அத்தியாயம் 14
என்னைப் பிரிந்து சென்று
காதல் வலியை எனக்கு
புரிய வைத்தது ஏனோ?!!!
அவன் கை பற்றி வெளியே அழைத்து வந்தாள் சுசீலா. அவள் கை பிடியில் நடந்து வந்தவனுக்கு உடலும் மனமும் தளர்வாக இருந்தது. அங்கே நின்ற கேசவ் மற்றும் சுமனை பார்த்த சுசீலா “அந்த மிருகம் செத்துருச்சு. எப்பவும் போல புதைச்சி அது மேல செடியை நட்டுருங்க”, என்று சொல்லி விட்டு யுவனை அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.
எப்போதும் பயந்த சுபாவத்துடன் இருக்கும் சுசீலாவா இப்படி சொல்வது என்று ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே சுரங்கப் பாதைக்குள் சென்றார்கள் கேசவும் சுமனும்.
அங்கே செத்துக் கிடந்த ரெட்டி என்ற மிருகத்தின் உடலை அப்புறப் படுத்த ஆரம்பித்தார்கள்.
யுவனை அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் வந்த மாயா யுவன் சுசிலாவின் கைக்குள் ஒரு மாதிரி வெறித்த தோற்றத்துடன் இருக்கவும் பதறிப் போய் “பையா, என்ன ஆச்சு? சுசீ, பையாவுக்கு என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்காங்க?”, என்று கேட்டாள்.
“ஒண்ணும் இல்லை மாயா. நீங்க பதறாதீங்க. இப்ப கொஞ்ச நேரத்துல சுமன் வருவாங்க. அவங்க கிட்ட கேளுங்க. இப்போதைக்கு உங்க அண்ணன் நல்லா தூங்கணும்”, என்று சொல்லி அவனுடைய அறைக்குள் அழைத்து சென்று விட்டாள்,
அறைக்குள் சென்றதும் முதலில் அவனை பாத்ரூமுக்குள் தான் அழைத்துச் சென்றாள். சவருக்கு அடியில் அவனை நிற்க வைத்தவள் பைப்பை திறந்து விட்டாள்.
குளிர்ந்த நீர் பட்டதும் சுயநினைவுக்கு வந்த யுவன் அவளை கேள்வியாக பார்க்க “முதல்ல குளிச்சிட்டு வாங்க. நான் வெளிய இருக்கேன்”, என்று சொல்லி அறையை விட்டு வெளியே வந்தாள்.
பின் ஒரு துண்டை எடுத்து பாத்ரூம் கதவில் போட்டவள் தன்னறைக்கு வந்து குளிக்க சென்று விட்டாள். குளித்து முடித்து வெளியே வந்த யுவன் சுசீலாவைத் தான் முதலில் தேடினான்.
அவள் அறைக்குள் இல்லை என்றதும் மாற்று உடையை அணிந்து விட்டு அவளை தேடிச் செல்ல தான் நினைத்தான். பின் இப்போதைக்கு யாரையும் பார்க்க மனதில்லாமல் கட்டிலில் அமர்ந்து விட்டான்.
சிறிது நேரத்தில் சுசிலாவே அவனுடைய அறைக்குள் வந்தாள். அவளும் குளித்து முடித்திருந்தாள்.
“சுசீ”, என்று ஏக்கமாய் வெளி வந்தது அவன் குரல். தாயைப் பிரிந்து கன்று எப்படித் தவிக்குமோ அப்படி இருந்தது அவன் செய்கை.
அவன் அருகில் சென்று அவன் கையைப் பற்றினாள். அவன் எதுவோ சொல்ல வர “மூச், எதுவும் பேசக் கூடாது. ஒழுங்கா படுங்க. எதுன்னாலும் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சு பேசலாம்”, என்று சொன்னது மட்டுமல்லாமல் அவனை படுக்க வைத்தாள்.
கண்களை திறந்து அவளையே அவன் பார்த்துக் கொண்டிருக்க தன்னுடைய விரலால் அவன் கண்களை மூடச் செய்தவள் அவன் நெற்றியில் விரலை வைத்து இதமாய் வருடி விட்டாள். நெற்றிப்
பொட்டில், இமைக்கு மேலே அவள் சற்று இதமாக வருடி விட ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான் யுவன்.
அவன் தூங்கியதும் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து வெளியே வந்தாள். ஹாலில் கேசவ், சுமன், மாயா அனைவரும் கவலையாக
அமர்ந்திருந்தார்கள்.
ஏற்கனவே ரெட்டி யார் என்ற உண்மையை சுமன் மாயாவுக்கு சொல்லியிருந்ததால் “சுசீ, பையா இப்ப எப்படி இருக்காங்க?”, என்று கேட்டாள் மாயா.
“நல்லா தூங்குறாங்க”, என்று சுசீலா சொன்னதும் நால்வரும் அமர்ந்து சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் அவனைத் தேடி மீண்டும் அறைக்கு வந்து விட்டாள் சுசீலா. இப்போது அவனை தனியே விடக் கூடாது என்று அவளுக்கு தோன்றியது.
