அத்தியாயம் 17
நம் நினைவுகள் நமக்குள்
இருக்கும் வரை பிரிவு
என்பது இல்லவே இல்லை
நம் காதலுக்கு!!!
இரண்டு நாள்கள் பயணம் முடிந்து புது இடத்தில் கால் எடுத்து வைத்தார்கள் சுமனும் மாயாவும். புது நாடு, புது மொழி என்று ஆர்வமாக வேடிக்கை பார்த்த படியே யுவன் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு வந்தார்கள்.
உள்ளே சென்றதும் இருவருக்கும் நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. அன்றே அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க சென்றார்கள்.
மனதில் இருந்த பழைய கழிவுகள் எல்லாம் அகன்று புது மாயாவாக மிணுங்கினாள். ஆனால் சுமனுக்கு தான் பயமாக இருந்தது. வெளியே சுற்றிப் பார்க்க போகும் போது, சாப்பிடும் போது என்று அவள் நெருக்கமாக அவனுடன் இருக்க அவளுடைய நெருக்கம் அவனுக்கு பயத்தைத் தான் கொடுத்தது.
அவள் நெருக்கத்தில் சிறிது சிறிதாக அவனுடைய மனம் அவளை அதிகமாக நாட ஆரம்பித்தது. அது எல்லையைக் கடந்து அவன் அவளை நெருங்கும் போது மாயாவின் நிலை எப்படி இருக்குமோ என்ற பயம் அவனுக்கு ஒவ்வொரு நொடியும் இருந்து கொண்டே இருந்தது.
அன்று பகல் முழுவதும் ஊரைச் சுற்றி விட்டு அன்று மாலை அறைக்கு வந்து குளித்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். தோழமையோடு பேசும் சுமனை ரசித்தாள் மாயா. பின் இரவு உணவை முடித்தவர்கள் படுக்க செல்ல அப்போது தான் இருவருக்கும் தயக்கம் ஆரம்பித்தது.
மாயா எப்படி அவனை மேலே படுக்க சொல்ல என்று தெரியாமல் திகைத்த படி இருக்க அவளுடைய அனுமதி இல்லாததால் சுமன் கீழே படுக்க போனான். இருவருக்குள்ளும் தோழமை இருந்தது தான். ஆனால் அதைக் கடந்து யார் முதல் அடி எடுத்து வைக்க என்று இருவருக்குமே தயக்கம் வந்தது.
அவன் போர்வையை விரித்து படுக்க தயாராகவும் “கட்டில் பெருசு தான். கீழ எல்லாம் வேண்டாம்”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொல்லி விட்டாள்.
அவளை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே “இல்லை மாயா. எப்பவும் போல கீழயே படுக்குறேன்”, என்றான் சுமன்.
அவள் அவனை முறைத்துப் பார்க்கவும் அடுத்த நொடி அவள் அருகில் தயக்கத்துடன் தான் படுத்தான். ஆனாலும் அவளை எதிர்க் கொள்ள முடியாமல் அவளுக்கு முதுகு காட்டி அவன் படுத்திருக்க மாயாவுக்கு தான் அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை.
அவனுக்கே தயக்கம் இருக்கும் போது அவளுக்கு இருக்காதா? திரும்பி அவள் முகத்தைப் பார்த்தாலாவது அவள் உணர்வை அவனிடம் காட்டியிருப்பாள். அவனாக நெருங்க வேண்டும் என்று அவள் எதிர் பார்க்க அவனோ அவள் பக்கம் திரும்பவே இல்லை.
“உனக்காக பயந்து தான் டி அவன் விலகி இருக்கான். இதுக்கு மேல நீ தயக்கம் காட்டணுமா? நீயே பேசு போ”, என்று அவள் மனசாட்சி எடுத்துரைக்க தயக்கத்துடன் அவனை நெருங்கினாள்.
கட்டில் அசைவதிலே அவள் நெருங்குவது புரிந்து எச்சில் விழுங்கினான் சுமன். அவனை நெருங்கி அவன் முதுகோடு ஒட்டி படுத்தவள் அவன் வயிற்றில் கையை போட்டாள்.
அதை எதிர்பார்க்காமல் அவன் உடல் விறைத்தது. அவனுடைய உணர்வுகள் விழித்துக் கொள்ள ஆரம்பித்தது, ஆனாலும் அவள் மனநிலையை கருத்தில் கொண்டு “மாயா பிளீஸ், இப்ப எதுவும் வேண்டாமே. கொஞ்ச நாள் ஆகட்டும் டா”, என்றான்.
