“நான் உன்கிட்ட பொய் சொல்லவே இல்ல. அப்படி சொன்னேன்னு நீ நினைத்தால், எப்ப சொன்னேன்னு சொல்லு.” என்று அவள் கண்களை நேராக பார்த்து கேட்டான்.
“அத்தை, மாமா அறுபதாம் கல்யாணத்தில் நான் உங்ககிட்ட தேனி திருவிழாவுக்கு வந்திருக்கீங்களான்னு கேட்டேன் .அதுக்கு நீங்க…..”
“நான் வரலன்னு சொன்னேனா?” என்று கேட்டான் .
மதுமிதா யோசித்தாள். அவன் அப்படி சொல்லவில்லை என்பது ஞாபகம் வந்தது.
“இல்லை சொல்லல. ஆனால் கீதாவை பார்க்க வந்தபோது….”
என்று ஆரம்பித்தவள் முடிக்காமல் நிறுத்தினாள்.
“பார்க்க வந்தபோது, நீ என்னை கேட்டியா?” என்று கேட்டான்.
“இல்லை” என்றாள் அவள் இறங்கிய குரலில் தலைகுனிந்தபடி.
“நீ எப்பவும் என்கிட்ட நேரடியா திருவிழாவுக்கு வந்தது நீதானான்னு கேட்டது கிடையாது. அப்படி ஒரு வேளை நீ கேட்டிருந்தால் உன் கண்ணை பார்த்து நான் பொய் சொல்லி இருக்க மாட்டேன். உண்மையை சொல்லி இருப்பேன். நம்ம கல்யாணம் நடந்திருக்காது.
என்னை பார்க்கணும்னு நீ சொன்னதா அம்மா என்கிட்ட சொன்ன போது நான் இப்படி தான் நினைத்தேன்.
ஆனால் நான் பயந்த மாதிரி நீ அந்த கேள்வியை என்கிட்ட நேரடியா கேட்கவே இல்ல. அதனால தான் கல்யாணம் நடந்தது.”
“ஆனால் கீதா ஏன் அப்படி சொன்னா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள் மதுமிதா.
“அதுக்கு காரணம் நான்தான்.” என்றதும் மதுமிதாவின் கோபம் அதிகமானது அவள் மாதவனை முறைத்தாள்.
“மது அப்படி பார்க்காதே. எல்லாத்துக்கும் காரணம் இருக்கு. நான் தான் கீதா கிட்ட அப்படி சொல்ல சொன்னேன். கொஞ்சம் பொறுமையா இரு. உனக்கு எல்லாத்தையும் நான் புரிய வைக்கிறேன்.” என்றான்.
அதற்கு மேலும் அவனை பார்க்க முடியாமல் கோபம் அதிகமானதால் ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பி வெளியே தெரிந்த கட்டிடங்கள், மரம், செடி கொடிகளை பார்த்தபடியே உறங்கினாள்.
மாதவன் உறங்கிக்கொண்டிருந்த அவளது முகத்தை கவனித்தான். அதில் சோகம் தெரிந்தது. எனினும் வெறுப்பு தெரியவில்லை.
‘மது உன்னால என்னை வெறுக்க முடியாது. நீ என்னை லவ் பண்ணிட்டு தான் இருக்க. அதனாலதான் என் கூட இவ்வளவு தூரம் உண்மையை தெரிஞ்சுக்க வர்ற. உன் மனதில் இன்னும் என் மேல கொஞ்சம் நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையை நான் கண்டிப்பா காப்பாற்றுவேன்.’ என்று நினைத்தவன் அவள் உச்சியில் மிக மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான்.
முந்தினம் சாப்பிடாத பசியும் மனதில் ஏற்பட்ட குழப்பத்தினால் ஏற்பட்ட அசதியிலும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மதுமிதா அவன் முத்தத்தினால் லேசாக களைந்து எழுந்தாள். மாதவனை பார்த்தாள். அவன் சாலையை பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவனையே சிறிது நேரம் வெறித்து கொண்டிருந்தவள், மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
கார் நின்றதை உணர்ந்து உறக்கத்திலிருந்து எழுந்தாள்.
“மாதவா வா.” என்று குரல் கேட்டது.
‘துரை வீட்டுக்கு வந்துவிட்டோம்’ என்று நினைத்து கீழே இறங்கினாள்.
மாதவன் “இவன்தான் துரை.” என்று ஒருவனை காண்பித்து அறிமுகப்படுத்தினான்.
அவனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தவரை காட்டி
“இவங்க துரை அம்மா.” என்றான்.
“வா மாதவா வா மதுமிதா.” என்று அழைத்தார்.
எல்லோரும் உள்ளே சென்றனர்.
“கை கால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றார் துரையின் தாய்.
துறையின் தங்கை மதுமிதாவை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்.
மாதவன் துரையை அழைத்து வீட்டில் நடந்த எல்லாவற்றையும் கூறினான்.