சிறு குழந்தை போல் தூங்கும் அவனை ரசித்த படி அமர்ந்து விட்டாள்.
மாலை ஆறு மணி போல் தான் கண் விழித்தான் யுவன். எழுந்ததும் அவன் கண்கள் சுசீலாவைத் தான் தேடியது. அவனைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவள் அப்படியே தூங்கியிருந்தாள். இப்போது அவளை ரசிப்பது அவன் முறை.
அவன் எதற்கோ காலை அசைக்க சுசீலாவும் கண் விழித்து விட்டாள்.
“மாமி, என்ன உக்காந்துட்டே தூங்குற?”, என்று யுவன் கேட்டதும் அவள் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. அவன் சாதாரணமாக பேசியது நிம்மதியாகவும் இருந்தது.
“சும்மா உக்காந்துருந்தேன். அப்படியே தூங்கிட்டேன் போல? டீ கொண்டு வரவா?”
“மாடிக்கு போவோமா சுசீ? உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசணும்”
“இன்னைக்கா? வேண்டாமே? இப்ப ஏதாவது பேசினா உங்க மைண்ட் அப்சட் ஆகும்”
“அதெல்லாம் அப்சட் ஆகாது. அப்படியே கண்ணீர் வந்தாலும் அது ஆனந்த கண்ணீரா தான் இருக்கும். இப்ப தான் எல்லாமே முடிஞ்சிருச்சே. நிம்மதியா தான் இருக்கும். அப்புறம் நீ கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? அது மட்டுமில்லாம இப்பவும் உன் மனசுல நான் இருக்கேனான்னு எனக்கு தெரியனுமே? நான் முகம் கழுவிட்டு வரேன். நீ மாடிக்கு காபி கொண்டு வரச் சொல்லேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்றான்.
ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு எழுந்து சென்றவள் சமையல் செய்பவரிடம் சொல்லி இரண்டு டீயை போடச் சொல்லி அதை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள். யுவனும் அவள் பின்னாடியே வந்து விட்டான்.
அவன் எதுவோ பேச ஆரம்பிக்க முதலில் டீ பருகச் செய்தாள்.
“எங்க அம்மா பேர் தேவிகா. போட்டோல பாத்துருப்பியே? அவங்க தான். எங்க அம்மா ரொம்ப அழகு சுசீ”
“ஆமா பாத்தேன். எனக்கு அவங்க அழகை விட அவங்களோட கம்பீரம் ரொம்ப பிடிச்சிருந்தது. அவங்க உக்காந்துருந்த தோரணையும் அவங்க கண்ணுல இருந்த தீட்சன்யமும் அவங்களை ஒரு அரச குமாரி மாதிரி காமிச்சது”
“ஒரு நல்ல ஆளைக் கட்டியிருந்தா அவங்களும் ராஜ குமாரி தான். ஆனா என்ன செய்ய? அவங்க நிலைமை அப்படி ஆகிருச்சு”
“அவங்களுக்கு என்ன ஆச்சு யுவன்? அந்த இடத்துல இருந்து தப்பிச்சி வந்துட்டாங்களா?”
ஒரு விரக்தி சிரிப்பை சிந்தியவனின் முகத்தில் இருந்த வலி சுசீலாவை அதிகம் பாதித்தது. அவனுடைய வலியில் அவள் இதயத்தில் இறக்கம் சுரந்தது.
“இவனால சீரழிக்கப் பட்ட முதல் பெண் எங்க அம்மா தான் சுசீ. தப்பான ஆட்கள் கிட்ட அவங்களை வித்துட்டு வந்துட்டான் இந்த நாய். வயித்துல என்னை வச்சிக்கிட்டு அந்த தப்பான இடத்துல அவங்க என்ன பண்ணிருக்க முடியும்? நான் அந்த இடத்துல தான் சுசீ பிறந்தேன். அதுக்கப்புறமும் அவங்க வாழ்க்கை இவன் யார் கிட்ட வித்துட்டு வந்தானோ அந்த பொம்பளையால நாசமா போச்சு. அதுக்கப்புறம் அவங்க தொழிலே அதுவா ஆகிப் போச்சு. என்ன செய்ய சொல்ற? அவங்களால அங்க இருந்து தப்பிக்கவும் முடியலை. சாகவும் முடியலை. அஸ்வதி சொல்லிருப்பாளே? அங்க கண்காணிப்பு அதிகமா இருக்கும். அது மட்டுமில்லாம அவங்க எங்க தப்பிச்சாலும் அவங்களை அந்த ஆட்கள் பிடிச்சிருவாங்க. ஏன்னா இங்க எல்லா இடத்துலயும் அவங்க ஆட்கள் இருப்பாங்க”
“ஆமா, அவளும் அதையே தான் சொன்னா. உங்க அம்மாவுக்கு அப்புறம் என்ன ஆச்சு?”
