அத்தியாயம் 12
தென்றலின் குளுமை கொண்டவளே
என்னை மட்டும் எரிக்கும்
சூரியனாக ஏன் ஆனாய்?!!!
கீதா தான் அழைக்கிறாள் என்று தெரிந்ததுமே என்ன பேசுகிறார்கள் என்று பார்க்க தினேஷ் அங்கேயே நின்றான்.
அதுவும் கீதா அழுகிறாள் என்று தெரிந்ததும் தவித்து போனான். அவன் மனதில் இருக்கும் அவள் அழுதால் அவனுக்கு எப்படி இருக்குமாம்?
“ஏய் சொல்லு டி, என்ன ஆச்சு? எதுக்கு அழுதுட்டு இருக்க?”, என்று மறுபடியும் கேட்டாள் தேன்மொழி.
“அக்கா… அக்கா எனக்கு பசிக்குதுக்கா?”
அதைக் கேட்டு அதிர்ந்து போன தேன்மொழி “கீதா, என்ன டி சொல்ற? பசிக்குதா?”,என்று கேட்டாள்.
தினேஷும் அதிர்ந்து தான் போனான். “அக்கா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை. அம்மா கோப பட்டு மாமா வீட்டுக்கு போயிட்டாங்க. அப்பா வயலுக்கு போயிட்டாங்க. எப்படி சமைக்கன்னு தெரியலை. ரொம்ப பசிக்குது”
சண்டையைப் பற்றி விசாரிக்கும் நேரம் இது அல்ல என்று உணர்ந்த தேன்மொழி “அடுப்பு பத்த வைக்க தெரியுமா டி?”, என்று கேட்டாள்.
“அது மட்டும் தான் தெரியும்”
“சரி பிரிட்ஜ்ல மாவு இருக்கான்னு பாரு”
“இரு பாக்குறேன்., ஆன் இருக்குக்கா. ஆனா தோசை ரவுண்டா சுட தெரியாதே”
“உனக்கு வயிறு நிறையுறது தான் முக்கியம். அது எப்படி இருந்தா என்ன? சும்மா எடுத்து ஊத்து. முதல்ல சட்னி வச்சிக்கோ”
“வேண்டாம்க்கா, இட்லி பொடி இருக்கு”
“எல்லாம் நீயே செஞ்சிட்ட. எதுக்கு டி அப்படி அழுற?”
[the_ad id=”6605″]
“டக்குன்னு என்ன செய்யன்னு தெரியலை. சரி நீ எப்படி சட்னி வைக்கன்னு சொல்லு.அப்பாக்கு செஞ்சு கொடுக்கணும்”, என்று கேட்டு தேன்மொழி சொல்ல சொல்ல அதை செய்து முடித்தாள் கீதா.
“சரிக்கா, அப்பா வந்துட்டாங்க. நான் வைக்கவா?”
“அடியே, மதியத்துக்கு என்ன டி செய்வ? நான் சாப்பாடு கொண்டு வரேன்”, என்று சொல்லி அவள் சரி சொல்லவும் வைத்து விட்டாள்.
போனை வைத்ததும் அவள் கண்களுக்கு தெரிந்தது அவளையே பார்த்துக் கொண்டிருந்த தினேஷ் தான். “இவன் என்ன மாங்கா திருடுனது மாதிரி முழிக்கிறான்”, என்று எண்ணிக் கொண்டு “என்ன டா?”,என்று கேட்டாள்.
“அது வந்து அண்ணி”
“என்னது அண்ணியா?”, என்று அதிர்ந்த தேன்மொழி “இந்த அண்ணி பண்ணின்னு எல்லாம் சொல்ல வேண்டாம். என்ன விசயம்னு சொல்லு”, என்றாள்.
“இல்ல நான் வேணா மதியம் கீதாவுக்கு சாப்பாடு கொண்டு போகட்டா?”
“எலி அம்மணமா ஓடுதே”, என்று எண்ணியவள் “நீ ஏன்?”, என்று கேட்டாள்.
“இல்லை நீங்க புது பொண்ணுல. அங்க போனா ஊரே பாப்பாங்க”
“அதுவும் சரி தான்., நான் செல்வா கிட்ட கொடுத்து விடுறேன்”
“செல்வாவுக்கு படிக்கிற வேலை இருக்குன்னு சொன்னான்”.
“சரி நீயே போ”, என்று சொன்னதும் சந்தோசத்துடன் அங்கிருந்து சென்றவனை பார்த்தவளுக்கு “எதுவோ சரியில்லையே”, என்று தோன்றியது.
அதன் பின்னர் தான் தேன்மொழிக்கு கீதா குடும்பத்தையே மதிக்கு ஆகாதே என்ற நினைவு வந்தது. “இப்ப சாப்பாடு கொடுக்கணும்னு சொன்னா அத்தையும் மாமாவும் என்ன சொல்லுவாங்களோ தெரியலையே”, என்று எண்ணிக் கொண்டு வேணியை தேடி சென்றாள்.
