இனியாவுடன் இருக்கும் பார்வதி அம்மா வேறு யாரும் இல்லை அவளை சிறு வயதில் இருந்தே வளர்த்தவர் தான், இப்பொழுது அவள் பிள்ளைகளை வளர்க்கிறார். அவளை சிறு வயதில் இருந்து பார்ப்பதினாலோ என்னவோ அவள் மேல் பாசம் எவ்வளவு இருந்தாலும், கொஞ்சமே கொஞ்சம் அனுதாபமும் உள்ளது. அவள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை தான் அவளை வளர்த்தார். அதன் பிறகு அவளை கொடைக்கானலில் உள்ள பெரிய பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டனர். “பணக்காரர்கள் படிக்கும் பள்ளி” என்ற சில சொற்கள் போதுமானதாக இருந்தது அவளின் பெற்றோர்களுக்கு, அவளை பத்து வயதில் பள்ளி விடுதியில் சேர்ப்பதற்கு. சிலர் அப்படித்தான் ஊரில் உள்ள நால்வரின் சொற்களுக்காகவே வாழ்ந்து, மடிந்து விடுகின்றனர்.இனியா விடுதி செல்ல மாட்டேன் என்று கத்தினாள், கதறினாள், அலறினாள். ஆனால் அவளின் உணர்ச்சிகளை கேட்பதற்கோ ,பார்ப்பதற்கோ அந்த வீட்டு வேலைகாரர்களும், அவளின் செல்லப்பிராணிகளும் தான் இருந்தனர். அவளின் பாசத்திற்கு உரியவர்களோ பணத்தை இன்னும் இன்னும் பெருக்க வேண்டும் என்ற ஓட்டத்தின் பின்னால் இருந்தனர். அவள் விடுதிக்கு செல்ல, இவர் அந்த வேலையை விட்டுவிட்டு வேறொரு வீட்டு வேலைக்கு சென்று விட்டார். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் சென்று தான் அவளைப் பார்த்தார். பார்த்த போது இவ்வாறு தான் நினைத்தார் ‘இந்த பெண் எவ்வளவு பெரிதாக வளர்ந்து முதிர்ச்சிஅடைந்து விட்டாள்’ என்று. ஆனால் பின்னாளில் தான் தெரிந்துக் கொண்டார் , அவளின் முதிர்ச்சிக்கு பின்னால் உள்ள காரணமும், இந்த சமூகம் அவளிற்கு வழங்கிய பரிசான பாசமான பழிச் சொற்களையும். என்னதான் முதிர்ச்சியாக காட்டிக் கொண்டாலும் அவளின் அன்பிற்குரியவர்களுக்கு அவள் எப்போதும் அதே பத்து வயது முரட்டுக் குழந்தை தான். கோவிலுக்கு போகும் அவளைப் பார்த்து “ஆண்டவா, இந்த பொண்ணுக்கு இந்த ஊரில் ஆவது ஒரு நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டு, பா.”என்று வேண்டிக் கொண்டு வீட்டினுள்ளே சென்று விட்டார்.
இனியா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்ற போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர ஆரம்பித்தது. அவள் சுவாமியை தரிசித்து விட்டு பிரகாரத்தை சுற்ற ஆரம்பிக்கும் போது தான் ‘பார்வதி அம்மாவையும் அழைத்து வந்து இருக்கலாம் ‘என்று தோன்றியது. ஏனென்றால் குழந்தைகள் அவர்களுக்கே உரிய குணமான ஒரு இடத்தில் நிற்க மாட்டேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இவளுக்கும் அவர்களை தன் கைக்குள் வைத்துக் கொள்ள ஆசை இல்லை, ஆகையால் அவர்களுக்கு எப்போதும் அவள் அணிவிக்கும் டிராக்கர் வசதி உள்ள காப்பு ஒன்றை அணிவித்து அவர்களை விளையாட விட்டு விட்டாள். தன் கண் எதிரே இருக்குமாறும் பார்த்துக் கொண்டாள். இனியாவின் பையன் அமைதி என்றால் அப்படியே எதிர் பதம் அவளின் குட்டி அராத்து.
