நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். Final episode
துரை சொல்வதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவித்தான் மாதவன்.
“என்னடா சொல்ற? என்னிக்கி அவள் என் பாக்கெட்டில் அதை பார்த்தாளாம்?”
“அன்னிக்கு மதுமிதாவை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிட்டு ரத்தக்கரையோட வீட்டுக்கு வந்த இல்ல. அன்னிக்கு நைட்டு ரத்தக்கறை படிந்த சட்டையை துவைக்கிறதற்காக லீலா கிட்ட கொடுத்தியே. அன்னிக்கி தாண்டா.
அவ கிட்ட கொடுத்துட்டு நாம எல்லோரும் தூங்கி விட்டோம். நான் தூக்கக்கலக்கத்தில் இருந்தப்போ அவள் என் கிட்ட வந்து உன் பாக்கெட்டில் ஏதோ இருக்குன்னு சொன்னாள். ஆனால் தூக்கக்கலக்கத்தில் நான் என்னனு கேட்காமல் அதை உன் பேக்கில் போட சொன்னேன். அவளும் போட்டிருக்கா.”
“அப்படியா? அப்போ….” என்று யோசித்தான் மாதவன்.
ஹாஸ்பிட்டலில் நர்s மதுமிதாவின் முதுகில் படிந்திருந்த ரத்தக் கறையை துடைப்பதற்கு அவளை சற்று தூக்கியபடி பிடித்துக் கொள்ளுமாறு மாதவனிடம் சொன்னார். மாதவன் அந்த படுக்கையில் உட்கார்ந்து கொண்டு மதுமிதாவை தன் மீது சாய்த்துக் கொண்டான். நர்s மதுமிதாவின் ஆடையை சற்று விலக்கி முதுகை துடைத்துக் கொண்டிருக்கும்போது மாதவன் நாசுக்காக பார்வையை வேறுப் பக்கம் திருப்பினான். நூர்ஸின் கவனம் அவளது முதுகை சுத்தமாக துடைப்பதில் இருந்தது. மாதவனின் பார்வை ஜன்னல் வழியாக தெரிந்த வாகனங்களில் இருந்தது. அப்போது மதுமிதாவின் நெக்லஸ் மாதவனின் சட்டைப்பையில் விழுந்தது. இதை மாதவன் கவனிக்கவில்லை. அதற்குப்பிறகு காவலாளிகள் வந்து மாதவனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பிறகு காவல் நிலையத்திலிருந்து அவன் வீடு வந்தான். வீடு வந்ததும் கரை படிந்த சட்டையை துவைப்பதற்காக வேலைக்கார பெண் லீலா இடம் கொடுத்தான். அப்போதுதான் லீலா அதனை பார்த்து துரையிடம் சொன்னாள். துரை மாதவனின் பையில் போட சொல்லவும் லீலா அப்படியே செய்தாள்.
சிறிது நேரம் யோசித்த மாதவன்
“டேய் துரை இப்ப தாண்டா எனக்கு ஞாபகம் வருது. அன்னைக்கு மதுமிதாவின் முதுகில் படிந்திருந்த ரத்தக்கறையை துடைக்க ஹெல்ப் பண்ண சொன்னாங்க. அதனால நான் மதுமிதாவை என் மேல சாய்த்து பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போ அவங்க அவளோட டிரஸ்சை லேசா கழட்டினாங்க. அதனால நான் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன். அப்போ ஏதோ என் மார்பில் லேசா குத்தற மாதிரி தோணுச்சு. அதுக்கு அப்புறம் பார்க்கலாம்ன்னு நினைத்தேன். ஆனால் போலீஸ் வந்து என்னை கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன் போயிட்டதால அந்த டென்ஷன்ல மறந்தே போயிட்டேன். அப்படி தான் இந்த நெக்லஸ் என் கிட்ட வந்து இருக்கும்.” என்றான்.
“சரிடா. எனக்கு இங்கே வேலை இருக்கு. நான் அப்புறம் கால் பண்றேன்.” என்று தொடர்பை துண்டித்தான் மாதவன்.
இதனை கேட்டுக் கொண்டிருந்த மதுமிதாவும் உண்மையை புரிந்து கொண்டாள். அதேநேரம் கீதா அவளை கைப்பேசியில் கூப்பிட்டாள்.
மதுமிதா அவளிடம் கோபமாக “ஏண்டி என்கிட்ட பொய் சொன்ன?” என்று கேட்க
கீதா “உனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சா ?”என்று ஆரம்பித்து திருவிழாவில் நடந்த மொத்த கதையையும் சொன்னாள்.