தான் இவ்வளவு தூரம் நெருங்கி வந்தும் அவன் விலகுவது அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. “ஏன் என்ன ஆச்சு?”, என்று ஒரு வித இயலாமையில் கேட்டாள்.
“இல்லை என்னையே அறியாம உன்னைக் கஷ்டப் படுத்திருவேனோன்னு பயமா இருக்கு மா”, என்று அவன் மென்மையாக உரைக்க அவனை தன் பக்கமாக இழுத்தாள். உடனே அவள் புறம் திரும்பி படுத்தான். அடுத்த நொடி அவன் மார்பில் முகம் புதைத்து அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.
அவன் அப்போதும் அமைதியாக படுத்திருக்க வெட்கத்தை விட்டு அவன் கையை எடுத்து தன்னுடைய இடுப்பில் போட்டுக் கொண்டாள்.
அதற்கு மேல் அவளிடம் இருந்து ஒதுங்கி இருக்க முடியாமல் அவள் இடுப்பில் பதிந்த அவன் கைகள் மேலும் அழுந்தி பதிந்தது. அந்த அழுத்தத்தில் அவள் அவனை இன்னும் நெருங்க இருவருக்கும் காதல் நெருப்பு அழகாக பற்றிக் கொண்டது.
ஒரு கட்டத்தில் சுமன் அவளுக்கு நெருக்கமாக மாற திடீரென்று மாயாவுக்கு பழைய நினைவுகள் பேயாட்டம் போடத் துவங்கின. அவள் திகைப்பை அவள் உடல் மொழியில் உணர்ந்தானோ என்னவோ “மாயா, பிடிக்கலையா மா? நான் விலகிறவா?”, என்று மென்மையாக கேட்டதும் அவன் குரல் கேட்டு நிகழ்காலத்துக்கு வந்தாள் மாயா.
மனதை ஒரு நிலைப் படுத்தி டாக்டர் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்து தன்னை தைரியப் படுத்த ஆரம்பித்தாள்.
“அந்த கேவலமான மிருங்கங்கள் தொட்டது உன்னோட உடலை தான் மா. உன்னோட ஆன்மாவையோ மனசையோ இல்லை. அது ஒரு கெட்ட கனவு. அதை நினைக்கிறதே பாவம். அதை நீ நினைச்சா உன்னோட மனசை நீயே அழுக்காக்கிற மாதிரி”, என்று டாக்டர் சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தது.
சுமனும் அவளை மென்மையாக ஆட்கொள்ள ஆரம்பிக்க அவள் மனதில் சுமன் மட்டுமே மையம் கொள்ள ஆரம்பித்தான்.
அவன் கண்கள் அவளையே அனுமதிக்காக பார்த்திருக்க அந்த பார்வை, அவளுக்கு இதமான உணர்வை கொடுத்தது. கூடவே அவனுடைய மென்மையான வருடல்கள் அவளுக்குள் ஒரு வித எதிர்பார்ப்பை உருவாக்கியது.
அவள் கன்னத்தை அவன் கைகள் வருட கண் மூடி அவன் தொடுகையை ரசித்தாள் மாயா,
மெய் மறந்து போயிருந்த அவளின் தோற்றம் அவனுக்குள் காதலை பீரிட்டு எழ வைக்க அவன் கைகள் உயர்ந்து அவள் நெற்றி, கண்கள், கன்னம், காது மடல் என்று வருட ஆரம்பித்தது.
அவன் தொடுகையில் அவள் சிலிர்த்து போய் நிற்க அவன் கை ஊர்வலம் போன இடத்தில் எல்லாம் அவன் இதழ்கள் பயணித்தது.
நெற்றி, கன்னம், காது என்று முத்தமிட்டவன் இறுதியாக அவள் இதழ்களைச் சிறை செய்ய எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவன் முத்தத்தை ஏற்றுக் கொண்டாள் மாயா.
இதழ்கள் உரசிக் கொண்டிருக்கும் வேளையில் அவள் கைகள் உயர்ந்து அவன் கழுத்தில் மாலையாக கோர்த்தன.
அவளுடைய எதிர்ப்பில்லா நிலை அவனை மேலும் முன்னேற வைத்தது. காம வெறியோடு அல்லாமல் காதலோடு அவளை ஆட்கொண்ட சுமன் சிறிதளவு கூட அவளை கஷ்டப் படுத்தாமல் பார்த்துக் கொண்டான். அவன் கைகளுக்குள் கரைந்து காணாமல் போனாள் மாயா. அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அந்த தம்பதிக்கு அழகான நாட்களாக அமைந்து போனது.
