அத்தியாயம் 14
எந்தன் இதயத்தையே
அகல்வாராய்ச்சி செய்கிறேன்
என்னுள் புதைந்த
உன்னைத் தேடி!!!
தேனிலவுக்கு சென்ற கதிரும் தேன்மொழியும் டூர் வந்தது போல சந்தோஷமாக ஊரை சுற்றினார்கள். காலையில் எட்டு மணிக்கு எழுந்து குளித்து கிளம்பி அங்கேயே சாப்பிட்டு விட்டு வெளியே சென்றார்கள். இது வரை இருவருக்குள்ளும் அதிகம் பேச்சு வார்த்தை இருந்ததில்லை.
அப்படி இருப்பது இருவருக்கும் பிடிக்கவே இல்லை. சிறு வயதில் இருந்து இருவருக்கும் ஏட்டிக்கு போட்டியாக பேசி தான் பழக்கம். இப்போது அமைதியாக இருப்பது அவர்களுக்கே வித்தியாசமாக இருந்தது.
தான் ஏதாவது பேசி அவளை கஷ்ட படுத்திருமோ என்று எண்ணி அமைதியாக வந்தான் கதிர். அவன் அமைதியாக வந்ததால் அவளும் அமைதியாக இருந்தாள்.
“அவளா எதுவும் பேச மாட்டா”, என்று எண்ணி “ஏய் தேனு, அங்க பார்”, என்று காட்டினான் கதிர்.
என்னவென்று அவனைப் பார்த்தாள். “உன்னைப் போலயே இருக்கா பாரேன், அந்த பொண்ணு”, என்று சொன்னதும் அந்த பக்கம் பார்த்தவள் திகைத்தாள். அங்கே ஒரு குரங்கு மரத்தில் ஏறிக் கொண்டிருந்தது.
அவனைப் பார்த்து முறைத்தவள், “நான் குரங்குனா, நீங்க யாராம்”, என்று கேட்டாள்.
“நான் சின்ன குரங்குக்கு வாழ்க்கை கொடுத்த பெரிய குரங்கு”, என்று அவன் சிரித்த படி சொன்னதும் அவளுக்கும் சிரிப்பு வந்தது.
“நீங்க எனக்கு வாழ்க்கை கொடுத்துருக்கீங்களா? நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம். இப்ப உங்க குடுமி என் கையிலே”, என்று அவளும் பேச்சை வளர்க்க அதன் பிறகு இருவருக்கும் சுவாரசியமாக சென்றது.
தேனிலவு தம்பதிகளாக ஒருவருக்கொருவர் கை கோர்த்துக் கொள்ள வில்லை. முத்தத்தில் மூழ்க வில்லை. ஆனாலும் அந்த டிரிப்பை இருவரும் ரசித்தனர். பேசிக் கொண்டே பயணம் செய்தனர். டிரைவரையும் பேச்சில் இழுத்துக் கொண்டனர்.
“அத்தான் எனக்கு மாங்கா வேணும்”, என்று அவள் கேட்டால் மாங்கா மட்டும் அல்ல, அவள் கேட்காததையும் வாங்கி கொடுத்தான். அது மட்டுமல்லாமல் அவள் கையில் இருந்ததை பிடுங்கி சாப்பிட்டு அவள் முறைப்பை பெற்றுக் கொண்டான். அவர்கள் பயணம் இனிமையாக இருந்தது.
[the_ad id=”6605″]
மதியிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு கல்லூரிக்கு சென்ற செல்வா அதை நீலவேணியிடம் கொடுத்தான். தயக்கத்துடன் அவன் வற்புறுத்தல் மற்றும் தன்னுடைய டூர் போக வேண்டும் என்ற ஆசையால் அதை பெற்றுக் கொண்டாள் நீலவேணி.
ஆனால் அன்று மதியம் பணத்தை இன்சார்ஜிடம் கொடுக்கலாம் என்று எடுக்கும் போது அவள் பையில் இருந்த பணத்தை காணவில்லை. அதிர்ந்து போனாள் நீலவேணி. முன்னூறு ரூபாய் என்பதே அவள் வசதிக்கு அதிகம். இதில் முவ்வாயிரம் என்றால் அவளைப் பொறுத்த வரைக்கும் பிரம்மாண்டம்.
