இந்த வேலைகள் அனைத்தும் முடிந்து அனைத்தும் சீராக ஐந்து மாதங்களுக்கு மேல் ஆனது. சுசீலாவும் அந்த ஹோமில் இருக்கும் பெண்களை வீட்டுக்கே அழைத்து வந்து விட்டதால் அவர்களுடன் பிசியாகி விட்டாள். அஸ்வதியும் அங்கே இருக்க நாட்கள் யாருக்கும் போர் இல்லாமல் சென்றது.
சுமன் வேலைக்கு சென்ற பிறகு மாயாவுக்கு மட்டும் தான் பொழுது போகாமல் இருந்தது.
எல்லா வேலைகளையும் முடித்த பிறகு தான் நிதானமாக மூச்சு விட்டான் யுவன். அப்போது சுசீலாவின் பெற்றவர்கள் போட்டோவை எடுக்க வேண்டும் என்று அவள் சொன்னது நினைவில் வந்தது. உடனே கேசவை அழைத்த யுவன் “நீ அஸ்வதியை இங்க வரச் சொல்லேன் கேசவ். சுசிலாவுக்கு தெரியாம வரச் சொல்லு”, என்றான்.
குழப்பம் வந்தாலும் அவன் சொன்னதை தட்டாமல் செய்தான் கேசவ். அதைக் கேட்டு அதிர்ந்த அஸ்வதி “என்னையா பையா வரச் சொன்னாங்க? எதுக்குன்னு தெரியுமா?”, என்று கேசவிடம் கேட்டாள்.
“எனக்கு தெரியாது. நீங்க வாங்க”, என்று சொல்லி விட்டு முன்னே நடந்தான். அவன் பின்னே என்னவோ ஏதோ என்று பயத்துடன் வந்த அஸ்வதி பவ்வியமாக “சொல்லுங்க பையா”, என்றாள்.
“அஸ்வதி, நான் சுசீலாவை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக போறேன்”
“என்னது அங்கயா? அங்க எல்லாம் வேண்டாம்? எங்க அம்மா அப்பா துரோகிகள். அவங்க சுசீலாவை பாக்க கூடாது”, என்று அவசரமாக சொன்னாள் அஸ்வதி.
“நான் சொல்றதைக் கேளு அஸ்வதி. சுசீலாவுக்கு அவளோட அம்மா அப்பா போட்டோ வேணும். அது போக அவளோட திங்க்ஸ் உங்க வீட்ல இருக்கு. அதை எல்லாம் எடுத்துட்டு வரணும். அதுக்கு நானும் சுசீலாவும் போக போறோம். உன்னை இப்ப எதுக்கு கூப்பிட்டேன்னா எங்க கூட நீயும் வரியான்னு கேக்க தான். சுசீலாவுக்கு அவங்க துரோகம் செஞ்சிருந்தாலும் உனக்கு அவங்க அம்மா அப்பா தானே? நாளைக்கு உனக்கே அவங்களைப் பாக்க ஆசை வரலாம்ல? ஒரு தடவை பாத்துட்டு வந்துறியா? அவங்க
என்ன சூழ்நிலைல இருக்காங்கன்னும் தெரியலை”
“இல்லை.. நான் வரலை…”
“உடனே சொல்ல வேண்டாம். நல்லா யோசிச்சு நாளைக்கு சொல்லு. அப்படியே உங்க வீட்டுக்கு எப்படிப் போகணும்னு வழியும் சொல்லு”, என்று சொல்லி விட்டு சென்றான் யுவன்.
“போகவா வேண்டாமா?”, என்று குழப்பத்தில் ஒரு நாள் முழுக்க கடத்தியவள் “சரி கடைசியா ஒரு தடவை போய் பாப்போமே”, என்று எண்ணி யுவனிடம் “நானும் வரேன்”, என்று சொன்னாள்.
“சரி அஸ்வதி, நாளான்னைக்கு நாம கிளம்புறோம். சுசீலா கிட்ட சொல்ல வேண்டாம்”, என்று சொன்னதும் அவள் சரி என்றாள்.
