நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மதுமிதா திருவிழாவில் நடந்த எல்லாவற்றையும் சாவகாசமாக ஒரு நாள் பிறந்த வீட்டினரும் புகுந்த வீட்டினரும் கூடியிருக்கும் போது கதை கதையாக சொன்னாள். இதனைக்கேட்ட புகுந்த வீட்டினர் ஆச்சரியப்பட்டனர். ரூபாவை அவன் விரும்பவில்லை என்று புரிந்து கொண்டனர்.
இதனைக்கேட்ட வள்ளி “கடைசியில எங்க அம்மாவோட நகை நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்க கிட்ட தான் இருந்திருக்கு. அப்பவே எங்க அம்மாவோட ஆசிர்வாதம் மாப்பிள்ளைக்கு கிடைச்சிருக்கு.” என்று சொல்லி பூரித்துப் போனார். மற்றவர்கள் அவர் சொன்னதை ஒத்துக் கொண்டனர்.
அந்த நீண்ட கோவில் தெருவின் சாலை ஓரங்களில் வரிசையாக பல கடைகள் முளைத்திருந்தன. குழந்தைகள் விளையாடும் மன்னால் செய்த சின்னச்சின்ன அழகிய சொப்பு சாமான்கள் முதல் பெரிய பெரிய பாத்திரங்கள் வரை வெவ்வேறு கடைகளில் விற்கப்பட்டன. கண்ணாடி, பிளாஸ்டிக், அலுமினியம் வளையல்கள், தோடுகள், சங்கிலிகள் பல வண்ணங்களில் ஒரு கடையில் மின்னின. அவற்றை பெண்கள் எடுத்து கையில் அணிந்து பார்த்து தேர்ந்தெடுக்கும் பொழுது அந்த வளையல்கள் எழுப்பிய மெல்லிய ஓசை ஒரு இனிய சங்கீதமாக காதில் விழுந்தது. முல்லை, குண்டுமல்லி, ஜாதி மல்லி, கனகாம்பரம், காக்கட்டான், தாழம்பூ, மரிக்கொழுந்து, சாமந்தி, பூக்களால் கட்டியிருந்த பல வண்ண மாலைகள் ஒரு இனிய நறுமணத்தை பரப்பியது. ஆங்காங்கே ராட்டினங்கள் மக்களை ஏந்திக்கொண்டு சுழன்று கொண்டிருந்தன. குழந்தைகளின் சிரிப்பு சத்தமும் பெண்களின் சிரிப்பு சத்தமும் சேர்ந்து ஒலித்து அந்த இடத்தை ரம்யா மாக்கி கொண்டு இருக்கும் மாலைப்பொழுது அது. இன்னும் பற்பல கடைகள் பல பொருட்களை ஏந்திக்கொண்டு விற்பனைக்காக காத்திருந்தன.
முருகன் வள்ளி தெய்வானை உடன் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் கோயிலில் திருவிழா நடந்து கொண்டிருந்தது.
மாதவன் கோவில் வாசலில் நின்றுகொண்டு யாரையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.
“அப்பா” என்று அழைத்தபடி அவனிடம் ஓடிவந்தான் குங்கும நிற சட்டையும் பட்டு வேஷ்டியும் அணிந்திருந்த நான்கு வயது சிறுவன் ஒருவன்.
மாதவன் “என்னடா சஞ்சய்?” என்று கேட்டபடி அவனை தூக்கி கொண்டான்.
“தாத்தா பாட்டி வந்துட்டாங்களா?”
“இன்னும் இல்லைடா. அவங்களை தான் எதிர் பார்த்துக்கிட்டு இருக்கேன்.”என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே சிதம்பரத்தின் கார் அங்கு வந்து நின்றது.
காரைப் பார்த்ததும் சஞ்சய் “ஐயா தாத்தா, பாட்டி வந்துட்டாங்க.” என்று கத்தினான்.
சிதம்பரம், வள்ளி முருகையன், ஈஸ்வரி உடன் தஞ்சாவூரில் வாழ்கின்றனர். மதுசுதன் சுதாராணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் தனிக்குடித்தனம் இருக்கின்றான். இருவரும் இரண்டு வயது மகன் தருணுடன் பண்டிகை, திருவிழா நாட்களில் தஞ்சாவூர் மற்றும் திருச்சிக்கு வருவார்கள். எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடி விட்டு சென்னைக்கு திரும்புவார்கள்.
