அவன் இது வரை அவளுடைய உடைகளையோ அவளுடைய பொருள்களையோ தொட்டது இல்லை. இருவரும் ஒரே அறையில் தங்கினாலும் இருவரும் தனி தனியே தான் இருக்கிறார்கள். இப்போது அவளுக்கு உடைய எடுத்து போகச் சொன்னால் அவள் என்ன சொல்வாளோ என்று பயமாக இருந்தது.
தனது அறைக்குள் நுழையப் போகும் போது திரும்பி பார்த்த யுவன் சுமன் அதே இடத்தில் அசையாமல் இருக்கவும் மாடியில் இருந்தே “சுமன்”, என்று அழைத்தான்.
தன்னுடைய நினைவுகளில் மூழ்கி இருந்தவன் அதிர்ந்து யுவனைப் பார்க்க “என்ன அப்படியே நின்னுட்ட? ஹாஸ்பிட்டல் கிளம்பலையா? மாயா தனியா இருப்பா, நீ போயேன் பிளீஸ். எனக்கு ரெட்டி விஷயத்தில் கொஞ்சம் வேலை இருக்கு”, என்றான்.
“இல்லை பையா… இதோ போறேன்.., ஆனா டிரெஸ்… எப்படி? இல்லை இல்லை என்ன டிரெஸ் எடுக்கன்னு யோசிச்சிட்டு இருக்கேன்”, என்று உளறிக் கொட்டினான்.
“இவ்வளவு தானா? மாயாவுக்கு போன் பண்ணி என்ன வேணும்னு கேட்டுட்டு எடுத்துட்டு போ”, என்று சொல்லி விட்டு தன்னறைக்குச் சென்று விட்டான்.
வேறு வழியில்லாமல் தங்கள் அறைக்குச் சென்றான் சுமன். மாயா உடைகள் இருக்கும் அலமாரியைத் திறந்து பார்த்தான். வித விதமான உடைகள் அங்கே அணிவகுத்திருந்தன.
“இதில் எதை எடுத்துட்டு போக?”, என்று தடுமாறியவன் ஒரு வழியாக மாயாவை போனில் அழைத்தான்.
சுமன் அழைக்கவும் தடுமாறிய படியே அதை எடுத்து காதில் வைத்தாள்.
“மாயா”
“ஆன் சொல்லுங்க”
“இல்லை ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிட்டு இருக்கேன். ஏதாவது எடுத்துட்டு வரணுமா?”, என்று அவன் பொதுவாக கேட்டதும் “எப்படி இவனை டிரஸ் எடுத்துட்டு வரச் சொல்ல?”, என்று அவள் திணறினாள்.
“என்ன ஆச்சு? லைன்ல இருக்கியா?”
“ஆன் இருக்கேன். டிரெஸ் வேணும். ஆனா நீங்க எப்படி எடுத்துட்டு வருவீங்கன்னு தான் யோசிக்கிறேன்”
“நான் வேணும்னா ஹாஸ்பிட்டல் வந்து உன்னைக் கூட்டிட்டு வீட்டுக்கு வரட்டா? டிரெஸ் எடுத்துட்டு திரும்பி போகலாம்”
“இல்லை, சுசீ அப்செர்வேசன்ல இருக்காங்க. டாக்டர் வந்துட்டே இருக்காங்க. அது மட்டுமில்லாம ரெட்டி ஏதாவது ஆளை செட் பண்ணி வச்சிருந்தா என்ன செய்யுறது? நான் இங்கயே இருக்கேன். நீங்களே எடுத்துட்டு வாங்க”
“எனக்கு எதை எடுக்கன்னே தெரியலை. கபோர்ட்ல மேல உள்ளதா கீழ உள்ளதா?”, என்று அவசரமாக கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான்.
ஏற்கனவே அலமாரியைப் பார்த்து விட்டது அவளுக்கு தெரிந்திருக்குமே என்று தடுமாறிப் போனான். அவளும் அதையே தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.
“இல்லை மாயா, பையா தான் உனக்கு டிரஸ் எடுத்துட்டு போகச் சொன்னாங்க. அதான் எடுக்கலாம்னு திறந்து பாத்தேன். ஆனா என்ன எடுக்கன்னு தெரியலை. அதனால தான் போன் பண்ணுனேன்?”, என்று தட்டுத் தடுமாறிச் சொன்னான்.
“இதைக் கேக்குறதுக்கு இவ்வளவு தடுமாற்றமா?”, என்று மனதில் எண்ணியவள் அவன் பேசியதற்கு எதுவும் சொல்லாமல் “கீழ உள்ள ரேக்ல இருக்குற டிரெஸ் எடுத்துட்டு வாங்க”, என்றாள்.
“தப்பா நினைச்சிருப்பாளோ?”, என்று நினைத்துக் கொண்டே கீழே இருந்த ரேக்கில் தேடியவன் அவனுக்கு தோன்றியதை எடுத்து வைத்தான்.
