“ஆமாம் அக்கா. நான் தேனி திருவிழாவில் பிள்ளையார் சிலை ஒன்னு பார்த்தேன். ரொம்ப அழகா இருந்தது. அதே மாதிரி சிலை நான் சென்னையில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அதான் வேற எங்கேயாவது கிடைக்குமான்னு தேடிட்டு இருக்கேன். தேனி திருவிழாவுக்கு நம்ம வீட்ல இருந்து யாராவது போய் இருக்காங்களா?” என்று மலரின் முகத்தை உற்றுப் பார்த்தபடி கேட்டாள் மதுமிதா.
“தேனி திருவிழாவுக்கா?” என்று மலர் யோசித்தாள்.
மதுமிதாவின் மனம் ‘இல்லைன்னு சொல்லணும்’ என்று தெய்வத்தை வேண்டிக் கொண்டது .
ஆனால் மலர் “ஞாபகம் வந்துடுச்சு. மாதவன் ஒரு தடவை தேனி திருவிழாவுக்கு போயிருக்கிறான்.”
“எப்போ?” என்று வேகமாக துடித்துக் கொண்டிருந்த இதயத்தோடு கேட்டாள் மதுமிதா.
“அது ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும். எதுக்கு கேக்குற மது?” என்றாள் மலர் .
மதுமிதா பேசவில்லை. அதிர்ச்சியில் இருந்தாள்.
அவளை மலர் தொட்டு “மது மது” என்று அழைத்தாள்.
சுயநினைவுக்கு வந்த மதுமிதா
“அது அது அந்தப் பிள்ளையார் சிலை வேணும். அதற்காக தான் அக்கா.” என்று சமாளித்தாள்.
“அதுக்கு என்ன மதுமிதா, நம்ம ஊரு திருவிழாவில் எல்லா சிலையும் கிடைக்கும். நாம இங்கேயே வாங்கிக்கலாம்.”
“சரி அக்கா.” என்று அவள் வாய் சொன்னாலும் அவளது மனம் எங்கேயோ இருந்தது .
அப்போது “அம்மா” என்று ஆதித்யா அழைக்க
“என்னடா?” என்று அவனிடம் சென்றாள் மலர்.
மதுமிதா.வால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. கால்கள் பலம் இழந்தது போல் தோன்றியது. சமாளித்துக்கொண்டு நடந்துசென்று அந்த தோட்டத்தில் போட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தாள்.
அவனை முதன்முதலாக பார்த்தது முதல் நடந்தது எல்லாவற்றையும் ஒருமுறை நினைத்து பார்த்தாள். அண்ணாமலை பார்வதி அறுபதாம் கல்யாணத்தில் மதுமிதா மாதவனை பார்த்தபோது ‘திருவிழாவில் பார்த்தது இவனா?’ என்று சந்தேகித்தாள்.
அவனிடம் தேனி திருவிழாவுக்கு வந்திருக்கீங்களா?’ என்று கூட கேட்டாள். ஆனால் அவன் அதற்கு சரியாக பதில் சொல்லவில்லை. அதற்குள் அவளது தாய் ஏதேதோ பேசி இதைப்பற்றி கேட்கக்கூடாது என்று சொல்லிவிட்டார் .
என்று பலவாறு யோசித்தவள்
“கீதா! கீதா கூட பொய் சொன்னாளா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
அவசர அவசரமாக கையில் இருந்த கைபேசியை எடுத்து கீதாவுக்கு தொடர்பு கொண்டாள். ஆனால் அவளது கைபேசி அணைக்கப்பட்டிருந்தது.
“வடபழனி கோயிலில் அப்பா, மாமாவை பார்த்த போதும் நாம் அதே ப்ளூ ஷர்ட்டை பார்த்தோம். மாமா கூட அவரிடம் பையன் வந்திருக்கான்னு சொன்னாரு. அப்போ அவன் இவன் தானா? என்கிட்ட உண்மையை மறைத்து என்னை கல்யாணம் பண்ணிக் கொண்டானா? நான் இவன்கிட்ட ஏமாந்து விட்டேன். கீதா என்கிட்ட பொய் சொல்லிட்டாள். ரெண்டு பேரும் சேர்ந்து என்னை நல்லா ஏமாற்றி இருக்காங்க” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டாள்.
எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க அவளுக்கு தலை சுற்றியது.
‘யாரோ நம்மள ஃபாலோ பண்ற மாதிரி இருந்ததே. அப்போ இவன் தான் என்னை ஃபாலோ பண்ணி இருக்கானா?’ என்று யோசித்தாள்.
இருட்டியது கூட தெரியாமல் அதே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து இருந்தாள். “மது மது” என்று அழைத்தபடி மலர் அங்கு வந்தாள்.
மதுமிதா சுய நினைவுக்கு வந்தாள்.
“மது இந்த இருட்டில் இங்கே உட்கார்ந்து என்ன பண்ற?” என்று மதுமிதாவும் முகத்தை பார்த்தபடி கேட்டாள் மலர் .
“ஒன்னும் இல்லை அக்கா. உள்ள ஒரே புழுக்கமா இருந்தது .அதனால தான் கொஞ்சம் காத்து வாங்கலாம்னு வந்தேன். நான் இங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கிறேன்.” என்றாள் சமாளித்துக்கொண்டு.
“சரி நைட் என்ன சாப்பிடுற? தோசை, இட்லி எது வேணும்?” என்று கேட்டாள் மலர்.
“அக்கா எனக்கு வயிறு சரியில்லை. எனக்கு இன்னிக்கி சாப்பாடு வேண்டாம்.” என்று மதுமிதா கூறவும் அவளின் முகத்தை பார்த்த மலர்
“உடம்பு சரியில்லையா மது? டாக்டர்கிட்ட போகலாமா?” என்று அக்கறையாக கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை அக்கா. கொஞ்சம் டயர்டா இருக்கு. அவ்வளவுதான். கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்திருந்தால் சரியா போயிடும்னு தோணுது.”
“சரி மது. ஏதாவது வேணும்னா சொல்லு.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் மலர்.
எட்டரை மணியளவில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இரவு உணவு சாப்பிட அமர்ந்தனர்.
“மதுமிதா எங்கே?” என்று பார்வதி கேட்டார்.
“அவளுக்கு வயிறு சரியில்லையாம். அதனால சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டா.” என்றாள் மலர்.
“அப்படியா? இன்னைக்கு ஒரு நாள் பார்க்கட்டும். நாளைக்கும் சரியாகவில்லை என்றால் டாக்டர்கிட்ட போகலாம் .”
“சரி அத்தை. நாளைக்கு அவளை நான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்.” என்றாள் மலர்.
மாதவனால் சரியாக சாப்பிட முடியவில்லை. மதுமிதாவை விசாரிக்க நினைத்து இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டான்.
தோட்டத்திற்கு சென்று கை கழுவிக் கொண்டிருந்தான் மாதவன். அவனிடம் சென்றாள் மலர்.
“மாதவா மதுமிதாவுக்கு ஏதோ பிரச்சனைனு நினைக்கிறேன். அவள் பார்க்க ரொம்ப டல்லா இருந்தா. வயிறு சரியில்லைன்னு சொன்னாள். ஆனால் எனக்கு அவ வேற ஏதோ பிரச்சனையில் இருக்கிற மாதிரி தெரியுது. என்னன்னு எனக்கு புரியல.” என்றாள் மலர்.
மாதவனுக்கு ஏதோ உறுத்தியது.
“எப்போதிலிருந்து அப்படி இருக்கா?” என்று கேட்டான் மாதவன்.
“சாயந்திரம் நல்லாதான் இருந்தாள். திருவிழாவைப் பற்றி கூட பேசினா.”
“திருவிழா” என்ற சொல்லை கேட்டதும் அதிர்ச்சியான மாதவன்
“என்ன? எந்த திருவிழாவை பத்தி பேசினா?” என்று அவசர அவசரமாக கேட்டான்.