அதன் படி இரண்டு நாட்களில் கிளம்பி விட்டார்கள். கேசவ் காரை ஓட்ட அவன் அருகே யுவன் அமர்ந்திருந்தான். பின் சீட்டில் பெண்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.
“எங்க போறோம்?”, என்று சுசீலா கேட்டுக் கொண்டே வர அவளுக்கு யாரும் உண்மையைச் சொல்ல வில்லை. கேட்டு கேட்டு அழுத்து போனவள் அப்படியே சீட்டில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.
சிறு குழந்தை போல் தூங்கும் சுசீலாவைக் கண்ட அஸ்வதிக்கு கண்கள் பணித்தது. “இவ எப்பவும் நல்லா இருக்கணும்”, என்று மனசார எண்ணியவளுக்கு யுவனும் சுசீலாவும் உரிமையாக பேசிக் கொள்வது நினைவில் வந்தது. அதிலே இருவரின் மனதும் அவளுக்கு புரிந்து போனது.
ஏர்போர்ட் வந்ததும் நால்வரும் விமானம் ஏறினார்கள். அப்போது எங்கே போக போகிறோம் என்று சுசீலாவுக்கும் புரிந்து விட்டது. அவள் அஸ்வதியை பார்க்க அஸ்வதியோ கலங்கி போய் அமர்ந்திருந்தாள்.
வீட்டை நெருங்க நெருங்க அஸ்வதிக்கு தான் மனது பாரமாக ஆனது. சந்தோஷமாக திருமணம் செய்து வீட்டில் இருந்து கிளம்பியது, திருமணக் கூத்துக்கள், முதலிரவு எதிர்பார்ப்புகள், அதன் பின்னான அவளின் நிலைமை, அவள் அனுபவித்த வலிகள் அனைத்தும் அவள் மனதை கீறி மேலே வந்து அவளுக்கு மரண வலியைத் தந்தது.
“நாம இங்க கிளம்பி வந்துருக்க கூடாதோ?”, என்று எண்ணிக் கொண்டே வந்தாள்.
ஒரு வழியாக வீடும் வந்தது. அந்த அக்ரகாரத்துக்குள் நுழையும் போது தன்னாலே உடல் கூசிப் போனது அஸ்வதிக்கு. அருகில் இருந்த சுசீலாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“என்ன ஆச்சு அஸ்வதி?”
“இங்க இருக்குற யாருக்காவது நான் என்ன தொழில் செஞ்சேன்னு தெரிஞ்சதுன்னா என்னை இங்க உள்ள விடுவாளா சுசீ?”, என்று கலங்கிய குரலில் கேட்டாள் அஸ்வதி.
“இங்க பாரு சுசீ, இங்க யாருக்கும் அது தெரியாது. நீயும் அதை மறந்துரு”, என்று சுசீலா தான் அவளை தேற்றிய படியே வந்தாள்.
அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது அங்கே ஆழ்ந்த அமைதியே நிலவியது. வீடு முன்னால் இருப்பது போல வெளிச்சமாக சுத்தமாக இல்லாமல் தூசுகளோடு தான் இருந்தது.
தயக்கத்துடன் இரு பெண்களும் உள்ளே அடி எடுத்து வைக்க யுவனும் கேசவும் அவர்கள் பின்னே உள்ளே சென்றார்கள்.
உள்ளே சென்றதும் ஹாலில் மாட்டியிருந்த போட்டோவைக் பார்த்து கதி கலங்கிப் போனார்கள் பெண்கள் இருவரும். ஹாலில் நிரஞ்சனின் போட்டோ மாட்டப்பட்டு அதற்கு மாலை போடப் பட்டிருந்தது. அந்த மாலை கூட கருகிப் போய் தான் இருந்தது.
இருவருக்கும் அவன் ஆசைத் தம்பியல்லவா? அவன் இந்த உலகில் இல்லை என்பதை நம்ப முடியாமல் இருவரும் கதறி அழுதார்கள்.
அவர்களின் அழுகுரலில் வெளியே வந்த வத்சலா நிச்சயமாக அங்கே சுசீலாவையும் அஸ்வதியையும் எதிர் பார்க்க வில்லை.