பிரகாரத்தை சுற்றும் போது, சாத்விக் இனியாவிற்கு எந்த பக்கம் வந்தாலும் ‘நான் இந்த பக்கம் தான் வருவேன் ‘என்று ஷன்வி ஒரு பக்கமாக வராமல் , சாத்விக்கையும் வர விடாமல் வம்பு வளர்க்க ஒரு கட்டத்தில் சாத்விக் அவளை துரத்த இவள் ஓட என்று அவர்கள் ஓடி பிடித்து விளையாட ஆரம்பித்து விட்டனர். கோவில் பெரிதாக இருந்தாலும் அதில் பாதி அளவு பூச்செடிகளும் மரங்களும் தான் வளர்த்து இருந்தார்கள். அவர்கள் இருவரும் அவள் நடந்து வந்த நடைப் பாதையின் அருகே உள்ள செடிகளைச் சுற்றி விளையாடிக் கொண்டு இருக்க, அவளும் அவர்களை பார்த்து அங்கேயே நின்று விட்டாள்.
அப்போது அந்த பக்கமாக வந்த சந்திரா இனியாவைப் பார்த்து நின்ற விட, கூட வந்த வேலையாள் முத்துவிடம் “முத்து ,நீ போய் நான் சொன்ன வேலையை முடி.நான் நம்ம ஊருக்கு புதுசா வந்து இருக்க வாத்தியார் பொண்ணுக்கிட்ட பேசிட்டு வாறேன். நீ வேலை பார்த்துக்கிட்டு அப்படியே அவுக குழந்தைகளையும் பார்த்துக் கோ.குட்டி பசங்களா இருக்காங்கல எங்கயாவது போய்ட போறாங்க.”
“ம், சரிங்க மா. ” என்ற முத்து தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.
பசங்களை பார்த்து கொண்டு இருந்த இனியாவிடம் சென்ற சந்திரா “இனியா ,எப்போ மா வந்த” என்றார்.
“நான் இப்ப தான் மா வந்தேன். நீங்க எப்படி இருக்கீங்க. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க.நீங்க முன்னாடியே வந்துட்டீங்களா மா.”என்றாள் இனியா.
“நானும் நல்லா இருக்கேன்.வீட்டுலயும் எல்லாரும் நல்லா இருக்காங்க மா.இது எங்க குலதெய்வ கோயில் திருவிழா என்பதால் நிறைய வேலைகள் இருந்தது. அதான் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டோம்.”
“ஓ அப்படிங்களா மா. சரிங்க மா “என்றாள் இனியா.
இப்படியே அவர்கள் பேச்சும் செல்ல , இடையே சாந்தியும் வந்தவர் அவர்களோடு இணைந்துக் கொண்டார்.இடை இடையே இனியாவிடம் வந்து இனியாவை சுற்றி விளையாடி விட்டு, செடிகள் பக்கம் சென்று விளையாடுவதுமாக இருந்தனர் அவளின் குழந்தைகள்.அப்படி விளையாடும் போது எப்போதும் செடிகள் பக்கம் செல்லும் ஷன்வியோ இந்த முறை நடைப் பாதையில் ஓட,பக்கவாட்டு வாசல் வழியாக நடந்த வந்த குழுவில் ஒருவர் மீது மோதி கீழே விழுந்து விட்டாள். விழுந்தவுடன் வீல் என்னும் சத்தத்துடன் கத்தி அழ , இவள் அழுவதைப் பார்த்து சாத்விக்கும் அழுக, இருவரின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு ஒரு நிமிடம் அந்த கோயிலில் உள்ள அனைவரும் இவர்களை திரும்பிப் பார்த்தனர். இனியாவிற்கு சத்தம் கேட்டவுடன் ஒரு நொடி அதிர்ந்து விட்டாள். என்னவென்று பார்த்தால் ஷன்வி கீழே அமர்ந்தவாறு அழுக , பையனோ அவன் தங்கையைப் பார்த்து அழுது கொண்டு இருந்தான். பார்த்தவுடன் ஓரளவு புரிந்து விட நொடியில் விரைந்து வந்து ஷன்வியை தூக்கிக் கொண்டாள். மகளை ஆராய்ந்து பார்த்து, எந்த அடியும் இல்லையென்று தெரிந்த பின் தான் ஆசுவாசம் அடைந்தாள்.மகளின் அழுகையை குறைத்து விட்டால் பையனும் சற்று அமைதி அடைந்து விடுவான் என்பதால் ஷன்வியை முதலில் கவனித்தாள் இனியா.
