“சரி கதிர்”, என்று சொன்ன முத்துவும் நாலு அடி கொடுத்து சேதுவை இழுத்துச் சென்றான்.
அவன் சென்றதும் அவளுடைய கட்டை அவிழ்த்து விடுவான் என்று அவள் எதிர்பார்க்க அவனோ நிதானமாக கதவை நெருங்கினான்.
“என்ன அத்தான் கட்ட அவுக்காம திரும்பி போறான்”, என்று குழப்பமாய் பார்க்கும் போதே அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
அங்கே கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டிருந்தான் கதிர். அதிர்ந்து போய் விழித்தாள் தேன்மொழி.
“என்ன முட்டக்கண்ணி இப்படி முழிக்கிற? என் பங்காளி எவ்வளவு அருமையா பிளான் பண்ணிக் கொடுத்துருக்கான்? அதை நான் விட்டுட்டா உன்னை எப்படி டி கட்டிக்கிறது?”, என்று கதிர் கேட்டதும் நொந்தே போனாள்.
வாள் போய் கத்தி வந்தது டும் டும் என்பது போல இருந்தது அவள் கதை.
“என் அத்த மக ஏதோ சொல்லணும்னு நினைக்கிறா போலயே”,என்று சொல்லிக் கொண்டே அவள் அருகே குனிந்து அமர்ந்தான் கதிர். கண்ணில் நீர் வழிய அவனைப் பார்த்தாள் தேன்மொழி.
அவள் வாயில் இருந்து துணியை எடுத்தவன் “முதல் தடவை நீ அழுறதைப் பாத்தா குத்தால அருவில குளிச்சது கணக்கா இருக்கு டி. இப்ப சொல்லு, என்ன சொல்லணும் இந்த அத்தான் கிட்ட?”, என்று கேட்டான்.
துணியை எடுத்ததும் நன்கு மூச்சு வாங்கியவள் “அத்தான்”, என்று திக்கி திணறி சொன்னாள்.
“என்னது அத்தானா? இப்ப தான் தெரியுதோ அத்தான் பொத்தான்னு. உன்னை இந்த நிலைமைல பாக்கும் போது சுகமா இருக்கு டி. ஆனா இத்தனை நாளா எனக்கு இது தோணாம போச்சே”
“அத்தான் பிளீஸ், என்னைக் காப்பாத்து. நம்ம சண்டையை எல்லாம் அப்புறம் வச்சிக்காலம். இங்க நம்ம ரெண்டு பேரும் இங்க இருந்தா தப்பு”
[the_ad id=”6605″]“ஹா ஹா சண்டையை அப்புறம் வைக்கணுமா? எப்ப? நீ வேற ஒருத்தனை கட்டிக்கிட்டு போன அப்புறமா? எனக்கு கிடைச்சிருக்குற சான்ஸை நான் யூஸ் பண்ணலைன்னா நான் என்ன டி வில்லன்? அப்புறம் என்ன சொன்ன? நம்ம ரெண்டு பேரும் இங்க இருந்தா தப்பா? அப்ப நான் போறேன், பேசாம பழைய ஆளயே இருக்க வச்சிருவோமா? என்ன ஆட்டம் காட்டுன? இந்த கதிரை என்னன்னு நினைச்ச ஆன்?”
“அத்தான் எல்லாத்துக்கும் மன்னிப்பு கேக்குறேன், உன் காலுல வேணும்னாலும் விழுறேன். இங்க இருந்து கூட்டிட்டு போ. உனக்கு புண்ணியமா போகும். நம்ம ரெண்டு பேர் குடும்பத்தோட பேர் தான் கெடும்”
“அட என் வித்தாராக்கள்ளி, நீ எப்ப என் குடும்பத்தை உன் குடும்பமா நினைச்ச? காரியம் ஆகணும்னா எலி கூட கோமணம் கட்டிக்கிட்டு சுத்துமாம். அந்த கதையாவுல இருக்கு”
என்ன சொல்வது என்று தெரியாமல் அவனைப் பாவமாக பார்த்தாள் தேன்மொழி.
“நீ என்ன யோசிச்சாலும் நாளைக்கு நம்ம கல்யாணம் உறுதி டி”, என்றான் கதிர்.
“அப்படி நடக்கும்னு கனவு காணாத”, என்று திமிராக சொன்னாள் தேன்மொழி.
