அத்தியாயம் 18
காதல் கல்வெட்டுகளை
என்னுள் புதைத்து விட்டு
சாவியைத் திருடிச்
சென்றது ஏனோ?!!!
“என்ன பாட்டி துணி எடுக்க போறேன்னு சொல்லிட்டு போனீங்க? எடுக்காமலே வாரீங்க?”, என்று கேட்டாள் கீதா.
“அதுவா? துணி இன்னும் காயலை கீதா. காலைல எடுத்துக்கலாம். நீ தூங்கு”, என்று சொல்லி விட்டு படுத்தாள் அன்னம்.
அதற்கு மேல் தினேஷிடம் பேச முடியாது என்பதால் “பாட்டி வந்துட்டாங்க. தூங்குங்க”, என்று சொல்லி விட்டு படுத்து விட்டாள்.
அறையில் இருந்து வேகமாக மாடிக்கு ஓடி சென்ற தேன்மொழி அங்கு நடந்து கொண்டிருந்த கதிரைப் பார்த்து அடுத்த நொடி அவன் அருகில் விரைந்தாள்.
அவள் வருவதைக் கூட உணராமல் இருந்தவன் அவளைப் பற்றியே யோசனையில் இருந்தான். ஆனால் ஓடி வந்த தேன்மொழியோ அவனை பின்னோடு அனைத்து அவன் முதுகில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்த கதிருக்கு இது கனவா நினைவா என்றே ஒரு நிமிடம் குழப்பம் வந்தது. கனவில்லை நினைவு தான் என்று உணர்த்தியது அவளுடைய அழுகுரல்.
சிறு வயதில் இருந்தே அவள் அழுகையை தாங்க முடியாதவன் இப்போது மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பானா?
“தேனு என்ன ஆச்சு? தேனுமா என்ன மா ஆச்சு? எதுக்கு அழுற?”,என்று அவன் பதட்டத்துடன் கேட்டாலும் அவள் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை.
“தனியா படுத்திருந்ததுனால பயந்துட்டியா? இனி இப்படி உன்னை தனியா விட்டுட்டு வர மாட்டேன்”, என்று கதிர் சொல்லியும் அவள் அழுகை நின்ற பாடில்லை.
தன் வயிற்றில் இருந்த அவள் கைகளை பிரித்தவன் அவளை தன் முன் இழுத்து நிறுத்தினான். ஆனால் அடுத்த நொடி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் தேன்மொழி.
அவளை ஆதரவாக அணைத்த கதிர் “என்னன்னு சொன்னா தானே தெரியும்? என்னன்னு சொல்லு மா? ஏதாவது கனவு கண்டியா?”, என்று கேட்டான்.
“அத்தான்”,என்று ஒரு வார்த்தை சொன்னவளால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை. அழுகை அவளை பேச விடாமல் செய்தது.
[the_ad id=”6605″]
அவளை தன்னில் இருந்து பிரித்தவன் அவள் முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி “என்ன ஆச்சு தேனு? அத்தையை பாக்கணும் போல இருக்கா? நான் கூட்டிட்டு போகவா?”, என்று கேட்டான்.
அவள் அதற்கும் பதில் சொல்லாமல் போகவே “தேனு இப்ப சொல்ல போறியா இல்லையா?”, என்று சிறு எரிச்சல் குரலிலே கேட்டான்.
“என்னை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா அத்தான்?”, என்று தேம்பி தேம்பிக் கேட்டாள்.
“என்ன டா இவ இப்படிக் கேக்குறா?”, என்று மனதுக்குள் எண்ணியவன் அப்போதும் தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காமல் “இந்த பொய்யை உனக்கு யார் சொன்னது?”, என்று கேட்டான்.
அவன் நெஞ்சில் தன் கைகளால் குத்தியவள் “பொய் சொல்லாதீங்க. உங்க வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சிருச்சு”, என்றாள் சிறு சிணுங்களுடன்.
