“இன்னைக்கு ஹாஸ்பிட்டலில் பார்த்தோமே..எல்லாரும் சுகம் தானே..”
என்று செந்தில்நாதன் வேறு விசயத்திற்கு தாவினார்.
“அது சின்னவன் தயாவிற்கு மகன் பிறந்திருக்கான்..”
“ஹோ..அப்பிடிங்களா..ரொம்ப சந்தோஷம்ங்க..”
என்று அவர்களும் மகிழ அப்படியே பேச்சு சகஜமானது.ஆழிக்கண்ணன் உதய்யின் வேலையை பற்றி கேட்க அவன் தன் தற்போதைய வேலையையும் எதிர்கால திட்டங்களையும் தெளிவாய் பேச அதனை கவனிக்காதது போல் கவனித்தான் மதிவாணன்.இன்னும் ஒரு வார்த்தைக்கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
சரண்யா எழுந்து மகளுடன் பேச கிட்செனிற்கு சென்றார்.இத்தனை அலபறைக்கும் உதயா அறையை விட்டு வெளியே வரவில்லை.கொதிக்கும் எண்ணெய் சட்டியை போல் அவள் முகத்தில் அனலடித்தது.
“எங்க நிலா..நிலாவை கூப்பிடுங்களேன்..பேசவே மாட்டேங்கிறா..”
என்று உதய் ஆர்வமாய் கேட்டான்.
ஆழிக்கண்ணன் பேத்தியை கூப்பிடவும் அவள் உள்ளிருந்து வெளியே வர தன் அருகில் உட்கார வைத்துக் கொண்ட உதய் அவளிடம் பேச்சு கொடுத்து அவளையும் தன்னோடு சகஜமாய் பேசவைத்தான்.
சிறிது நேரத்தில்,
“உங்களுட்ட ஒரு சீக்ரேட் சொல்லவா..”
என்று குரலை தாழ்த்தி நிலா பேச,
“என்ன சீக்ரேட்..” என்றான் உதய்யும் அதே குரலில்..
“எங்க அத்தைக்கு உஙகள பிடிக்கலைன்னு நினைக்கிறேன்..”
“ஓ..அப்படினு உங்க அத்தை சொன்னாங்களா..”
“இல்ல..அத்த சொல்ல..நீங்க தாத்தாட்ட அத்தை மேரேஜ் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்களா..அத்தை ஃபேஸ் அப்படியே ரெட்டா அங்கிரி எமோஜி மாதிரி ஆகிடுச்சு..”
என்று அவள் கவலையாய் சொல்ல, ‘வாண்டு எவ்வளவு தூரம் கவனிச்சு இருக்கு..’ என்றெண்ணி வியந்தாலும்,
“உனக்கு ஏன் இதில இவ்வளவு கவலை நிலா..”
என்றான் லேசான சிர்ப்போடு..
“நீங்க ரொம்ப ஸ்வீட்டா பேசுறீங்க..ஆனால் அத்தைக்கு பிடிக்கலையே….உங்களுக்கு தெரிஞ்சா நீங்க ஃபீல் பண்ணுவீங்க தானே..”
என்று பாவமாய் சொல்ல அதற்கும் சிரிப்பு தான் வந்தது.
“உங்க அத்தைக்கு பிடிக்காட்டி பரவாயில்லை..அதான் என் அக்கா மகளுக்கு பிடிச்சிருக்கே..”
என்று அவள் கன்னம் கிள்ள, “யெஸ்..யெஸ்..எனக்கு உங்களை பிடிச்சிருக்கு மாமா..” என்று அழகாய் சிரித்தாள் நிலா.
சாப்பிட்டு அவர்கள் கிளம்பும் போது சரண்யா நிலாவை தங்களோடு அனுப்பி வைக்க சொல்லி கேட்க புதியாய் அறிமுகமான தாய் வீட்டாருடன் செல்ல நிலாவும் ஆர்வம் காட்டவும் அவளுக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்து ஆயிரம் அறிவுரை கூறியே அனுப்பி வைத்தாள்.
அவர்கள் விடைப்பெற்று சென்றதும் தான் மருமகளிடம் திருமணம் பற்றி பேச்செடுத்தார் ஆழிக்கண்ணன்.