அவளைக் கண்டதும் சுசீலா உடலில் ஒரு விறைப்பு வர யுவனின் அருகில் சென்று நின்று கொண்டாள். அஸ்வதியோ தன்னுடைய
அன்னையையே வெறித்துப் போய் பார்த்தாள்.
வத்சலாவும் வெகுவாக மாறிப் போயிருந்தாள். எப்போதுமே பளிச்சென்று இருக்கும் வத்சலா மாமி இப்போது தூசு அடைந்த ஓவியம் போல தான் இருந்தாள். மகள் எங்கே இருக்கிறாளோ என்று தெரியாமல் மகனையும் பறி கொடுத்து விட்டு அவளால் வேறு எப்படி இருக்க முடியும்? புத்திர சோகம் அவளை இப்படி மாற்றி இருந்தது.
“அசு”, என்று கத்திக் கொண்டே அஸ்வதியை அவள் நெருங்க “அங்கேயே நில்லு”, என்று கத்தினாள் அஸ்வதி.
அனைவரும் அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருக்க சுசீலாவோ பழைய நினைவு மற்றும் நிரஞ்சன் நினைவில் வெறித்த பார்வையுடன் இருந்தாள். யுவன் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரையும் இங்க அழைத்து வந்திருக்க கூடாதோ என்று யோசித்தான்.
கேசவ் அங்கே நடப்பதை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான்.
“அசு, நான் உன் அம்மா டி. உன்னைப் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு? எங்க டி போன? உன்னை எங்க எல்லாம் தேடினோம் தெரியுமா? உன்னைப் பத்தி ஒரு தகவலும் இல்லை. உன் தம்பியை பாத்தியா டி? ஆக்ஸிடென்ட்ல செத்து ஆறு மாசம் ஆகுது டி. நம்ம எல்லாரையும் தவிக்க வச்சிட்டு போய்ட்டானே? சுசீலாவை எப்படி பாத்த? சுசீ மா நீயும் என்னை மன்னிச்சிரு டா”, என்று அழுதாள்.
“அழு, நல்லா அழு. உனக்கு இது தேவை தான். நீ செஞ்ச பாவம் தான் எல்லாரோட நிலைமையும் இப்படி ஆக்கி வச்சிருக்கு. என்னோட வாழ்க்கை தான் இப்படி ஆச்சுன்னா நிரஞ்சனையும் கொன்னுட்டீங்களே?”, என்றாள் அஸ்வதி.
“அஸ்வதி.. நான்..”
“பேசாத மா. சுசீலா நோக்கு என்ன பாவம் செஞ்சா? அவளுக்கு நீ என்ன காரியம் செஞ்ச? அதனால தான் கடவுள் உன் மகனை உன்கிட்ட இருந்து பிரிச்சிட்டாரோ என்னவோ? எங்க உன் ஆத்துக்காரர்? எல்லாத்துக்கும் அவரும் கூட்டு தானே? பெத்தவங்க செய்யுற பாவம் பிள்ளைகளை தான் பிடிக்கும்னு உங்களுக்கு ஏன் தெரியாம போச்சு. என் தம்பியாவது நிம்மதியா போய் சேந்துட்டான். ஆனா என்னோட வாழ்க்கை எப்படி ஆச்சுன்னு நோக்கு தெரியுமா? கெட்டு சீரழிஞ்சு வந்துருக்கேன் மா”, என்று பெருங்குரலெடுத்து அழுதவள் தன்னுடைய வாழ்க்கையை யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் பிட்டு பிட்டு வைத்தாள்.
அவள் பட்ட கஷ்டங்களை கெட்டு யுவன் காதை மூடிக் கொண்டான். சுசீலாவோ கண்களில் நீர் வர நின்றாள்.
கேசவோ அஸ்வதியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். “இந்த பெண் இத்தனை வலிகளை அனுபவிச்சிருக்கா?”, என்று அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் வலிகளைக் கேட்டு அவள் மேல் தனி கவனம் உருவானது அவனுக்குள்ளே.
அஸ்வதி சொன்ன அனைத்தையும் கேட்ட வத்சலா மகள் வாழ்க்கையில் நடந்த கொடுமைகளை சீரணிக்க முடியாமல் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்.