“ஏதோ தேனி திருவிழாவைப் பற்றி பேசினாள்.”
“அப்புறம் என்ன சொன்னா?” என்று படபடப்புடன் கேட்டான் மாதவன்.
“தேனி திருவிழாவுக்கு நம்ம வீட்டுல இருந்து யாராவது போனார்களான்னு கேட்டா.”
“அதுக்கு நீங்க என்ன சொன்னீர்கள்?” என்று கேட்கும்போதே அவனுக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது.
“நீ ஒரு தடவை ஒரு வருஷத்துக்கு முன்னாடி போய் இருக்கன்னு சொன்னேன்.” என்று மலர் சொல்லவும் அதற்குமேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை.
“இப்போ மது எங்க இருக்கா?” என்று கேட்டான்.
“என்னனு தெரியல. ரொம்ப நேரமா தோட்டத்துல இருக்குற கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து கொண்டு இருக்கா. நீ போய் அவளை பார்த்து பேசு.” என்று மலர் சொல்லி முடிக்கும் முன்பே அவன் அங்கிருந்து சென்றிருந்தான்.
தோட்டத்தில் கயிற்றுக் கட்டிலில் மதுமிதா அமர்ந்து கொண்டிருப்பது நிலவொளியில் ஓரளவிற்கு தெரிந்தது.
“மது” என்று மாதவன் அழைக்கும் குரல் கேட்டு திரும்பினாள். அவள் கண்களில் கண்ணீர் மின்னியது. வெகுநேரம் அழுது கொண்டிருந்ததை முகம் சிவந்து காட்டியது. அவனை பார்த்ததும் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.
“அப்போ இத்தனை நாளா என்னை ஏமாத்தி இருக்க. அப்படித்தானே?” என்று கோபமாக சிவந்த கண்களுடன் கேட்டாள் மதுமிதா.
“நீ நினைக்கிற மாதிரி இல்லை மது. நான் சொல்றதை கேளு.” என்றான்.
“இன்னும் என்ன கதை சொல்ல போகிற?” என்று ஏக வசனத்தில் பேசினாள் அவள்.
“நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.” என்று கெஞ்சும் குரலில் கேட்டான் மாதவன்.
“என்ன கேட்கணும்? இவ்வளவு நாளா நீ சொல்றதை தானே கேட்டுட்டு இருந்தேன் . எவ்வளவு பெரிய உண்மையை என்கிட்ட இருந்து மறைத்து இருக்க.” என்று கேட்கும் போது அவள் கண்களிலிருந்து நீர் வழிந்தது.
“அப்போ கத்தி வீசிய பொறுக்கி நீ தானா?” என்று நேரடியாக கேட்டாள் அவள்.
“போதும் நிறுத்து மது. என்னை பேச விடு. நான் கத்தியை எடுக்கவே இல்லை. அதை யார் மேலேயும் நான் வீசிவும் இல்லை.”
“இதை நான் நம்பனுமா?”
“நீ நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் இதுதான் உண்மை.”
“அப்போ அதை ஏன் நீங்க என்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லல ?”
“ நீதான் ப்ரூப் இல்லாமல் நம்ப மாட்டேன்னு உன் பிரண்டு கீதா கிட்ட சொன்னியே.”
“அப்போ நீங்க என்னை எனக்கு தெரியாம கல்யாணத்துக்கு முன்னாடி ஃபாலோ பண்ணி இருக்கீங்க. அப்படித்தானே?”
“அது அது வந்து மது….” என்று தடுமாறினான் மாதவன்.
“இதுக்கே இப்படி தடுமாறினா எப்படி? இன்னும் நான் கேட்க வேண்டியதை கேட்கவே இல்லையே.”
“என்ன? என்ன கேக்கணும்? இதுக்கு மேல என்ன கேட்கணும்?” என்று புரியாமல் அவள் முகத்தை பார்த்தபடி கேட்டான் மாதவன்.