“வெண்பா..ஏன் ம்மா..உதயாவை கேட்காமல் இவ்வளவு அழுத்தமா சொல்லிட்டியே..இதெல்லாம் சரியா வருமா..”
என்று தயக்காய் ஆழிக்கண்ணன் கேட்க,
“என்னை நம்புங்க மாமா..இது தான் சரி..நீங்க மேற்கொண்டு ஆக வேண்டியதை பாருங்க..”
என்க மதி எதுவும் பேசவில்லை.ஆனால் ஏன் இத்தனை பிடிவாதம் என்று டென்ஷனோடு அவன் பார்க்க வேகமாய் உள்ளிருந்து வெளியே வந்த உதயா,
“நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்..எனக்கு கல்யாணம் பேசும் முன்னாடி என்னோட விருப்பம் கேட்கணும்ல அண்ணி..எனக்கு பிடிக்கல வேண்டாம்…”
என்று திட்ட வட்டமாய் மறுத்தாள்.
“சரி..உதய்யை பிடிக்கல..அப்போ வேற பையன் பார்த்தால் உனக்கு சம்மதம் தானே..”
“அ..அது..எனக்கு இப்போ மேரெஜ் செஞ்சுக்க விருப்பம் இல்லண்ணி..இப்ப தான் சம்பாதிக்க ஆரம்பிச்சு இருக்கேன்..கொஞ்ச நாள் நான் என் சொந்த காலில் நிற்கணும்..”
“ஏன்..கல்யாணம் பண்ணிக்கிட்டும் நீ வேலை போகலாமே உதயா..உனக்கும் வயசு ஆகிட்டு இருக்கு..நாளைக்கு உங்க அம்மா இருந்தால் இப்படி விட்டு இருப்பாங்களானு எல்லாரும் என்னை தான் பேசுவாங்க..”
“எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடறீங்கண்ணி..யாரோ பேசுறதுக்கு நா கல்யாணம் பண்ணிக்க முடியுமா..”
“யாருக்காகவோ வேணாம்..எனக்காக பண்ணிக்கோ..”
“ம்ச்…எனக்காக நீங்க உங்க ப்ரதரை கட்டாயப்படுத்துறீங்க அண்ணி..பிடிக்காத ஒருத்தரை மேரெஜ் பண்ணிக்கிற அளவு நான் குறைஞ்சு போயிட்டேனா..”
“பிடிக்கலைனு அவன் எப்போ சொன்னான்..அத்தோட இது என் சுயநலம் தான்..எனக்கு என் ரெண்டு குடும்பமும் முக்கியம்..ரெண்டுமே காலத்துக்கும் வேணும்..பிரிஞ்ச இந்த உறவு உங்க திருமண பந்ததால மறுபடியும் பலப்படும்..அதுக்காக தான் செய்றேன்..”
என்று சற்றும் தயங்காமல் பளீச்சென்று வெண்பா பேச,
“அதுக்கு நான் தான் ஆளா..”
என்றாள் இன்னும் கோபமாக..வெண்பாவோடு இப்படி மல்லுக்கட்டும் நிலை வரும் என்று அவள் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.அவளுக்கும் அவள் விருப்பங்களிற்கும் எப்பவும் வீட்டில் சப்போர்ட் செய்வது வெண்பா தானே..ஆனால் இன்று இந்த நிலையை அரவே வெறுத்தாள்.
“நான் இதுவரை எதுவுமே கேட்டது இல்லை..ஆனால் இப்ப சொல்றேன்..என் வார்த்தைக்கு இந்த வீட்டில் மதிப்பு இருந்தால் இந்த கல்யாணத்திற்கு சம்மதிப்பீங்க..”
என்று பொதுவாய் ஸ்திரமாய் கூறிய வெண்பா தன் அறைக்குள் சென்றுவிட கோபமாய் கையை உதறிய உதயாவும் உள்ளே சென்றுவிட அங்கே திகைத்து நின்றது மதியும் ஆழிக்கண்ணனும் தான்.
“என்னப்பா செய்றது..”