“கைக்குழந்தையான என்னை வச்சிக்கிட்டு அவங்க எங்க போவாங்க? தப்பான தொழில் செஞ்சு தான் என்னை வளத்தாங்க. எனக்கு அது அவமானம் கிடையாது சுசீ. கண்டிப்பா நான் அதை அவமானமா நினைக்க மாட்டேன். ஏன்னா இங்க இருக்குற பல பெண்களோட விதி அப்படி தான் இருக்கு. அவங்க வேற வழியில்லாம அப்படி ஆகிட்டாங்க. அதுக்காக அவங்களை தப்பு சொல்ல முடியுமா? என் கண்ணு முன்னாலே அங்க அம்மாவை கண்டவன் எல்லாம் ரூமுக்குள்ள கூட்டிட்டு போகும் போது….. முதலில் விவரம் தெரியலை. கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிக்கிறப்ப எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம ஆகிட்டு. என்கிட்ட எல்லா விசயங்களையும் சொல்லிட்டு நீ பிறக்குறதுக்கு காரணமானவனை எப்படியாவது கொன்னுரு. இல்லைன்னா பல பேர் இறக்குறதுக்கு அவன் காரணமா இருப்பான்னு சொல்லிட்டு செத்துட்டாங்க. அவங்க கடைசியா பேசினது இது தான்”
“உடம்பு சரியில்லாம போச்சா? அம்மாக்கு என்ன ஆச்சு?”
“ஆமா. அவங்க உடம்புக்கு என்ன தெரியுமா சுசீ? அவங்க எப்படி செத்தாங்க தெரியுமா? கேன்சரோ அல்சரோ வந்து அவங்க சாகலை தப்பான ஆள் மூலமா வந்த ஆட்கொல்லி நோய் மூலமா செத்தாங்க”
“யுவன், நீங்க என்ன சொல்றீங்க?”
“ஆமா சுசீ, அவங்களுக்கு வந்த நோய் எய்ட்ஸ். எவன் கிட்ட இருந்தோ அம்மாவுக்கு வந்துருச்சு. ஆனா அவங்க இது வந்தது ரொம்ப சந்தோசம்னு சொன்னாங்க. ஏன்னா அது தான் அவங்களுக்கு விடுதலையாம். ஆனா என்னை நினைச்சு தான் அவங்களுக்கு ரொம்ப வலி. என்னை தனியா விட்டுட்டு போறோமேன்னு ரொம்ப அழுதாங்க. அவங்க செத்ததுக்கு அப்புறம் அந்த இடத்துல இருந்து நான் விரட்டி அடிக்க பட்டேன். சாப்பாடுக்கு வழியில்லாம, தூங்க இடம் இல்லாம தெரு நாய் எப்படி சுத்துமோ அப்படி சுத்தினேன்”
“யுவன்”
“ஆமா சுசீ, அதெல்லாம் பயங்கரமான கொடுமை. ஏதாவது கடை வாசல்ல, சாக்கடைக்கு பக்கத்துல தான் தூங்குவேன். யாராவது தர்மம் போட்டா சாப்பிடுவேன். சுத்தி வளைச்சு சொல்லாம நேரடியா சொன்னா நான் ஒரு பிச்சைக்காரன் சுசீ. அப்புறம் தான் ஒரு பாய் என்னை வளத்தாரு. எங்க அம்மா தான் கடவுளா இருந்து அவரை அனுப்பி வச்சாங்கன்னு நினைப்பேன். அவர் தான் கடவுள். வேற கடவுளை எல்லாம் நான் யோசிக்கவே மாட்டேன். பாய் தான் என்னை படிக்கவும் வச்சாரு. நிறைய பேரை அவர் கூட வச்சிருந்தாரு. எல்லா தப்பான தொழிலையும் அவர் செஞ்சாலும் அவர் கிட்ட மனிதாபிமானம் இருந்தது”
…..
“சாப்பாடுக்கு வழி இல்லாம நாய் மாதிரி அலைஞ்ச எனக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டது அவர் தான். கேசவ், சுமனும் அங்க இருந்தவங்க தான். அவங்களும் ஏதோ ஒரு விதத்துல பாதிக்கப் பட்டவங்க தான். எங்க எல்லாரையும் பாய் தான் படிக்க வச்சாரு. நாங்க படிச்சாலும் சைட்ல அவர் செய்யுர தொழில்லயும் ஈடு படுவோம். ஒரு நாள் அவர் கொல்லப் பட்டார். யாரோ அவரை கத்தியால குத்திட்டாங்க., அதுக்கப்புறம் நான் அவர் தொழில்ல ஈடு பட்டேன். கூடவே இந்த ரெட்டியை நெருங்க எவ்வளவோ முயற்சி செஞ்சேன்”
……
“இவன் என்னோட கைல மாட்டாம தண்ணி காட்டினான். இவன் உயர்ந்த இடத்துல இருந்ததுனால இவனை நெருங்க முடியலை., அப்புறம் தான் இவனோட பிஸ்னஸ் சாம்ராஜியத்தை உடைக்கணும்னு நினைச்சேன். இதுக்கு இடைல தான் நீ வந்த. உன் மேல இவன் கை வச்ச அப்புறமும் நான் சும்மா இருப்பேனா?”, என்று கேட்டவனின் காதல் சுசீலாவைத் தாலாட்டியது.