காரிலிருந்து முதலில் மதுசூதன் இறங்கினான்.
இறங்கியவன் முருகையன் இறங்குவதற்கு கை கொடுத்தான்.
பின்பு அவரை கை பிடித்து அழைத்து வந்தான்.
இரண்டாவதாக சுதாராணி இறங்கி ஈஸ்வரி இறங்குவதற்கு உதவி அவரை கைபிடித்து அழைத்து வந்தாள்.
மாதவன் “வாங்க மாப்பிள்ளை” என்று மதுசூதனையும்
“வா சுதா.”என்று தங்கையையும் வரவேற்றான்.
கோயிலுக்குள் நுழைந்த சுதாராணி சஞ்சய் கண்ணத்தில் ஒரு முத்தமிட்டாள். “உன்னோட டிரஸ் சூப்பரா இருக்கு.” என்றாள்.
“தருண் தம்பி எங்க?” என்று கேட்டான் சஞ்சய்.
“தருண் தம்பி பாட்டி மடியில் தூங்கிட்டு இருக்கான். இப்போ வருவான்.” என்று கூறினாள் சுதாராணி.
சஞ்சய் ஆவலாக காரை பார்த்தான். அப்போது காரில் இருந்து சிதம்பரம் இறங்கினார். இறங்கியவர்
பேரக்குழந்தை தருணை வள்ளி இடமிருந்து வாங்கினார்.
பிறகு வள்ளி காரிலிருந்து இறங்கி வந்தார்.
“வாங்க மாமா, அத்தை.” என்று மாதவன் வரவேற்க இருவரும் கோயிலுக்குள் நுழைந்தனர்.
சஞ்சய் சிதம்பரத்திடம் “தருண் தம்பி தூங்கிட்டு இருக்கானா?” என்று கேட்டார்.
“ஆமாம் சஞ்சய். சஞ்சனா பாப்பா எங்கே?” என்று கேட்டார் சிதம்பரம்.
“ சஞ்சனா பாப்பா, அதித்தி அக்கா, ஆதித்யா அண்ணன் கூட விளையாடிட்டு இருக்கா .”
“ஓ அப்படியா சஞ்சய் கண்ணா? சரி வா. நாம அங்க போகலாம்.” என்ற சிதம்பரம் கோயிலுக்குள் நடந்தார்.
இவர்களைப் பார்த்ததும் அண்ணாமலை
“வாங்க வாங்க. அர்ச்சனைக்கு நேரமாச்சு.” என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு முருகன் சன்னதிக்கு சென்றார்.
மதுமிதா, மலர் இருவரும் தோட்டத்தில் பூத்திருந்த பூக்களை பறித்து மாலையாக தொடுத்து எடுத்து வந்திருந்தனர்.
அர்ச்சனை தட்டோடு சேர்த்து மாலையையும் கொடுத்தார் பார்வதி. அந்த மாலையை வாங்கி முருகன், வள்ளி, தெய்வானை மூவருக்கும் சாத்திவிட்டு அர்ச்சனையை முடித்து விபூதி, குங்குமம், அர்ச்சனை தட்டுடன் வந்தார் புரோகிதர்.
“மலர் கையால ஒரு மாலை கட்டினால் அந்த மாலைக்கு தனி அழகுதான்.” என்று மலரை புகழ்ந்துவிட்டு விபூதி, குங்குமம் அர்ச்சனைத் தட்டை கொடுத்தார் .
“மதுமிதாவும் மாலை கட்ட ரொம்ப ஹெல்ப் பண்ணினா.” என்று சொல்லிவிட்டு மலர் அந்த அர்ச்சனை தட்டை வாங்கினாள்.
“சரி மா. அந்த முருகன் உங்கள் குடும்பத்தை எப்போதும் இதே மாதிரி ஒத்துமையா மகிழ்ச்சியா வச்சிருக்கணும்.” என்று ஆசீர்வதித்தார் புரோகிதர்.
“உங்கள் வாக்கு பலிக்கட்டும்.” என்றபடி அவர் கையில் வைத்திருந்த தட்டில் பணம் போட்டார் அண்ணாமலை.
“சரி வாங்க எல்லோரும் அங்க போய் உட்காரலாம்.” என்று பார்வதி அழைத்தார். முருகன் தரிசனத்தை முடித்துவிட்டு அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர்.
