அத்தியாயம் 12
என்னை விட்டு வெகு
தூரம் சென்று விடாதே,
திரும்பி வரும் வழியை
நீ மறந்து போகலாம்!!!
அவனையே அவள் திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க அவனோ அவளை வேகமாக நெருங்கி அவள் அருகே அமர்ந்து அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அவள் என்ன என்று உணரும் முன்பே அவள் இதழ்களை முதல் முறையாக சிறை செய்திருந்தான். ஏதோ ஒரு பெரிய அலையில் அடித்துச் செல்லப் பட்டதைப் போல உணர்ந்தாள் சுசீலா.
இப்படி நடக்கும் என்று அவள் கனவா கண்டாள்? அவன் இதழ் முத்தத்தை எதிர்க்க தோன்றாமல் எதிர்க்க முடியாமல் அவள் உடலில் ஒரு பரபரப்பு உருவானது.
அவள் உதடுகளைத் தேடி அவன் உதடுகள் அலைய அவன் கைகளும் அவள் உடலில் பயணம் போனது. அவன் செய்கையைத் தாங்க முடியாமல் சுசீலா கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.
உடல் நடுங்கினாலும், அலை பாய்ந்து கொண்டிருந்த அவள் மனதுக்கு இளைப்பாறுதல் கிடைத்தது போலவும் இருந்தது. அவன் கைகள் அவள் வெற்றிடையை இறுக்கிப் பிடிக்க அவள் கைகள் உயர்ந்து அவன் பின்னந்தலையை இறுக்கிப் பிடித்தது.
அவளின் எதிர்ப்பில்லா நிலையையும், அவளின் நெருக்கம் கூடுவதையும் உணர்ந்தவன் மீண்டும் மீண்டும் அவள் இதழ்களை நாடினான். அதன் பின்னும் அவள் இதழ்களில் இருந்து விலகி அவள் முகமெங்கும் ஆவேசமாக பல முத்தங்களை பதித்தான்.
அவனின் அதிரடியான செய்கையில் மூச்சுத் திணறிப் போய் அமர்ந்திருந்தாள் சுசீலா.
சிறிது நேரத்தில் தன்னுணர்வுக்கு வந்தவன் அவளை விட்டு விலகி அமர்ந்தான். அவன் செய்கையில் அவனுக்கே திகைப்பு தான். அவளுடைய பேச்சும், அவனுடைய கோபமும் தான் அவனை இப்படிச் செய்ய வைத்தது. ஆனால் அவளை விட்டு விலகி வருவதற்குள் மூச்சு முட்டிப் போய் விட்டான்.
முகம் சிவந்து அமர்ந்திருந்தவளைக் கண்டு அவன் முகமும் மனமும் மென்மையானது. தன்னுடைய உதடுகளில் புன்னகையை படர விட்டவன் “இனி இப்படி பேசினா என்னோட தண்டனையும் இப்படி தான் இருக்கும் சுசீ. மறுபடி மறுபடி சாவைப் பத்தியே பேசுற? சாவுற வயசா உனக்கு? உன்னை சாக வைக்கவா நான் உன்னை ஒவ்வொரு தடவையும் காப்பாத்துறேன்? இனி இப்படி பேச மாட்டேன்னு நினைக்கிறேன்”, என்றான்.
அவள் வெட்கத்தில் தலை குனிந்த படியே இருக்க அவளை சீண்ட எண்ணியவன் “என்ன மாமி, சத்தத்தையே காணும்? காது செவுடாகிருச்சா? காது கேக்குற மிஷின் மாட்டச் சொல்லவா?”, என்று கேட்டான்.
அவள் அவனை முறைத்துப் பார்க்கவும் அவள் மூக்கில் இருந்த ஒற்றைக் கல் மூக்குத்தி அவனையே அழைப்பது போல இருந்தது. தன்னுடைய கையை நீட்டி அதை தொட முயல “பிளீஸ்”, என்று முணுமுணுத்த சுசீலா தன்னுடைய மறுப்பைக் காட்டினாள்.
