வீட்டுக்கு திரும்பி வரும் போது “இன்னும் எத்தனை நாள் போகணும் மாயா?”, என்று கேட்டான் சுமன்.
“அவ்வளவு தான். முடிஞ்சிருச்சு”, என்று மாயா வெட்கத்துடன் சொல்ல அன்று இரவு என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு உருவானது சுமனுக்கு. அதை அவன் கண்களில் கண்டவளுக்கும் வெட்கம் பீறீட்டது.
முகம் முழுவதும் சந்தோசத்துடன் உள்ளே நுழைந்தான் சுமன். அவனுக்கு குறையாத சந்தோஷமும், அதற்கும் அதிகமான வெட்கமும் கொண்ட முகத்துடன் அவன் பின்னே உள்ளே வந்தாள் மாயா.
இருவரையும் அப்படி ஒரு நிலையில் பார்த்து சுசீலா மற்றும் யுவனுக்கு நிம்மதியாக இருந்தது. அவர்களைப் பார்த்து சிரித்து விட்டு தங்களின் அறைக்கு ரெஃப்ரெஷ் ஆகச் செல்ல அவனை நிமிர்ந்து பார்க்கவே மாயாவுக்கு வெட்கம் வந்தது.
அவள் வெட்கத்தை ரசித்த படியே அவன் உடை மாற்ற ஆரம்பிக்க மாயா குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அதே நேரம் “ரொம்ப சந்தோஷமா இருக்கு யுவன் அவங்களை அப்படி பாக்க”, என்றாள் சுசீலா.
“எனக்கும் அப்படி தான் சுசீ. மாயா மனசு மாறுவான்னு நான் கனவுல கூட நினைக்கலை. அவ முகத்துல இருக்குற சந்தோஷம் அவ்வளவு அற்புதமானது சுசீ. எல்லாத்துக்கும் நீ தான் காரணம். ரொம்ப தேங்க்ஸ்”, என்று நெகிழ்ந்து விட்டான்.
அந்த நொடி சுசீலாவின் கண்களில் கண்ணீர் வந்தது. “சுசீ என்ன ஆச்சு?”
“அஸ்வதி நினைவு வந்துருச்சு யுவன். அவளும் கல்யாணம் அப்ப இப்படி தான் சந்தோஷமா இருந்தா. ஆனா அவ வாழ்க்கை இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை. என்னை எப்பவாது அவளைப் பாக்க கூட்டிட்டு போறீங்களா?”
“கண்டிப்பா கூட்டிட்டு போறேன். உனக்கு அவ மேல வெறுப்பு வரலையா? அவளோட அம்மா அப்பா செஞ்சதை நினைச்சு”
“அவங்க பண்ணினதுக்கு அவ என்ன பண்ணுவா பாவம்? அவங்க பண்ணின பாவம் தான் இவ தலைல விடிஞ்சிருச்சோ என்னவோ? அத்தை மாமா என்ன பண்ணுறாங்க, எப்படி இருக்காங்கன்னு தகவலே தெரியலை”
“உனக்கு அவங்களை பாக்க போகணும் போல இருக்கா?”
“அப்படி இல்லை. ஆனா ஒரு தடவை வீட்டுக்கு போகணும். என்னோட அம்மா அப்பா போட்டோ, செர்டிபிகேட் எல்லாம் எடுக்க போகணும்னு தோணுது”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுமன் அங்கே வந்தான்.
சிறிது நேரத்தில் மாயாவும் அங்கே வர அப்போது சுமன் கையில் பிளைட் டிக்கட்டைக் கொடுத்தான் யுவன். அனைவரும் அதை வியப்பாக பார்த்தார்கள். சுசீலாவும் தான்.
“பையா என்ன இது?”, என்று கேட்டான் சுமன்.