“பாட்டி எல்லோருக்கும் லட்டு வாங்கி தாங்க.” என்று கேட்டான் சஞ்சய்
பாட்டி ஆதித்யாவை பார்த்தார்.
“நீங்க சொன்னதுக்கு அப்புறம் நான் எதுவுமே வாங்குறது கிடையாது. சஞ்சய் தான் கேட்கிறான். எனக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது.” என்றான் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு.
ஆதித்யா இப்போது பதினோரு வயது சிறுவன்.
“சரி ஏதோ ஒரு நாள் தானே போய் வாங்கிட்டு வரேன்.” என்று சஞ்சயை கையில் பிடித்துக் கொண்டு சென்று அனைவருக்கும் லட்டு வாங்கி வந்தார்.
அண்ணாமலை “ஆதித்யா இந்தா உனக்கு.” என்று அவனுக்கு ஒரு லட்டை கொடுத்தார்.
“அதிதி” என்று மலர், ஆறுமுகத்தின் இரண்டாவது குழந்தையான 5 வயது சிறுமி அதிதியை அழைத்தார். “என்னங்க தாத்தா ?”என்று கேட்டாள் அதிதி.
“இது உனக்கு.” என்று அவளுக்கு ஒரு லட்டு கொடுத்தார்.
“ சஞ்சய்” என்று அழைக்க அவன் கையை நீட்டினான். அவன் கையில் ஒரு லட்டை வைத்தார்.
“ தருண்” என்று அழைத்தார் அண்ணாமலை .
“தாத்தா தம்பி தூங்கிட்டு இருக்கான். டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்றான் சஞ்சய்.
“ அப்படியா கண்ணா? சரிடா. நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.” என்றார் அண்ணாமலை.
அதேநேரம் தருண் அன்னை கசக்கிக்கொண்டு எழுந்தான்.
அவனைக் கவனித்த சிதம்பரம்
“தருண் எழுந்துட்டான் பாரு சஞ்சய்.” என்று சொல்லவும்
“தாத்தா அந்த லட்டை என்கிட்ட குடுங்க. நான் கொடுக்கிறேன்.” என்ற சஞ்சய் அவரிடமிருந்து வாங்கி தருண் இடம் கொடுத்தான்.
“எல்லோரும் லட்டு வாங்கியாச்சா?” என்று கேட்டார் அண்ணாமலை.
“தாத்தா சஞ்சனா பாப்பாவை மறந்துட்டீங்க.” என்றான் சஞ்சய் .
“இல்லைடா கண்ணா. சஞ்சனா பாப்பாவுக்கு ஒரு வயசுதான் ஆகுது. அதனால லட்டு வேண்டாம். அம்மா கிட்ட சொல்லி வாழைப்பழம் கொடுக்க சொல்லு.” என்றார் அண்ணாமலை.
“சரிங்க தாத்தா.” என்றவன் மதுமிதாவிடம் சென்றான் .
“அம்மா தாத்தா எல்லோருக்கும் லட்டு கொடுத்தார். சஞ்சனா பாப்பா லட்டு சாப்பிடக்கூடாதாம். அதனால நீங்க பாப்பாவுக்கு வாழைப்பழம் கொடுங்க.” என்றான் சஞ்சய்.
“சரிடா கண்ணா.” என்ற மதுமிதா வாழைப்பழம் எடுத்து தன் மகளுக்கு ஊட்டி விட்டாள்.
குழந்தைகள் அனைவரும் சேர்ந்து சிரித்து விளையாடினர்.
சிறிது நேரம் விளையாடிய பிறகு
“தாத்தா நான் திருவிழா கடையில் ரிமோட் கார் பார்த்தேன். எனக்கு சஞ்சய் தம்பிக்கு தருண் தம்பிக்கு வாங்கி தாங்க.” என்று கேட்டான் ஆதித்யா.
“சரிடா வாங்கலாம் வாங்க.” என்று எல்லோரும் கிளம்பி வெளியில் வந்தனர்.
திருவிழாக் கடையில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப் பொருட்களை வாங்கினர். வாங்கிய பிறகு
“ குழந்தைகளுக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கியாச்சு. மதுமிதா, நீ வருஷாவருஷம் தேடிக்கிட்டு இருந்த பிள்ளையார் சிலை நான் ஒரு கடையில் பார்த்தேன். வா என் கூட. நான் காட்டுகிறேன்.” என்று மலர் அழைத்தாள் .