ஷன்வியை மோதியவர் அந்த குழுவில் இருந்த அனைவரையும் போக சொல்லி விட்டார். அவரது பேரன் மட்டும் அவருடன் நின்று கொண்டான். அவன் சாத்விக்கின் அருகில் சென்று அவனை சமாதானப் படுத்த முயற்சிக்க , முடியவில்லை. சாத்விக் தேம்பி கொண்ட அவன் அம்மாவின் கால்களைக் கட்டிக் கொண்டான். இனியா ஷன்வியுடனே மண்டியிட்டு அமர்ந்து அவனைக் கட்டிப்பிடித்து முதுகை தடவிக் குடுத்தால் .
சந்திரா அருகில் வந்து ” அடி எதுவும் பட்டு இருக்கானு பாரு ,மா.” என்றார்.
“இல்லை,மா. அடி எதுவும் இல்லை. புது ஆளுங்கள பார்த்தவுடன் கொஞ்சம் பயந்துட்டாள். அதான் அப்படி ஒரு சத்தம். ” என்றவள் ஷன்வியை இறக்கி விட்டுவிட்டு , அப்போது தான் பார்த்தாள் அவளின் அருகே சாத்விக்கின் தலையை கோதி விட்டவாறு ஒருவர் நின்று இருந்தார். தலையில் வெள்ளிகம்பிகளுடன் பார்க்க கம்பீரமாகவும் அமைதியான புன்னகையுடனும் நின்று இருந்தார் .
இனியா,” ஐயா, மன்னிச்சுருங்க பிள்ளைங்க விளையாட்டு ஆர்வத்தில் தெரியாமல் உங்கள இடிச்சு இருப்பாங்க” என்று முதியவரிடம் கூறியவள் ஷன்வியிடம் குனிந்து” ஷன்வி மா , ஆஸ்க் சாரி” என்றாள்.
அந்த முதியவரோ” அதனால் என்ன மா, சின்ன பிள்ளைங்க தான”என்று அவர் கூறி முடிப்பதற்குள் ஷன்விகாவும், இனியாவின் பின்னாடி இருந்து எட்டிப் பார்த்து” சாரி தாத்தா ” என்றாள்.
அவர் ஷன்வியின் கன்னத்தைத் தட்டி விட்டு, இனியாவிடம் திரும்பி”நீங்க இந்த ஊருக்கு புதுசா மா .” என்று கேட்டார்.
இனியா அவருக்குப் பதில் சொல்வதற்கு முன் “மாமா, இவுங்க தான் நம்ம ஊருக்கு புதுசா குடி வந்து இருக்க வாத்தியார், அந்த கவர்ன்மென்ட் காலேஜ்ல தான் வேலை பார்க்கிறாங்க ” என்று சாந்தி தன் மாமனாரிடம் கூறினார். மேலும் இனியாவின் பக்கம் திரும்பி “இவர் தான் எங்க மாமனார்,மா.” என்றார்.
“ஓ,அப்படிங்களா மா. சரிங்க மா” என்ற இனியா , மூவரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்தாள்.