“பாரின்க்கு பிளைட் டிக்கட். இன்னைக்கு தான் உங்களுக்கு மும்பைல லாஸ்ட் டே. ஒரு மாசம் நீங்க எங்க எங்க சுத்திப் பாக்கணும் அப்படிங்குற லிஸ்ட் இதுல இருக்கு. ஒரு மாசத்துக்கும் மேல சுத்தி பாக்கணும்னா ஒரு போன் பண்ணு. எக்ஸ்டெண்ட் பண்ணிக்கலாம். உங்களுக்கு போர் அடிச்ச அப்புறம்….போர் அடிக்காது தான். இருந்தாலும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ கழிச்சு போன் பண்ணு. என்ன பண்ணணும்னு சொல்றேன். அப்புறம் இந்தா கார்ட். எவ்வளவு வேணும்னாலும் செலவு பண்ணு. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்”, என்று யுவன் சொன்னதும் சுமனுக்கு திகைப்பு தான்.
சுமன் எதுவோ மறுத்து பேச வரும் போது அவனை அமைதியாக இருக்கச் சொல்லி சைகை செய்த யுவன் “மாயா போய் டிரெஸ்ஸ் பேக் பண்ணு. சுசீயை ஹெல்ப்க்கு கூட்டிட்டு போ”, என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தான்.
“பையா இதெல்லாம் எதுக்கு பையா? வேண்டாமே?”, என்றான் சுமன்.
“உனக்கு புரியலை சுமன். நீ உன்னோட இடத்துல இருந்து பாக்குற. கொஞ்சம் மாயாவை நினைச்சு பாரு. அவளுக்கு இந்த இடம் வேண்டாம். அவ வாழ்க்கையே பரி போனதா நினைச்ச இடத்துல உங்க வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டாம். எடுக்கும் யோசிக்காத. இது வரைக்கும் உன்னோட வாழ்க்கைல நடந்ததை கூட இனி யோசிக்காத. இந்த மும்பை உன்னோட மனசுல எங்கயும் இருக்க கூடாது. நீங்க எங்க போனாலும் அங்க தங்குறதுக்கு நான் ஏற்பாடு பண்ணிட்டேன். ரெண்டு மாசம் கழிச்சு என்ன வொர்க் பண்ணலாம்னு சொல்றேன் ஓகே வா?”
“இங்க எல்லாத்தையும் யார் பாத்துக்குவா? ரெட்டி செத்துப் போனதுனால நாம விட்ட போதைப் பொருள் கடத்தல் தொழில் எல்லாம் நம்ம கிட்ட வருது. திடீர்னு அதை நிறுத்துனோம்னா நம்ம மேல சந்தேகம் வரும். நம்மளை விடவும் மாட்டாங்க. இது புலி மேல சவாரி செய்யுற மாதிரி பையா. தனியா எப்படி ஹேண்டில் செய்வீங்க?”
“நம்ம இந்த தொழிலை எடுத்து பண்ணுனதே ரெட்டியை முடிக்கத் தான். அவனே போய்ட்டான். இனி யாருக்கு பயப்படனும். இந்தியா குள்ளயே நாம இருக்க போறது கிடையாது”
“அப்ப நீங்களும் பாரின் வருவீங்களா?”
“ஆமா”
“பையா நிஜமாவா? என்னால நம்பவே முடியலை”
“சுசீலாவுக்காக தான். எனக்கும் அவளுக்கும்….”
“தெரியும் பையா. ரெண்டு பேரும் பெர்பெக்ட் கப்புள்”
“ஹிம், அவளுக்கு இந்த நிழல் உலகம் வேண்டாம் சுமன். அவ இங்க இருந்தா நிம்மதியா இருக்க மாட்டா. நம்மளோட பாஸ்ட் என்னையும் அவளையும் துரத்தும்”
“நல்ல விஷயம் தான் பையா. ஆனா இங்க…”
“எல்லாமே கேசவ் பாத்துக்குறேன்னு சொல்லிட்டான். அவனுக்கு இங்க பிடிச்சிருக்காம். ஒரெடியா விட தான் சொன்னேன். ஆனா மாட்டேன்னு சொல்லிட்டான். நம்ம தொழிலை அவனை கண்டிப்பா செய்ய விட மாட்டேன். என்ன செய்யலாம்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன். அப்புறம், நீ சந்தோஷமா இருக்கணும். மாயாவையும் நல்லா பாத்துக்கோ”, என்று அட்வைஸ் செய்தவன் மற்ற விவரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தான்.