இதை எப்படி செல்வாவிடம் சொல்ல என்று தயக்கமாக அவனைப் பார்த்தாள் நீலவேணி.
“என்ன வேணி?”
“செல்வா, நீ கொடுத்த பணத்தை பர்ஸ்ல தான் வச்சிருந்தேன். இப்ப காணும்”, என்று அவள் சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
சட்டென்று இது யார் வேலை என்று புரிய “இப்ப எதுக்கு அழுற? கவலைப் படாதே. கண்டிப்பா கண்டு பிடிச்சிறலாம். இல்லைன்னாலும் நான் உனக்கு வேற தரேன்”, என்றான்.
“ஐயையோ எனக்கு வேண்டாம். இதையே வம்பாக்கிட்டேன்னு எனக்கு கஷ்டமா இருக்கு. நான் ஆசை பட்டிருக்கவே கூடாது. எனக்கு டூர் எல்லாம் வேண்டாம் செல்வா. எப்படியாவது அந்த பணம் கிடைக்கணும். உன்கிட்டயே கொடுத்துறேன்”, என்று சொன்னவள் பெஞ்சிலே முகம் புதைத்து படுத்து விட்டாள்.
அவள் அழுவது அவனுக்கு புரிந்தது. நீலவேணி முகத்தில் எப்போதும் ஒரு சோகம் இருக்கும். சில நேரம் தான் அவள் சிரிப்பாள். குடும்ப கஷ்டத்தை உணர்ந்து அவளுடைய கடின உழைப்பு, வராத ஆங்கிலத்தை வர வைக்க அவள் படும் கஷ்டம், அவள் ஆர்வம் என்று அனைத்தும் செல்வாவுக்கு பிடிக்கும். அதனாலே அவளை அவனுக்கு பிடிக்கும்.
“என்கிட்ட நீ வாங்கி சாப்பிடுவியானு தெரியலை. ஆனா கொடுக்கணும் போல இருக்கு”, என்று ஏதாவது பண்டத்தை அவள் கொடுக்கும் போது அவளுடைய அன்பையும் தயக்கத்தையும் உணர்ந்து “நீ இப்படி யோசிக்கவே வேண்டாம். அதெல்லாம் நாங்க என்ன கொடுத்தாலும் சாப்பிடுவோம், என்ன டா”, என்று
நவீனையும் கூட்டு சேர்த்து அதை வாங்கிக் கொள்வான்.
அக்கா தங்கைகள் இல்லாத அவனுக்கு அவள் அவனுடைய தங்கையாக தான் தெரிந்தாள். அதனால் இப்போது அவள் அழுவது அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
இதற்கு சௌமி தான் காரணம் என்று சொல்லாமல் சொன்னது சௌமியின் இகழ்ச்சியான புன்னகை. அதுவே அவளுடைய வன்மத்தையும் சொன்னது. “இதை இப்ப சரி செய்யலைன்னா டூர் போனதுக்கு அப்புறமும் நீலவேணியை சௌமி அழ வைப்பா”,என்று எண்ணி அவளை ஒரு முறை முறைத்தவன் ஒரு நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தான்.
அவன் எழுதுவதை நவீன் எட்டிப் பார்க்க அவனை ஒரு முறை முறைத்து விட்டு அதை மறைத்துக் கொண்டான். “ஏதோ பெர்சனல் போல”, என்று எண்ணிக் கொண்டு நவீனும் திரும்பிக் கொண்டான்.
அன்று மாலை அவளுடைய வண்டியை அவள் எடுக்க போகும் போது அவள் பின்னே வந்தவன் “சௌமி ஒரு நிமிஷம் நில்லு”, என்றான்.
அவன் குரலில் திரும்பியவள் ஒரு ஏளன பார்வையோடு அவன் முகத்தைப் பார்த்தாள்.