ஆனால் சஞ்சய் “அம்மா எனக்கு கால் வலிக்குது வீட்டுக்கு போகலாம் வாங்க.” என்று மதுமிதாவை கூப்பிட்டான்.
இவனை கவனித்த பார்வதி “மலர், ஆறுமுகம், மதுமிதா, மாதவன், சுதாராணி மதுசூதன். நீங்க உங்களுக்கு தேவையானதை வாங்கிட்டு பொறுமையா வாங்க. நாங்கள் எல்லோரும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு போகிறோம். என்ன சரியா?”
என்று கேட்டார்.
இந்த யோசனை எல்லோருக்கும் சரியாக பட்டதால் எல்லோரும் “சரி” என்றனர். குழந்தைகளோடு பெரியவர்கள் வீட்டுக்கு சென்றனர். இளம் தம்பதியினர் ஜோடி ஜோடியாக திருவிழா கடையில் தேவையான பொருட்களை வாங்கினர்.
மலர் மதுமிதாவை அந்த கடைக்கு அழைத்துச் சென்றாள்.
மதுமிதா அந்த பிள்ளையார் சிலையை பார்த்தாள்.
“அக்கா இதே சிலைதான். இதைத்தான், நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன். கிடைச்சிடுச்சு.” என்று மகிழ்ந்தாள்.
பணம் கொடுத்து அதை வாங்கிக்கொண்டு மாதவனிடம் வந்தாள்.
மலர், ஆறு முகத்துடன் திருவிழா கடைகளில் பொருட்கள் வாங்க சென்றனர். மதுமிதா மாதவனிடம் அந்த சிலையை காண்பித்து
“இதே மாதிரி ஒரு சிலையை தேனி திருவிழாவில் கீதாவுக்காக வாங்க போய் தான் நான் அந்த சண்டை நடந்த இடத்துக்கு வந்தேன்.” என்றாள்.
“அப்போ இந்தப் பிள்ளை யார் தான் நாம சந்திக்க காரணமா இருந்தாரா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் மாதவன்.
“ஆமா மாதவன்.” என்றாள் மதுமிதா.
“அப்போ இவரோட ஆசிர்வாதம் நமக்கு எப்பவும் வேண்டும்.” என்று பிள்ளையாரைப் கையெடுத்து கும்பிட்டு
“எப்பொழுதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும்.” என்று வேண்டிக் கொண்டான்.
அப்போது மழை லேசாக தூறியது. மதுசூதன் தன் கையில் இருந்த குடையை விரித்து “சுதா” என்று அழைத்தபடி நடுவில் நின்று கொண்டிருந்த மதுமிதாவை கவனிக்காமல் அவளை தாண்டி அவளிடம் சென்று அவளுக்கு குடை பிடித்தான் .
மதுமிதா மதுசூதன் தோளில் தட்டி
“அண்ணா மதுன்னு இங்க ஒரு கேரக்டர் நின்னுக்கிட்டு இருக்க. ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.
அவன் “அது அது வந்து ….நான் கவனிக்கல மது.” என்றான் சிரித்தபடி.
மதுமிதா தலைமீது கையை வைத்து யாரையோ தேடுவது போல தேடியபடி “யாரோ ஒருத்தங்க எப்பவோ ஒரு தடவை நான் இப்படி செய்ததற்கு என்னை கிண்டல் பண்ணாங்க. அவங்களை தான் தேடிக்கிட்டு இருக்கேன்.”
என்று சொன்னதும் மாதவன் சிரித்தான்.
இதைக் கேட்ட சுதாராணி புரியாமல் விழித்தாள்.
“என்ன நீ மட்டும் தனியா சிரிச்சிட்டு இருக்க மாதவா?” என்று கேட்டபடி அங்கு ஆறுமுகம் வந்தான். அவனை பின்தொடர்ந்து மலர் வந்தாள்.
“சொல்லட்டுமா?” என்று மதுசூதனை பார்த்து கேட்டான் மாதவன்.
“வேணாம்னு சொன்னா விடவா போறீங்க. சொல்லுங்க.” என்று அவன் சொல்லவும் மாதவன் அன்று கடற்கரையில் மதுசூதன் பேசியதை சொல்லவும் அனைவரும் சேர்ந்து சிரித்தனர்.