“வாடி என் அத்தை மகளே, இந்த திமிர் தான் டி உன்னை இந்த நிலைமைல வச்சிருக்கு. இன்னும் உன் பவுசு குறையலை பாத்தியா? கனவு காணக் கூடாதாம்ல? நான் சொல்றது தான் நடக்கும். நாளைக்கு அந்த ராஜேந்திர பய ஆளை இங்க கூட்டிட்டு வரும் போது ரூமுக்குள்ள நம்ம ரெண்டு பேரும் இருப்போம். ஊரே சேந்து கட்டி வச்சிருவாங்க”
“அத்தான், உனக்கு தான் என்னைப் பிடிக்காதே. பிடிச்ச பொண்ணை கட்டிக்கோ. உன் வாழ்க்கையும் தான இதுல அடங்கிருக்கு”
“ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப் பட்டதாம். அப்படி இருக்கு உன் கதை. உன்னை கட்டிக்கிட்டு உன் திமிரையும் உன் அப்பன் பெரியப்பன் திமிரையும் அடக்குறதுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதை விட்டுட்டு என் வாழ்க்கையைப் பத்தி நான் ஏண்டி யோசிக்க போறேன்”
“எங்க வீட்ல என்னை நம்புவாங்க. குடும்ப பகைல தான் நீ என்னை கடத்திட்டு வந்துட்டன்னு சொன்னா உன்னை அப்பாவும் பெரியப்பாவும் சும்மா விட மாட்டாங்க”
“ஹா ஹா, நீ அறிவாளின்னு நினைச்சனே டி? ராஜேந்திரன் உன் வீட்ல இருந்து மோட்டார் ரூம் சாவியை எடுத்து உன்னை இங்க வர சொல்லிருக்கான். நீ தான் சாவி எடுத்துட்டு வந்துருக்க. அந்த சேதுவை நீ தான் இங்க தள்ளிக்கிட்டு வந்தேன்னு சொல்றதுக்காக காத்துட்டு இருக்கான். இப்பவும் உன் மேல தான் எல்லா பழியும் விழும். மாப்பிள்ளை மட்டும் தான் வேற. அதுவும் நாம பல இடங்கள்ல நின்னு காதல் கதை பேசுனது ஊருல நிறைய பேருக்கு தெரியும். உன் அப்பத்தாவே உன்னை கிழி கிழின்னு கிழிக்கும் டி”
“நான் எங்க உன்கிட்ட காதல் கதை பேசுனேன்? எப்பவும் சண்டை தான போட்டேன்?”
“அது நமக்கு தான தெரியும், அதை பாத்தவங்களுக்கு தெரியுமா?”
இதெல்லாம் உண்மை என்பதால் அவனை வெறித்து பார்த்தாள். அவள் பார்வையை கண்டவன் “இதுக்கெல்லாம் ஒரு முடிவு தான் இருக்கு”, என்றான்.
“என்ன அத்தான்?”
“அத்தான் பொத்தான்னு வெறுப்பேத்தாத. எப்பவும் போல பேசு. நீ நடிக்கிறதை பாத்தா வேற எவளோ மாதிரி இருக்கு. இத்தனை நாள் எடுபட்ட பய, விளங்காதவன்னு சொல்லிட்டு இன்னைக்கு அத்தானாம் அத்தான்”, என்று கதிர் சொன்னதும் வாயை கப்பென்று மூடிக் கொண்டாள் தேன்மொழி.
அவள் அமைதியை உணர்ந்தவன் “நீ இப்ப என்ன செய்யணும்னா பெருசா ஒண்ணும் இல்லை, உனக்கு கல்யாணாம்னு பேச்சு வரும் போது உன் வீட்டுல உள்ளவங்க கிட்ட நான் கதிர் அத்தானைத் தான்…… எப்படி எப்படி…. கதிர் அத்தானைத் தான் கட்டுவேன்னு சொல்லணும். சரின்னு சொன்னா, இங்க இருந்து இப்பவே கிளம்பிறலாம்?”, என்றான்.
[the_ad id=”6605″]ரத்த காட்டேரியான ராஜேந்திரனை கல்யாணம் பண்ணுவதில் இருந்து தப்பித்தேன் என்ற எண்ணத்தில் இருக்கும் போது சனியனை கல்யாணம் பண்ண சொன்னால் அவளும் தான் என்ன செய்வாள்.
அவனை கோபமாக பார்த்தவள் “அது மட்டும் என்னால முடியாது. உன்னைக் கல்யாணம் பண்ணுறதும் தூக்குல தொங்குறதும் ஒண்ணு தான்”, என்றாள்.
