பகுதி – 14
வெற்றி வந்ததும் அனைவரோடும் சேர்ந்து உணவு அருந்திவிட்டு ரிஷியும், சாதனாவும் பண்ணைக்குக் கிளம்பினர். ரிஷியோடு தனியான பயணம் என்று நினைத்துக் கொண்டு இருந்ததிற்கு மாறாக வெளியே தடித் தடியாக இரண்டு தடி தாண்டவராயன்கள் காத்திருந்தனர்.
எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு காரின் அருகே வந்த சாதனா “இவங்களும் நம்மோட வரப்போறாங்களா….” என மெதுவான குரலில் ரிஷியிடம் கேட்க….
“அவங்க நம்ம கூட வரலை… நீ தான் எங்க கூட வர….” ரிஷி நறுக்கென்று சொல்ல… சாதனா வாயை மூடிக்கொண்டாள்.
மேலும் எதாவது பேசினால் இங்கேயே விட்டுவிட்டு சென்றாலும் சென்று விடுவான். எதற்கு வம்பு என்று நினைத்தாள். அதோடு இவர்கள் என்ன தேன்நிலவுக்கா செல்கிறார்கள். இல்லையே… அவன் பண்ணைக்கு வேலையின் காரணமாகச் செல்கிறான். இவளும் உடன் செல்கிறாள் அவ்வளவுதான்.
மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் பாதையில் கார் செல்லத் துவங்கியது. வழியில் ஒரு இடத்தில் கார் சற்று ஓரங்கட்டி நிற்க.. மற்றொரு காரில் இருந்து இறங்கிய ரிஷியின் நண்பன் தீனா… அவன் மனைவி சுதாவோடு வந்தான்.
இவர்கள் சென்றது மூன்று வரிசைகள் கொண்ட இன்னோவா காரில். தீனாவும் அவன் மனைவியும் பின்னால் ஏறிக்கொள்ள…. கார் கிளம்பியது.
சாதனா பின்னால் பார்த்து பேச வசதியாகத் திரும்பி அமர்ந்தவள், தீனாவையும் , சுதாவையும் பார்த்து வரவேற்பாகப் புன்னகைக்க….
“என்ன டா ரெண்டு பேர் கரடி மாதிரி வந்துட்டாங்கன்னு மனசுக்குள்ள திட்றீங்களா சாதனா…” தீனா புன்னகையுடன் கேட்க….
“கரெக்ட், ஆனா… முன்னாடி இருக்கிறவங்களை விட உங்களைக் கம்மியா தான் திட்டினேன்.”
எந்தப் பாசாங்கும் இல்லாமல் சாதனா சொன்னதைக் கேட்ட தீனா சத்தமாகச் சிரிக்க…. முன்னால் இருந்த இருவரும் கூடச் சிரித்து விட்டனர். ரிஷி சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி இருந்தான்.
[the_ad id=”6605″]“விஐபியா இருந்தா இந்தத் தொந்தரவு எல்லாம் இருக்கும் தான சாதனா மா…” முன்னால் இருந்த இருவரில் ஒருவர் சொல்ல…
“அவ சும்மா விளையாட்டுக்கு சொல்றா முருகா… அவளை மட்டும் தனியா வெளிய அனுப்புவாங்களா என்ன? அதனால அவளுக்குத் தெரியும். சும்மா கேலி பண்றா…” என்றான் ரிஷி.
அது உண்மை தான். அரசியலில் நண்பர்களை விடப் பகைவர்கள் தான் அதிகம். திடிரென்று யார் எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம். ஏன் வெற்றியே ரிஷியை தாக்க நினைத்தான் தானே…. அது போல ரிஷிக்கு நிறையப் பேர் எதிரிகள் உண்டு.
“நான் அவங்களுக்குத் தொந்தரவா இருக்கும் வேண்டாம்னு தான் சொன்னேன். இவர்தான் கேட்கலை….” சுதா மெதுவான குரலில் சொல்ல….
“நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன் சுதா… ரிஷி வேலையா இருப்பாங்க. நானே அங்க போய்ப் போர் அடிக்குமேன்னு நினைச்சேன். நல்லவேளை நீங்க வந்துட்டீங்க.”
சாதனா சொன்னதைக் கேட்ட சுதாவின் முகம் மலர்ந்தது.
“சுதாவோட அம்மா வீடு திண்டுக்கல் தான். இவ அங்க தான் இருந்தா… ரிஷி போன் பண்ணி தோட்டத்துக்குப் போவோம் வரியான்னு கேட்டான். நாங்களும் கிளம்பி வந்துட்டோம்.”
“அச்சச்சோ… அம்மா வீட்டுக்குப் போனவங்களைத் தொந்தரவு பண்ணிட்டோமா….”
“நான் அடிக்கடி எங்க அம்மா வீட்டுக்குப் போறது தான். அதனால பரவாயில்லை…”
சுதா இதைச் சொன்னதும், ரிஷியின் முகம் கடுகடுத்தது. அவங்க அம்மா வீட்டுக்கு அவங்க போனா… இவனுக்கு என்ன? எனச் சாதனாவிற்கு ப் புரியவில்லை.
“ரிஷி பண்ணைக்குப் போகும் போது… பிரண்ட்ஸ் கூடக் கூடிட்டு போவான். அதனால எப்படியும் நான் இன்னைக்கு வந்திருப்பேன். நீங்க வந்ததுனால மத்தவங்களை வேண்டாம்னு சொல்லிட்டு சுதாவை மட்டும் கூடிட்டு வர சொன்னான்.”
தீனா சொன்னதைக் கேட்டதும், சாதனாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. இவன் தனக்காக இவ்வளவு பார்க்கிறானா என நினைத்து வியந்தாள்.
சாதனா, தீனா, சுதா மட்டும் தான் பேசிக்கொண்டு வந்தனர். ரிஷி பேசாமல் அமைதியாக வந்தான். சுதா ரிஷியை பார்த்து பயப்படுவது போல் சாதனாவிற்கு த் தோன்றியது. ஏன் என்று தான் புரியவில்லை?
நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று வேகம் குறைய… ரிஷி கேள்வியாக ஓட்டுனரை பார்க்க…
“ரொம்ப நேரமா அந்தச் சுமோ நம்ம பின்னாடி வர்றது போல இருக்கு.” என்றார் அவர்.
[the_ad id=”6605″]“நீங்க இப்பதான் பார்த்தீங்களா… நான் அப்பவே பார்த்துட்டேன்.” ரிஷி சொன்னதும், மற்றவர்களும் திரும்பி அந்தக் காரை பார்த்தனர். இவர்கள் வேகத்தைக் குறைத்ததும் அந்தக் காரும் மெதுவாக வந்தது.
“கார்ல பொண்ணுங்க இருக்காங்க. ரோட்ல வச்சு எந்தத் தகராறும் வேண்டாம். வேகத்தைக் கூட்டுங்க, பண்ணைக்குப் போய்டலாம்.” என்ற ரிஷி முருகனை பார்க்க… அவன் காரில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவனிடம் கொடுக்க…. சாதனாவும் சுதாவும் பயந்து போய்ப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
பெரியகுளத்தில் அவர்கள் பண்ணை இருந்தது. பண்ணை வீட்டை நெருங்கும் வேளை ரிஷி திரும்பி பார்த்து விட்டு “இது வேற விஷயம். இவனுங்க வேற எதுக்கோ வர்றானுங்க.” என்றவன், தன் கைத்துப்பாக்கியை கால் சட்டையில் பத்திர படுத்தினான்.
இவர்கள் காரை பார்த்ததும் காவலாளி கதவை திறக்க…. இவர்கள் கார் உள்ளே நுழைந்த நொடி… பெரிய இரும்பு கதவு மூடப்பட்டது.