தன்னுடைய சட்டைப் பையில் இருந்த அந்த கடிதத்தை எடுத்தவன் அதை அவள் வண்டியில் வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
“இது என்ன? லட்டர் எல்லாம் கொடுக்குறான்”, என்ற திகைப்போடு அதை பார்த்துக் கொண்டே நின்றாள்.
“லவ் லட்டரா இருக்குமோ? பாத்தாலே முறைச்சிட்டே இருப்பான்.இப்ப என்ன புதுசா?”, என்று அவள் மூளையை கசக்கி பிழியும் போது அந்த பேப்பர் பறந்து கீழே விழுந்தது. தாவி சென்று அதை எடுத்தவள் தன்னுடைய பேகில் போட்டு விட்டு வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றே விட்டாள்.
வீட்டுக்கு போன பிறகு முதல் வேலையாக அதை தான் எடுத்து படித்தாள். சிறு குறுகுறுப்பு அவளுக்குள் உருவானது.
கைகள் நடுங்க அந்த பேப்பரை விரித்தவள் முதல் வார்த்தையிலே அதிர்ந்து போனாள். ஆனால் வாசிக்க வாசிக்க அவள் முகம் குழப்பத்தையும் ஒரு இளக்கத்தையும் பிரதிபலித்தது.
எடுத்த உடனே “நீயெல்லாம் பொண்ணா டி?”, என்று எழுதி இருந்தான் செல்வா. அதை பார்த்து அதிர்ந்து போனாள் சௌமி. சட்டென்று ஒரு கோபம் அவள் மனதை ஆக்ராமித்தது.
“நீயெல்லாம் பொண்ணா டி? உன்னைப் பாத்தா எனக்கு அந்த சந்தேகம் தான் வருது? உனக்கு என்ன நீலவேணி மேல கோபம்? நீ பணக்காரி அவ ஏழை அப்படிங்குறதுனாலவா? நீ பணக்காரின்னா அது நீ சம்பாதிச்சதா? உன் அம்மா அப்பா சம்பாதிச்சது தானே? இப்போதைக்கு நீயும் அவளும் ஒரே நிலையில தான இருக்கீங்க?
[the_ad id=”6605″]
….
நாளைக்கு உங்க அப்பா பிஸ்னஸ் முடங்கி போனா நீயும் தெருவுல தான் நிக்கணும். எனக்கு படிப்பு ரொம்ப வராது. அதனால முதல் மார்க் வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியும். நீ எவ்வளவு கஷ்ட பட்டு படிச்சிருப்பன்னும் தெரியும். ஏ. சி ல
உக்காந்து நீ படிச்சதை விட கொசுக்கடியில உக்காந்து படிச்ச அவ எவ்வளவு கஷ்ட பட்டிருப்பா. உன்னை விட கூட ஒரு மார்க் வாங்கிட்டான்னு உனக்கு கோபம். ஆனா உன்னோட அதிக மார்க்கை நினைச்சு எதுக்கு உன்னால சந்தோஷ பட முடியலை?
உன்னால யாருக்கும் உதவ முடியலைன்னா கூட யாரையும் கஷ்ட படுத்தாம இருக்கலாம்ல? அவ டூர் போகணும்னு ஆசை அவ முகத்துல தெரிஞ்சது. நான் போகாட்டியும் அவ போகட்டுமேன்னு எங்க அப்பா கிட்ட கெஞ்சி கூத்தாடி பணம் வாங்கிட்டு வந்தேன். கண்டிப்பா அதை நீ தான் எடுத்துருப்பேன்னு எனக்கு தெரியும்? உன்கிட்ட இல்லாத பணமா? இதை செய்ய உனக்கு கூசலை?
