அத்தியாயம் 13
உந்தன் இதயத்தை வெல்ல
நினைக்கிறேன் என்னையே
நான் தோற்கடித்து!!!
“நீங்க என்னைப் பாத்துக்கிட்டா அப்ப சுமனை யார் பாத்துப்பா?”, என்று சுசீ கேட்டதும் மாயா முகத்தில் ஒரு அதிர்வு வந்தது.
“இப்படி ரெண்டு பேரும் தனி தனியா இருக்க தான் நான் யுவன் கிட்ட பேசினேனா? ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்க தான் யுவனும் உங்களுக்கு கஷ்டப் பட்டு கல்யாணம் பண்ணி வச்சாங்களா?”
“என்ன? அப்ப நீங்க தான் பையா கிட்ட பேசினதா? ஆனா உங்களுக்கு எப்படி?”
“உங்களுக்கு சுமனை பிடிச்சிருக்குறது உங்க கண்ணுலயே எனக்கு தெரிஞ்சது மாயா. அதான் யுவன் கிட்ட பேசினேன். ஆனா எல்லாம் நல்ல படியா முடிஞ்ச அப்புறம் நீங்க சுமனை விட்டு தள்ளி நிக்குறது சரி கிடையாது”
“அது நான்., நான்… உங்களுக்கு எப்படிச் சொல்ல?”, என்று பழைய நினைவுகளில் தடுமாறினாள் மாயா.
“நான் எதுவும் கேக்கலை மாயா. நீங்க ஒரு விசயத்துக்கு திணறுறீங்கன்னா அந்த விஷயத்தைப் பத்தி நாம பேச வேண்டாம். ஆனா சுமனை யோசிச்சு பாருங்க. அவரும் உங்க மேல உயிரையே வச்சிருக்கார். முடிஞ்சது முடிஞ்சதா இருக்கட்டும் மாயா. எல்லா சிந்தனையையும் தூக்கி தூரப் போட்டுட்டு அவருக்காக அவர் கூட
வாழப் பாருங்க. உங்களுக்கு ஏதாவது குழப்பம் பயம் இருந்தா அதை அவர் கிட்ட மனசு விட்டுச் சொல்லுங்க”
“சரி சுசீ. என்னோட வலிகளை மறந்துட்டு நான் மாற முயற்சி பண்ணுறேன். ஆனா இப்ப நீங்க ரிலாக்சா இருங்க. நானும் வீட்டுக்கு போக மாட்டேன். உங்களுக்கு சரியாகட்டும். அதுக்கப்புறம் எல்லாம் பேசிக்கலாம்”, என்று உறுதியாக மறுத்து விட்டாள் மாயா. ஆனாலும் உள்ளுக்குள் சுமனை நினைத்துக் கவலையாக இருந்தது மாயாவுக்கு.
சுசீலா எடுத்துச் சொன்ன பிறகு தான் அவளை திருமணம் செய்ததால் சுமனின் வாழ்வு பாழாகிக் கொண்டிருப்பது நினைவில் வந்தது. அது அவளுக்கு குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது. இதை எப்படி சரி செய்ய போகிறோம் என்று பயம் வந்தது. சுசீலாவிடம் சொன்னது போல தன்னால் மாற முடியுமா என்ற கவலையும் வந்தது.
அவரவர் அவரவர் யோசனையில் இருக்க “சுசீலாவிடம் எப்படி என்னைப் பற்றிச் சொல்ல? நான் யார் என்ற உண்மை தெரிஞ்சா சுசீலாவுக்கு என்னை பிடிக்காம போயிருமோ?”, என்ற யோசனையில் இருந்தான் யுவன். அவளை முத்தமிட்டதில் இருந்து அவளைக் காண வேண்டும், அவளுடன் இருக்க வேண்டும் என்று ஆசை வந்தாலும் தயக்கமே அதிகம் இருந்ததால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான். .
இந்த கவலையில் யுவன் சுசீலாவைக் காண வரவே இல்லை. அவன் வராதது சுசிலாவுக்கும் வருத்தமே.
ஒரு வாரம் கழித்து சுசீலாவுக்கு காயம் ஆறியதால் மாயாவும் சுமனும் சேர்ந்து சுசிலாவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். அவளை அழைக்க கூட யுவன் வர வில்லை. அது மட்டுமில்லாமல் வீட்டுக்கு அவள் வந்து விட்டாள் என்று தெரிந்தும் அவளை அவன் காண வரவில்லை.
மாயா தான் அவளை அவளுடைய அறையில் விட்டாள். அதற்கு பின்னரும் அவளைத் தேடி அவன் வரவில்லை. சுசீலாவின் பொறுமையும் பறந்தது. “இனி அவனே பேச வந்தா கூட நாம அவன் கூட பேசக் கூடாது. என்ன நினைச்சிட்டு இருக்கான் என்னைப் பத்தி?”, என்ற கோபத்தில் இருந்தாள் சுசீலா.
அவள் அவனுடைய யோசனைகளில் மூழ்கியிருக்க அப்போது அவளுடைய அறைக்கு சுமன் வந்தான்.
