ஒளி 7:-
கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்!
தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம்!
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி!
கண்டதும் காதல் வழியாது!
கண்களால் தொட்டும் அழியாது!
ஆண்களில் ராமன் கிடையாது!
புரட்சிகள் ஏதும் செய்யாமல்,
பெண்ணுக்கு நன்மை விளையாது!
கண்ணகி சிலைதான் இங்குண்டு!
சீதைக்கு தனியா சிலையேது!
பாடலை முணுமுணுத்தபடியே ரெடியாகிக் கொண்டு இருந்தாள்.
“அம்மு ! ரெடியாகிட்டியா? இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க? அப்பா உன்ன விட்டுட்டு கடைக்கு போகணும்ல வாடி சீக்கிரம்” என சாந்தி கூப்பிட,
“அம்மா! எவ்ளோ அழகா கேளடி ரதியே ரதியேனு என் பேரை சொல்லி பாட்டு பாடிட்டுருந்தேன் நீ ஏன் என்ன ஏலம் விட்டுட்டு இருக்க” ?
சாந்தியோ அவளை முறைத்துக்கொண்டே “உன் பேரோட ஆராய்ச்சிலாம் அப்புறமா பண்ணிக்கோ…நீ இன்னும் ரெடி ஆகலையா ?”
“ஹி ஹி ! நான் ரெடிம்மா ! தலை மட்டும் பின்னி விடு !”
“ஏன்டி ஏழு கழுதை வயசாச்சு இன்னமும் தலை பின்னி விட ஒரு ஆள் வேணுமா?” என கேட்டபடியே அவளுக்கு பின்னி விட ஆரம்பித்தார்..
“அம்மா ! ஒரு கழுதைக்கு 2.5 வயசும்மா அதான் என் வயசுக்கு ஈடா 7 கழுதை சொல்றிங்களா ? அப்ப உங்களுக்கு எத்தனை கழுதை வரும்” என அவள் தீவிர கணக்கில் இறங்க …
அவள் முதுகிலே ஒரு அடி போட்டு , “அம்மு ! உன் விளையாட்டு எல்லாம் தூக்கி போடு ? எவ்ளோ முக்கியமான விஷயத்துக்கு போற கொஞ்சமாவது அதை பத்தின எண்ணம் இருக்கா உனக்கு ?”
“அம்மா ! நீங்க ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க ? டென்ஷன் ஆனா மட்டும் என்ன நடக்க போகுது ? கூல்மா? நான் பார்த்துக்கறேன்” …
“என்னவோ சொல்ற… என்னையும் அப்பாவும் வர வேணாம்னு சொல்லிட்டாங்க.. அங்க போய் அமைதியா அடக்கமா இரு… அங்க அதிகமா ஆம்பளைங்க தான் இருப்பாங்க … பாட்டி கூடவே இரு… அங்க யார் என்ன பேசினாலும் அமைதியா இரு …. உன் பேச்சு திறமையை அங்க காட்டாத… என்ன சொல்றதுலாம் புரிஞ்சுதா ?”
“ம்ம்ம்ம் … ம்ம்ம்ம்ம் …”
“வாய திறந்து பதில் சொல்லுதா பாரு …”
[the_ad id=”6605″]
“விடு சாந்தி! அவள எதுக்கு இப்ப பயமுறுத்தற … அதெல்லாம் அவ பார்த்துப்பா… அம்மு! ரெடியாகிட்டினா வா போகலாம் ?” என ராஜதுரை இடையிட,
“போகலாம்ப்பா….”
இருவரும் சேர்ந்து கமலம்மாள் வீட்டிற்கு சென்றனர்.. “பார்த்து பத்திரமா போயிட்டு வா அம்மு” என ரதியை அங்கு விட்டுட்டு ராஜதுரை வேலைக்கு கிளம்பி விட்டார்.
வெகு நேரம் அங்கு வெளியே வராண்டாவில் அமர்ந்திருந்தாள்.. கட்சி ஆட்களும் பொது மக்களும் என நிறைய பேர் வந்துக்கொண்டும் போய்க்கொண்டும் இருந்தனர்… வருபவர் அனைவரும் இவளை ஆராய்ச்சி பார்வை வேறு பார்த்தனர்..
