அத்தியாயம் 24
அழகான காதல் நினைவுகளை
மனதுக்குள் புதைத்த
கானல் நீர் நான்
அதை அணைக்கும் காதல் தீ நீ!!!
“ஐ ஜாலி, இந்த வீட்ல எனக்கு போட்டியா ஒரு குட்டி பையன் வரப் போறானா?”, என்று கேட்டான் செல்வா.
“நீ என்ன குட்டி பையனா டா? நீ முழுமாடு”, என்றான் தினேஷ்.
“இந்த குடும்பத்துக்கே நான் தான் குட்டி பையனாக்கும். எங்க இல்லைன்னு சொல்லு பாப்போம்”
“சரி டா குட்டி பையா? குட்டி பையனுக்கு இப்ப என்ன வேணும்? தொட்டில்ல போட்டு தாலாட்டணுமாக்கும்?”, என்று கேட்டாள் வேணி.
“அதெல்லாம் வேண்டாம் மா”, என்று சொன்ன செல்வா “இப்ப கேட்டா தான் உண்டு”, என்று எண்ணிக் கொண்டு “எனக்கு ஒண்ணே ஒண்ணு செஞ்சா போதும்”, என்றான்.
“என்னன்னு சொல்லு டா”
“என்னை டூருக்கு விடு மா. பிரண்ட்ஸ் எல்லாரும் போறாங்க. இந்த ஒரு தடவை மட்டும். பிளீஸ் மா”
“சந்தோஷமா இருக்குற நேரத்துல இதை சொன்னா நான் ஏமாந்து உன்னை அனுப்பிருவேன்னு நினைச்சியா? கண்டிப்பா முடியாது”
“அம்மா பிளீஸ் மா, நாலு நாள் தானே?”
“நாலு நாள் டா குஞ்சு. நீ தான் வீட்டுக்கு குட்டி பையன். நீயே சொன்னியே டா. உன்னை எல்லாம் அப்படி விட முடியாது.குட்டிப் பையன் அம்மா கூடவே தான் இருக்கணும்”
“ஐயோ நான் சொன்னது எனக்கே ஆப்பா போச்சே? கதிர் அண்ணா நீ சொல்லு. எல்லாரும் போறாங்க. இங்க இருக்குற பேங்களூர் தானே?”
“ஆமா மா, நானும் தினேஷும் தான் எங்கயும் போனது இல்லை.அவனாவது போகட்டுமே”, என்றான் கதிர்.
“அவன் போயிட்டு வரட்டும் மா. இப்ப சுத்தி பாக்காம வேற எப்ப சுத்தி பாக்க போறான்?”, என்றான் தினேஷ்.
“எல்லாரும் சேந்து தானே வேணி போறாங்க.போயிட்டு வரட்டுமே”, என்றார் மதி.
“இல்லைங்க, தனியா அனுப்பிட்டு நான் பயந்துட்டு இருக்கணும்”, என்று சொன்ன வேணியின் குரலில் நிச்சயம் பயம் இருந்தது.
“சும்மா பயந்துட்டு இருக்காதீங்க அத்தை. சௌமி, நீலவேணி, நவீன் எல்லாரும் கூட போறாங்கல்ல?”, என்றாள் தேன்மொழி.
“இல்லை.. அது வந்து”
[the_ad id=”6605″]
“போ மா, உனக்கு என் மேல பாசமே இல்லை”, என்று அழுவது போல நடித்துக் கொண்டே சொன்னான் செல்வா.
“செல்வா அப்படி சொல்லாத. உன் அம்மா டிவில வர நீயுஸ் எல்லாம் பாத்துட்டு கொஞ்சம் பயப் படுறா. அதுக்காக பாசம் இல்லைன்னு சொல்லுவியா?”, என்றார் மதி.
“சாரி மா, பத்திரமா எல்லார் கூடவும் போயிட்டு பத்திரமா வந்திருவேன்.நீ பணம் கூட தர வேண்டாம். என்கிட்ட இருக்கு”, என்றான் செல்வா.
