இன்று ஏனோ காலையில் எழுந்ததில் இருந்தே மனது சரியில்லை என்று காலை வயல் வேலைகளை முடித்து கொண்டு தோப்பு வீட்டுக்கு வந்து விட்டான் ஆதித்யன். காலை உணவு கூட உள்ளே இறங்குமா என்பது பெரிய சந்தேகம் என்ற நிலையில் இங்கு கிளம்பி வந்து விட்டான்.வீட்டின் மாடியில் இருக்கும் ஊஞ்சலில் படுத்துக் கொண்டு ஏன் இப்படி இருக்கிறது என்று யோசித்து கொண்டு இருந்தான். அவன் சிந்தனையின் தொடர் வண்டி எங்கெங்கோ சென்று கடைசியில் உறக்கம் எனும் ஊருக்குள் நுழைய உறங்கி விட்டான்.
இந்த தோப்பு வீடு ஆதிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சினைகளிலும் துணையாக நின்றது இந்த வீடு தான். ஒரு தாய் மடி போல்.ஆகையால் இப்போதும் வந்து மடி சாய்ந்து கொண்டான்.
அவன் அம்மா அவன் சாப்பிடவில்லை என்பதால் ஒரு வேலையாளை அழைத்து கொண்டு சாப்பாடு உடன் வந்து விட்டார்.
“ஆதி”
“ஆதி”
“ஆதித்யா”
‘மேல தான் இருப்பான் . இவனோட . காலையில் வந்து சாப்பிட்டு இருந்தா என்னவாம்.எதாவது கனா கண்டிட்டு இருக்க வேண்டியது. வயசான காலத்துல என்னை இப்பிடி மாடியேற வைக்கிறான்.’ என்று புலம்பிய படியே
ஆதியின் அம்மா படிகளில் ஏறினார். அவன் தூங்கி கொண்டு இருப்பதை பார்த்து சற்று நிதானித்து பிறகு சென்று அவனை எழுப்பினார்.
” ஆதி … ஆதி பா எழுந்திரு டா”
” ப்ச் மா ” என்று முனங்கி கொண்டே எழுந்து அமர்ந்தான்.அவன் அம்மா அவனை முறைத்துக் கொண்டு இருப்பதை பார்த்தவுடன் அனைத்து யோசனைகளும் பின் சென்று விட . பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தான். அவன் அம்மா இன்னும் முறைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து
“ஏன் மா வந்த நானே கொஞ்ச நேரம் கழிச்சு வந்து இருப்பேன் ல”
“நீ வந்து இருந்தா நான் ஏன் வர போறேன். எப்பவும் சாப்பாட்டுக்கு வரவனை ஆளை காணோம். என்னன்னு உன் அப்பாகிட்ட கேட்டா அவர் நீ இங்க வந்துட்டனு சொல்றார். என்ன டா நினைச்சுட்டு இருக்கிங்க அப்பா மகனும்” என்று திட்டினார்.
” ஏன் மா இப்படி மூச்சு பிடிச்சு கத்திட்டு இருக்க. கொஞ்சம் அமைதி ஆகு மா”
” சரி சொல்லு என்னாச்சு இங்க வந்து உக்கார்ந்து இருக்க “
” ஒன்னும் இல்ல மா சும்மா தான் வந்தேன் “
அவனை இரு நிமிடம் ஆழ்ந்து பார்த்து விட்டு.
” சரி வா வந்து சாப்பிடு நான் கிளம்பிறேன்”
மறுப்பேதும் கூறாமல் அமர்ந்தவன் பத்து நிமிடத்தில் சாப்பிட்டு எழுந்து விட்டான்.
“வாங்க நான் உங்கள வீட்டுல விட்டுட்டு நான் ரைஸ் மில்லுக்கு போறேன் “
” மறக்காம மத்தியானம் சாப்பாட்டுக்கு வரனும்.என்ன”
” சரி மா நீ வா முதல்ல”
வண்டியில் சென்று கொண்டு இருக்கும் போது
” டேய் 6 மணிக்கு கோயிலுக்கு போகனும் வந்துரு”
” மா நான் எதுக்கு.நீங்களும் சித்தியும் போய்ட்டு வாங்க “
” நீ வா டானு சொன்னா வேற ஏதோலாம் பேசிட்டு இருக்க ” என்று அவர் ஆரம்பிக்க. ஆதிக்கு தெரிந்து விட்டது அவர் எங்கே தொடங்கி எங்கே முடிப்பார் ஆதலால் அவன் உடனே
” சரி மா நான் வரேன் நீங்க ரெடியா இருங்க ”
ஆதி அவரை வீட்டில் விட்டுட்டு ஆலைக்கு சென்று விட்டான். அங்கு இருக்கும் வேலைகளை விரைவாக முடிக்க ஆரம்பித்து விட்டான் மாலை கோயிலுக்கு செல்வதற்காக.