உரிமையாய் பாட்டி வீடு என அவளால் உள்ளே செல்ல இயலவில்லை… ஏனெனில் கமலம்மாள் இதுவரை அப்படி நடத்தியது இல்லை…அவளுக்கு அதில் வருத்தமும் இல்லை …முதலில் மட்டுமே அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது அதன்பின் அவள் அதை பொருட்படுத்தவில்லை…
அவள் வந்து ஒரு மணி நேரம் கழித்தே அவள் பாட்டி வெளியே வந்தார்..
“வா !” என அவர் வண்டியை நோக்கி போக இவள் அவர் பின்னே விரைந்தாள், அவர் முன்னே ஏறவும் இவள் பின் சீட்டில் அமர்ந்ததும் வண்டி கட்சி தலைவரின் இல்லம் நோக்கிச் சென்றது..
ஒரு மணி நேர பயணத்தில் அங்கு செல்ல , இறங்கியதும் தீடிரென அவளுக்குள் ஒரு கலக்கம் .. சுற்றி வெள்ளை வேஷ்டி சட்டையில் கும்பலாக நிறைய பேர் நின்று இருந்தனர்…
வண்டி நின்றதும் அனைவரின் பார்வையும் இங்கே, அதிலும் இவள் மீது அதிகம் … உறவுகளாக சித்தப்பா , தம்பி என எல்லோரும் இருந்தாலும் வெளி ஆண்களிடம் பேசியது இல்லை… என்னவோ ஒரு நடுக்கம்.
பாட்டியின் பின்னே இவள் செல்ல , ஒரு சிலர் கமலாம்மாவிடம் பேச்சு கொடுத்தாலும் பார்வை இவள் மீது தான் .. கமலம்மா பார்த்தாலும் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை .
“வணக்கம் ! MLA ம்மா … எப்படி இருக்கீங்க ? ரொம்ப நாளாச்சு உங்கள இங்க பார்த்து .. ஆமா யார் இந்த பாப்பா ?” என ஒருவர் கேட்க …
கமலம்மா ஏதும் பதில் சொல்லாமல் சிரிப்புடன் ,”தலைவர பார்க்கணும் வர சொல்லி இருந்தாரு” என கூறியபடியே விலகினார் ..
பள்ளி முடித்த சிறு பெண் அவள், என்ன தான் தைரியம் இருந்தாலும் இது போல சூழ்நிலைகள் அவளுக்கு புதியது.. அதுவும் அவள் பாட்டியோ , கூட ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைவே இல்லாதது போல இருந்தார்.
சிறிது நேர காத்திருப்புக்கு பின் தலைவரை சந்தித்தனர்..
“என்ன கமலம்மா ? எப்படி இருக்கீங்க ? தொகுதிலாம் எப்படி இருக்கு ? “
“எல்லாம் உங்க தயவுல நல்லா தான் போயிட்டு இருக்குங்க ..”
ரதிக்குள் அதிர்ச்சி ! அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் இவரை கண்டு நடுங்க இவர் இங்கு இவ்வளவு பணிவா பேசறாங்களே என அவள் பாட்டியையே பார்க்க …
தலைவர் மேலே தொடர்ந்தார்.. “உங்க தொகுதிக்கு நிறைய பேர் சீட் கேட்டு போட்டி போட்டாங்க… சரி நீங்க ரொம்ப வருஷமா கட்சியில இருக்கீங்க? ஒரே ஜாதி வேற அது மட்டுமில்லாம நீங்க தான் நிறைய நிதி கட்சிக்காக கொடுத்தீங்க அதான் உங்களுக்கு கொடுத்தேன்… நீங்க பதவி வந்ததும் ஒரு ரெண்டு முறை தான் வந்தீங்க அப்புறம் உங்கள பார்க்கவே முடியல … மக்களுக்கு நல்லது செய்யறதுல பிஸியா இல்ல நீங்க சம்பாதிக்கறதுல பிஸி ஆகிட்டீங்களா ??”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை தலைவரே ..தொகுதில நன்றி கூட்டம் எல்லாம் இப்ப தான் முடிஞ்சது அதான்,நான் சம்பாதிச்சா மட்டும் அது எங்க போக போகுது இங்க நம்ப கட்சிக்கு தானே கொடுக்க போறேன் அப்பறம் என்ன?”