“ஏது டா பணம்? முவ்வாயிரம் வாங்கினதை தான் அந்த பொண்ணுக்கு கொடுத்துட்டேன்னு சொன்னியே?”, என்று கேட்டார் மதி.
“அது அந்த பணம் இல்லைப்பா. இது நம்ம அம்மா கொடுத்தது”
“உங்க அம்மா உனக்கு முவ்வாயிரம் கொடுத்தாளா? எதுக்கு?”
“அண்ணன் அண்ணி கூட ஷாப்பிங் போகாம இருக்குறதுக்கு”, என்று உளறி நாக்கை கடித்த செல்வா வேணியை பார்த்தான். அவளோ பாவமாக அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வேணி எதற்காக செய்தாள் என்று அனைவருக்கும் புரிய எல்லாரும் சிரித்தார்கள்.
“நல்லா போட்டு கொடுத்துட்ட டா ஓட்டைவாயா. சரி சரி உன்னோட பத்து பிரண்டோட நம்பர் எல்லாத்தையும் என் போன்ல சேவ் பண்ணிட்டு நீ டூர் போயிட்டு வா”, என்றாள் வேணி.
“அம்மான்னா அம்மா தான். ஆனா எதுக்கு மா பத்து பேரோட நம்பர்?”
“ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஒவ்வொருத்தருக்கும் போன் பண்ணி உன்னைப் பத்தி விசாரிக்க”
“அம்மா”, என்று அதிர்ச்சியானவன் “அப்ப எல்லாருக்கும் உன்கிட்ட போன்ல பேச தான் நேரம் இருக்கும். சரி சரி முறைக்காத. நீ விட்டதே போதும். தேங்க்ஸ் மா”, என்று அவள் கன்னத்தை பிடித்து கொஞ்சினான் செல்வா.
“சரி சரி ஐஸ் வைக்காத.எல்லாரும் முகம் கழுவிட்டு வாங்க. டீ தரேன். அப்புறம் தேனு உனக்கு இனி டீ காபி கட். இன்னைக்கு ஒரு நாள் பால் குடி. நாளைக்கு சத்து மாவு ரெடி பண்ணி கலக்கி தருவேன். அதை தான் குடிக்கணும்”
“ஐயோ அத்தை டீ காபி இல்லாம எப்படி இருக்குறது?”, என்று ஆழமாட்டாத குறையாக கேட்டாள் தேன்மொழி.
“தேனு, அம்மா உன் நல்லதுக்கு தானே சொல்றாங்க. அவங்க சொல்றதையே செய்”, என்றான் கதிர்.
“நல்லா சொல்லு டா, சரி முகம் கழுவிட்டு வாங்க. நான் டீ போட போறேன்”,என்று சொல்லி விட்டு வேணி சென்றதும் அனைவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.
செல்வா அறைக்குள் சென்ற போது எதையோ யோசித்த படி படுத்திருந்தாள் அன்னம்.
“என்ன டா இது? நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன சிந்தனைல பாட்டி இருக்கு?”, என்று எண்ணிக் கொண்டு “என்ன பாட்டி, தாத்தா பத்தின கனவா?”, என்று கேட்டான்.
“ஹிம் அப்படியும் சொல்லலாம். இன்னைக்கு என்ன டா நேரம் கழிச்சு வர?”
“உனக்கு அஞ்சு பத்து நிமிஷம் லேட்டா வந்திரக் கூடாதே. சரி சரி அம்மா டீ குடிக்க கூப்பிட்டுச்சு. எழுந்து வா”
“டீன்னு சொன்ன உடனே தான் நினைவு வந்தது. அன்னைக்கு என் கண்ணுல ஊத்துனியே அந்த மருந்து….”
“ஆமா அதுக்கென்ன?”
“தயவு செஞ்சு மறுபடியும் கண்ணுல ஊத்தி விட்டுராத”
“ஹா ஹா, என் கல்யாணத்துக்கு அப்படி ஒரு காட்சி நடக்கலாம். எனக்கும் ஒரு சந்தேகம் கிழவி”
“மூளையே இல்லாத உனக்கு எல்லாம் சந்தேகம் வருதா டா?”