“அப்ப வாயை மூடிட்டு கிட டி. எப்படினாலும் நாளைக்கு என் பொண்டாட்டியாகிருவ. நான் சொல்ற படி செஞ்சா, என்னை லவ் பண்ணுறன்னு கெட்ட பேர் தான் கிடைக்கும். அதை விட்டுட்டு இப்படியே போனா, நீ தான் என்னை தப்பு பண்ண மோட்டார் ரூமுக்கு கூட்டிட்டு வந்தன்னு பேர் வாங்குவ. எனக்கென்ன?”
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள், “மானங்க்கெட்டவன்னு பேர் வாங்குறதை விட, லவ்ன்னு பேரை சொல்லி வீட்ல உள்ளவங்களுக்கு பிடிக்காதவளா இருக்கலாம். இங்க இருந்து தப்பிச்சா சாக கூட செய்யலாம். ஆனா யாரும் என்னை தப்பா மட்டும் நினைக்க கூடாது”, என்று எண்ணி அவனைப் பார்த்தாள்.
அவள் தவிப்பில் அவன் கண்கள் ஒரு நொடி சுருங்கியது. அடுத்த நொடி அந்த சுருக்கம் காணாமல் போய் விட்டது.
“சரி அத்தான், நீ சொல்ற படியே கேக்குறேன். இங்க இருந்து கூட்டிட்டு போ”
“இப்ப சரின்னு சொல்லிட்டு நாளைக்கு உன் புத்தியைக் காட்டவா? அதெல்லாம் உன்னை நம்ப முடியாது. நீ ஊரையே வித்துட்டு வந்துருவ? நான் சொல்றதை செய்வேன்னு உன் அப்பன் பெரியப்பன் மேல சத்தியம் பண்ணு டி. சாக மாட்டேன்னும் சத்தியம் பண்ணு. அப்ப தான் நம்புவேன்”
தன் விதியை நொந்தவள் “இனி இதுல இருந்து பின் வாங்க முடியாது. இவன் கூட தான் வாழ்க்கைன்னு கடவுள் எழுதிட்டார் போல?”, என்று எண்ணிக் கொண்டு “சரி அப்பா பெரியப்பா மேல சத்தியமா நீ சொல்ற படி கேக்குறேன். அவங்க மேல சத்தியமா சாக மாட்டேன் போதுமா?”, என்றாள்.
“இது நல்ல பிள்ளைக்கு அழகு”, என்று சொல்லிக் கொண்டே அவள் கட்டை அவிழ்த்து விட்டான். தட்டு தடுமாறி எழுந்து நின்றவள் அவனைப் பார்த்தாள்.
“வா போகலாம்”, என்று சொல்லி அவள் மணிக்கட்டைப் பிடித்தான் கதிர். அதை தட்டி விட்டவள் “நானே வரேன்”, என்றாள்.
[the_ad id=”6605″]“நீ அடங்கவே மாட்ட டி”, என்று சொன்னவன் கதவை திறந்தான். வெளியே முத்து நின்றிருந்தான். “அவனை என்ன முத்து செஞ்ச?”, என்று கேட்டான் கதிர்.
“நம்ம சந்தைக்கு பக்கத்துல போய் போட்டுட்டு வந்துட்டேன் கதிர்.. போதைல கிடக்குறான்”
“நைட் எந்திக்க மாட்டான்ல?”
“எந்திக்க மாட்டான்”
“சரி சரி நீ மோட்டார் ரூம்குள்ள போய் தூங்கு”
“சரி”, என்று உள்ளே போக திரும்பிய முத்து தேன்மொழியைப் பார்த்தான்.
வெறுப்புடன் அவனைப் பார்த்த தேன்மொழி “ச்சி பணத்துக்காக உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணிட்டல்ல? உன்னைப் போய் என் சொந்த அண்ணனுக்கு சமமா நினைச்சேனே”, என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு அவன் தலை குனிந்தது. “அவனை அப்புறமா திட்டலாம். இப்ப யாரும் பாக்குறதுக்கு முன்னாடி இங்க இருந்து போவோம்”, என்று சொல்லி முன்னே நடந்தான் கதிர்.
ஒரு நாளில் மாறி விட்ட தன் விதியை நொந்த படி அவன் பின்னே நடந்தாள் தேன்மொழி.
தீயை, நீர் அணைக்குமா???