“என்ன சொல்ல மதி..கொஞ்ச நாளாவே உதயாவோட கல்யாணம் விசயம் என் மனசை அரிச்சிட்டே இருக்கு..உதயாகாக நல்ல நல்ல சம்மந்தம் எல்லாம் வந்துட்டு தான் இருக்கு.. ஆனால் அதை பத்தி பேசினாலே பிடிக்கொடுக்காமல் தான் இருக்கா..ஒருவேள இந்த உதய்யை நினைச்சிட்டு தான் கல்யாணத்துல பிடித்தம் இல்லாமல் இருக்கோனு நானுமே பல வாட்டி யோசிச்சு இருக்கேன்..வெண்பாவும் எதையும் யோசிக்காமல் செய்யுற பொண்ணு கிடையாது..இது நடந்தால் எனக்குமே நிம்மதி தான் மதி..உதயா சந்தோஷமா இருந்தாள் போதும் எனக்கு..”
என்று தளர்வாய் கூறியவர் நேரம் ஆகிவிட்டதால் உறங்க சென்றுவிட்டார்.
“உதய் மாப்பிள்ளையா..” என்று நினைத்தாலே கசந்தது மதிக்கு..அவன் பார்வையில் சிறுவயதில் இருந்த அதே பிடிவாதமான திமிரு பிடித்தவனாக தான் உதய் இருந்தான்.அவன் மீது நல்ல அப்பிராயமே இல்லை.
தங்கள் அறைக்கு வந்தவன்,
“என்ன பண்ற வெண்பா நீ..இது உதயாவோட வாழ்க்கை..அவ ஆசைப்படி தான் நடக்கணும்..பிடிக்கலைன்னு சொல்ற பிள்ளைய எதுக்கு கட்டாயப்படுத்த நினைக்கிற..”
என்றான் தங்கைக்கு பரிந்துக்கொண்டு..அவன் முகமே அவன் பயங்கர டென்ஷனில் இருப்பது புரிய அவன் கைப்பற்றி அருகில் அமர்த்திக் கொண்டவள்,
“உங்க கோபமான முகத்தை பார்த்து எத்தனை நாள் ஆச்சு..”
என்று இமை கொட்டி கன்னதில் கைவைத்து இரசித்து கூறினாள்.
அவனை டென்ஷன் ஏத்திவிட்டு கூலாய் பேசும் அவள் தலையிலே ரெண்டு போட்டால் என்ன என்று தோன்ற அதனை அவன் கண்கள் அப்படியே பிரதிபளித்தது.
“ஒகே..ஒகே..கூல்..மொதல்ல நான் சொல்றதை கேளுங்க..நீங்க உதய் தவிர எத்தனை மாப்பிள்ளை பார்த்தாலும் உதயா சம்மதிக்கவே மாட்டாள்..ஏன்னா அவ உதய்யை விரும்புறா..”
“தோடா..உதய்யை நீ மேரேஜ் பண்ணிக்க சொன்னதுக்கும் தான் மாட்டேன்னு ஸ்ராங்கா சொல்லிட்டாளே..”
“அட சொல்றதை முழுசா கேளுங்க..ஆனால் அதைவிட அதிகமா அவன்மேல கோபத்தில் இருக்கா..அதனால அவனை விரும்புறதை அவ ஒத்துக்கவே மாட்டாள்.கோபம் தீர்ந்து அவளே வந்து உதய்யை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற வரை காத்திருக்க நினைச்சோம்னு வைங்க..இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்காது..இந்த மாதிரி அதிரடியா எதாவது செஞ்சால் தான் உண்டு..”
“அடிப்பாவி..அப்போ எல்லாம் ப்ரீபளாண்டா..? நான் கூட அந்த ஸபார்ட்ல தோனினதை செஞ்சியோன்னு நினைச்சேன்..”
“காலைல ஹாஸ்பிட்டலில் அப்பா அம்மாவை பார்த்தபோ இவங்க என்னை இப்படி விட்டுடாங்களேனு கோபம் நிறையவே இருந்துச்சு..அந்த டென்ஷன்ல தான் உங்களையும் கத்திட்டேன்..ஆனால் மனசு உள்ள ஆதங்கத்தை கொட்டிவிட்டதாளோ என்னவோ மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடுச்சு..நிதானமா யோச்சேன்..நான் அவ்வளவு பேசினதுக்கு அப்புறம் கண்டிப்பா என்னை பார்க்க வருவாங்கனு தெரியும்..அப்படி வரும்போது உதயா மேரேஜ் பத்தி பேசிடனும்..இதுக்கு ஒரு முடிவு எடுத்தாகனும்னு நினைச்சு இருந்தேன் தான்..”