உள்ளே நிறையப் பேர் வேலை செய்து கொண்டு இருந்தனர். உள்ளே வந்ததும் தான் சாதனாவிற்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. இருந்தாலும் முழுதாகப் பயம் இன்னும் விலகவில்லை.
வெளி வாயிலில் இருந்து கார் ஒரு அரைக் கிலோ மீட்டர் தூரம் ஓடிய பிறகே… ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது.
காரில் இருந்து இறங்கிய பின் சாதனாவை அங்கிருந்த சுற்றுப்புற சூழல் ஈர்த்தது. பெரிய மாமரங்கள் வீட்டை சுற்றி இருக்க…. வீட்டின் முன்பு இருந்த செயற்கை நீருற்றில் வாத்துகள் அழகாக மிதந்து கொண்டிருந்தன. ஒரு பக்கம் ஆட்டுக் குட்டிகள் வேறு துள்ளித்திரிய…
கோழிகள் தன் கூட்டத்தோடு ஒரு பக்கம் நடை பயின்று கொண்டிருந்தது.
“வாவ்…எவ்வளவு அழகு?” என்று சாதனாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
புது மருமகள் எனபதால்… எல்லோரும் அவளைக் குறுகுறு வெனப் பார்க்க… சாதனாவிற்கு ச் சங்கோஜமாக இருந்தது.
“வாங்க அம்மா…” என ஒருவர் வந்து மரியாதையாகப் பேச…
“இவரு பேர் பாண்டி. இவர் தான் மொத்த தோட்டத்தையும் பார்த்துகிறாரு.” என அறிமுகப்படுத்தினான் ரிஷி.
அப்போது பின்புறம் இருந்து இரண்டு உயரமான நாய்கள் வர… சாதனா பயந்து பின் வாங்கினாள்.
அவர்கள் வீட்டிலும் நாய் இருக்கிறது. காவலுக்காக வளர்கிறார்கள் தான். ஆனால் அது சாதாரண வகையைச் சேர்ந்தது. இது வேட்டை நாய்கள் போல இருந்தது.
நாய்களைக் கைற்றால் பிடித்துக்கொண்டு ஒருவர் பின்னாடியே ஓடி வந்தார்.
ரிஷி சாதனாவை பார்த்து “நீ உள்ள போ…” என்றான். அப்போது தான் சாதனா கவனித்தாள், ஏற்கனவே சுதா உள்ளே சென்றிருந்தாள்.
சாதனா வீட்டு வாசலுக்குள் நின்று நாய்கள் என்ன செய்கிறது என்று பார்த்தாள்.
இரண்டு நாய்களும் இப்போது தான் பிறந்த குட்டிகள் போல் ரிஷியிடம் குலைந்து, இழைந்து கொஞ்ச…
அங்கிருந்த திண்ணையில் ரிஷி அமர்ந்து கொள்ள… இரண்டு நாய்களும் ஆளுக்கு ஒரு பக்கம் அவனை ஒட்டி நின்று கொண்டு முகத்தை அவன் மீது செல்லமாகத் தேய்த்துத் தங்கள் அன்பை வெளிப்படுத்தியது.
ரிஷி தட்டி தடவி இரண்டு நாய்களையும் கொஞ்சி கொண்டு இருந்தான். ரிஷியின் முகத்தை அப்போது பார்க்க வேண்டுமே… அப்படி ஒரு சந்தோஷம்.
அவளோடு இருக்கும் போது கூட ரிஷி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது இல்லை.
“ச்ச… என்ன நம்மை நாய் கூட ஒப்பிட்டு பார்க்கிறோம்.” எனச் சாதனாவிற்கு க் கடுப்பாக இருக்க… உள்ளே சென்று அங்கிருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள்.