அவனைக் கண்டதும் எழுந்து அமர்ந்தாள் சுசீலா. “சுசீ, பையா உங்களை கூட்டிட்டு வரச் சொன்னாங்க”, என்று சுமன் சொன்னதும் அவனைக் குழப்பமாகப் பார்த்தாள் சுசீலா.
“என்னையா? எங்க கூட்டிட்டு வரச் சொன்னாங்க? ஏன் உங்க பையா இங்க வர மாட்டாங்களோ?”, என்று கேட்டாள். யுவன் அவளிடம் காட்டிய நெருக்கத்தால் அவன் மேல் இயல்பாகவே ஒரு உரிமை உணர்வு வந்திருந்தது.
தங்களை விட யுவனுக்கு சுசீலா தான் நெருக்கம் என்று உணர்ந்த சுமனும் “நீங்க வாங்களேன். ஒரு முக்கியமான வேலை இருக்கு. பையா உங்களை உடனே கூட்டிட்டு வரச் சொன்னாங்க”, என்று உறுதியாகச் சொன்னதும் வேறு வழியில்லாமல் அவன் பின்னே நடந்தாள்.
அவள் ஏற்கனவே பார்த்திருந்த சுரங்க பாதை கதவு வரை அவளுடன் வந்த சுமன் “பையா கீழ தான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க போங்க”, என்று சொல்லி விட்டு வேறு பக்கம் சென்று விட்டான்.
அங்கே என்றதும் பயத்தில் அவள் உடல் சிலிர்த்தது. கீழே தான் அவள் ஏற்கனவே சென்றிருக்கிறாளே? அதனால் உடலில் ஒரு நடுக்கம் வந்தது. அங்கே வரச் சொன்ன அவன் மேல் கோபமும் வந்தது.
“நான் அவனை பிடிச்சிருக்குன்னு சொன்னா அதுக்கு பதில் சொல்லாம அவனைப் பாக்க வரச் சொல்லிறுக்கிற இடத்தைப் பாரேன்”, என்று எண்ணிக் கொண்டே அந்த படிகளில் இறங்கினாள்.
அந்த இடத்தில் நடந்த நிகழ்வுகள் அவளுக்கு பயத்தையும் தடுமாற்றத்தையும் கொடுத்தது.
வெளிச்சம், காற்றோட்டம் இல்லாத அந்த இடத்துக்கு அடி மேல் அடி வைத்து நடந்து சென்றவளின் கண்கள் தன்னாலே யுவனைத் தேடின.
ஒரு இடத்தில் வெளிச்சம் தெரிந்ததும் அந்த இடத்துக்கு சென்றாள். அவள் உள்ளே சென்ற போது கால் மேல் கால் போட்டு ஒரு சேரில் அமர்ந்திருந்தான் யுவன்.
“என்கிட்ட பேசுறதுக்கு உங்களுக்கு இந்த இடம் தான் கிடைச்சதா…?”, என்று கேட்டுக் கொண்டே அவனை நெருங்கியவளின் பார்வை ஒரு இடத்தைக் கண்டதும் நிலை குத்தி நின்றன.
அங்கே பரிதாபமான தோற்றத்தில் ரத்தம் சொட்ட சொட்ட கீழே கிடந்தான் ரெட்டி. அவளுடைய மாமாவின் வயதில் இருப்பவரின் இந்த நிலையைக் கண்டு சுசீலாவின் தேகம் நடுங்கியது. பார்க்கவே அவளுக்கு பரிதாபமாக இருந்தது.
சட்டென்று எழுந்த பரிதாபத்தில் “எதுக்கு இவரை இப்படி
வச்சிருக்கீங்க? ஐயோ பாவம். அவரை விடுங்க”, என்று சொல்லிக் கொண்டே வந்தவளின் வாய் யுவனின் கண்களில் இருந்த சீற்றத்தில் கப்பென்று மூடிக் கொண்டது.
அமர்ந்திருந்த சேரில் இருந்து நிதானமாக எழுந்த யுவன் “வா சுசீ, இப்படி வந்து உக்காறு”, என்று அழைத்தான்.
அவள் பயத்துடன் நகராமல் இருக்கவும் “உன்னை தான் கூப்பிட்டேன். இங்க வா. இங்க வந்து உக்காறு”, என்று கடுமையாக அழைத்தான். அவன் குரலில் இருந்த கடுமையில் தயங்கிய படியே அவன் அருகில் சென்றாள்.
அவள் தோள் மீது கை வைத்த யுவன், அவன் அமர்ந்திருந்த சேரில் அவளை அமர வைத்தான்.
“என்ன நடந்தாலும் நீ இங்க இருந்து அசையக் கூடாது சுசீ. உன் மனசுல என் மேல உண்மையான அன்பிருந்தா நீ இங்க இருந்து அசையக் கூடாது”, என்று அவளிடம் சொல்லி விட்டு ரெட்டி புறம் திரும்பினான்.
