அத்தியாயம் 1
அந்தி சாயும்
ஏகாந்த வேளையில்
மோக கணைகளால்
என்னைச் சுட்டெரிக்கும்
காதல் தீ நீ!!!
இருள் அடைந்த மோட்டார் ரூமில் உள்ள ஒரு தூணில் கைகள் கட்டப்பட்டு அமர்ந்திருந்தாள் தேன்மொழி. அவள் வாய் ஒரு துணியை வைத்து அடைக்கப் பட்டிருந்தது.
கண்களில் அருவி போல் கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. நாளைய நிலையை எண்ணி உள்ளுக்குள் நொந்து போனாள் தேன்மொழி.
அவள் இங்கு வரும் போது மணி ஆறு. இப்போது எப்படியும் மணி ஒன்பதாவது இருக்கும். அவளை இந்நேரம் வரைக்கும் காணவில்லை என்றதும் வீட்டில் கலவரமாகியிருக்கும். இதை நினைத்து அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
வீட்டில் உள்ள அனைவரும் அவளை தேட ஆரம்பித்திருப்பார்கள். பெண்ணைக் காண வில்லை என்றால் ஊரில் உள்ளவர்கள் என்னவெல்லாம் கதை கட்டுவார்கள் என்று அவள் அறிந்ததே.
இப்போது இந்த இக்கட்டில் மாட்டிக் கொண்ட தன்னுடைய நிலையை எண்ணி உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தாள். இதற்கு காரணம் அவள் தான்.
வலிய வந்து மாட்டிக் கொண்ட தன்னுடைய மடத்தனத்தை காலம் கடந்த பின் நொந்து கொண்டு பயன் என்ன? ஆனால் இந்த நிலைமை உருவாவதற்கு காரணம் அவளுடைய பெற்றோர்கள் தான்.
[the_ad id=”6605″]
அவளை இந்த நிலைமைக்கு தள்ளியது வேறு யாரும் அல்ல. இன்னும் ஒரு மாதத்தில் அவள் கழுத்தில் தாலி கட்டப் போகும் அவளுடைய வருங்கால கணவன் ராஜேந்திரன் தான். அதுவும் அவளுக்கு வீட்டில் பார்த்து நிச்சயித்த மாப்பிள்ளை தான்.
“இப்போதாவது இவனுடைய சுயரூபம் தெரிந்ததே”, என்று நிம்மதியாக இருக்க முடியாமல் தவிப்புடன் இருந்தது அவள் மனது.
அவன் இப்படி செய்வான் என்று இவள் கனவா கண்டாள்? இவள் வந்த காரணம் வேறு. ஆனால் நடப்பதோ அவள் முற்றிலும் எதிர்பார்க்காதது.
அவள் மனதில் புழுங்கிக் கொண்டிருக்கும் போதே கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கண்களை குவித்துப் பார்த்தாள். வாசலில் பல்லை இளித்துக் கொண்டு ராஜேந்திரன் நிற்பது வரி வடிவமாக தெரிந்தது.
அவனுடன் இன்னொருவனும் இருந்தான். “சொன்ன மாதிரியே ஆளைக் கூட்டிட்டு வந்துட்டானே?”, என்று எண்ணிக் கொண்டு இருவரையும் கலவரத்துடன் பார்த்தாள்.
ராஜேந்திரன் கூட்டி வந்த ஆள் கேவலமாக ஒரு ரவுடி போன்ற தோற்றத்துடன் இருந்தான். முகம் முழுவதும் தாடியும் ஒரு கையில் மது பாட்டிலும் மற்றொரு கையில் பற்ற வைத்த சிகரட்டுமாக இருந்தான். அவன் முகமே நன்கு குடித்திருக்கிறான் என்று காட்டிக் கொடுத்தது.
“இவன் தான் டி உன் மாப்பிள்ளை. உன் வீட்டாளுக பாத்தா பூரிச்சுள்ள போவாக. அதை என் கண்ணால பாக்கணும் டி. நாளைக்கு எங்க மகளால உங்களுக்கும் கெட்ட பேர், எங்களை மன்னிச்சிருங்கன்னு உன் அப்பன், பெரியப்பன், உன் அண்ணன் காரனுங்க எல்லாரும் என் காலுல விழுவாங்க டி. அப்ப தான் எனக்கு சந்தோஷம். அது மட்டும் இல்லை. இவன் கூட நைட் முழுக்க இருந்துருக்கன்னு சொல்லி இவனைத் தான் உனக்கு கட்டி வைப்பாங்க. உங்க வீட்டு மாப்பிள்ளை யார் தெரியுமா? ஆறு வயசுலே அப்பனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போனவன். எப்படி என் கணக்கு?”, என்று சொல்லி கொக்கரித்து சிரித்தான் ராஜேந்திரன்.