அந்த சிணுங்களில் கதிர் முகம் மத்தாப்பாக ஒளிர்ந்தது. “தேனு”, என்று ஆச்சர்யமாக அழைத்தான்.
“எதுக்கு அத்தான் என்கிட்ட சொல்லலை?”
“சொல்லலைன்னு சொல்லக் கூடாது. சொல்ல தெரியலைன்னு தான் சொல்லணும் தேனு”
“அத்தான்”
“ஆமா தேனு, நீ பிறக்குறதுக்கு முன்னாடியே உன்னோட வரவை ஆவலா எதிர் பாத்தேன் நான்”
“நிஜமாவா, உங்க தம்பிங்க அப்புறம் பாட்டி எல்லாரும் உங்க லவ்வை பத்தி சொல்லும் போது இவங்க கதை விடுறாங்க. அத்தான் நான் அம்மா வயித்துக்குள்ள இருக்கும் போதே என்னை லவ் பண்ணுனாங்கன்னு சொல்லுவாங்க போலன்னு எனக்குள்ளே சிரிச்சிருக்கேன்”
“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அது தான் தேனு உண்மை. ஆனா, அது லவ்ன்னு எல்லாம் சொல்ல தெரியலை. ஒரு உருமை உணர்வு, நீ எங்க வீட்டு பொண்ணு, என்னோட தேனுன்னு ஒரு எண்ணம். உன் கூடவே இருக்கணும்னு ஆசை”, என்று அவன் சொன்னதும் அவனை விட்டு விலகி அவன் முகம் பார்த்தாள்.
“எதுக்கு டி விலகுற? இப்படியே இரு. நல்லா இருக்கு. ரொம்ப நாள்க்கு அப்புறம் ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்”, என்று சொல்லி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“இப்படியே நின்னா கால் வலிக்கும். ரூமுக்கு போகலாமா?”
“இல்லை தேனு, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இங்கயே கீழ உக்காரலாமா?”
அவள் சரி என்றதும் ஒரு ஓரமாக அமர்ந்தவன் அவளை இழுத்து தன் மடி மேல் போட்டுக் கொண்டான்.
“இவ்வளவு ஆசையை வச்சிட்டு எதுக்கு அத்தான் என்கிட்ட சண்டை போட்டீங்க?”
“அடியே, கதையை மாத்துறியா? நல்லா யோசிச்சு பாரு நானா உன்கிட்ட சண்டை போட்டேன்? கிட்ட வந்தாலே அடிக்க வர. உன்கிட்ட வேற எப்படி பேச? சின்ன வயசுல எல்லாம் நீ அப்படி இல்லை தெரியுமா? என் கைக்குள்ளே தான் இருப்ப. என்னை விட்டு போகணும்னாலே அழுவ. நிறைய நாள் நீ சின்ன குழந்தையாவே இருந்துருக்க கூடாதான்னு நினைப்பேன்”
“அப்புறம் எப்படி நான் மாறினேன்? எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து உங்க கிட்ட சண்டை போட்டது தான் எனக்கு நினைவு இருக்கு”
[the_ad id=”6605″]
“உண்மையும் அது தான் தேனு. நீ என் கூடவே இருந்துருந்தா கண்டிப்பா நம்ம வாழ்க்கை வேற மாதிரி இருந்துருக்கும். ஆனா சூழ்நிலை தான் நம்மளை பிரிச்சிருச்சு. நீ உன் வீட்டுக்கு போன அப்புறம் எனக்கு எப்படி வலிக்கும் தெரியுமா? உன்னை என்கூடவே வச்சிக்கணும்னு வெறியே வரும். ஆனா முடியலை”
…..