எதுவோ விரும்பத்தகாத நிகழ்வு நடக்க போகிறது என்று புரிந்து அவள் கை கால் எல்லாம் ஜில்லிட்டுப் போனது. பயத்துடன் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
தூரத்தில் கிடந்த ஒரு இரும்பு கம்பியை தூக்கி ரெட்டி மீது வீசினான் யுவன். அவன் செய்கையை பார்த்துக் கொண்டிருந்த சுசீலா “ஐயோ அம்மா என்ன செய்றீங்க?”, என்று கத்தினாள்.
அந்த கம்பி ரெட்டி கால் மீது பட்டு தூர விழுந்தது. அரை மயக்கத்தில் கிடந்த ரெட்டி கம்பி பட்டு கால் வலித்ததால் “ஆஆ அம்மா”, என்று அலறினான்.
அவனுடைய அலறல் அந்த அறையில் பட்டு எதிரொலித்து ஒரு வித பீதியைக் கொடுத்தது சுசீலாவுக்கு. காதை இறுக மூடிக் கொண்டாள்.
ரெட்டிக் கத்திக் கொண்டே இருக்க “நான் உன்னை கொல்லுறதுக்கு நல்ல நேரம் பாத்துட்டு இருக்கேன். நீ சுகமா தூங்கிட்டு இருக்கியா?”, என்று ரெட்டியிடம் கேட்டான் யுவன்.
அவன் சத்தம் கேட்கவும் காதில் இருந்து கையை எடுத்த சுசீலா “யுவன் வேண்டாம் யுவன். அவரை விட்டுருங்க. வேண்டாம். பிளீஸ். எனக்காக”, என்றாள்.
அவள் குரல் கேட்டதும் ரெட்டியும் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். “இது அந்த பெண் தானே?”, என்று எண்ணியவனுக்கு உடம்பெல்லாம் மரண வலி வலித்தது.
“இவனையா விடச் சொல்ற? நீ ஹாஸ்பில்ட்டல்ல இருந்து வீட்டுக்கு வரதுக்கு தான் நான் இத்தனை நாள் இவனை உயிரோட வச்சிருந்தேன். இனியும் விட்டு வச்சா நல்லா இருக்காது சுசீ”, என்று தீவிரமான குரலில் சொன்னான் யுவன்.
அவன் குரலில் இருந்த தீவிரம் அவன் சொன்னதைச் செய்வான் என்று அவளுக்கு உணர்த்த “இன்னொரு தடவை உங்க மேல கோபப் படவோ, சந்தேகப் படவோ மாட்டேன். நீங்க இந்த ஆளைக் கொல்ல முடிவு செஞ்சுட்டீங்கன்னா நான் ஏன்னு கேக்க மாட்டேன். ஏன்னா சாகுற அளவுக்கு இவன் பாவம் பண்ணிருப்பான்னு தோணுது. என்னோடக் கேள்வி என்னன்னா அவரைக் கொல்லத் தான் போறீங்கன்னா என்னை எதுக்கு இங்க வரச் சொன்னீங்க? நான் ஏன் இங்க இருக்கணும்? ஒரு வேளை நீங்க கொலை செய்றதைப் பாத்து நான் உங்களை வெறுக்கணும்னு நினைக்கிறீங்களா?”, என்று கேட்டாள். அவளுக்கு இங்கே இருக்கவே பிடிக்க வில்லை.
“நீ தானே என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்ன? அந்த அன்பு உண்மையா பொய்யான்னு சோதனை போட வேண்டாமா?”, என்று நக்கலாக கேட்டான் யுவன்.
அவன் சொன்னதைக் கேட்டு எரிச்சலானவள் “என்னை சந்தேகப் படுறீங்களா நீங்க?”, என்று கேட்டாள்.
“இல்லை, நான் யார் என்னன்னு நீ தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன். என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்ச அப்புறமும் என் கூட நீ இருக்கணும்னு நினைக்கிறியான்னு எனக்கு தெரியணும். அதனால நீ இங்க இருந்து போக கூடாது. நான் சொல்ற வரைக்கும் நீ இங்க தான் இருக்கணும்”
“நான் உங்களை விரும்புறதுக்கும் இந்த ஆளைக் கொல்லுறதை நான் பாக்குறதுக்கும் என்ன சம்பந்தம்? முதல்ல இவன் யாரு?”
“இவன் வேற யாரும் இல்லை சுசீ. நீ மும்பை வரதுக்கு காரணமானவன்”
“என்ன….. என்ன சொல்றீங்க நீங்க?”
“ஆமா உன்னை விலைக்கு வாங்கின ரெட்டி இவன் தான்”, என்று சொன்னதும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ரெட்டி என்ற மிருகத்திடம் மாட்டியிருந்தால் அவள் இந்நேரம் பல நாய்கள் தின்னும் எச்சில் இலையாகிருப்பாள் என்று பல முறை யோசித்திருக்கிறாள். இன்று அவனை நேரில் பார்க்க நேரிடும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அந்த மிருகம் இன்று கண் முன் இருப்பான் என்று அவள் துளி அளவும் எண்ணிப் பார்க்க வில்லை.
அவள் அதிர்ச்சியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னை விட்டுரு யுவன்”, என்று ஈனசுவரத்தில் முணங்கினான் ரெட்டி. அவனால் வலியால் அசையக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு அவனை அடித்திருந்தார்கள்.