அவன் சொன்னதைக் கேட்டு வெகுண்டு “அப்படி ஒரு காரியம் நடக்காது. என் அண்ணன்கள், அப்பா, பெரியப்பா எல்லாரும் இதை நம்ப மாட்டாங்க. என்கிட்ட என்ன நடந்துச்சுன்னு விசாரிப்பாங்க. அப்ப இவனோட முகமூடியை நான் கிழிப்பேன்”, என்று மனதுக்குள் நினைத்தாள் தேன்மொழி. அவளால் தான் பேச முடியவில்லையே.
[the_ad id=”6605″]வாயை தான் அடைத்து வைத்திருந்தானே. “நாதரிப்பய, எந்த கருமம் பிடிச்ச துணியை வாயில் வச்சிருக்கானோ தெரியலையே”, என்று உள்ளுக்குள் அவனை திட்டி தீர்த்தாள்.
ஆனால் அவளின் மனசாட்சியோ “துணியைப் பத்தி கவலைப் படுற. நைட் முழுக்க ஒரு ஆம்பளை கூட நீ இருந்தா இந்த ஊர் மட்டும் இல்லை. உன் வீட்ல உள்ளவங்க கூட சாக்கடையை அள்ளி பூசுவாங்க. இந்த நிலைமைல உன் வீட்ல உள்ளவங்களை கூட நம்பாத”, என்று குரல் கொடுத்தது.
“அப்படி மட்டும் நடந்தால் நான் உயிரோடே இருக்க மாட்டேன்”, என்று எண்ணிக் கொண்டு இருவரையும் பார்த்தாள்.
“டேய் சேது, பொண்ணு எப்படி டா?”, என்று கேட்டான் ராஜேந்திரன்.
“பொண்ணா மச்சான் இது? தேவதை டா. எது எது எங்க எங்க இருக்கணுமோ, அது அது அங்க அங்க இருக்கு. கடவுள் படைப்பே தனி டா”, என்று சொன்ன சேது அவளை பார்த்து கேவலமாக சிரித்தான்.
அவன் கண்களில் அவளைப் பார்த்து ஒரு வித போதை ஏறியிருந்தது. அவன் முகத்தில் இருந்து அதைப் படித்த தேன்மொழிக்கு அருவருப்பாக இருந்தது.
“உன் ஆசையெல்லாம் மூட்டை கட்டி வை மச்சான். உனக்கு இன்னைக்கு முதலிரவு கிடையாது. அவ மேல இன்னைக்கு உன் சுண்டு விரல் கூட படக்கூடாது. நாளைக்கு தான் உங்களுக்கு முதல் ராத்திரி. நாளைக்கு அவளை என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோ. நாளைக்கு இந்நேரம் அவ உன் பொண்டாட்டியா இருப்பா. இன்னைக்கு இந்த சரக்கை எல்லாம் அடிச்சிட்டு தூங்கு. காலைல நான் போன் பண்ணி மிஸ்டு கால் கொடுத்த அப்புறம் அவ கையை காலை அவுத்து விட்டுரு. நான் ஆளுங்களை கூட்டிட்டு வந்துருவேன். என்னோட நம்பரை உன் போன்ல இருந்து அழிச்சிரு டா. நான் கிளம்புறேன். உள்ள பூட்டிக்கோ”, என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்து நக்கலாக சிரித்து விட்டு அங்கிருந்து சென்றான் ராஜேந்திரன்.
“இப்படியும் ஒருவன் இருப்பானா?”, என்று எண்ணிக் கொண்டு விதியை நொந்த படி அமர்ந்திருந்தாள் தேன்மொழி.
அவளை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்த சேதுவோ “அவன் சொல்றதை எல்லாம் கேக்கணும்னு இல்லை செல்லம். நாம இன்னைக்கே சந்தோஷமா இருக்கலாமா?”, என்று கேட்டான்.
அவனை எரித்து விடுவது போல முறைத்தாள் தேன்மொழி.
“சரி சரி முறைக்காத. உன்னை நாளைக்கே என் வீட்டுக்கு தூக்கிட்டு போறேன்”, என்று சொல்லிக் கொண்டே கதவை உள்ளே இருந்து பூட்டியவன் அடுத்த பாட்டிலை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான்.
“இன்று கற்புக்கு எந்த கலங்கமும் வராது”, என்று எண்ணி நிம்மதியாக இருந்தாலும் நாளை காலையில் அந்த நிம்மதி பறிபோகும் என்று அவள் அறிந்ததே.
இன்று நடக்காததை நடந்தது என்று தான் ஊர் மக்கள் பேசுவார்கள். அதை எண்ணி கலக்கமாக இருந்தது. தப்பிக்க வழி தெரியாமல் அந்த கடவுளையே துதித்தாள்.