“என்னடா சொல்ற? எப்படி வந்தது? உனக்கு தெரியலையா? இதை நான் நம்பவே கஷ்டமாக இருக்கு. சிஸ்டர் எப்படி நம்புவாங்க?” என்று கேட்டான்.
“என்னடா இப்படி சொல்ற? நிஜமாவே எப்படி வந்ததுன்னு எதுக்கு தெரியலடா. நம்பு.” என்று சிறிது வருத்தமாக கூறினான் மாதவன்.
“அப்படி இல்லைடா. நீ சொல்றதை நான் நம்புவேன். ஆனால் இப்படி எல்லாம் சாட்சியும் உனக்கு எதிராக இருக்கும் போதும் சிஸ்டர் எப்படி நம்புவாங்க? அவங்க மேல தப்பு சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்ல டா மாதவா.”
“ஆமாம் துரை. எனக்கும் புரியுது. அப்படியிருந்தும் மதுமிதா என்கூட இவ்வளவு தூரம் உண்மையை தெரிஞ்சுக்க வந்திருக்கிறது பெரிய விஷயம். நான் எப்படியாவது தப்பு என் பேரில் இல்லைன்னு ப்ரூ பண்ணனும்.”
“சரிடா அந்த பொறுக்கி சேகர் வெளிநாட்டிலிருந்து வந்துட்டானா?”
“இன்னைக்கு மத்தியானம் வருகிறான்.”
“அப்படியா? சரி டா. நான் இப்பவே அவன் வீட்டை ஒளிஞ்சிருந்து பார்த்துகிட்டே இருக்கேன்.” என்றான் மாதவன்.
“அவன் மதியானம் தான் வருவான்னு அவங்க வீட்டுல நாம சேர்த்து வைத்திருக்கிற வேலைக்காரன் சொன்னான். அதனால நீ சாப்பிட்டுட்டு போடா.”
“எனக்கு சுத்தமா பசியே இல்லை.”
“உனக்கு பசிக்கலனா என்னடா? சிஸ்டர் சாப்பிடுவாங்க இல்லையா?”
“ஆமாண்டா நேத்து நைட்டு கூட அவள் சாப்பிடவே இல்ல.”
“சரிடா. வா எல்லோரும் சாப்பிடலாம்.” என்று துரையை அழைத்துக்கொண்டு மாதவன் டைனிங் டேபிளுக்கு வந்தான்.
மதுமிதா அங்கு உட்கார்ந்து இருந்தாள்.
“என்ன மாதவா, உன் பொண்டாட்டி பசி இல்லைன்னு சொல்றா. விருந்துக்கு வந்துட்டு சாப்பிடாம இருப்பாங்களா?” என்று வினோதமாக கேட்டார் துறையில் அன்னை ஜானகி .
“புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்குமே பசிக்கலையா? ரொம்ப ஒற்றுமைதான்.” என்று மெல்லிய குரலில் மாதவன் மட்டும் கேட்குமாறு சொன்னான் துரை.
“பெரிய ஒற்றுமையை கண்டு விட்டாய் போடா.” என்று சலித்துக்கொண்டான் மாதவன்.
“சிஸ்டர் சாப்பிடுங்க. நீங்க சாப்பிட்டால்தான் நாங்க எல்லோரும் சாப்பிடுவோம். எங்களுக்காக சாப்பிடுங்க.” என்று துரை மாதவனை பார்த்து சொல்லவும்
“சரி” என்றாள் மதுமிதா.
துரையின் தாய்
“பொங்கல், இடியாப்பம், பாயசம், வடை ,சட்னி, சாம்பார் பரிமாறினார். கொஞ்சமாக சாப்பிடலாம் என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்த மதுமிதா பசியை உணர்ந்து தட்டில் இருந்த அனைத்தையும் சாப்பிட்டு முடித்தாள்.
‘இவ்வளவு பசியை வச்சுக்கிட்டு சாப்பாடு வேணாம்னு சொல்ற.’ என்று மனதில் நினைத்து கொண்டு சாப்பிட்டு முடித்த மாதவன்
“சரி நான் போயிட்டு வரேன்.” என்று பொதுவாகச் சொல்லி விட்டு பைக்கை எடுத்துக்கொண்டு சென்றான்.
மாதவன் சென்றபிறகு துரையின் தங்கையுடன் மதுமிதா பேசிக்கொண்டிருந்தாள். துரை வீட்டில் வேலை செய்யும் பெண் கையில் இருநூறு ரூபாய் பணத்துடன் வந்தாள்.
“அண்ணா இங்க பாருங்க. உங்கள் சட்டை பையில் 200 ரூபாய் இருந்துச்சு.” என்று எடுத்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு சென்றாள்.
துறையின் தாய்
“ஏண்டா துணியை துவைக்க போடறதுக்கு முன்னாடி பேண்ட், சட்டை பாக்கெட்டில் ஏதாவது இருக்கான்னு பார்த்து எல்லாத்தையும் எடுத்துட்டு போடுன்னு எத்தனை தடவை சொல்றது?”