“ம்ம்ம்ம் … அது என்னவோ சரி தான்.. முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்க? என்ன பேசணும் ?”என கேட்டபடியே ரதியை ஆராய,
“ஒன்னும் இல்லை .. இவ என் அண்ணன் பேத்தி… 12த்ல நல்ல மார்க் எடுத்து இருக்கா ? டென்டல் படிக்க கிடைச்சு இருக்கு ஆனா டொனேஷன்னு காலேஜ்ல அதிகமா பணம் கேக்கறாங்க … நானும் பேசி பார்த்துட்டேன் குறைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க … அதான் உங்ககிட்ட வந்தேன் .. நீங்க கொஞ்சம் பேசுங்க தலைவரே” …
“அந்த ஊரு MLA நீங்க சொல்லியே கேக்கல இதல நான் என்ன பேச ? ஆமா எந்த காலேஜ் ?”
…… காலேஜ் …
“அட !என்ன கமலம்மா உங்களுக்கு தெரியாதா, இப்ப சமீபத்துல தான் அந்த காலேஜ் முதலாளிக்கு எதிரா நம்ப கட்சி போராட்டம் பண்ணோம்ல …அந்த முதலாளி எப்பவும் நம்ப கட்சிக்கு நிதி கொடுக்கறவன் ஆனால் இந்த முறை தேர்தலுக்கு நமக்கு கொடுக்காம எதிர்கட்சிக்காரனுக்கு கொடுத்துட்டான்.. அதான் அவன் தொழிலுக்கு எதிரா போராட்டம் பண்ணோம் ஆனா சென்ட்ரல் மினிஸ்டர் அந்த கட்சிக்காரன் அதனால தப்பிச்சுட்டான்… இப்ப அவன்கிட்ட நான் எப்படி பேசறது” …
“அப்படியா… உள்ள இவ்ளோ விஷயம் நடந்து இருக்கா ? எனக்கு தெரியல தலைவரே…இவங்கப்பன் கிட்ட வேற உங்கள வைச்சு பேசறேன்னு சொல்லிட்டு வந்தேன் ?இப்ப என்ன பண்றது ?” என யோசித்தவர் …
“ஏன் தலைவரே ?உங்க காலேஜ்ல ஒரு சீட் கொடுங்களேன் .. நல்லா படிக்கும் இந்த பொண்ணு” …
“டொனேஷன் பணம் நீங்க தர்றீங்களா கமலம்மா ?”
“ஐயோ இல்ல தலைவரே! சிபாரிசுல உங்க காலேஜ்ல கிடைக்கும்ல அதான் கேட்டேன் ?”
[the_ad id=”6605″]
“ஹாஹாஹா !என்ன கமலம்மா படிக்கற பொண்ணுனு டொனேஷன் இல்லாம வெறும் சீட் கொடுத்தால் நான் நாமம் போட்டுட்டு போக வேண்டியது தான்”…
“இப்ப என்ன பண்றது தலைவரே ??”
சிறிது நேரம் யோசித்து விட்டு , “எப்படியும் டொனேஷன், காலேஜ் பீஸ் புக் பீஸ்னு நாலு வருஷத்துக்கு கணக்கு போட்டா எங்கயோ போகுது … கஷ்டப்படற குடும்பம்னு சொல்ற பேசாம ஒரு லட்சம் செலவு பண்ணி அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடு… செலவு மிச்சம் .. பொண்ணும் நல்லா தான் இருக்கு “என அவளை அளவிட்டார்…
இவ்வளவு நேரம் அவர்கள் பேசியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு இப்போது அவர் பார்வையின் வீரியத்தில் , இப்படி ஒரு படிப்பு வேணுமா? பணம் மட்டும் தான் ஒருத்தர் கனவையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குமா ? மார்க் எடுத்தும் விருப்பப்பட்ட படிப்பு படிக்க இவ்வளவு தடைகளா ? என யோசித்தபடி இருந்தாள்.