அதற்கும் மேலாக “கல்யாணத்துக்கு அப்புறம் மாதவன் மேல தப்பு இல்லைன்னு தெரியவந்தால் மாதவனை நீ ஏற்றுக் கொள்வாய்ன்னு தெரிந்ததுக்கு அப்புறம் தான் மாதவன் உங்க கல்யாணத்துக்கான ஏற்பாட்டை பண்ணினார். இப்படி உன்னோட சந்தோஷம் முக்கியம்னு யோசிச்சு முடிவு பண்ணி இருக்கார்.” என்று அவனைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லவும் மதுமிதாவின் மனம் இறங்கியது.
அவன் மீது இருந்த கோபம் பறந்தது.
மாதவன் காத்துக்கொண்டிருந்தான். சிறிதுநேரத்தில் டிரைவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதனை அடுத்து வந்து கொண்டிருந்த சேகரின் காரின் முன்பு தன் பைக்கை நிறுத்தினான் மாதவன். காரிலிருந்து இறங்கி வந்தான் சேகர்.
“யார் நீங்க என்ன வேணும்? எதுக்காக நடுரோட்டில் நின்னுட்டு இருக்கீங்க? என்று கேட்டான்.
பைக்கை எடுத்து ஓரமாக நிறுத்திவிட்டு சேகரிடம் வந்தான் மாதவன்.
“ சேகர் என்னை ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான் மாதவன்.
சிறிது நேரம் யோசித்த அவன் “ஞாபகம் வந்துருச்சு. அன்னிக்கி திருவிழாவில் என்னை அடிச்சவன் நீ தானே?” என்று கேட்டான்.
“ஆமாம் சேகர். அதுக்காக என்னை மன்னிச்சிடு. எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்.” என்று கேட்டான்.
“என்ன நல்லா அடி அடின்னு அடிச்சுட்டு ஹெல்ப் கேக்குறியே. உனக்கே இது ஓவரா இல்ல?” என்றான் சேகர்.
“சேகர் அது நடந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. இன்னுமா என் மேல கோபமா இருக்க? ப்ளீஸ் அதையெல்லாம் மறந்திடு. அன்னிக்கி கத்தி எடுத்து வீசியது நீதானே? அந்தக் கத்தி கூட அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பொண்ணு மேல பட்டதே. நான் கூட அந்த பொண்ண தூக்கிகிட்டு ஹாஸ்பிடல் போனனேனே.”
“ஆமா அதுக்கு என்ன இப்போ?”
“சேகர், அந்த பொண்ணை தான் நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கேன். அவள் நான் தான் கத்தியை எடுத்து வீசினதா தப்பா நினைச்சுகிட்டு இருக்கா. இதனால எங்களுக்குள்ள பிரச்சனை இருக்கு. நீ வந்து அவள் கிட்ட அந்த கத்தியை எடுத்து வீசியது நீன்னு ஒத்துக்கணும் ப்ளீஸ் சேகர். என்று மாதவன் அவனிடம் கெஞ்சினான்.
“என்னை பார்த்தா உனக்கு லூசு மாதிரி தெரியுதா? நான் எதுக்கு அப்படி வந்து சொல்லணும்? அப்புறம் உன் பொண்டாட்டி என் மேல கேஸ் போட்டா, நான் வெளிநாட்டுக்கு போக முடியுமா? என்னால முடியாது.” என்றான்.
“அவள் அப்படி எல்லாம் கேஸ் போட மாட்டாள். அதுக்கு நான் கேரண்டி. ப்ளீஸ் எனக்காக வந்து பேசு.” என்றான்.
ஆனால் அவன் இறங்கவில்லை.
அதற்குள் “என்ன சேகர்? தெரு முனையிலேயே காரை நிறுத்திவிட்டு யார் கிட்ட பேசிட்டு இருக்க?” என்று கேட்டபடி அங்கு ஒருவர் வந்தார்.
“ஒன்னும் இல்லை மாமா. சும்மா தான் வாங்க. நம்ம போகலாம்.” என்று அவருடன் சென்றான்.
இன்னும் சிலர் வர சேகரை எல்லோரும் சூழ்ந்துகொண்டனர்.
மாதவனால் அதற்குப் பிறகு சேகரிடம் முடியவில்லை.
மாதவன்
‘இப்போ என்ன பண்றது?’ என்று நினைத்தபடி நின்று கொண்டிருந்தான்.
அப்போது ஒரு லாரி அவனை நோக்கி வந்தது. அதனை கூட அவனால் உணரமுடியவில்லை.
‘எப்படி மதுமிதாவை சமாதானப்படுத்துவது?’ என்று யோசித்தவாறு நின்று கொண்டிருந்தான்.