“ஏன், சொல்ல மாட்ட? அன்னைக்கு என்ன தான் ஆச்சு? நாங்க சும்மா சீனைப் போட சொன்னா எல்லாரையும் கதி கலங்க வச்சிட்ட”
“உண்மைலே கனவு வந்துச்சு டா குஞ்சு. அப்புறம் நீ போட்ட மருந்தும் சேந்து எல்லாத்தையும் நினைச்சு அழுகையை வர வச்சிருச்சு. நீ வேற அதிகமா போட்டு விட்டுட்ட”
[the_ad id=”6605″]
“ஆனா உன்னால தான் பாட்டி, நம்ம குடும்பம் சேந்து கதிர் அண்ணன் கல்யாணமும் நடந்துச்சு. சரி நீ போ. நான் டிரெஸ்ஸ் மாத்திட்டு வரேன்”, என்று சொல்லி குளியல் அறைக்கு சென்று விட்டான்.
“ரொம்ப டயர்டா இருக்கா தேனு?”, என்று கேட்டுக் கொண்டே தேன்மொழி முகத்தை வருடினான் கதிர்.
“போங்க அத்தான் உங்களுக்கு என்னை தொடுறதுக்கு ஒரு சாக்கு வேணும். நான் நல்லா தானே இருக்கேன். அது மட்டுமில்லாம இனிமே தான் வாந்தி மயக்கம் எல்லாம் இருக்கும். இப்ப இல்ல”
“உன்னை தொடுறதுக்கு நான் எதுக்கு டி சாக்கு யோசிக்கணும். எப்ப வேணும்னாலும் கட்டி புடிச்சிப்பேன். சரி உனக்கு ரூமுக்கு பால் எடுத்துட்டு வரவா?”
“எதுக்கு ரூம்ல உக்காந்து நம்ம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி முகத்தை பாத்துட்டு குடிக்கவா? கீழ தான் அத்தான் எல்லாரும் இருக்காங்க. அங்கயே போகலாம். இருங்க முகம் கழுவிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
அங்கே கீதாவோ “நீங்க கொஞ்சம் வெளிய போங்களேன், நான் டிரஸ் மாத்தணும்”, என்று தினேஷிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“அடிபாவி, நீ ஒவ்வொரு தடவையும் டிரெஸ் மாத்தும் போதும் நான் வெளிய போயிட்டு இருக்க முடியுமா?”, என்று கண்களில் காதலுடன் கேட்டான் தினேஷ்.
“கொஞ்ச நாள் பழகட்டும் பிளீஸ். இன்னைக்கு போங்களேன்”
“சரி சரி போறேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.
பின் ஒவ்வொருவராய் வர அவர்களுக்கு டீ ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் வேணி. “பாத்தீங்களா டா, எல்லாரும் வந்துட்டீங்க. உங்க அப்பாவை காணும். இவரை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா?”, என்று கத்தி விட்டு அறைக்குள் சென்ற வேணி “ஏங்க டீ குடிக்க வாங்கன்னு சொன்னேன்ல? வராம என்ன செய்றீங்க?”, என்று கேட்டாள்.
“நீ செஞ்சது உனக்கே நியாயமா இருக்கான்னு யோசிச்சிட்டு இருக்கேன்”
“நானா? அப்படி அநியாயமா நான் என்ன செஞ்சேங்க?”
“தினேஷையும், கீதாவையும் எதுக்கு ஒரே ரூம்ல தங்க வச்ச?”
“இதுல என்ன இருக்கு? அவங்க புருஷன் பொண்டாட்டி தான?”
“ப்ச் புரியாம பேசாத. அவங்க சின்ன பசங்க வேணி”
“நீங்க தான் புரியாம பேசுறீங்க? அவங்க சின்ன பசங்க தான். ஆனா விவரம் தெரியாதவங்க இல்லை”
“கீதா படிப்பு முடியுற வரைக்கும் பொறுமையா இருந்துருக்கலாம்ல?”