“என்ன தேனு?”
“அத்தை ஒரு விஷயம் சொல்லணும். நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியலை”
“என்னன்னு சொல்லுத்தா”
“எங்க சித்திக்கும் சித்தப்பாவுக்கும் எதுவோ சண்டை போல? என் கல்யாணத்துக்கு வந்ததுக்கா தான் இருக்கும். அதனால சித்தி கோப பட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்கலாம். கீதாவுக்கு சமைக்க தெரியாது. காலைல நைட்டுக்கு நான் அவளை ஏதாவது செய்ய சொல்லிறுவேன். மதியம் மட்டும் சாப்பாடு இங்க இருந்து…”
“புரியுது தேனு, இது உன் வீடு. இதுக்கெல்லாம் தயங்க வேண்டாம். ஆனா இது மாமாவுக்கு மட்டும் தெரிய வேண்டாம். ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ஆனா கொஞ்சம் தேவை இல்லாம யோசிப்பார் அதான். செல்வா கரி வாங்க போயிருக்கான். அவங்களுக்கும் சேத்து சமைக்கலாம் வா“, என்று வேணி சொன்னதும் நிம்மதியாக உணர்ந்தாள் தேன்மொழி.
சொன்னது போல் மதியம் சமைத்தது தான் மிச்சம், அடுத்த நொடி அவள் முன்னே வந்து நின்றான் தினேஷ். ஒரு புரியாத பார்வை பார்த்தாலும் அதை அவன் கையில் கொடுக்கும் போது அங்கே வந்தான் செல்வா.
“சின்ன மாமா வீட்டுக்கு சாப்பாடு தானே? நான் அந்த பக்கம் தான் போறேன். நான் கொடுக்குறேன்”, என்று அதை பிடுங்கி கொண்டான் செல்வா.
[the_ad id=”6605″]
அதிர்ந்து போய் அவனைப் பார்த்த தினேஷ் கொலை வெறியோடு அவனை முறைத்தான்.
“நீயா? உனக்கு தான் படிக்க வேண்டியது இருக்காமே?”, என்று தினேஷை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கேட்டாள் தேன்மொழி.
“என்னது படிப்பா? நானா? இது தான் இந்த நூற்றாண்டோட சிறந்த பொய்யா இருக்கும்?”
இருவரும் தினேஷை பார்த்துக் கொண்டிருக்கும் போது தேன்மொழி கையில் இருந்த சாப்பாடை பிடுங்கி கொண்ட தினேஷ் “நானே போறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான். தேன்மொழியும் செல்வாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“அண்ணி, எனக்கு ஒரு சந்தேகம்”,என்றான் செல்வா.
“சொல்லுங்க கொழுந்தனாரே”
“என்னது கொழுந்தனாரா? ஏய் லூசா? எதுக்கு இப்படி சொல்ற? பொம்பளை ரவுடி ஒழுங்கா செல்வான்னு சொல்லு”
“அப்ப நீ மட்டும் அண்ணின்னு சொல்லலாமா? காமெடியா இருக்கு டா”
“அம்மா தான் தேனு, அப்படி சொல்ல சொல்லுச்சு”
“அத்தைக்கு வேற வேலையே இல்லை. நீ எப்பவும் போல இரு. சரி என்ன சந்தேகம்னு சொல்லு”
“இவன் ஏன் இப்படி ஓடுறான்? உனக்கு ஏதாவது தோணுதா?”
“அவன் நான் போன் பேசும் போதுல இருந்து என் பின்னாடி தான் அலைஞ்சான். எனக்கும் அந்த சந்தேகம் தான். விடு கத்திரிக்காய் முத்துனா சந்தைக்கு வந்து தானே ஆகணும்”,என்று சொல்லி விட்டு தன்னுடைய போனை எடுத்த தேன்மொழி கீதாவை அழைத்தாள்.
“சொல்லுக்கா”
“தேனு தினேஷ் கிட்ட சாப்பாடு கொடுத்து விட்டுருக்கேன். அப்புறம் நைட்டுக்கு நான் சொல்லிக் கொடுக்குற மாதிரி செய் சரியா?”
“சரிக்கா, காலைல நான் வச்ச சட்னியை சாப்பிட்டு அப்பா நல்லா இருக்குன்னு சாப்பிட்டார். நான் செஞ்சு கொடுத்ததுல அவருக்கு ரொம்ப சந்தோஷம்”
“சரி, நைட்டுக்கு நானே சொல்லி தரேன். அது படி செய்.அப்புறம் சித்தி சித்தப்பாக்கு எதுக்கு சண்டை?”
கீதா சொன்னவற்றைக் கேட்டதும் “என்னால தான சண்டை? நான் தான் சித்தப்பாவை வர சொன்னேன் கீதா”, என்று வருத்தத்துடன் சொன்னாள் தேன்மொழி.