அதில் அவன் முகம் சுருங்கிப் போனது. இவ்வளவு நேரம் அவன் கைக்குள் அமைதியாக இருந்தவளின் விலகல் அவனுக்கு வலிக்கவே செய்தது. ஆனால் அவளின் நிலை அவனுக்கு தெரியாதே.
அவளுக்கு தெரிய வேண்டும். அவன் மனதில் அவள் இருக்கிறாளா என்று அவன் வாயைத் திறந்து சொல்ல வேண்டும் என்று அவள் பெண் மனம் எதிர் பார்த்தது. வாய் விட்டுக் கேட்டும் பதில் சொல்லாதவன் இப்போது எடுத்துக் கொண்ட நெருக்கம் அவளுக்குள் மெல்லிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
“என்னை இவன் என்னன்னு நினைச்சு இப்படிச் செஞ்சான்?”, என்று எண்ணியவளின் கண்கள் இயலாமையால் கலங்கியது.
அவன் முகத்தை பார்க்க முடியாமல் அவள் தடுமாற அவள் முகத்தை தன்னுடைய கைகளில் ஏந்தியவன் அவள் கண்களை உற்றுப் பார்த்தான். அவள் விலக்க முயல அவன் பிடி இறுகியது.
அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தான். அவள் கண்கள் கலங்கி, சிவந்திருந்தது. அவளுடைய உதடுகள் சிவந்து துடித்துக் கொண்டிருந்தது. அவளுடைய முகம் பல உணர்ச்சிகளை வெளிப் டுத்தியது.
“சுசீ, என்ன ஆச்சு? என்னைப் பாரு, என்ன ஆச்சுன்னு கேக்குறேன்ல?”, என்று கேட்டவனுக்கு தன்னுடைய செய்கை பிடிக்காமல் தான் அவள் கலங்குகிறாள் என்று தோன்றி வலியைக் கொடுத்தது.
மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் இருந்த கரை காணாத காதல் யுவனுக்கு இதத்தைக் கொடுத்தது.
அவள் கண்கள் அவனிடம் காதலை யாசகம் கேட்டது. அதை சரியாக புரிந்து கொண்டவன் “இவ என்கிட்ட கெஞ்சனுமா? இவளே வரம் கொடுக்குற தேவதை”, என்று எண்ணியவன் “எதையும் யோசிக்காத சுசீ. வீட்டுக்கு போய் எல்லாம் பேசலாம். இப்ப தூங்கு”, என்று மென்மையாக சொன்னான்.
“இப்ப நீங்க நடந்துக்கிட்டதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாம எப்படி நான் தூங்க முடியும்?”, என்று தவிப்புடன் கேட்டாள் சுசீலா.
காதலைச் சொல்லாமல் முத்தமிட்டதை கேட்கிறாள் என்று புரிந்தவன் “உனக்கு நான் செஞ்சது பிடிக்கலையா? வெறுப்போட தான் இதை ஏத்துகிட்டியா?’, என்று கேட்டான்.
“நான் அப்படியா சொன்னேன்? நான் ஆசைப் பட்டு தான் அமைதியா இருந்தேன்னு ஒத்துக்குறேன் போதுமா? என்னால உங்களை விட்டு விலக முடியலை தான். விலகவும் விரும்பலை. ஆனா நீங்க…என்ன நினைக்கிறீங்கன்னே எனக்கு புரியலை”
“இதைத் தான் வீட்ல போய் பேசணும்னு சொன்னேன்?”
“இல்லை எனக்கு இப்பவே தெரியணும்? நான் யாரு உங்களுக்கு? நான் உங்களுக்கு யாருமே இல்லைன்னா என்னை அஸ்வதி இருக்குற இடத்துல கொண்டு போய் விட்டுருங்க”
“ஏய், எதுக்கு டி இப்படி பேசுற?”, என்று கேட்டதும் அந்த டி என்று உரிமையான சொல் அவள் உள்ளத்தைக் குளிர்வித்தது. அந்த பிரத்யேக அழைப்பில் ஆர்வமாக அவனை பார்த்தாள்.