“நம்ம குடும்ப சண்டை வராம இருந்துருந்தா அத்தை என்னைப் பத்தி உன்கிட்ட அடிக்கடி பேசிருந்துருப்பாங்க. அதுக்கும் வழி இல்லாம போச்சு. அப்படியே என்னை விட்டு போயிட்ட. நானும் என் படிப்பு வேலைன்னு கவனம் செலுத்தினாலும் உன்னை என்கூடவே வச்சிக்கணும்னு ஒரு தீ எனக்குள்ளே எரிஞ்சிட்டே இருந்தது”
“விவரம் தெரிஞ்ச அப்புறமாது என்கிட்ட நல்லா பேசிருக்கலாம்ல அத்தான்?”
“அது என் தப்புன்னு லேட்டா தான் புரிஞ்சது. உன்னைப் பாத்தாலே எனக்கு ரசிக்க தான் தோணும். அதை பார்த்து நீ முறைக்க, உன் முறைப்புக்கு நான் பதிலடி கொடுக்கன்னு அப்படியே போயிரும்”
“அப்ப என்ன பிரச்சனை வந்திருந்தாலும் என்னை விட்டுக் கொடுத்துருக்க மாட்டீங்களா அத்தான்?”
“நீ என் உயிர் டி. நீ என் கூடவே இருக்கும் ஒவ்வொரு நிமிசத்துக்காகவும் ஏங்கிட்டு இருக்குற நான், அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுக் கொடுத்துருப்பேன்னு நினைக்கிறியா? உனக்கு கல்யாணம் பேசட்டும் பாக்கலாம்னு நினைச்சேன். ஆனா எப்படி உன் குடும்பத்தை அணுகுறதுன்னு தெரியலை. எனக்கு ஒரே நம்பிக்கை நம்ம பாட்டி மட்டும் தான். பாட்டி மூலமா நம்ம குடும்பத்தை சேத்து வச்சு உன்னை கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சேன். ஒரு வேலை விஷயமா போனப்ப தான் நீ நிச்சயம் ஆச்சுன்னு சொன்ன? எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? தலையிலே கல்லு விழுந்த மாதிரி”
“நான் என்ன விருப்ப பட்டா அதுக்கு சம்மதிச்சேன்? என் பேச்சை யாருமே கேக்கலை. என்னையே அறியாம உங்க முகம் தான் எனக்கு நினைவுக்கு வரும். கல்யாணம் கல்யாணம்னு சொன்னானே? இப்ப எங்க போனானாம்னு பயங்கரமா எனக்குள்ளே திட்டிப்பேன். என்னோட பிரண்டுங்க உங்களைக் கண்டு வழியுவாளுக. அவங்க கிட்ட எல்லாம் உங்களைப் பத்தி விசாரிச்சிருக்கேன்”
“நிஜமாவா தேனு?”
“உங்களை அந்த நேரம் எதுக்கு தேடுனேன்னு எனக்கே தெரியலை. உங்களை கல்யாணம் பண்ணணும்னு தேடுனேனா? இல்லை ராஜேந்திரன் கூட நடக்க இருந்த கல்யாணத்தை நீங்க நிறுத்திருவீங்கன்னு தேடுனேனான்னு எனக்கு இப்ப வர தெரியலை. அன்னைக்கு அவன் அப்படி பிளான் பண்ணலைன்னா என்ன செஞ்சிருப்பீங்க அத்தான்?”
“வேற என்ன? பாட்டி எங்களை சேத்து வைன்னு பாட்டி காலுல விழுந்து மொத்த குடும்பத்தையும் உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருப்பேன். ஆனா அன்னைக்கு அவன் உன்னை கட்டி வச்சிருந்ததைப் பார்த்து எனக்கு மனசே கேக்கலை டி”
“ஐயா மட்டும் என்னவாம்? நீங்களும் அப்படி தானே செஞ்சீங்க?”
“மனசுக்கு வலிச்சாலும் எனக்கு நீ கிடைக்கணும்னு நினைச்சேன் தேனு?”
“ஆனா முகத்துல பாசத்தையே காட்டலையே. வெறுப்பை மட்டும் தானே காமிச்சீங்க?”