“அம்மா செக் பண்ணிட்டு தான் போடணும்னு நினைச்சிட்டு இருந்தேன். எப்படியோ மறந்துபோய் காசை பாக்கெட்ல இருந்து எடுக்காமல் போட்டுவிட்டேன்.”
“அது எப்படி தான் உனக்கு மறந்து போகுதோ தெரியல. இனிமேலாவது மறக்காம பாக்கெட்டை பார்த்துட்டு துவைக்கும்போடு. ஏதோ அந்த லீலா பொண்ணு நல்ல பொண்ணா இருக்கிறதாலஎ ல்லாத்தையும் பத்திரமா எடுத்திட்டு வந்து கொடுக்குது. இனிமேலாவது ஜாக்கிரதையாக இரு” என்று விட்டு சென்றார்.
அப்போது துரைக்கு ஏதோ ஞாபகம் வந்தது.
“லீலா’ என்று வேலைக்கார பெண்ணை அழைத்தான்.
“என்ன அண்ணா?” என்று கேட்டபடி அங்கு வந்தாள் லீலா.
“லீலா போன தடவை மாதவன் இங்க வந்தப்போ அவன் பாக்கெட்டில் ஏதோ இருந்ததா சொன்ன தானே?” என்று கேட்டான்.
“ஆமாம் அண்ணா. அந்த மாதவன் அண்ணா சட்டைப்பையில் ஒரு அழகான நகை இருந்தது. நான் உங்ககிட்ட எடுத்துட்டு வந்தப்போ நீங்க அரைத்தூக்கத்தில் இருந்தீங்க. அந்த நகையை அப்படியே அந்த அண்ணா பேக்ல போட சொன்னீங்க. நானும் அந்த பேக்ல போட்டுட்டேன்.” என்று சொன்னாள்.
“சிஸ்டர் இங்க வாங்க.” என்று மதுமிதாவை கூப்பிட்டான்.
மதுமிதா எழுந்து வந்தாள்.
“இங்க அந்த நகையை எடுத்துட்டு வந்திருக்கீங்களா?”
“ஆம் துரை எடுத்துட்டு வந்திருக்கேன்.”
“கொஞ்சம் என்கிட்ட காட்டுங்க.” என்று கேட்டான்.
மதுமிதா எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துவந்த நெக்லஸை கைப்பையில் இருந்து எடுத்து துறையிடம் கொடுத்தாள்.
“லீலா இந்த நகையான்னு பார்த்து சொல்லு.” என்று அந்த நகையை அவளிடம் காண்பித்து கேட்டான்.
“ஆமாம். இதே நகை தான். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.” என்றாள் அந்த லீலா.
“சரி நீ போ. லீலா.” என்று சொல்லி அவளை அந்த இடத்திலிருந்து அனுப்பினான்.
“பாத்தீங்களா துரை? அந்த நெக்லஸ் உங்க பிரண்டு மாதவன் பாக்கெட்ல தான் இருந்திருக்கு. ஆனால் எப்படி வந்ததுன்னு அவருக்கு தெரியலைன்னு சொல்றாரு. நான் எப்படி நம்புவேன்? நீங்களே சொல்லுங்க.” என்று கேட்டாள்.
துரை யோசித்தான்.
“சிஸ்டர் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க. நான் அவனுக்கு போன் பண்ணி கேட்கிறேன். லவுட் ஸ்பீக்கர் ல போடறேன். நீங்களும் கேளுங்க.” என்றவன் மாதவனுக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டான்.
“மாதவா அந்த சேகர் வந்துட்டானா?”
“இல்லடா இன்னும் வரல. அவனுக்காக தான் அவங்க வீட்டு தெருமுனையில் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். சேகர் இந்த தெருவுக்குள் நுழைவதற்கு முன்னாடி நாம வேலைக்கு சேர்த்துவிட்ட டிரைவர் எனக்கு மெசேஜ் பண்ணுவான். அப்போ நான் அவனை தெருமுனையில் பிடித்து விடுவேன்.” என்றான்.
“சரிடா. அப்புறம் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும். என் வீட்ல வேலை செய்ற பொண்ணு லீலா உனக்கு தெரியுமில்ல?”
“ஆமாம் தெரியும். அந்த பொண்ணுக்கு என்ன?” என்று கேட்டான்.
“அந்த பொண்ணு என்கிட்ட ஒரு விஷயம் சொன்னா. என்ன தெரியுமா? லீலா அந்த நகையை உன் சட்டை பாக்கெட்டில் பார்த்தாளாம்.”
“என்னடா சொல்ற?” என்று அதிர்ச்சியாக கேட்டான் மாதவன் .
“ஆமாண்டா. நிஜமா தான் சொல்றேன். அப்படித்தான் சொன்னாள். அது எப்படி உன் பாக்கெட்டில் வந்தது?” என்று கேட்டான் துரை.