“சரி ! தலைவரே ! அவங்கப்பன் கிட்ட பேசி பார்க்கறேன்… அப்ப நான் கிளம்பறேன்…”
“ம்ம்ம்ம் …” என அவர் தலையசைக்க இருவரும் கிளம்பினர்.
அவர்கள் சென்றதும் , “ஏன் தலைவரே நீங்க தான் அந்தம்மாவுக்கு எதனால சீட் கொடுத்தோம்னு பெருமையா சொல்லிட்டு இருந்தீங்க …. ஏன் இந்த காலேஜ் சீட் மட்டும் கொடுக்கல ?”
“அட போய்யா! அந்தம்மாவுக்கு நிறைய சொத்து இருக்கு ஆனா வாரிசு இல்ல .. இப்பவும் பணம் பணம்னு தான் அரசியல் பதவி வரைக்கும் வந்து இருக்கு .. அந்தம்மா வசதிக்கு அந்த பொண்ண டாக்டருக்கே படிக்க வைக்கலாம் ஆனா அதுக்கு மனசில்லாம எங்கிட்டா வந்து சீட் கேக்கறாங்க…நான் மட்டும் சும்மா தூக்கி கொடுக்க முடியுமா?”
“நீங்க சொல்றது சரி தான் தலைவரே …”
அவர்கள் அங்கு பேசிக்கொண்டிருக்க , இவர்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். ரதி அவரிடம் சொல்லிக்கொண்டு அவள் வீட்டிற்கு சென்றாள்.
காலையில் செல்லும் போதிருந்த துள்ளல் இல்லாமல் உள்ளே நுழைய , அவள் அம்மா அவளை எதிர்கொண்டார்.
“வந்துட்டியா ? என்னடா போய் ரொம்ப நேரம் ஆச்சு இன்னும் வரலையேனு பார்த்துட்டு இருந்தேன் … என்னாச்சு அம்மு ! பாட்டி பேசினங்களா ? நீ ஏன் ஒரு மாதிரி இருக்க ?”
“அம்மு ! அம்மு !” என அவளை உலுக்க ….
“ஹான்ன்… என்னம்மா …”
“என்ன என்னம்மா ? போனது என்னாச்சு ?”
அவளிடம் ஒரு வெறுமை, “பேசினாங்கம்மா … அவரும் ஒன்னும் பண்ணமுடியாதுனு சொல்லிட்டாரு…”
“என்னடி சொல்ற !”
“தெரியலம்மா … அவங்க அங்க என்ன என்னவோ பேசினாங்க எனக்கு புரிஞ்சது இது மட்டும் தான்..”
“இப்ப என்ன அம்மு பண்றது ?”
“ஒன்னும் பண்ண வேணாம்… நான் வேற கோர்ஸ் படிக்கிறேன் .. இத இப்படியே விட்டுடலாம் …”
“ஏன் அம்மு?” அவளிடம் இருந்த வெறுமை கண்டு வருந்தினார்.
“அம்மா ! எனக்கு கண்டிப்பா மெடிக்கல்ல தான் படிக்கணும்னு இல்லமா.. ஜஸ்ட் ஒரு ஐடியா அவ்ளோ தான், அதுக்கான முயற்சியும் எடுத்துட்டோம் இனி என்ன கிடைக்குமோ அத படிக்க வேண்டியது தான்..”
“சரி … அப்பா வரட்டும் பேசிக்கலாம்…”
இரவு ராஜதுரை வந்ததும் பேச ஆரம்பித்தவரை ,”ஏங்க சாப்பிட்டு பேசிக்கலாம்… சாப்பிடலாம் வாங்க .. அம்மு வா சாப்பாடு எடுத்துவை” என அவளை கூட்டி சென்றார்…
சாப்பிட்டு முடித்ததும் “என்னடா அம்மு ?” ராஜதுரை கனிவாய் கேட்டதும்,
[the_ad id=”6605″]
அவர் தோளில் சாய்ந்துக்கொண்டு , “அப்பா பாட்டி கேட்டும் அவங்க முடியாதுனு சொல்லிட்டாங்கப்பா … எனக்கு இந்த கோர்ஸ் வேணாம் நான் வேற ஏதும் படிக்கிறேன்ப்பா.. “
“இல்ல அம்மு , அம்மா முன்னாடி சொன்ன மாதிரி வீட்டு பத்திரம் வச்சு பணம் ஏற்பாடு செய்யலாம் ?”