“எனக்கு அப்ப நம்ம கல்யாணம் நடக்கணும்னு மட்டும் தான் எண்ணம் இருந்தது. ஏதாவது நடந்துரக் கூடாதே, நீ என்னை விட்டு போயிரக் கூடாதேன்னு ரொம்ப கவனமா இருந்தேன். ஆஸ்பத்திரில உன் அண்ணன் நான் உன்னை பாக்கேனான்னு பாத்துட்டு இருந்தான். அப்ப உன்னை எப்படி பாக்க சொல்லு. அதான் கண்டுக்காம இருந்தேன். அதுவும் கல்யாண மேடையில் வச்சே நக்கல் சிரிப்பு சிரிச்சு என்னை கதிகலங்க வச்சியே எம்மா, தாலி கட்டின அப்புறம் தான் நிம்மதியா இருந்தது”
“அது உங்களை டென்ஷன் பண்ண தான் அப்படி பண்ணுனேன். நீங்க என்னை பாக்காதப்ப என்னை பழி வாங்க தான் அப்படி பண்ணுறீங்களோன்னு நினைச்சேன். ஆனா இங்க வீட்டுக்கு நான் வந்த அப்புறமும் நீங்க என்னை ஆர்வமா பாத்தது இல்லையே ஏன்?”
“பாக்கலையா? நீ வேற. உன்னை கண்டுக்காத மாதிரி உன் முன்னாடி நடிக்க நான் எவ்வளவு பாடு பட்டேன்னு எனக்கு தான் தெரியும்? முதல் நாள் நீ என் பக்கத்துல படுத்துருக்கேன்னு நிம்மதில நல்லா தூங்கினேன். அப்புறம் உன்னோட அருகாமை என்ன ரொம்ப படுத்திச்சிடி. அதுவும் தேனிலவுன்னு சொல்லிட்டு டூர் போனது நம்மளா தான் இருக்கும்”, என்று சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தை ஆசையாக வருடினான் கதிர்.
அப்போது அவள் கண்ணில் பட்டது அந்த டாலர். அவள் பார்வை சட்டென்று மாறிப் போனது.
அவள் முகத்தில் இருந்த மாறுதலைக் கண்ட கதிர் “என்ன திடீர்னு மாறிட்டா. ஒரு வேளை இவ்வளவு நேரம் என்னை பிடிச்சிருக்குற மாதிரி விளையாண்டாளா? இப்ப வெறுப்பா பாக்குற மாதிரி இருக்கே?”, என்று எண்ணிக் கொண்டு “என்ன ஆச்சு தேனு?”, என்று கேட்டான்.
“எனக்காக நீங்க என்ன வேணும்னாலும் செய்வீங்களா அத்தான்?”
அவளுடைய அத்தான் என்ற அழைப்பு நிம்மதியை தர “என்ன செய்யணும்னு சொல்லு தேனு?”, என்றான்.
“உங்க கழுத்துல இருக்குற செயினை கழட்டனும்”
[the_ad id=”6605″]
“இதுவா? இது எதுக்கு?”
“இல்லை இது வேண்டாம். இது உங்க கழுத்துல இருக்க கூடாது. எனக்கு பிடிக்கலை”
“இது நம்ம செல்லதுரை தாத்தா சின்னவயசுல என்னோட பிறந்த நாளுக்கு போட்டு விட்டது தேனு?”
“என் தாத்தா வா? கடைசில அவர் தான் நமக்கு வில்லனா?”
“என்ன உளறுர?”
“எனக்கு உங்களை பிடிக்காததுக்கு இன்னொரு முக்கிய காரணம் இந்த செயின் தான். இதை பாத்தாலே எனக்கு பயமா இருக்கு. முன்னாடி இருந்தே அப்படி தான். இதை எனக்கு பிடிக்கலை.இதை போட்ட உங்களையும் பிடிக்கலை”