இவர்கள் பேசிக் கொண்டு இருக்க, இனியாவிற்கு பின்னால் வந்த ஆதி
பிள்ளைகள் இருவரையும் அருகே அழைக்க, ஷன்வி தயங்கி கொண்டே வர ,சாத்விக் வர மாட்டேன் என்பது போல் இட வலமாக தலை ஆட்டினான். ஆதி ஷன்வியை தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டே , அவர்களின் பெயரை கேட்டவன் . மனதில் எங்கோ ஒட்டிக் கொண்டு இருந்த சிறிதளவு நம்பிக்கையை வைத்து அவர்களின் அம்மாவின் பெயரைக் கேட்டான். ஒரு வேளை இனியாவின் அண்ணன் குழந்தைகளோ என்று நினைத்தான். ஆனால் அவனின் நம்பிக்கையை பெட்ரோல் ஊத்தி எரித்து விட்டாள்.”என்னோட பேரு ஷன்வி, அண்ணா பேரு சாது,அம்மா பேரு அம்மு, அப்பா பேரு ஆது பா.” என்று தன் அம்மா சொல்லி கொடுத்ததை அழகாக கூறினாள் ஷன்வி.
ஷன்வி அவள் அம்மா பெயரை சொன்னவுடன் ,இனியாவை பார்த்தவனுக்கு அதன் பிறகு அனைத்தும் அவுட் ஆப் ஃபோகஸ் தான். காதல் கொண்ட மனம் அவள் நலமாக இருக்கிறாள் என்று ஒரு நொடியில் ஆரவாரமாய் ஆராய்ந்து அமைதி அடைந்தது.
அவன் மனமோ”அவளுக்கு என்ன பிள்ளை குட்டிகளோடு சந்தோசமாக தான் இருக்கிறாள். நீ தான் பைத்தியக்காரன் மாதிரி சுத்திட்டு இருக்க. ” என்று அவனை கண்டு எள்ளி நகை ஆடியது. அதன் தலையில் தட்டி தள்ளி வைத்து விட்டு இனியாவை பார்க்க ,அவளோ வீட்டுக்கு கிளம்பிகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.
இனியா வீட்டுக்கு செல்லலாம் என்று குழந்தைகளைப் பார்க்க சாத்விக் அருகில் நிற்க, ஷன்வியை காணவில்லை. ஆதி ஷன்வியிடம் “அம்மாவ கூப்பிடுங்க” என்றான்.ஷன்வியும் சமத்தாக அழைக்க, திரும்பி பார்த்த இனியாவிற்கு நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது. ஷன்வி ஒய்யாரமாக ஆதியின் கைகளில் அமர்ந்து இருந்தாள்.
இனியா மிக பிரயத்தனப்பட்டு முகத்தில் எதுவும் காட்டாமல், ஷன்வியிடம் “குட்டிம்மா இப்படி தான் யாருனு தெரியாதவங்கிட்டலாம் போறதா, முதல்ல வா, என்கிட்ட ” என்று கூறி குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
ஆதியின் தாத்தா ” அம்மாடி, இவன் வேற யாருமில்லை என் பேரன் ஆதித்யன்.” என்று அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
” ஓ அப்படிங்களா ” என்று கூறியவாறு அவள் ஆதியை பார்க்க, அவனோ, ” நான் யாரு என்று உனக்கு தெரியாது , என்னைப் பத்தி உனக்கு ஒன்னுமே தெரியாது. இதையெல்லாம் நான் நம்பனும்” என்று அவளை கேலியும் அழுத்தமாக பார்த்து நின்றான். அவன் பார்வையே கொஞ்சம் கிலியை கிளப்பியது. சட்டென்று தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். ஏதோ ஒரு உணர்வு ,அங்கே நிற்கவே ஒரு மாதிரி இருந்தது. எங்கேயாவது ஓடி சென்று விடலாமா என்பது போல் இருந்தது. அங்கிருந்து சீக்கிரமாக கிளம்பிட வேண்டும் என்று நினைத்தாள். அதுவும் இல்லாமல் அவள் மனமே அவளுக்கு எதிராக சிந்தித்துக் கொண்டு இருந்தது. ஓடிச் சென்று அவன் தோளில் சாய்ந்து கதற வேண்டும் போல் மனமெல்லாம் ஒரு எண்ணம். மிக மிக மெதுவாக கண்களும் நீரை உற்பத்தி செய்ய எங்கே திரும்பி பார்த்தால் அழுதுடுவேனோ என்ற பயத்தில் , எதுவும் நடவாதது போல்,”சரிங்க, நான் கிளம்புறேன், இப்பவே ரொம்ப லேட் ஆகிடுச்சு பசங்கள சாப்பிட வைச்சு தூங்க வைக்கனும், நாளைக்கு நான் காலேஜ் போகனும்.” என்று வாய்க்கு வந்த காரணத்தை எல்லாம் கூறிவிட்டு அங்கு இருந்து வந்து விட்டாள்.