அவளோ வேகமா எழுந்து , “அப்பா எத்தனை முறை சொல்றது வீடு பத்தி பேசாதீங்கனு இத இப்படியே விடுங்க , அந்த ஒரு கோர்ஸ் மட்டும் தான் இருக்கா என்ன ? நான் வேற படிச்சுகிறேன்” என கறாராக கூறிவிட்டு படுத்துக்கொண்டாள்…
“இப்ப என்னங்க பண்றது ?”
“விடு சாந்தி… அவளை கட்டாயப்படுத்த வேணாம்… அங்க வேற அந்த தலைவர், படிக்க வைக்கிற செலவுக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்லி இருக்காரு…” என ராஜதுரை வருத்தமாக சொல்ல,
“ஐயோ ! அவ குழந்தைங்க… அதான் போயிட்டு வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருந்தாளா ?”
“ம்ம்ம் … ஆமா சாந்தி ! வீட்டுக்கு வரத்துக்கு முன்னாடி அத்தைய போய் பார்த்துட்டு தான் வந்தேன் ..அவங்க தான் சொன்னாங்க பேசாம அவளுக்கு கல்யாணம் பண்ணிடுன்னு …எனக்கே அத கேட்டு கஷ்டமா போச்சு ..”
“காலையில பிள்ளையை எத்தனை பேர் முன்னாடி இது போல சொன்னாங்களோ? படிக்கணும்னு ஆசைப்பட்டது தப்பா ? அவ விருப்பத்தை கூட என்னால நிறைவேத்த முடியாத நிலையில இருக்கறத நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு …”
“ஏங்க! உங்க தம்பிங்க கிட்ட கேட்டு பார்த்திங்களா ?”
“அதெல்லாம் முன்னாடியே கேட்டு பார்த்துட்டு தான் அத்தைகிட்ட கேட்டேன்…அவனுங்க ஒருத்தனும் நம்பிக்கையா பேசல ..” என பெருமூச்சு விட்டார்.
“உங்க அத்தைகிட்ட இருக்க பணத்துக்கு அவங்களே படிக்க வைக்கலாம் ஆனா அவங்களுக்கு அந்த மனசே இல்ல …” என சாந்தி புலம்ப,
“ம்ம்ம் ஆமாம் மா … கடனா கூட பணம் தாங்கத்த .. அப்ப அப்ப கொஞ்சம் கொஞ்சமா திரும்ப தரேன்னு கூட சொல்லி கேட்டேன் … அவங்க கிட்ட இல்லைனு சொல்லிட்டாங்க… “
வெளி உலகம் அறியாத, மகளின் விருப்பம் நிறைவேற்ற வழி தெரியாத பெற்றோராக இருவரும் அவளின் எதிர்காலம் குறித்து கவலைக்கொண்டனர். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த ரதிக்கோ , நம்ப விருப்பத்தை சொல்லி இருக்க கூடாதோ அதனால தான் பெற்றவர்கள் வருந்துகிறார்கள் என அவள் கவலை கொண்டாள்.
வயதில் பெரியவங்களா இருந்தாலும் இன்று அவள் பாட்டியை எல்லாரும் மரியாதையாக நடத்தியது பணத்திற்காக மட்டுமே, இவர்களின் செயலோ பதவியோ எதற்கும் அந்த மதிப்பில்லை… பணம் பணம் மட்டுமே …
அது அவளுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை … இது போல பணம் அவள் வாழ்வின் பெரும் அங்கமாக இருக்க கூடாது.. பார்வையிலே எல்லாரையும் தூர நிறுத்தும் திடத்தோடு இருக்கணும் என முடிவெடுத்தாள்…
பணமின்றி மாயமான கனவு!!
வாழ்வின் பயணமாய் நனவு!!
எதிர்ப்பார்ப்பில்லா விழியில்
கனவுகளுக்கு இடமில்லை!!!
வரமாய் சில நிகழ்வுகள் மகிழச்செய்யுமே!..
நீ எனக்கு கிடைத்தது போல்!!!!!