நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். Just one more episode is remaining in this story.
மதுமிதாவை எப்படி சமாதானப் படுத்துவது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்த மாதவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது .
பேசிக் கொண்டிருந்தவள் ,“ஒரு நிமிஷம்” என்று விட்டு மிக வேகமாக அறைக்கு சென்று பேக் மற்றும் நெக்லஸை எடுத்துக்கொண்டு வந்தாள்.
“இது எப்படி இங்கே வந்துச்சு?” என்று அவனிடம் காண்பித்துக் கேட்டாள்.
“இது இது…” என்று புரியாமல் அவளைப் பார்த்தான்.
“ஆமாம். நான் தேடிக்கொண்டிருந்த என் பாட்டியின் நெக்லஸ் எப்படி இங்க வந்துச்சு? எனக்கு பதில் வேண்டும்.” என்றாள்.
“இதுவா அந்த நெக்லஸ் ?” என்று நம்ப முடியாமல் கேட்டான் மாதவன்.
“என்ன ஒரு நடிப்பு? உங்கள் நடிப்பு திறமைக்கு அவார்டு தான் கொடுக்கணும். நெக்லஸ் இந்த பேகில் இருந்தது.” என்று இன்னொரு கையில் வைத்திருந்த பையை காண்பித்தாள்.
“என்ன சொல்ற மது?” என்று ஆச்சரியமாக நம்ப முடியாமல் கேட்டான் மாதவன்.
“உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது இல்ல?”
“ஐயோ! நிஜமா எனக்கு எதுவுமே தெரியாது மது. நான் சொல்றதை நம்பு.” என்றான் மீண்டும்.
“இது யாரோட பேக் ?”
“இது என்னோட பேக் தான். ஆனால் இதுல இந்த நகை எப்படி வந்ததுன்னு எனக்கு தெரியாது.”
“இந்த கதையை நான் நம்பணும்.”
“உண்மையா தான் சொல்றேன் மது. “
“இன்னும் எத்தனை நாள் இந்த மாதிரி கதை விட்டு என்னை ஏமாத்த போற? இவ்வளவு தூரம் நான் கண்டுபிடித்த பிறகும் என்னை ஏமாற்ற ட்ரை பண்ற. என்னை அவ்வளவு பெரிய முட்டாள்ன்னு முடிவே பண்ணிட்ட. அப்படித்தானே?”
“மது எனக்கு எதுவுமே புரியல. தல வலிக்குது.”
“போதும் நிறுத்து உன் நாடகத்தை. இனிமேலும் உன்னோட என்னால இருக்க முடியாது.” என்றவள் உள் நோக்கி செல்ல முயன்றாள்.
அவள் கையை பிடித்து நிறுத்தினான் மாதவன்.
“என் கையை விடு” என்றாள் அவள்.
“ஒரு நிமிஷம் ஒரே நிமிஷம். நான் சொல்றதை கேளு.” என்றான்.
“முடியாது. முடியவே முடியாது. நீ சொல்றதை நான் கேட்கவே மாட்டேன்.” என்று தன் கையை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.
“சரி நான் தப்பு பண்ணினதாகவே இருக்கட்டும். நீ எனக்கு ஒரு வாக்கு கொடுத்து இருக்க. ஞாபகம் இருக்கா? நான் ஏதாவது தப்பு பண்ணி இருக்கேன்னு தெரிய வந்தாலும் நீ பொறுமையா இருப்பன்னு எனக்கு வாக்கு கொடுத்து இருக்க.
என் மேல தப்பு இல்லைன்னு நான் ப்ரூவ் பண்ண எனக்கு டைம் கொடுப்பண்ணு வாக்கு கொடுத்து இருக்க. ஞாபகம் இருக்கா?” என்று அவள் கண்களை பார்த்து கேட்டான்.
மதுமிதா யோசித்தாள்.
“இப்போ எனக்கு 1 நாள் டைம் கொடு. அதுக்குள்ள நான் தப்பு பண்ணலன்னு உனக்கு ப்ரூவ் பண்றேன்.
என்ன சொன்ன வாக்கை காப்பாற்றுவாயா? இல்லை ஏமாத்த போறியா?” என்று கேட்டான்.
“ஏமாற்ற நான் ஒன்னும் மாதவன் கிடையாது, மதுமிதா. பார்ப்போம். இந்த 1 நாள்ல நீ என்ன பண்ண போகிறாய்ன்னு பார்க்கிறேன்.” என்றாள்.
அப்போதுதான் மாதவன் அவளது கையை விட்டான்.