“அப்போ இன்னைக்கு பேசினது உதய்யோட அக்கா இல்ல..உதயாவோட அண்ணி…அப்படி தானே..”
“அப்படியும் சொல்லலாம்..இப்படியும் சொல்லலாம்..”
தலையை அசைத்து அவள் அபிநயமாய் சொல்லிய அழகில் அவன் உதடுகளில் புன்னகை அரும்பியது.
“உன் தம்பி மேல எனக்கு இன்னமும் நல்ல அபிப்ராயம் இல்ல தான்..ஆனால் உதயா விருப்பம் அவன் தான் என்கிற போது..என்னால மறுக்க முடியல..”
என்று மனதை மறையாமல் மனைவியிடம் பகிர திரும்பி அவன் முகம் பார்த்து அமர்ந்த வெண்பா,
“உங்களுக்கு உதய்யை பத்தி சரியா தெரியல..அவன் பாசம் வைச்சிவிட்டால் எவ்வளவு கேர் பண்ணுவான் தெரியுமா..?? தன்னோட சேர்த்து தன்னை சுத்தி உள்ளவங்களும் வளரனும்னு நினைக்கிற மனசு உள்ளவங்க இந்த காலத்துல ரொம்பவே கம்மிங்க..ஆனால் அந்த மனசு உதய்யுக்கு சின்ன வயசுலேந்து இருக்கு..நிஜமாவே அவனை மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க உதயா கொடுத்து வைச்சிருக்கணும்..நான் சொன்னால் என் தம்பிங்கிறதுக்காக சொல்றேன்னு தான் தோணும்..போக போக நீங்களே அவனை புரிஞ்சிப்பீங்க..”
என்றவள் முகம் தம்பியோடான தன் சிறுவயது நினைவில் பூவாய் மலர்ந்தது.
மையமாய் தலை ஆட்டியவன்,
“யப்பா..என் பொண்டாட்டி இத்தனை வருஷம் செண்டு இன்னைக்கு தான் என்னுட்ட இவ்வளவு பேசியிருக்கா..பிறந்த வீட்டை பத்தி பேசும்போது எங்கிருந்து தான் இந்த பொண்ணுங்களுக்கு உற்சாகம் அருவி மாதிரி வழியுதோ தெரியல..”
என்று அவளை சீண்ட பிடித்திருந்த கையை நறுக்கென்று கிள்ளிவிட்டவள்,
“பொண்டாட்டி பேசாத வரை தான் சர் நீங்க தப்பிக்கலாம்..பேச ஆரம்பிச்சிட்டால் உங்க பாடு திண்டாட்டம் தான்..”
கண்சிமிட்டிய மனைவியை அப்படியே அள்ளி கைக்குள் வைத்துக் கொண்ட மதி,
“நீ என்ன பேசினாலும் எவ்வளவு பேசினாலும் நான் கேட்பேன் கண்ணம்மா..அதுக்காக தான் இத்தனை வருஷம் தவமா இருந்தேன்..”
என்னும் போது குரல் நெகிழ்ந்து இருந்தது.
அவள் உள்ளம் உருகிவிட தானும் உணர்ச்சி வசப்பட்டால் மதி இன்னும் உடைந்துவிடுவான் என்பதை உணர்ந்த வெண்பா,
“ஆக..நீங்க சொச்ச பொழுதையும் பேசியே தான் கழிக்க போறீங்களா..சோ ஸேட்..பாருங்க ஆல்ரெடி சில்வர் ஹேர் பல்லைகாட்டுது..”
என்று வம்பிழுக்க கணவனாய் பேசாமல் என்ன செய்யலாம் என்பதை காட்ட தொடங்கினான் மதி.
உதய் வீட்டை அடைந்ததுமே அவனுக்கு ஃபோன் மேல் ஃபோன் வந்துக் கொண்டே இருந்தது.செந்தில்நாதன் அழைக்கவும் ஊருக்கு போவதாக மொட்டையாய் சொல்லி மொபைலை அணைத்து போட்டிருக்க மீண்டும் உயிர்ப்பிக்கவும நோட்டிஃபிகேஷன் குவிந்தது. நிலா வரும்வழியிலே தூங்கி இருக்க வீட்டிற்கு வந்ததும் அவளுக்கு அறையை ஏற்பாடு செய்து அவளை மீண்டும் தூங்க வைத்தபின் தன் நண்பன் கிஷோருக்கு அழைத்தான்.