அவள் கண்களில் இருந்த எதிர்பார்ப்பு அவனுக்கு புரிந்தாலும் இது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யும் விஷயம் இல்லையே.
“நாம பேசணும் சுசீ. ஆனா அதுக்கு இப்ப நேரம் இல்லை. முதல்ல நான் யாருன்னு உனக்கு தெரியுமா? என்னோட ஊர் என்ன? அம்மா அப்பா யாருன்னாவது உனக்கு தெரியுமா? அதை எல்லாம் தெரிஞ்ச அப்புறம் உனக்கு இப்ப இருக்குற காதல் இருந்தா நான் என்னோட மனசுல இருக்குறதைச் சொல்றேன். ஆனா எப்பவும் உன்னை நான் விட மாட்டேன். எப்பவுமே நீ என்னோட பாதுகாப்புல சந்தோஷமா இருக்கலாம். நான் உனக்கு ஒரு நல்ல நண்பனா உன் கூட இருப்பேன். எப்படி ஒரு சகோதரியா மாயா என்கூடவே இருக்காளோ நீயும் ஒரு தோழியா என் கூடவே இருப்ப. உன்னை என்னால எங்கயும் கொண்டு போய் விட முடியாது”, என்று இதமாக சொன்னதும் அவள் உதடுகள் புன்னகையால் மலர்ந்தது.
அந்த புன்னகை அவனுக்கும் தொற்ற “எதுக்கு இந்த சிரிப்பு மாமி?”, என்று கேட்டான்.
“நண்பன்னு சொன்னீங்கல்ல? அதான் சிரிப்பு வந்துருச்சு”
காதலன் போல முத்தமிட்டு விட்டு தோழி என்று சொன்னதைச் சொல்கிறாள் என்று புரிந்து அவனுக்கும் சிரிப்பு வந்தது.
அவன் அமைதியாக புன்னகைத்த படியே இருக்க “நீங்க யாரா இருந்தாலும் எனக்கு உங்களை பிடிக்கும். நீங்க செய்ற கொலைகள் கூட நல்லதுக்குன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். உங்க மேல எனக்கு எந்த வெறுப்பும் வராது. எப்பவுமே வராது”, என்றாள் சுசீலா.
“சரி அதை அப்புறம் பேசுவோம்”, என்று சொல்லி எழுந்து கொண்டான். “இங்கிருந்து போகப் போறானே?”, என்று எண்ணியவளுக்கு அவன் அவளுடைய அருகில் இருந்து விலகியதும் முகம் சோர்ந்து போனது.
அவளுடைய ஏக்கமான பார்வையில் அவளைப் பார்த்து சிரித்த யுவன் “மாயா உள்ள வந்தாலும் வந்துருவா. அதான் எழுந்தேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு சுசீ. நான் அடிக்கடி வரலைன்னு கவலைப் படாதே. எல்லாமே ஒரு நாள் உன்கிட்ட சொல்றேன். அப்புறம்…. அப்புறம்…. உன்னோட டிரஸ் கொஞ்சம் விலகி இருக்கு.
சரி செஞ்சிக்கோ”, என்று சொன்னதும் வெட்கத்தில் சிவந்து போனாள் சுசீலா.
உடையை சரி செய்தவள் அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் உதட்டை கடித்துக் கொண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். அவள் உதட்டருகே விரலைக் கொண்டு வந்தவன் “அதை விட்டுரு பாவம்”, என்று சொல்லி அவள் உதட்டை பற்களில் இருந்து விடுவித்தான். அவன் தொடுகை அவளுக்கு அவன் மேல் இன்னும் அதிகமான ஈர்ப்பைத் தான் கொடுத்தது.
அவன் தொடுகையில் மயங்கி நிற்பதை நினைத்து அவளுக்கே அவளை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது.