அவன் பிடித்து அழுத்திய இடம் சிவந்திருந்தது. தன்னிச்சையாக அவளது கை அந்த இடத்தை பிடித்துக் கொடுத்தது.
இதனை கவனிக்க மாதவன் “சாரி” என்றான்.
“எவ்வளவோ வலியை மனம் தாங்கும் போது இந்த சின்ன வலி ஒரு விஷயமே கிடையாது.” என்றபடி வீட்டுக்குள் சென்றாள்.
அவன் சொன்னதினால் மட்டும் இல்லை. இந்த மூன்று மாதங்களில் அவனுடன் பழகிய மதுமிதாவால் அவனை முழுமனதாக தவறாக கருத முடியவில்லை.
வள்ளி அன்று சொன்னது ஞாபகம் வந்தது.
“அவர்கிட்ட இவ்வளவு பணம் இருக்கும் போது அவர் ஏன் நம்ம நகையைத் திருட போகிறார்? இந்த கல்யாணத்துல இவ்வளவு அழகான பெண்கள் இருக்காங்க. ஆனால் அவர் தவறா ஒரு பார்வை கூட பார்க்கல. இவ்வளவு நிதானமா இருக்கிறவர் ஏன் கத்தியை எடுத்து வீச போகிறார்?” என்று வள்ளி அறுபதாம் கல்யாணம் அன்று கேட்டது அவள் காதுகளில் ஒலித்தது .
அவர் அப்படி கேட்டதும் தான் இவன் நகையை எடுத்து இருக்க முடியாது கத்தியை எடுத்து வீசி இருக்க முடியாதுன்னு அப்போது அவள் நினைத்தாள்.
இப்போதும் அவள் உள்மனம் அப்படியே நினைப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை. எனினும் இன்னொரு மனம் அதை நம்ப மறுத்தது.
‘அப்புறம் எப்படி இந்த நகை இங்கே வந்தது?’ என்று கேள்வி கேட்டு அறிவுபூர்வமாக யோசித்தது .
‘கீதா ஒரு முறை அவன் என்னை காதல் பார்வை பார்த்தான்னு சொல்லியிருக்கிறாள். அப்போ ஒருவேளை அவன் என்னை திருவிழாவில் பார்த்து லவ் பண்ணி இருக்கலாம். அந்தப் பொறுக்கி பசங்க கிட்ட சண்டை போடும்போது தெரியாமல் கத்தியை எடுத்து அவர்கள் மேல வீச என் மேல பட்டிருக்கலாம். அதுக்கப்புறம் என்னை இவன் காப்பாற்றியிருக்கலாம். இப்படி எல்லாம் வெச்சுகிட்டாலும் நகை எப்படி இவன் கையில கிடைத்தது? எப்படியும் இவன் திருடி இருக்க மாட்டான்.
ஒருவேளை என் ஞாபகமா இருக்கட்டும்னு எடுத்து வைத்திருப்பானா. அப்படி எடுத்து வைத்திருந்தா, நான் நகையை பற்றி ஃபர்ஸ்ட் நைட்ல பேசும்போது என்கிட்ட கொடுத்திருக்கலாமே.’ என்று நினைத்தது ஒரு மனம்.
இன்னொரு மனம் ‘அது எப்படி கொடுக்க முடியும்? அப்படிக் கொடுத்தால் அவன்தான் திருவிழாவில் கத்தி வீசியதுன்னு தெரிஞ்சு போய்விடுமே. அதனால அவன் அப்படியே ஒளிச்சு வச்ச இருந்திருப்பான். இப்படி எதுவா இருந்தாலும் என்கிட்ட இவன் இந்த நகையை காட்டாம ஒளிச்சு வச்சது தப்பு தானே? அதை ஒத்துக் கொள்ளாமல் ஏன் இன்னும் நகையை பற்றி தெரியாத மாதிரி நடிக்கிறான்?’ என்று அவன் மீது கோபம் அதிகமானது.
இப்படி பலவாறு யோசித்தபடி அறையில் அமர்ந்திருந்தாள் மதுமிதா.
அப்போது “அப்படியா துரை? நான் நாளைக்கு வரேன்” என்று கைப்பேசியில் பேசியபடி அவசர அவசரமாக உள்ளே வந்த மாதவன்.
அதே பையை தூசு தட்டி எடுத்து கொண்டிருந்தான்.
இதனை கவனித்த மதுமிதா “என்னை இங்கே இருக்க சொல்லிட்டு, நீ எங்க போற ?”என்று கேட்டாள் மதுமிதா.