“பாரு டா, பொறுமையைப் பத்தி நீங்க பேசுறீங்களா? நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் முதல் ராத்திரியை தள்ளி வச்சதுக்கு நீங்க எப்படி குதிச்சீங்க? உங்களுக்கு ஒரு நியாயம், அவங்களுக்கு ஒரு நியாயமா?”
“வேணி”
“என்ன வேணி? ஆன்”
“சரி சரி விடு”
“அப்படி வாங்க வழிக்கு. இருந்தாலும் உங்களுக்கு எதுக்கு இவ்வளவு கவலை? அதெல்லாம் நம்ம பிள்ளைங்க பக்குவமா நடந்துக்குவாங்க. இல்லைன்னாலும் என்னங்க கெட்டு போக போகுது? சந்ததி உருவாக தான கல்யாணமே பண்ணி வைக்கிறோம். கீதா கண்டிப்பா வேலைக்கு போகணும்னு எந்த கட்டாயமும் இல்லையே”
“புரியுது வேணி”
“சரி சரி வாங்க, டீ தரேன்”, என்று சொல்லி அவரை அழைத்து சென்றாள்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் “கதிர், தேனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் ஒரு ஸ்கேன் எடுத்துட்டு வந்துருப்பா”, என்றாள் வேணி.
“இன்னும் பத்து நாள் போகட்டும்னு நினைச்சேன் மா”
“ஆமா அத்தை, இப்பவே எதுக்கு போகணும்? ஒரு ரெண்டு வாரம் ஆகட்டும்”, என்றாள் தேன்மொழி.
வேணி “சரி”, என்றதும் “நான் வெளிய போயிட்டு வரேன் மா. வரேன் தேனு. வரேன் பாட்டி”, என்று சொல்லி விட்டு சென்றான் கதிர்.
பத்து நாட்கள் கழித்து ஹாஸ்பிட்டலுக்கு சென்று வந்தவர்கள் முகம் பிரகாசமாக இருந்தது.
“தேனு, டாக்டர் என்ன சொன்னாங்க கண்ணு”, என்று கேட்டாள் அன்னம்.
“குழந்தை நல்லா இருக்கா? எந்த பிரச்சனையும் இல்லையே”,என்று கேட்டாள் அன்னம்.
“கரு நல்லா இருக்காம் அத்தை. ஆனா….”
“என்ன ஆனா?”, என்று கேட்டாள் அன்னம்.
[the_ad id=”6605″]
“பாட்டி, ரெண்டு கரு இருக்குனு டாக்டர் சொல்றாங்க”, என்று சந்தோஷமாக சொன்னாள் தேன்மொழி.
“பெருமாளே, நிஜமாவா கண்ணு”
“தேனு ரெட்டை பிள்ளையா?”
“ஆமா பாட்டி, ஆமா அத்தை. டாக்டர் அப்படி தான் சொன்னாங்க”
“பாத்தியா என் பேரனோட லவ்வை? எப்படி ரெட்டை பிள்ளையை கொடுத்துருக்கான்னு. இது புரியாம கானல் நீர்ன்னு கதை விட்டுட்டு இருந்த?”
“என்ன அத்தை? என்ன கானல் நீர்?”
“உனக்கு தெரியாதுள்ள வேணி? உன் மகன் என்ன கூத்து எல்லாம் பண்ணுனான் தெரியுமா?”
“கதிரா, அவன் என்ன செஞ்சான் அத்தை?”
“அந்த ராஜேந்திர பய இவளை கட்டி வச்சப்ப உன் மவன் வந்து இவளை காப்பாத்துனான்ல?”