“ஐயோ அப்படி எல்லாம் இல்லைக்கா. அதெல்லாம் அம்மா சீக்கிரம் வந்துருவாங்க. சரி தினேஷ் வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். கதவு தட்டுற சத்தம் கேக்குது. சரி நான் அப்புறமா பேசுறேன்”, என்று சொல்லி வைத்து விட்டாள்.
“அதுக்குள்ள இந்த பய அங்க போய்ட்டானா?”, என்று எண்ணி ஒரு தோள் குலுக்களோடு அங்கிருந்து சென்று விட்டாள் தேன்மொழி.
கதவை தட்டிக் கொண்டிருந்த தினேஷுக்கோ இதயம் எம்பி வெளியே குதித்து விடும் போல இருந்தது. அடுத்த நிமிடம் கதவை திறந்தாள் கீதா.
அதுவும் புன்னகை முகமாக “அக்கா இப்ப தான் நீங்க வருவீங்கன்னு சொன்னாங்க. உள்ள வாங்க”, என்று வேறு அழைத்தாள்.
கதிரின் திருமணத்தில் அவளை பார்த்ததுமே அவனுக்கு அவளைப் பிடித்து போனது. அவள் போகும் இடங்களில் எல்லாம் அவன் கண் பார்வை தொடர்ந்தது. அது அவளுக்கு தெரியாது.
கதிரின் அப்பா மதிக்கு கீதாவின் அப்பாவை பிடிக்காது என்பது அவனுக்கு நன்கு தெரியும். கீதா கிடைப்பாளா என்று கூட அவனுக்கு சந்தேகமே. ஆனால் இப்போது அவளை அருகில் பார்க்கும் சந்தர்ப்பத்தை அவன் நழுவ விட தயாராக இல்லை.
அதனால் அவளை பார்த்த படியே நின்றான். கீதாவோ “இவன் என்ன இப்படி பாத்துட்டு இருக்கான்?”, என்று குழப்பமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“யாரு கீதா வந்துருக்குறது?”, என்று கேட்ட படியே உள்ளே இருந்து வந்தார் துரைராசு. அவர் குரலில் தான் அவன் நிகழ்காலத்துக்கு வந்தான்.
[the_ad id=”6605″]
“அப்பா, தேனக்கா சாப்பாடு கொடுத்து விட்டுருக்கா?”
“அவளுக்கு ஏன் மா கஷ்டம்? நீ ஏன் தம்பி வெளியவே நிக்குற? உள்ள வா? நீ தான் கடைக்குட்டியா?”, என்று கேட்டார் துரைராசு.
“இல்லை மாமா, நான் ரெண்டாவது. என் பேர் தினேஷ். தம்பி பேர் செல்வா”
“சரி நீ உள்ள வா”
“இல்லை மாமா தேன்மொழி கொடுத்துட்டு வர சொன்னா. இந்தாங்க”, என்று அவர் கையில் கொடுத்தவன் “நான் கிளம்புறேன்”, என்று அவரிடம் சொல்லி விட்டு கீதாவை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பி விட்டான்.
“நல்ல பையன். உள்ள கூட வராம போறான் பாரு. குடும்பமே நல்ல குடும்பம் தான். நான் தான் தேவை இல்லாம பண்ணி பகையை வளத்துக்கிட்டேன். அப்புறம் கீதா தேன்மொழிகிட்ட சாப்பாடு கொடுத்து விட வேண்டாம்னு சொல்லிரு மா. அண்ணன் வீட்ல இருந்து அவ கொடுத்தா பரவால்ல. ஆனா அவ புகுந்த வீட்ல இருந்து கொடுக்குறா. அங்க நம்மலாள அவளுக்கு எதுவும் பிரச்சனை வரக் கூடாது மா”
“சரிப்பா நான் சொல்லிறேன், நான் அக்கா கிட்ட கேட்டு சமைக்கிறேன். அப்புறம் அம்மாவை கூட்டிட்டு வரலையாப்பா?”
“அவ இனியாவது திருந்தனும் மா. உனக்கு ஒரு வாழ்க்கை அமையும் போது அவ நல்ல குணத்தோட இருக்கணும். அவளே வருவா. நீ உள்ள வா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
சாப்பாடு கொடுத்து விட்டு கீதா நினைவோடே வீட்டுக்கு வந்த தினேஷை புரியாத பார்வை பார்த்தாள் தேன்மொழி.
பின் ஒரு தோள் குலுக்களோடு தன்னுடைய அறைக்கு சென்றாள் தேன்மொழி. அங்கே கட்டிலில் படுத்திருந்தான் கதிர்.
அவனைப் பார்த்ததும் பாட்டியிடம் பேசியது நினைவில் வந்தது. தன் தப்பை உணர்ந்தவள் அவன் அருகில் சென்று அமைதியாக அமர்ந்தாள்.
அவனிடம் அவள் மன்னிப்பும் நன்றியும் சொல்ல வேண்டும். “எப்படி பேச ஆரம்பிக்க?”, என்று யோசித்தாள்.