அதுவரை அவளையே கவனித்துக் கொண்டிருந்த வீட்டு வேலை செய்யும் பெண் “சின்ன ஐயான்னா அந்த நாய்ங்களுக்கு ரொம்ப இஷ்ட்டம் மா… அய்யாவுக்கும் தான். அவரு இங்க வந்தா ரெண்டும் அவர் பின்னாடியே சுத்திட்டு இருக்கும்.” என்றாள் சிரிப்பாக.
“அதுதான் பார்த்தாலே தெரியுதே…” எனக் கடுப்புடன் நினைத்தவள், பேச்சை மாற்றும் பொருட்டு “உன் பேர் என்ன?” எனக் கேட்டாள்.
“என் பேர் ராதாங்க. நானும் என் வீட்டுகாரரும் இங்க தான் தங்கி இருந்து வீட்டு வேலை, தோட்டத்து வேலை எல்லாம் பார்க்கிறோம்.”
அவள் சொல்லிக்கொண்டிருந்த போதே… ரிஷி உள்ளே நுழைந்தான்.
“வந்தவளுக்கு டீ கூடக் குடுக்காம நின்னு கதை பேசிட்டு இருக்கியா…” அவன் கேட்டதும்,
“ஐயோ ! இல்லீங்க மத்தவங்களும் வரட்டும்னு இருந்தேன். இதோ இப்ப கொண்டு வரேன்.” என ராதா பதறி அடித்து உள்ளே ஓடினாள்.
எல்லாரையும் மிரட்டுறது, நாய்களை மட்டும் கொஞ்சறது என மனதிற்குள் சாதனா நொடிக்க… ரிஷி மேலே சென்றான்.
மேலே தான் அவன் அறை போலிருக்கு என நினைத்தவள், அப்போது தான் அந்த வீட்டை நன்றாகப் பார்த்தாள். வீடு புதிதாகக் கட்டி சில ஆண்டுகள் தான் இருக்கும். ஆனால் பழமை மாறாமல் கட்ட பட்டிருந்தது.
முகம் கை கால் கழுவி ரிஷி வந்து போது… தீனாவும், சுதாவும் கீழே இருந்த அறையில் இருந்து வெளியே வர… அதே நேரம் சூடாக டீயோடு பக்கோடாவும் வந்தது.
ரிஷி சாதனாவின் அருகே உட்காராமல் எதிரே உட்கார… நாயுங்க கிட்ட மட்டும் ஒட்டி உரசி உறவாடினான். கட்டின பொண்டாட்டி நான், என் பக்கத்தில உட்காராம தள்ளி உட்காருகிறானே எனச் சாதனா மனதிற்குள்அதற்கும் பொருமியபடி இருந்தாள்.
தீனாவும் ரிஷியும் பேசிக்கொண்டே டீ குடிக்க… அப்போது உள்ளே வந்த பாண்டி “சின்னய்யா… உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க.” என்றான்.
தங்கள் காருக்குப் பின் வந்தவர்கள் தான் அவர்கள் என ரிஷிக்குப் புரிந்தது.
[the_ad id=”6605″]“நீங்க ரெண்டு பேரும் போய்த் தோட்டத்தைச் சுத்தி பாருங்க.” எனச் சாதனாவையும், சுதாவையும் ராதாவோடு அவன் அனுப்ப….
இவர்கள் தான் காரில் தங்கள் பின்னால் வந்தவர்கள் எனச் சாதனாவிற்கு ம் புரிய… அவள் வெளியே நின்று வேடிக்கை பார்ப்பது போல்… உள்ளே பேசுவதைக் கவனித்தாள்.
அவர்கள் உள்ளே வந்ததும் உட்கார சொன்ன ரிஷி “நீங்க தான் எங்க கார் பின்னாடி வந்ததோ…” என்றான் கேள்வியாக.
“ஆமாம், வேற ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தோம். உங்க காரை பார்த்ததும், பண்ணைக்குத் தான போவீங்க பார்த்திட்டு போகலாம்னு நினைச்சு காரை திருப்பி உங்க பின்னாடியே வந்தோம்.”