“டேய்..இன்னைக்கு முக்கியமான ஷூட் இருக்குனு தெரியும்லடா..திடீர்னு ஊருக்கு போயிட்ட..ஃபோனும் எடுக்கல..இங்க ஸ்க்ரிப் பேப்பரை எங்க வைச்சு தொலைச்ச..கடைசி நேரத்தில் காணாமல் மறுபடியும் ப்ரிண்ட் பண்றதுக்குள்ள சர் காய்ச்சி எடுத்துட்டார்..அப்படி என்னடா தலைபோற வேலை..”
“ம்ம்ம் எனக்கு பொண்ணு பார்க்க போனேன்..ஏண்டா நீ வேற..கொஞ்சம் ஃபேமிலி இஸூ..சரி சொல்லு அப்புறம் ஸூட் நல்லபடியா முடிஞ்சிதா..”
“அதெல்லாம் ஆச்சு..நீ எப்போ வருவ…சார் வேற உன்னை கேட்டுடே இருக்கார்..”
“இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும்டா..அதுவரை சமாளிச்சுகோ..சாரிடம் திட்டுவாங்கறது நமக்கு புதுசா என்ன..”
என்றவன் தன் வேலை தொடர்பான சில விசயங்களை பேசி வைத்தபின் தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.
அவன் முகத்தை பார்த்து,
“ஒரு மாதிரி இருக்கியே உதய்..உனக்கு இதில் விருப்பம் இல்லைய்யா..”
என்று செந்தில் கேட்டபடி மகன் அருகில் அமர சரண்யாவும்,
“எதுவா இருந்தாலும் சொல்லு உதய்..”
என்று மகனின் மறுபுறம் அமர்ந்தார்.
“அப்படிலாம் இல்லம்மா..உதயா ரொம்ப நல்ல பொண்ணு..அக்காவே சொல்லும் போது அவளை மேரேஜ் பண்ணிக்க எனக்கு ஒரு அப்ஜெக்ஷனும் இல்ல..ஆனால் உதயாவுக்கு தான் விருப்பம் இருக்காதுனு நினைக்கிறேன்..”
“ஏன்..அந்த பொண்ணு தானே உன்னை லவ் பண்ணுச்சு..”
“ஆனால் இப்போ என்மேல ரொம்ப கோபமா இருப்பா போல…அக்கா வேற உதயாவோட கலந்துக்காம பேசிடுச்சு..இதுனால ரெண்டு பேருக்கும் சண்டை வருமோனு யோசனையா இருக்கு..”
என்றான் மனக்கண்ணில் சென்னையில் அவனை அடிக்க வந்த உதயா முகம் தோன்றியது.
“என்னடா சொல்ற..அப்போ இந்த சம்பந்தம் கைகூடாதா..??”
என்று வருத்தமாய் சரண்யா பேச,
“அப்படின்னு சொல்லலேயே ம்மா..உன் மகளோட பிடிவாதம் உனக்கு தெரியாதா..அதிகமா பிடிவாதம் பிடிக்க மாட்டா..அப்படி பிடிவாதம் வந்துச்சுன்னா அதையே புடிச்சிக்கிட்டு நிற்கும்..இதுனால எதாவது பிரச்சனை ஆகிடுமோன்னு தான் இருக்கு..”
என்க,
“ஏன் உதய்..உதயா ரொம்ப கோபக்கார பொண்ணா…நான் அவளை அதிகம் பார்த்ததும் இல்லை..பேசினதும் இல்லை..”
சரண்யா கலக்கமாய் கூற சிரித்தவன்
“கோபமா..உங்க மருமக வேற லெவல் போங்க..”
என்று தன்னையும் மீறி மருமகள் என்று அவளை விளிக்க அதனை ஆச்சரியமாய் உள்வாங்கி கொண்டாலும் அதனை குறித்து எதுவும் கேட்கவில்லை.