“நான் துரைவீட்டுக்கு போறேன். நான் தேடிட்டு இருந்த ஒருத்தன் இப்போ அவன் சொந்த வீட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வருகிறானாம். அதான் அவனை நேரா போய் பார்த்து பேச போகிறேன்.” என்றான்.
“யார்?” என்று கேட்டாள் மதுமிதா.
“ அதை சொன்னா நீ நம்புவாயான்னு தெரியல. அவனையே உன்கிட்ட கூட்டிட்டு வந்து சொல்றேன்.” என்றான்.
“நானும் உங்க கூட வர்றேன்.” என்றாள்.
“நீயா? கடை திறப்பு விழாவுக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு . நீ எப்படி என் கூட?” என்று தயங்கினான்.
“எனக்கு இங்கே ஒரு வேலையும் இல்ல. நானும் வரேன்.” என்றாள்.
சிறிது நேரம் யோசித்த மாதவன் “சரி” என்றான்.
அதிகாலை 4 மணிக்கு இருவரும் கிளம்பி கீழே வந்தார்கள்.
அப்போதுதான் பார்வதி எழுந்து வந்தார்.
“அம்மா நானும் மதுவும் துரைவீட்டுக்கு போயிட்டு வருகிறோம்.” என்றான்.
“என்ன திடீர்னு துரை வீட்டுக்கு போறேன்னு கிளம்புற? நாளைக்கு ஃபங்ஷன் இருக்கு. இப்போ துரைவீட்டுக்கு போறேன்னு சொல்ற.” என்று ஆச்சரியமாக கேட்டார் பார்வதி.
“அது அது வந்து….. துரை வெளிநாட்டுக்கு வேலைக்கு போகிறானாம். வருவதற்கு ஒரு வருஷத்துக்கு மேல் ஆகுமாம். அதான் அவனைப் பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினேன். அவன் அம்மா அப்படியே மதுமிதாவை கூட்டிட்டு வர சொன்னாங்க. விருந்து வைக்கணுமா. அதனால கிளம்புறோம்.”
“என்னடா இப்படி சொல்ற? விருந்துக்கு பொறுமையா போகலாமே. நாளைக்கு பங்க்ஷன் வச்சுக்கிட்டு இன்னிக்கி போகணுமா?”
“இல்லம்மா. அவன் கூப்பிட்டான் அவங்க அம்மாவும் ஆசையாய் கூப்பிட்டாங்க. அதனாலதான் போகலாம்னு நினைத்தேன்.”
“நீயே யோசிச்சு நீ முடிவு பண்ணிட்ட. அப்பா கேட்டா நான் என்னடா சொல்றது?”
“அம்மா ஏதாவது சொல்லி சமாளிங்க. ப்ளீஸ். போயிட்டு வந்துடறேன்.”
“நீ மட்டும் போயிட்டு வரலாம் இல்லையா? இவளை வேற கூட்டிட்டு போகணுமா? அவளுக்கு கஷ்டமாக இருக்கும் இல்லையா” என்றார் பார்வதி.
“இல்லை அத்தை. எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. நானே தான் வரேன்னு சொன்னேன்.” என்றாள் மதுமிதா
“சரி நான் அப்பா கிட்ட சொல்றேன். நீங்க பத்திரமா போயிட்டு சீக்கிரமா வீட்டுக்கு வந்திடுங்க.”. என்றார் பார்வதி
“சரி நான் போயிட்டு வரேன்.” என்றுவிட்டு மாதவன் நடக்க அவன் பின் மதுமிதா “போயிட்டு வரேன் அத்தை.” என்றுவிட்டு நடந்தாள்.
கையில் வைத்திருந்த பையை காரில் வைத்துவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான். மதுமிதா அவன் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.வண்டியை ஓட்ட தொடங்கினான் மாதவன்.
“எவ்ளோ சரளமா பொய் பேச வருது உங்களுக்கு !”என்று நக்கல் அடித்தாள் மதுமிதா.
“ஆமாம் பொய் தான் சொன்னேன். அவங்க மனசை இதையெல்லாம் சொல்லி கஷ்டப்படுத்த வேணாம்னு பொய் சொன்னேன்.”
“அப்படியா அப்போ என்கிட்ட எதுக்கு பொய் சொன்னீங்க?”
“நான் எப்ப உன்கிட்ட பொய் சொன்னேன்?” என்று கேட்டான்.
“நீங்க என்கிட்ட பொய் சொல்லலையா?” என்று அவன் முகத்தை பார்த்து கேட்டாள் மதுமிதா.