அவன் கதவை மூடும் போது ஒரு துணி கீழே விழ அதை கையில் எடுத்தவன் அது அவளுடைய உள்ளாடை என்று புரிந்து “ஐயோ இதை எடுத்து வைக்க மறந்துட்டோமே?”, என்று எண்ணி பைக்குள் வைத்தான்.
கூடவே “இதை எடுத்து வச்சிருக்குறதுக்கு ஏதாவது நினைப்பாளோ?”, என்றும் அவனுக்கு குறுகுறுப்பாக இருந்தது.
அங்கே அவளுக்கும் அதே நிலை தான். “இன்னர்சை எப்படி அவனை எடுத்து வரச் சொல்ல? பேசாம போட்டுருக்குறதையே துவைச்சு போட வேண்டியது தான்”, என்று எண்ணிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பி விட்டான் சுமன். மாயா அருகில் சென்றவன் “இந்தா மாயா. நீ போய் குளிச்சிட்டு வா”, என்று சொல்லி பையைக் கொடுத்தான்.
அதை வாங்கிக் கொண்டு குளிக்கச் சென்றவள் அதில் இருந்த உள்ளாடையைப் பார்த்து முகம் சிவந்து போனாள். இதையும் எடுத்து வந்து விட்டானே என்று குறுகுறுப்பாக தான் இருந்தது.
குளித்து முடித்து விட்டு அவனை எப்படி எதிர்கொள்ள என்று அவளும், ஏதாவது நினைச்சிருப்பாளோ என்று அவனும் யோசித்துக் கொண்டிருக்க அப்போது அங்கே டாக்டர் வரவும் இருவரின் யோசனையும் பின்னுக்கு போனது. கூடவே மாயா முகம் சாதாரணமாக இருக்கவும் சுமனும் சாதாரணமாகிவிட்டான்.
வீட்டில் அறைக்கு சென்ற யுவனுக்கு பழைய விஷயங்களை நினைத்து தலை வேதனையாக இருந்தது.
அந்த நினைவுகளின் கனம் தாங்க முடியாமல் டிவியைப் போட்டான். ரெட்டியின் வீடு, குடவுன் அனைத்திலும் போலீஸ் ரைடு நடந்து கொண்டிருந்தது.
ரெட்டியின் ஆட்களை போலீஸ் கைது செய்து கொண்டிருந்தார்கள். அவனின் பிடியில் இருந்த பல பெண்கள் அங்கிருந்து காப்பாற்றப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அது மட்டுமில்லாமல் அவன் யாரிடம் எல்லாம் தொடர்பு வைத்திருந்தானோ அவர்களை எல்லாம் போலீஸ் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
ரெட்டியை கடத்தின உடனேயே யுவன் போலிஸ்க்கு தகவல் சொல்லி விட்டான். கூடவே அவனுடைய ஆட்கள் ரெட்டியுடனே இருந்து சேகரித்த ஆதாரங்களையும் அனுப்பி விட்டான். அதனால் அவர்களும் விரைவாகச் செயல் பட்டார்கள்.
ரெட்டிக்கு தெரிந்தவர்களும் ரெட்டிக்கு உதவ முயன்றால் தாங்கள் மாட்டிக் கொள்வோமோ என்று ஒதுங்க ஆரம்பித்தார்கள். அது மட்டுமில்லாமல் யாருக்குமே ரெட்டி எங்கே என்றே தெரிய வில்லை. அனைவருமே போலிஸ்க்கு பயந்து ரெட்டி தலைமறைவாகி விட்டார் என்று தான் எண்ணினார்கள்.
போதை பொருள்கள் கடத்தல், கொலை, கொள்ளை, பெண்களை கடத்தி விற்பது, கட்டப் பஞ்சாயத்து போன்ற பல தவறான தொழில்களில் ஈடு பட்டிருந்த பீமா ரெட்டி தலைமறைவு.
போலீஸ் பீமா ரெட்டியைக் கண்டு பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அவரைக் கண்டு பிடித்துக் கொடுப்போர்க்கு தக்க சன்மானம் வழங்கப் படும் என்று நியூசில் ஓடிக் கொண்டிருந்தது.
அந்த நியூசைப் பார்க்கும் போது ஏதோ பெரிதாக சாதித்தது போல இருந்தது யுவனுக்கு. அவனுடைய வெகுநாள் கனவு நிறைவேறியது போல இருந்தது.
“ஹா ஹா, ரெட்டி தலை மறைவா?”, என்று எண்ணி சிரித்தான் யுவன். “இனி உனக்கு என்ன ஆனாலும் யாரும் என்னை சந்தேகப் படமாட்டாங்க ரெட்டி”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
டிவியை அணைத்து விட்டு டைனிங் டேபிளுக்கு சென்றவன் நிதானமாக தன்னுடைய உணவை உண்டான்.
இந்த நியூசுக்காக தானே அந்த ரெட்டியை அவன் கொல்லாமல் வைத்திருந்தான். இந்த நியூஸ் வரவில்லை என்றால் ரெட்டியை யாரோ கடத்தி விட்டார்கள் என்று அனைவரும் நினைத்திருப்பார்கள். இப்போதோ அவனுடைய தவறு நிரூபிக்கப் படும் என்ற பயத்தில் அவனாகவே தலைமறைவாகி விட்டதாக தானே நினைப்பார்கள்.