அப்போது வெளியே எதுவோ அரவம் கேட்டது. சேதுவைப் பார்த்தாள். அவனோ அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு மல்லாந்து கிடந்தான். வாய் எதுவோ புலம்பிக் கொண்டிருந்தது.
இவர்கள் இருக்கும் அறை வாசலில் சத்தம் கேட்டதால் “யாராவது வந்து காப்பாத்திற மாட்டார்களா?”, என்று ஒரு வித ஒளியுடன் பார்த்தாள். பின் தான் புத்தியில் உரைத்தது.
[the_ad id=”6605″]“ரூமோட சாவி உள்ள இருக்கு. வெளிய இருந்து யாரலயும் திறக்க முடியாதே. கதவை உடைக்க தான் செய்யணும். அப்படி யார் செய்வாங்க? இந்நேரம் யாரும் நான் இங்கே இருப்பேன்னு நினைச்சிருக்க மாட்டாங்களே. கடவுளைத் தவிர வேற யாரும் உதவ முடியாது”, என்று எண்ணிக் கொண்டு அமைதி காத்தாள்.
அப்போது கதவை யாரோ அசைப்பது போல இருந்தது. அடுத்த நிமிஷம் வெளியே எந்த அரவமும் இல்லை.
“போச்சு யாருமே வரலை. என் பிரம்மை போல? எப்படியும் நான் நாளைக்கு சாகுறது உறுதி. ஆனா இப்படி மானங்கெட்ட சாவா எனக்கு வரணும்?”, என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.
“இங்க தோட்டத்துல இருக்குற இந்த முத்து எங்க போனான்னே தெரியலையே? அப்பா என்னைக்காவது தோட்டத்து பக்கம் வருவாரே. இன்னைக்கும் வந்தா நல்லா இருக்கும். இங்க வரணும்னு நினைச்சா சாவியை தேடுவார்”, என்று எண்ணியவளுக்கு “இன்னைக்கு அங்க என்னைக் காணும்னு தேடிட்டு இருக்கும் போது இங்க வர நினைக்க மாட்டாங்களே”, என்று நினைப்பு வந்தது.
வாழ்கையில் இது வரை இப்படி ஒரு நிலை வந்தது இல்லை. எந்த பெண்ணுக்கும் இது போல வரக்கூடாது.
பிறந்ததில் இருந்து செல்வ சீமாட்டியாக வளர்ந்து விட்டு முதல் முறை சறுக்கத்தைக் காண்கிறாள். கிட்டதட்ட ஒரு அரசகுமாரி போல வலம் வந்தவளுக்கு பாலும் தேனும் மட்டும் ஊட்டி வளர்க்க வில்லை. பாசத்தையும் ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்.
அந்த பாசம் நாளை இவளை கலங்கமில்லாதவள் என்று நம்புமா?
அப்போது கதவின் அருகே மீண்டும் ஓசை கேட்டது. உயிர்ப்புடன் திரும்பி பார்த்தாள். அவள் கடவுளை வேண்டியது போல சாவியைப் போட்டு யாரோ கதவைத் திறந்தார்கள். அவள் அருகில் ஒரு சாவி கிடந்தது.
“இந்த ரூம்க்கு ஒரு சாவி தான? அப்புறம் எப்படி இன்னொன்னு வந்தது? ஒரு வேளை இது ராஜேந்திரனா இருக்குமோ?”, என்று எண்ணி துவண்டு போனாள். ஆனால் உள்ளே வந்ததோ இரண்டு ஆண்கள்.
இரண்டு பேருமே அவளுக்கு தெரிந்தவர்கள் தான். அதில் ஒருவனைப் பார்த்து “இவனா?”, என்று எண்ணினாலும் அவனை இறைஞ்சுதலுடன் பார்த்தாள் தேன்மொழி.
அவள் உதடுகள் “அத்தான்”, என்று உச்சரித்தது. அந்த வார்த்தை அவன் காதுகளுக்கு கேட்காமல் அவள் மனதுக்குள்ளே புதைந்து போனது.
அவள் மனம் எல்லையில்லா நிம்மதி கொண்டது. நிச்சயம் இந்த இக்கட்டில் இருந்து அவன் தன்னைக் காப்பான் என்று நம்பியது அவள் உள்ளம். அதுவும் கூட வந்தவன் அவளுடைய பண்ணையில் வேலை செய்யும் முத்து.
“அப்பாடி அத்தானும் வந்துட்டான். முத்து அண்ணனும் இருக்காங்க. இனி ஒண்ணும் பிரச்சனை இல்லை”, என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போது “இந்த நாயை அடிச்சி இழுத்துட்டு போ முத்து”, என்று உத்தரவு போட்டான் கதிர்வேலன். கதிர்வேலன் வேறு யாரும் அல்ல. தேன்மொழியின் தாய்மாமா மகன்.