அவன் மட்டும் என்னவாம்? ஆட்டம் பாமை போல் வெடித்து சிதறுபவன் இன்று பூ போல் இருக்கும் சுசீலாவைக் கண்டு மயங்கி நிற்பது அதிசயமே.
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு சுசீ. நீ எதையும் யோசிக்காம ரெஸ்ட் எடு. மாயா வெளிய தான் இருக்குறா. உனக்கு ஹாஸ்பிட்டல் டிரஸ் தான் கொடுப்பாங்க. அதனால கவலை இல்லை. நான் அப்புறம் உன்னைப் பாக்க வரேன்”, என்று சொல்லி விட்டு அவன் கிளம்பியதும் அவனைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தாள் சுசீலா.
“இவனைப் பற்றி தெரிஞ்சதும் நான் இவனை மறந்துருவேனா? இவன் யாரா இருந்தாலும் இவனை எனக்கு பிடிக்கும். ஆனால் ஏன் இவனை பிடிக்குது?”, என்று யோசித்தாள்.
அவன் அப்படியே இவளுக்கு நேர் மாறானவன். உணவை எடுத்துக் கொண்டாலே அவன் அனைத்தையும் உண்பான். இவளுக்கோ கவிச்சை வாடை ஆகவே ஆகாது.
அவன் காரமாக சாப்பிட்டால் இவள் தயிர் சாதம். இவள் பகவானே பகவானே என்றால் அவன் கடவுள் எங்க இருக்கார் என்று கேட்பான். இவள் மென்மையாக குணம் கொண்டவள். அவனோ வன்மையான குணம் கொண்டவன். அவன் கிழக்கு என்றால் இவள் மேற்கு. இவள் அமைதி என்றால் அவன் அதிரடி.
இப்படி அனைத்திலும் எதிராக இருக்கும் அவனை எப்படி பிடித்தது என்பது விடை தெரியாத புதிர் தான். ஒரு வேளை எதிர் எதிர் துருவம் ஈர்க்கும் என்பது இது தானோ?
அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டு தான் வீட்டுக்கு காரை விட்டான் யுவன். அவன் மனதில் வெகுவான துக்கம் பொங்கி வந்தது. அவன் கடந்து வந்த பாதைகளை எண்ணி அவன் இதயம் ரத்தக் கண்ணீர் வடித்தது.
இதற்கெல்லாம் காரணமான ரெட்டி மீது கட்டுக்கடங்காத கொலை வெறி வந்தது. அவனைக் கொன்று விடும் வேகம் வந்தது. அடக்கிக் கொண்டான்.
அவன் வீட்டுக்கு சென்றதும் “இன்னும் இவனை வச்சிருக்கணுமா பையா?”, என்று கேட்டான் கேசவ்.
“ஆமா பையா, பிடிச்சது பிடிச்சாச்சு. போட்டுத் தள்ளிரலாமா? இன்னும் வச்சு என்ன செய்ய? அவனோட ஆட்களையும் நீங்க சொன்ன மாதிரி போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க. இதுக்கப்புறமும் ஏன்? நாங்க அடிச்ச அடில துவண்டு போய் இருக்கான்”, என்றான் சுமன்.
“புரியுது. ஒரு காரணமா தான் நான் அவனை எதுவும் செய்யாம இருக்கேன். கொஞ்ச நேரம் விட்டு விட்டு அவனை அடி பின்னிருங்க. அவனால எத்தனை பெண்கள் வலியை அனுபவிச்சாங்களோ அந்த ஒட்டு மொத்த வலியையும் அவன் அனுபவிக்கணும். அப்புறம் சுமன், நீ மாயாவுக்கு சாப்பாடு எடுத்துட்டு போகும் போது அவளுக்கு தேவையான டிரஸ்ஸும் எடுத்துட்டு போ”, என்று கணவன் மனைவி இருவரையும் கோர்த்து விட்டுவிட்டு சென்று விட்டான்.
“என்னது மாயாவுக்கு டிரஸ்ஸா?”, என்று விழி பிதுங்கிப் போய் நின்றான் சுமன்.