லாரி ஓட்டுனரும் கைப்பேசியில் பேசிக்கொண்டு மாதனை கவனிக்காமல் வந்து கொண்டிருந்தான். லாரி மிக அருகில் வந்ததும் யாரோ மாதனை பிடித்து இழுத்தார். அதற்குப் பிறகு இருவரும் கட்டி பிடித்தபடி தரையில் புரண்டு கொண்டிருந்தனர்.
அவனை கட்டி பிடித்துக் கொண்டிருந்தது மதுமிதா தான்.
மாதவன், மதுமிதா அணைப்பில் இருந்தாள்.
“லாரி வர்றது கூட தெரியலையா? அப்படி என்ன யோசனை?” என்று கோபமாக அவன் மார்பினில் குத்தியபடி கண்ணீர் விட்டாள் மதுமிதா.
“என்னோட யோசனை எப்பவுமே உன்னை பத்தி தான். உன்னை எப்படி சமாதானப்படுத்துவதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.” என்றான் அவள் கண்களை துடைத்தபடி.
“சாரி மாதவன். நீங்க சொன்னதும் நான் உங்களை நம்பி இருக்கணும். இப்படி ப்ரூப் கேட்டு உங்களை கஷ்டப் படுத்தி இருக்கக்கூடாது. அம் ரியலி சாரி.” என்று அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.
“நான் உண்மையை தெரிஞ்சுகிட்டேன். இப்பதான் உங்களை நல்லா புரிஞ்சுகிட்டேன்.”
“எப்படி?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் மாதவன்.
“நீங்க துரை கிட்ட பேசினப்போ நான் கேட்டேன். அப்புறம் சேகர் கிட்ட பேசின போது கூட கேட்டேன்.”
“என்ன? என்ன சொல்ற?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் மாதவன்.
“ஆமாம் நீங்க போனை கட் பண்ணவே இல்ல. ஓ அப்படியா டென்ஷன்ல ஒழுங்கா கட் பண்ணல போல இருக்கு. அதுவும் நல்லதா போச்சு.”
“ஆனால் இப்பதானே அவன் பேசிட்டு போறான். அதுக்குள்ள நீ எப்படி இங்க வந்த?” என்று கேட்டான் மாதவன்.
“கீதா என்கிட்ட பேசினதும் என் மனசு மாறிடுச்சு. துரையை கூப்பிட்டுக்கிட்டு உங்களை பார்க்க வந்தேன். வரும்போது செல்போனில் நீங்க சேகர் கிட்ட பேசினதை கேட்டேன்.” .
“நல்ல வேளை நீ வந்த. இல்லனா இந்நேரம் அந்த லாரி என்னை….” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மாதவனின் வாயை பொத்தினாள் மதுமிதா.
“ரியலி ரியலி சாரி மாதவன்.”
“பரவாயில்லை மது. சிச்சுவேஷன் அப்படி அமைந்துவிட்டதால். நீ என்னை தப்பா எடுத்துக்கிட்ட. யாரா இருந்தாலும் அப்படிதான் எடுத்து இருப்பாங்க. இதுல உன்னோட தப்பு எதுவும் இல்லை.” என்றான் மாதவன் பெருந்தன்மையாக.
“டேய் போதும்டா. இது ரோடு. ரெண்டு பேரும் எழுந்து வாங்க. இதையெல்லாம் உங்க வீட்ல போய் வச்சுக்கோங்க.” என்று தரையில் கட்டிபிடித்தபடி படுத்து கொண்டிருந்த மாதவன் மதுமிதாவை எழுந்து வர சொன்னான் துறை
இருவரும் எழுந்து வந்தனர்.
“சரி வாங்கடா. வீட்டுக்கு போகலாம்.” என்று துரை வீட்டுக்கு அழைத்தான். அங்கு மதிய விருந்தை முடித்துவிட்டு திருச்சிக்கு இரவு 7 மணி அளவில் வந்து சேர்ந்தனர்.
“வந்துட்டீங்களா உங்கள தான் நாங்க எல்லோரும் எதிர் பார்த்துக் கொண்டே இருந்தோம். அவ்வளவு தூரம் போயிட்டு வந்தது டயர்டா இருப்பீங்க. சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு தூங்குங்க.” என்றார் பார்வதி.
இருவரும் சாப்பிட்டு விட்டு தங்கள் அறைக்கு வந்தனர்.
அறைக்குள் நுழைந்ததும் மதுமிதாவை இழுத்து மார்போடு அணைத்தான்.
“எல்லா பிரச்சனையும் தீர்ந்தது. என் மனதில் இருந்த பாரம் எல்லாம் கரைந்து போயிடுச்சு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கு.” என்றான் மாதவன்.
“ ஆமா. எனக்கும் இப்பதான் நிம்மதியா இருக்கு. என்கிட்டே நீங்க ஒதுங்கி போகும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா?” என்றாள் சோகமாக.