சுசீலா தான் தண்ணீர் எடுத்து வரச் சென்றாள். அப்போது உள்ளே இருந்து எதுவோ சத்தம் கேட்க யுவன் உள்ளே சென்று பார்த்தான்.
“சுசீ, அஸ்வதி இங்க வாங்க”,என்று அழைக்க அங்கே படுத்த படுக்கையாக கிடந்தார் சீனிவாசன். கை ஒரு பக்கம், கால் ஒரு பக்கம் என்று இழுத்துக் கொண்டு கிடந்தது.
மகனை அடக்கம் செய்து விட்டு வந்த உடனேயே அவருக்கு இப்படி ஆகியிருந்தது. சுசீலா மற்றும் அஸ்வதி இருவருக்கும் அவர் நிலையைக் கண்டு கண்ணீர் தான் வந்தது. கண்களால் சுசீலாவிடம் மன்னிப்பை வேண்டினார் சீனிவாசன்.
மயக்கம் தெளிந்த வத்சலா மகளின் வாழ்க்கையை எண்ணி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள். சுசீலாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள்.
சுசீலா எதுவுமே பேச வில்லை. மனதில் இருந்த குப்பைகளை எல்லாம் இறக்கி வைத்த அஸ்வதி தாயைக் கட்டிக் கொண்டு அழுதாள். அந்த நேரம் சுசீலா தன்னுடைய பொருளை எல்லாம் எடுத்து வைக்க சென்று விட்டாள்.
அனைவரும் கிளம்பும் நேரம் வத்சலா மகளை இங்கேயே இருக்க சொல்ல அனைவருக்குமே அஸ்வதி என்ன சொல்வாள் என்ற திகைப்பு இருந்தது.
கேசவ் மனதிலோ “இங்க இருக்க மாட்டேன்னு சொல்லு. இருக்க மாட்டேன்னு சொல்லு”, என்று உருபோட்டுக் கொண்டிருந்தான்.
அவன் ஏன் இப்படி யோசித்தான் என்பது அவனுக்கே விளங்காத புதிர் தான்.
“இங்க இருந்தா எனக்கு பழைய நினைவுகள் அதிகமா தான் மா வரும். கவலைப் படாத நான் நல்லா தான் இருக்கேன். உன்னோட பேங்க் நம்பர் எடுத்துருக்கேன். அதுல மாசம் மாசம் பணம் போடுறேன். உன் மகள் கல்யாணம் முடிஞ்சு நல்ல இடத்துல இருக்கான்னு நினைச்சிக்கோ”, என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.
அதில் கேசவ் மனது நிம்மதியானது.
சுசீலா போயிட்டு வரேன் என்று கூட சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டாள். அவளுக்கு மட்டும் பழசு எல்லாம் மறக்குமா என்ன? யுவன் மட்டும் அவளைக் காப்பாற்ற வில்லை என்றால் இன்று அவளின் நிலை என்னவாகி இருக்கும்? அதனால் அவர்களை சுசீலாவால் மன்னிக்க முடிய வில்லை. யாருமே அந்த வீட்டில் ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்க வில்லை. குடிக்க மனதும் இல்லை.
காரில் ஏறி அமர்ந்ததும் அனைவருக்குள்ளும் மௌனமே ஆட்சி செய்தது.
கேசவ் பார்வை அடிக்கடி அஸ்வதியை புதிதாக வட்டமிட ஆரம்பித்தது.
அனைவரின் மனநிலையை மாற்ற யுவன் சுசீலாவிடம் வம்பிழுக்க அஸ்வதியும் சிரித்தாள். அவள் சிரிப்பில் நிம்மதி மலர்ந்தது கேசவுக்கு.
மீண்டும் ஊர் திரும்பியதும் ஹோம் பொறுப்பை அஸ்வதி மற்றும் கேசவிடமும், பதப்படுத்தும் தொழிற்சாலையை கேசவிடமும் கொடுத்து விட்டு பாரின் கிளம்பினார்கள் யுவனும் சுசிலாவும்.
காதல் தொடரும்….