அன்று மாலை மாயாவும் சுமனும் கிளம்பியதும் அவர்களை வழியனுப்ப யுவனும் சுசீலாவும் கிளம்பினார்கள். கேசவ் மற்றும் அனைத்து நண்பர்களிடமும் சொல்லி விட்டு மாயாவுடன் கிளம்பினான் சுமன்.
ஏர்போர்ட் வந்ததும் மாயா யுவனைக் கண்டு அழுதாள்.
அவள் கண்ணீரைத் துடைத்து விட்ட யுவன் “மாயா என்ன இது? சின்ன குழந்தை மாதிரி பிகேவ் பண்ணக் கூடாது”, என்று அவளுக்கு ஆறுதல் சொன்னவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“எனக்கு உண்மைலே ஒரு அண்ணா இருந்தா கூட இந்த அளவுக்கு எனக்காக செஞ்சிருப்பானான்னு தெரியலை பையா”, என்று சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் வர விமான அறிவிப்பும் வந்தது.
போகும் போது சுமன் சுசீலாவிடம் கண்களால் விடை பெற மாயா அவளையும் கட்டி அணைத்துக் கொண்டாள். அவர்கள் உள்ளே சென்றதும் சுசீலாவின் கை பிடித்த படி வெளியே அழைத்து வந்தான் யுவன்.
காரில் ஏறிய பின்னரும் இருவருக்குள்ளும் மௌனமே தொடர்ந்தது. அந்த மௌனத்தை முதலில் கலைத்தது யுவன் தான்.
“என்ன யோசனை சுசீ?”
“ஒண்ணும் இல்லை, சும்மா தான்”
“இப்படி சொல்றதுலே ஏதோ இருக்குனு தோணுது. மாயா ஊருக்கு போறதைப் பாத்து உனக்கும் போகணும்னு தோணுச்சா?”
“அப்படித் தோணலை. ஆனா அது சம்பந்தமா ஒரு யோசனை தான்”
“நல்லா குழப்புற. என்னன்னு என்கிட்ட சொல்லக் கூடாதா?”
“சொன்னா நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியலை. என்னைத் தப்பா எடுத்துக்கவும் வாய்ப்பு இருக்கு”
“பீடிகை பலமா இருக்கு. அப்படி என்ன யோசிச்ச?”
“கண்டிப்பா நீங்க தப்பா எடுத்துக்க கூடாது. நான் என்ன மீனிங்க்ல சொல்றேன்னு புரிஞ்சிக்கணும் ஓகே வா?”
“கண்டிப்பா தப்பா நினைக்க மாட்டேன். நீ சொல்றது என்ன அர்த்தம்னு புரியலைன்னா கூட உன்கிட்ட விளக்கம் கேட்டுக்குறேன் போதுமா?”
“ஹிம், நீங்க இங்க பெரிய ஆள். பையா பையான்னு நிறைய பேர் உங்களை மரியாதையா வச்சிருக்காங்க. நிறைய நல்லது பண்ணுறீங்க. உங்களை நம்பி நிறைய பேர் இருக்காங்க”
“ஏய், ஏதோ திட்டப் போறேன்னு பாத்தா புகழ்ந்து தள்ளிட்டே வர?”
“சொல்றதை முழுசா கேளுங்க யுவன். உங்களை நினைச்சு எனக்கு ரொம்ப பெருமை தான். அதுவும் யுவனோட மனைவிண்ணு ஒரு அங்கீகாரம் கிடைக்குறது ரொம்ப பெரிய விஷயம். அதை நான் மதிக்கவும் செய்றேன்”
“எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியலை. சீக்கிரம் சொல்லுங்க மாமி”
“நமக்கு கல்யாணம் ஆனப்புறம்….”
“கல்யாணம் ஆனப்புறம்…. என்ன மா?”