“எனக்கு தெரியும் மது. சாரி. இனிமேல் நீ கஷ்டப்படுற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.”
“நானும் நடந்துக்க மாட்டேன்.” என்றாள் மதுமிதா.
“சரி இப்படி பேசிகிட்டே இருந்தா பொழுது விடிந்து விடும்.”
“பரவாயில்லை.” என்றாள் அவள் லேசாக வெட்கப்பட்டு படி.
“என்ன பரவா இல்லையா? இனிமேலும் என்னால் ஒருநாள்கூட பிரம்மச்சரியம் இருக்க முடியாது. என்றவன் அதற்கு பிறகு பேசவேயில்லை. அவளையும் பேசவிடாமல் அவள் இதழை சிறை பிடித்து இருந்தான். இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் திறக்கப்படாத ஒரு புதிய அத்தியாயம் அன்று திறக்கப்பட்டது.
சுதாராணி, மலர், மதுமிதா மூவரும் ஒரே மாதிரி புடவையில் இருந்தனர் பார்வதி, மதுமிதா வாங்கிக்கொடுத்த பட்டு புடவையில் இருந்தார். ஆண்கள் அனைவரும் பட்டு வேட்டியும் சட்டையுமாக இருந்தனர்.
முருகையன், ஈஸ்வரி இருவரும் கடைக்குள் நுழைந்தனர். அனைவரும் “
வாங்க வாங்க” என்று அவரை அழைத்தனர்.
சிதம்பரம், வள்ளி இருவரும் அந்த கடையின் ஓரத்திற்கு ஒளிந்து கொண்டு சென்றனர்.
இவர்களை கவனித்த முருகையன் நேராக சிதம்பரத்திடம் வந்தார்.
“என்னடா நீ என்னை வான்னு கூப்பிட மாட்டியா?” என்று கேட்டார் . இன்ப அதிர்ச்சியில் சிதம்பரத்திற்கு பேச்சு வரவில்லை கண்ணீர் கண்களிலிருந்து வழிந்தது.
தன்னை சமாளித்துக் கொண்டு “அப்பா” என்று தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டார். வள்ளி ஈஸ்வரியை கட்டிப்பிடித்துக்கொண்டார்.
நால்வரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
மதுசூதன் “தாத்தா, பாட்டி.” என்று முதன்முறையாக அழைத்தான்.
அவனையும் ஆரத் தழுவினார் முருகையன். இதனைக்கண்ட அனைவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர் வந்தது.
“போதும் போதும். பாச மழை பொழிந்து இங்கே ஆறு ஓடிக்கிட்டு இருக்கு. நிறுத்துங்க. வெள்ளம் வந்துவிடப்போகிறது.” என்றாள் மதுமிதா.
“வாங்க வாங்க நேரமாச்சு. பூஜையை ஆரம்பிக்கலாம்.” என்று புரோகிதர் சொல்ல பார்வதி, அண்ணாமலை இருவரும் மனையில் அமர்ந்து பூஜையை ஆரம்பித்தனர் .
புரோகிதர் யாகம் நடத்திக்கொண்டிருந்தார்.
“நெய் தீர்ந்து போச்சு. யாரையாவது இன்னொரு டப்பா கொண்டு வர சொல்லுங்க.” என்று சொல்லவும்
பார்வதி “சுதா” என்று அழைத்தார்.
“என்ன?” என்று கேட்டபடி அங்கு வந்து நின்றான் மதுசூதன்.
அடுத்த நொடி “என்னம்மா?” என்று வந்து நின்றாள் சுதாராணி.
மற்றவர்கள் வியப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டு இருக்க……
சிதம்பரம் “நான் இவனை சுதான்னு கூப்பிடுவேன். அதனால்தான் பழக்க தோஷத்தில் அவனும் வந்து நிற்கிறான்” என்று விளக்கினார்.
அந்த விளக்கத்தை கேட்டதும் அனைவரும் சிரித்தனர்.
மதுசூதன் சுதாராணியை பார்த்து சிரித்தான். சுதாராணி அவனை பார்த்து சிரித்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் சில நிமிடங்கள் சுற்றுச்சூழலை மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
பெரியவர்கள் இவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆறுமுகம் அங்கு வந்து “என்ன சுதா? உன்னோட எஞ்சினை ஸ்டார்ட் பண்ணிட்ட போல இருக்கு.” என்று கேட்டதும்
அவள் “போங்கண்ணா.” என்று விட்டு அந்த இடத்தை விட்டு ஓடினாள்.
மற்றவர்கள் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். ஆறுமுகம் விளக்கம் கொடுக்க மற்றவர்களும் புரிந்து கொண்டு சிரித்தனர்.
முற்றும்