உதய்யே தொடர்ந்து,
“மனசுல தோன்றதை அப்படியே பேசவோ செய்யவோ கொஞ்சம் கூட தயங்கவே மாட்டா தெரியுமா..படபட பட்டாசா வெடிக்க ஆரம்பிச்சா எதிர இருக்கிறவங்க தான் முழிக்கணும்..சொல்ல முடியாது..இப்ப என்னிடமே வந்து ‘நீ எப்படி என்னை பொண்ணு கேப்பேன்னு சண்டை போட்டாலும் போடுவா..”
என்று சொல்ல அதேசமயம் அவன் அலைபேசியும் கூவியது.
திரையில் அவள் பெயரை பார்த்ததும் மென்னகை பெரிதாய் விரிய,
“நான் சொன்னேன்ல..” என்று அவர்களிடம் காட்டியவன் எழுந்து தன்னறைக்கு சென்றுவிட்டான்.
“ஏங்க..ஒருபக்கம் அக்கா சொல்றதால மேரேஜ் பண்ணிக்கிறேன்..இல்லேனா எனக்கு ஒன்னும் இல்லங்கிற மாதிரி பேசுறான்..இன்னோர் பக்கம் அவன் கட்டிய பொண்டாட்டியை பத்தி பேசுறா மாதிரி உங்க மருமகனு உரிமையா சொல்றான்..இவனை எதுல சேர்கிறதுனே புரியலையே..”
மகன் பேசி சென்றதில் சரண்யா மொத்தமாய் குழம்பி போயிருக்க,
“விடு..விடு..எதுவா இருந்தாலும் அவங்களே பேசி ஒரு முடிவுக்கு வருவாங்க..”
என்றார் செந்தில்.
தன் அறைக்கு வந்ததும் அவன் அழைப்பை ஏற்க மறுநொடி,
“என்ன எனக்கு வாழ்க்கை கொடுக்கிறதா நினைப்பா..”
என்று ஹைடெசிபளில் உறுமியது உதயா என்ற பெண் சிங்கம்..
“வாட்..”
“என்ன வாட்..உங்களை யாரு என்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்ல சொன்னது..அன்னைக்கு சொன்னா மாதிரி இன்னைக்கும் முகத்தில் அடித்து சொல்லிவிட்டு போக வேண்டியது தானே..உங்க அக்கா கேட்டு எனக்கு வாழ்க்கை போடுறாராமா..?! நாங்க அப்படியே கண்ணுல தண்ணீ வைச்சு நன்றி சொல்ல உனக்குனு பாடுவோமா..?? நெவர்..இந்த உதயா அவ்வளவு ஈஸி கிடையாது உதய்..”
அவள் பேசிய தொனியில் அவனுக்கும் கோபம் துளிர் விட்டது.
“இப்போ இவ்வளவு பேசுறீயே..அங்கே இதை எல்லார் முன்னாடியும் சொல்ல வேண்டியது தானே..அப்போ சைலண்ட் ஆ இருந்துட்டு இங்க வந்து குதிக்கிறியா..”
“உங்களால உங்க அப்பா அம்மாவை இன்செல்ட் பண்ண கூடாதுனு தான் பொறுமையா இருந்தேன்..உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க..நீங்களே பிடிக்கலனு சொல்லிட்டு போயிட்டே இருங்க..”
என்று உதயா அலட்சியமாய் அதிகாரம் செய்ய ஒருவேளை அவள் தன்மையாய் பேசியிருந்தால் ‘உன்னை பிடிச்சு இருக்கும் போது..ஏன் நான் பிடிக்கலைனு சொல்லணும்..’ என்று கூறியிருப்பானோ என்னவோ..அவள் தொனியில் அவன் ஈகோவும் சிலிர்த்தெழ,
“என் அக்கா எண்ட ரொம்ப வருஷம் கழிச்சு ஒன்னு கேட்டு இருக்கா..ஸோ என்னால மறுக்க முடியாது..உனக்கு வேணும்னா..உன்னால முடிஞ்சா நீயே இந்த கல்யாணத்தை நிறுத்திகோ..”
என்றான் அவளைவிட அலட்சியம் நிறைந்த குரலில்..
“உங்க தயவு எனக்கும் தேவை இல்லை உதய்..இதை எப்படி அவாய்ட் பண்ணனும்னு எனக்கும் தெரியும்..”
என பட்டென்று அழைப்பை துண்டிக்க,
‘பெரிய இவ..போடி..’ என்று ஃபோனை பார்த்து சொன்னவன் அதனை மெத்தையில் வீசினான்.