உன்னை முதல் முறை பாத்தப்ப உன் அழகு பிரம்மாண்டமா இருந்தது. உன் முகத்தில் இருந்த சிரிப்பை பார்க்க எனக்கு அவ்வளவு ஆர்வம் வந்துச்சு. தினமும் உன்னை பாக்கணும்னு நினைப்பேன். உனக்கு தெரியாம உன்னை பாக்கவும் செய்வேன். உன்னோட கையெழுத்து முதல் கொண்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். இதெல்லாம் காதலானு எனக்கு தெரியலை. அப்படி காதலா இருந்திருந்தா உன்னை காதலிச்சதை நினைச்சு வெக்க படுறேன். இனி ஒரு நிமிஷம் கூட உன்னை என் மனசுல வச்சிருக்க மாட்டேன். உன் முகத்தை காலம் முழுக்க பாக்கணும்னு ஆசை இருந்தது. இனி உன் முகத்தை கூட பாக்க விரும்பலை. வேணிக்கு நான் பணம் கொடுத்துக்குறேன். நீ திருடிய பணம் நான் உனக்கு பிச்சை போட்டதா இருக்கட்டும். ஒரு திருடிய போய் நான் ஆசையா பாத்ததை நினைச்சா என் கண்ணையே குத்திக்கணும் போல இருக்கு. சே”,என்று அந்த கடிதத்தை முடித்திருந்தான் செல்வா.
படித்து முடித்தவள் அதிர்ந்து தான் போனாள். அவன் எழுதி இருந்ததிலே பெரிய அதிர்ச்சி செல்வா அவளை காதலிக்கிறேன் என்று சொன்னது தான்.
“செல்வா என்ன லவ் பண்ணினானா?”, என்று அதிர்ந்து போய் வாய் விட்டே கேட்டவளின் அடி வயிற்றில் ஒரு வலி பரவியது. அடுத்த நொடி “அம்மா”, என்று கத்தி இருந்தாள் சௌமி.
“ஏதோ ஒரு வேகத்தில் லட்டரை எழுதிக் கொடுத்துட்டோம். இதுல லவ்வை எல்லாம் எழுதி வச்சிட்டேனே? ஏற்கனவே இகழ்ச்சியா பாப்பா.இப்ப காதலிக்கிறேன்னு தெரிஞ்சா என்னை பத்தி என்ன நினைப்பா? இது நான் நீலவேணிக்காக செஞ்சதா? இல்லைன்னா என்னோட காதலை சொல்ல இது தான் சரியான சந்தர்ப்பம்ன்னு நினைச்சு சொன்னேனான்னு தெரியலையே”, என்று சுய அலசலில் ஈடு பட்டுக் கொண்டிருந்தவன் அடுத்த நாள் அவள் முகத்தில் எப்படி விழிக்க என்று மண்டையை போட்டு உடைத்தான். அப்போது தான் அடுத்த இரண்டு நாள் விடுமுறை என்பது நினைவில் வந்தது. “அப்பாடி திங்கள் கிழமை பாத்துக்கலாம்”, என்று நிம்மதியாக நினைத்தான்.
கதிருக்கும் தேன்மொழிக்கும் நாட்கள் அழகானதாக சென்றது. பகலில் ஊர் சுற்றுவதும் இரவில் அன்றைய கதைகளும் சிறு வயதில் போட்ட சண்டைகளைப் பற்றி பேசியும் பொழுது போனது.
“தேனு சனிக்கிழமை நைட் ஊருக்கு கிளம்பி போவோமா? அடுத்த நாள் தினேஷ்க்கு பிறந்த நாள். நாம இருந்தா அவன் இன்னும் சந்தோஷ படுவான்”, என்றான் கதிர்.
“சரி போகலாமே. போகும் போது கிஃப்ட் வாங்கிட்டு போகலாம்”, என்று புன்னகைத்தாள் தேன்மொழி.
சனிக்கிழமை இரவு அவர்கள் ஊருக்கு கிளம்பி இருக்க இரவோடு இரவாக கீதாவை கடத்தி விட்டான் ராஜேந்திரன்.
வயலில் இருப்பவர்களுக்கு டீ கொடுக்க போகும் போது “நீ போ மா, நான் வரேன்”, என்று அனுப்பி வைத்தார் துரைராசு. வரும் வழியிலே ஒரு வைக்கோல் படப்பு அருகே யாரும் பார்க்காதவாறு கடத்தி விட்டான். இப்போது அவளை அருகே இருந்த அவனுடைய மற்றொரு வீட்டுக்கு தூக்கி சென்று விட்டான்.