இங்கே யுவனோ ஏற்கனவே செய்து கொண்டிருந்த அனைத்து தொழில்களையும் நிறுத்த ஆரம்பித்தான். போதை கடத்தல் தொழிலை ரெட்டிக்கு பிறகு அவன் தான் செய்ய வேண்டும் என்று அவனுக்கு மிரட்டல்களும் வர ஆரம்பித்தது. ஆனால் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் அவர்களை எதிர்க் கொண்டான்.
மும்பையில் இருக்கும் தன்னுடைய அனைத்து அடையாளங்களையும் அழிக்க ஆரம்பித்தான். கேசவுக்கு முதலில் யுவனின் செய்கைகள் அனைத்தும் திகைப்பாக இருந்தாலும் எந்த கேள்வியும் கேட்காமல் யுவனுக்கு பக்க பலமாக இருந்தான்.
பின் ஏற்கனவே இழுபரியாக இடந்த ஒரு பதப்படுத்தும் தொழிற்சாலையை வாங்கி அதில் சில வேலைகள் செய்து அங்கே புதிதாக வேலையை ஆரம்பித்தான்.
கடலில் இருந்து கிடைக்கும் மீன், நண்டு, இறால் போன்ற பொருள்களை பதப்படுத்தி வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வேலையை கேசவ் தலைமையில் ஆரம்பித்தான். அதே நேரம் அந்த பொருள்களை இறக்குமதி செய்ய லண்டனில் உள்ள ஒரு கம்பெனியோடு பார்ட்னராக மாறி வேலை செய்ய ஆரம்பித்தான்.
அனைத்து வேலைகளும் மிக வேகமாக நடந்தன. ஏற்கனவே பல வியாபாரிகளுக்கு அவன் அறிமுகம் என்பதால் அவனால் இதை எளிதாக செய்ய முடிந்தது. சுசீலா தான் நேரம் போகாமல் வீட்டையே சுற்றிக் கொண்டிருந்தாள்.
ஒரு மாதம் திகட்ட திகட்ட தேனிலவை அனுபவித்து விட்டு “நாங்க இப்ப என்ன செய்யணும் பையா?”, என்று சுமன் கேட்க அவர்களை இன்னும் ஒரு மாதம் சுற்றிப் பார்க்கச் சொன்னான்.
அந்த மாதமும் முடிந்த பின்னர் லண்டனில் சுமனையும் மாயாவையும் ஒரு வீட்டில் குடி வைத்து அந்த இறக்குமதி தொழிற்சாலையை பார்த்துக் கொள்ளச் சொன்னான்.
“பையா இது யார் கம்பெனி?”, என்று கேட்டான் சுமன்.
“நாம எல்லாரும் இந்த கம்பெனியோட ஓனர் தான் சுமன். நம்ம பார்ட்னர் அமெரிக்கால இருக்குறார். அவருக்கு எல்லாம் நாட்டிலயும் இந்த தொழில் ஆரம்பிக்க ஆசை. லண்டன்ல அவர் கூட சேந்து தான் நாம செய்ய போறோம். அவர் பணம் மட்டும் தான் தருவார். மத்த படி எல்லாமே நம்ம கம்பெனி தான். இனிமே நாம அங்க தான் வேலை பாக்க போறோம். நமக்கு தேவையான பொருளை எல்லாம் கேசவ் மும்பைல இருந்து பொறுப்பா அனுப்பி விடுவான்”, என்று சொன்னதும் சுமனுக்கு நிம்மதியாக இருந்தது.
“இங்க பாரு சுமன். மும்பைல இன்னும் வேலை சரியா முடியலை. அதனால கேசவ் கொஞ்சம் செட்டில் ஆகுற வரைக்கும் நான் இங்க இருந்து தான் ஆகணும். அது வரைக்கும் நீ அங்க பொறுப்பா பாத்துக்கோ. கூடவே மாயாவையும் பாத்துக்கோ. அப்புறம் இன்னொரு விஷயம். நம்ம ஹோம் இருக்குற இடத்தை மாத்திட்டேன்”
“என்ன பையா சொல்றீங்க? அங்க இருந்தவங்க எல்லாம் இப்ப எங்க இருக்காங்க? ஏன் திடீர்னு?”
“எல்லாருமே இப்ப நம்ம வீட்டுக்கு வந்துட்டாங்க சுமன். யுவனோட கோட்டை இனிமே கை விடப் பட்டவர்களின் இல்லமா மாறிருச்சு. ஏற்கனவே இருந்த செக்யூரிட்டியை அவங்களுக்காக இன்னும் அதிகப் படுத்திருக்கேன். கேசவ் எல்லாத்தையும் பொறுப்பா பாத்துக்குறேன்னு சொல்லிட்டான்”, என்று சொல்லி போனை வைத்தான்.