இனி ரெட்டிக்கு என்ன நடந்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்று தெரிந்ததும் இன்றே அவனை கொல்லத் தான் நினைத்தான்.
பின் மனதில் எதையோ யோசித்தவன் இன்று அவனைக் கொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து ரெட்டியைக் காணச் சென்றான்.
அங்கே குத்துயுறும் கொலையுயிறுமாக கிடந்தான் ரெட்டி. அவனை அந்த நிலையில் கண்டதும் யுவனுக்கு உள்ளுக்குள் கொண்டாட்டமாக இருந்தது. அவன் மனதில் இருந்த ரணத்துக்கு யாரோ மருந்து போட்டது போல உணர்ந்தான்.
ஆனால் யுவனைக் கண்ட ரெட்டியின் கண்களில் மரண பயம் தெரிந்தது. அவன் உடலில் ஆங்காங்கே ரத்தம் வடிந்தது.
“என்னைக் கொண்னுறு யுவன். என்னைக் கொண்னுறு. என்னால வலி தாங்க முடியலை”, என்று அலறினான் ரெட்டி.
“ஹாஹா, இப்ப தான் எனக்கு சந்தோஷமா இருக்கு. அவ்வளவு சீக்கிரம் உன்னை கொன்னுருவேனா? அப்ப உனக்கு வலின்னா எப்படி தெரியும்? இன்னும் நீ அனுபவிக்கணும். அதுக்கப்புறம் வேணும்னா பெரிய மனசு பண்ணி உன்னைக் கொன்னுறேன்”, என்று சிரித்த யுவன் அங்கிருந்து சென்று விட்டான்.
அதே நேரம் ஹாஸ்பிட்டலில் அவனைப் பற்றியே யோசித்த படி படுத்திருந்தாள் சுசீலா.
“சுசீ, வீட்ல இருந்து சாப்பாடு வந்துருச்சு. பையா கொடுத்து விட்டுருக்காங்க. சாப்பிடலாமா?”, என்று கேட்ட படி அறைக்குள் வந்தாள் மாயா.
சுசீலாவைக் கவனிப்பதில் தன்னுடைய கூட்டுக்குள் இருந்து மாயா வெளியே வந்தது போல இருந்தது சுசீலாவுக்கு. மாயா முன்பு போல சாதாரணமாக பேசுவது கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது.
ஆனால் சுமனை நினைத்துக் கவலையாகவும் இருந்தது. மாயாவும் சுமனும் சாதாரணமாக பேசிக் கொள்ளவே இல்லை. சுமனைக் கண்டதும் மாயா முகத்தில் ஒரு தவிப்பும், அவள் கண்களில் ஒரு வித அலைப்புறுதலும் உருவாவதை சுசீலா பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
இரு வேறு பட்ட மனநிலையில் அவள் தவிக்கிறாள் என்று புரிந்தது சுசீலாவுக்கு. “இவள் மனம் எப்போது மாறுமோ?”, என்று கவலை கொண்ட சுசீலா “கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன் மாயா. நீங்க கொஞ்சம் இங்க வந்து உக்காருங்களேன். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று அழைத்தாள்.
அவள் அருகில் ஒரு சேரைப் போட்டு அமர்ந்த மாயா “சொல்லுங்க சுசீ”, என்றாள்.
“சுமன் எங்க?”
“வெளிய இருக்காங்க?”
“கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மாயா. நீங்க பண்ணுறது உங்களுக்கே நியாயமா இருக்கா?”
“நானா? நான் என்ன பண்ணுனேன் சுசீ?”
“உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு நினைவு இருக்கா? முதல்ல நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. என்னைப் பாத்துக்க வீட்ல இருக்குற சர்வண்ட் யாரையாவது வரச் சொல்லுங்க”
“உங்களை இந்த நிலைமைல தனியா விட்டுட்டு எப்படி சுசீ போறது? என்னை எல்லாம் நீங்க எப்படி பாத்துக்கிட்டீங்க? நான் மட்டும் உங்களைப் பாத்துக்காம சர்வன்ட்டை அனுப்பனுமா?”
”எனக்கு என்ன? நான் நல்லா தான் இருக்கேன். இப்ப எல்லாமே சரியாகிருச்சு. சர்வண்ட் கூட வேண்டாம். நர்ஸே பாத்துப்பாங்க. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க”
“இல்லை பையா திட்டுவாங்க. உங்களைப் பாத்துக்குறது தான் என்னோட முக்கியமான வேலை. அது மட்டுமில்லாம நம்ம வீட்ல எல்லாருமே ஒரு முக்கியமான வேலைல பிசியா இருக்காங்க. நான் வீட்ல போய் என்ன செய்ய போறேன்? இங்கயாவது நாம ரெண்டு பேரும் ஒருத்தொருக்கொருத்தார் துணையா இருக்கலாம். ஆமா, நீங்க ஏன் என்னை விரட்ட பாக்குறீங்க?”, என்று சிரித்த படியே கேட்டாள்.
காதல் தொடரும்…..