அந்தி சாயும் வேளை என்பதால் ஒருவரும் அதை பார்க்க வில்லை. வீட்டுக்கு வந்த துரைராசு மகளைக் காணும் என்பதால் பதறினாலும் ஒரு வேளை அவளுடைய அம்மாவை பாக்க போயிருப்பாள் என்று பொறுமையாக இருந்தார்.
இரவு ஒன்பது மணி வரை அவள் வராததால் ஒரு வேளை அங்கேயே தூங்கி இருப்பாளோ என்று எண்ணி அவளை போனில் அழைத்தார். அவளுடைய போன் ஆப் பண்ணி இருக்கவும் கோபம் இருந்தாலும் மகள் மேல் உள்ள அக்கறையால் ரேகாவை அழைத்தார்.
மன்னிப்பு கேக்க தான் அழைக்கிறார் என்று எண்ணிய ரேகா போனை எடுத்து “சொல்லுங்க”, என்றாள்.
“உன்கிட்ட கொஞ்சி குலாவ போன் பண்ணலை. இது வரை நான் உன் முந்தானையை பிடிச்சிட்டு இருந்தது போதும். கீதா கிட்ட போனை கொடு”
“என்னது கீதா வா? அவ இங்க வரலையே”
“ரேகா விளையாடாத. மணி ஒன்பதுக்கு மேல ஆகுது. சாயங்காலம் தோட்டத்துக்கு வந்துட்டு வீட்டுக்கு வந்தவ. இப்ப வீட்ல காணும். போன் வேற ஆஃப்ல இருக்கு”
“என்னங்க என்ன சொல்றீங்க? நிஜமாவே கீதா இங்க வரலைங்க. ஐயோ கீதா எங்க போனான்னு தெரியலையே”, என்று உண்மையிலே பதறினாள் ரேகா.
ரேகா சொன்னதைக் கேட்டு துரைராசுவுக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது. “சரி சரி டென்ஷன் ஆகாத. நான் அண்ணா வீட்டுக்கு போயிருக்காளான்னு பாக்குறேன்”, என்று சொல்லி போனை வைத்தார்.
[the_ad id=”6605″]
தர்மதுரைக்கு போன் செய்து கேக்கும் பொறுமை இல்லாமல் நேரிலே சென்றார். அங்கேயும் அவள் செல்ல வில்லை என்பதை அறிந்து அனைவருமே பதறிப் போனார்கள். ஏற்கனவே தேன்மொழியை காணாமல் தவித்த போது எப்படி வலித்ததோ அது போலவே இப்போதும் வலித்தது.
மெது மெதுவாக ஊருக்கே விஷயம் தெரிய கதிர் வீட்டுக்கும் தெரிந்து அவர்களுக்கும் பதட்டமே. என்ன தான் துரைராசுவை மதிக்கு பிடிக்காமல் இருந்தாலும் ஒரு பெண் பிள்ளையை காணும் என்றவுடன் அவருக்கும் பதட்டமே.
விஷயம் அறிந்த தினேஷோ அதிர்ந்து போனான். அடுத்த நொடி தன்னுடைய வண்டியை எடுத்து கிளம்பினான் அவளை தேட. அவன் மனநிலை அறிந்த செல்வாவும் அவனுடன் வண்டியில் ஏறிக் கொண்டான்.
துரைராசுவிடம் இருந்து தகவல் வராததால் ரேகா தேன்மொழி வீட்டுக்கு சென்றாள். அங்கேயும் கீதா இல்லை என்றதும் பதறி அழ ஆரம்பித்து விட்டாள். செல்வியும் சகுந்தலாவும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
சண்முகம்மாளோ “எதுக்கு என் பேத்திக்கு இந்த நிலைமை? ஒரு வேளை தேன்மொழி போல கோப பட்டு எங்கயாவது போயிருப்பாளோ?”, என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.