“நாம கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் குழந்தை பெத்துக்காம வேற குழந்தையை தத்து எடுத்துக்குவோமா? அதுவும் ஒரு குழந்தையை இல்லை. நிறைய பேரை. ஒரு பெரிய ஹோம் மாதிரி குழந்தைகளுக்குனு உருவாக்கிக்கலாமா?”, என்று கேட்டதும் அவனுக்கு திகைப்பு தான்.
“ஒரு வேளை என்னோட குழந்தை இந்த உலகத்துக்கு வரக் கூடாதுன்னு நினைக்கிறாளோ?”, என்று யோசித்தவன் “எனக்கு புரியலை சுசீ. கண்டிப்பா நாம நீ சொன்ன மாதிரி செய்யலாம். ஆனா ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?”, என்று கேட்டான்.
“இல்லை… அது வந்து… நாம இங்க தான் இருக்க போறோம். நாளைக்கு நம்ம குழந்தைங்க வந்தா யாராவது அவங்க கிட்ட உங்க அப்பா என்ன வேலை செய்றார்னு கேப்பாங்க. நம்ம குழந்தைகளால எல்லார் கிட்டயும் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியுமா? நம்ம நிழல் அவங்க மேல தொடர வேண்டாமே”, என்று இழுத்தவள் அவன் தவறாக எண்ணி விட்டானோ என்று அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தவன் “இவ்வளவு வேலை செய்றவன் நம்ம வாழ்க்கையைப் பத்தி யோசிக்க மாட்டேனா? அதுக்கு நான் ஒரு வழி வச்சிருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு உன்கிட்ட அது என்னன்னு சொல்றேன். அப்புறம் எத்தனை பிள்ளைங்களை தத்து எடுத்துக்கிட்டாலும் எனக்கு உன்னை மாதிரி ஒரு குட்டி சுசீலா வேணும். எங்க அம்மா எனக்கு மகளா வந்து பிறக்கணும்”, என்று சொன்னதில் அவள் நெகிழ்ந்து தான் போனாள்.
கண்டிப்பாக அவன் ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கையில் மௌனமாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். இருவருக்குள்ளும் பேச்சுகளற்ற அந்த மௌனம் கூட இனிமையானதாக இருந்தது.
பிளைட்டில் அருகருகே அமர்ந்திருந்த சுமனும் மாயாவும் கூட ஏதோ யோசனையிலே இருந்தார்கள். “என்ன ஆச்சு மாயா? உனக்கு இந்த டிரிப் பிடிக்கலையா? வீட்டுக்கு போகணும் போல இருக்கா?”, என்று கேட்டான் சுமன்.
“அப்படி எல்லாம் இல்லை. ஆனா பையாவை ரொம்ப மிஸ் பண்ணுறேன். கொஞ்ச நாள் ஆனாலும் சுசீலா என்கூட ரொம்ப ஒட்டிக்கிட்டாங்க. அதான் அவங்களை பாக்காம இருக்குறது கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறேன்’
“இவ்வளவு தானா? கவலையே படாதே. நாம டூர் முடிஞ்சு வரும் போது அவங்களும் நம்ம கூட பாரீன்ல தான் தங்குவாங்க”
“என்ன சொல்றீங்க நீங்க?”
“ஆமா. பையா, சுசிலாவை அழைச்சிட்டு நம்ம கூட தான் இருப்பாங்க. இங்க வந்ததும் நாம தான் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்”
“சுமன் நீங்க உண்மையா தான் சொல்றீங்களா? சுசீலா கூட கல்யாணம்”
“உனக்கு தெரியாதா அவங்க ரெண்டு பேரும் விரும்புறது?”
“ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்களா?”, என்று கேட்டு சந்தோசத்தில் துள்ளிக் குதித்தாள் மாயா.
“மாயா இது பிளைட்”, என்று சொல்லி சுமன் தான் அவளை அடக்கி வைத்தான்.
சந்தோஷமாக சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள் மாயா. “சீட்ல தான் சாயணும்னு இல்லை. பக்கத்துல என்னோட தோளும் சும்மா தான் இருக்கு”, என்று சிரிக்காமல் சுமன் சொல்ல புன்னகையோடு அவன் தோள் சாய்ந்தாள் மாயா.
காதல் தொடரும்….