கோவிலிருந்து வந்த பிறகு பிள்ளைகளை மட்டும் சாப்பிட வைத்து தூங்குவதற்கு அழைத்துச் சென்றாள். வீட்டுக்கு வந்த பிறகு ஆதியை இன்னொரு தடவை வரும் போது திரும்பி பார்த்து இருக்கலாம் என்று அவளின் மனம் என்னும் குரங்கு இங்கும் எங்கும் நில்லாமல் குதிக்க ஆரம்பித்தது.
மனதில் ஆசைகள் பல இருந்தாலும், என்ன செய்ய நிதர்சனம் என்ற ஒன்று உள்ளதே. நிதர்சனம் உள்ள வரை இந்த உலகில் பல ஆசைகள் எட்டா கனிகள் தான். இனியாவும் ஒரு சராசரி பெண் தானே, ஆசைகளும் ஏக்கங்களும் எக்கச்சக்கமாக கொட்டி கிடக்கிறது ஆனால் விதி அனைத்தையும் நிராசை என்னும் கூண்டிற்குள் அடைத்துவிட்டது.
அவளின் எண்ணங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பது போல் அவளின் குழந்தைகள் தூக்கத்திற்கு சினுங்க, அவர்களுக்கு கதை சொல்லி தூங்க வைத்தாள். அவளின் மகள் சமத்தாக உறங்கி விட , மகனோ அவளின் முகத்தையே பார்த்து இருந்தான்.
இதில் ஆதியும் மகனும் ஒரே மாதிரி, அவள் பாடாமல் இருவரும் தூங்க மாட்டார்கள். மெதுவாக சாத்விக்கை தூக்கி தோளில் போட்டு, அறையில் நடந்தவாறே பாட ஆரம்பித்தாள்.
*********************
யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட….
ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ..ஓ..
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…
***********************
ஆதிக்கும் அவளுக்கும் மிக மிக பிடித்த பாடல்.குழந்தைக்கு தாலாட்டு பாடி தூங்க வைத்து பின் அவளுக்கு தூக்கமே வரவில்லை. ஆதியோடு இருந்த தருணங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அணி வகுக்க ஆரம்பிக்க , மனம் பழைய நினைவுகளில் உழன்று கொண்டிருந்தது.
இங்கே ஆதியும் இனியாவை தான் நினைத்துக் கொண்டு இருந்தான்.அவளின் குரலை செல்லில் இசைக்க விட்டுக் கொண்டே, நினைவடுக்கில் இருந்த அவளின் நினைவுகளை நினைத்துக் கொண்டு இருந்தான்.
அவள் குழந்தையை வாங்கி கொள்ள கைகளை நீட்டும் போது அவள் வலது கையில் இருந்த டாட்டூ , அவனுக்கு பல கதைகளை ஞாபகப்படுத்தியது.
இருவரும் ஒருங்கே தங்கள் வாழ்க்கையின் பக்கங்களை திருப்பி பார்க்க ஆரம்பித்தனர்.