“ஆமா, அன்னைக்கு சொன்னீங்களே”
“அது பாதி தானே சொன்னேன். அதுக்கப்புறம் இவளை மிரட்டி கட்டுனா அவனை தான் கட்டணும்னு வீட்ல பேச சொல்லி தேனை மிரட்டிருக்கான். இவளும் வீட்ல இவனை தான் கட்டுவேன்னு சொல்லி அடி வாங்கிருக்கா”
“என்னது? நம்ம கதிரா? அத்தை அவன் ஆசை இந்த அளவுக்கு இருக்கும்னு நான் எதிர் பாக்கலையே. தேனுன்னா அவனுக்கு உயிர்னு தெரியும். ஆனா இப்படி எல்லாம் செஞ்சானா? என்னால நம்பவே முடியலை”
“இப்ப சொன்னியே தேனுன்னா அவனுக்கு உயிர்னு. அது இந்த மகராசிக்கு தெரியாம அவன் கூட சண்டை போட்டு என் மேல அத்தானுக்கு காதலே இல்லை. அவனுக்கு என்னை பிடிக்காதுன்னு ஒரே புலம்பல்”
“கதிருக்கு தேன்மொழியை பிடிக்காதா? இவ இல்லாம அவன் சோறு தண்ணி இல்லாம கிடந்தது தான் நமக்கு தெரியுமே?”
“அது இவளுக்கு தெரியாதுள்ள? அப்புறம் அந்த பய இவ நினைவா சேத்து வச்சிருக்குற குப்பையை எடுத்து காட்டின அப்புறம் தான் நம்பினா”
“பாட்டி, அதை குப்பைன்னு சொல்லாத”, என்று சண்டைக்கு வந்தாள் தேன்மொழி.
“புருஷனை சொன்ன உடனே பொத்துக்கிட்டு வருதா? சொன்னாலும் சொல்லாட்டியும் அது குப்பை தான்”
“எனக்கு எப்படி பாட்டி தெரியும்? நான் அத்தானுக்கு என்னை பிடிக்காது, என்னை பழி வாங்க தான் கல்யாணம் பண்ணினாங்கன்னு நினைச்சேன். வில்லன் ரேஞ்சுக்கு பேசினாங்க தெரியுமா?”
“அவன் உன் மேல உயிரையே வச்சிருந்தான் கண்ணு. உன்னை கைல இருந்து கீழேய இருக்க மாட்டான். உனக்கு ஊட்டி விடணும், குளிக்க வைக்கணும்னு அடம் பண்ணுவான். நீ அவனை விட்டு போன அப்புறம் ஒரு வெறுமையான வாழ்க்கையை தான் அவன் வாழ்ந்தான் கண்ணு. உண்மையான சந்தோஷத்தையே உங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான் பாக்குறேன்.நம்ம குடும்பம் ஒண்ணு சேரணும்னு நான் நினைச்சதை விட கதிருக்கு நீ கிடைக்கணும்னு தான் நான் ரொம்ப ஆசைப் பட்டேன். நீ இல்லைன்னா அவன் ஒண்ணும் இல்லாம ஆகிருப்பான் கண்ணு”, என்று சொன்ன அன்னம் மேலும் கதிரைப் பற்றி சொன்னாள்.
“வெளிய போயிட்டு வந்துருக்கோமே, ரெஸ்ட் எடுக்காம இன்னும் கதை பேசிட்டு இருக்கா பாரு”, என்று கோபத்துடன் தங்கள் அறையில் அமர்ந்திருந்தான் கதிர்.
அப்போது உள்ளே வந்த தேன்மொழியை அவன் திட்ட போக அதற்கு முன்னாகவே அவனை இறுக அணைத்தவள் அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.
“ரெஸ்ட் எடுக்காம கதை பேசிட்டு இருக்கன்னு திட்டணும்னு நினைச்சேன் டி. இப்படி கொஞ்சினா எப்படி திட்ட?”, என்று கேட்ட கதிரும் அவளை அணைத்துக் கொண்டான்.
“இல்லை, பாட்டியும் அத்தையும் நம்ம சின்ன வயசுக் கதையை பேசிட்டு இருந்தாங்களா? அதான்”
“அதெல்லாம் பொறுமையா கதை கேக்கலாம். இப்ப நீ நல்ல ரெஸ்ட் எடுக்கணும் தேனு. ரெட்டை பிள்ளையை சுமக்குறதுக்கு உன் உடம்புல சக்தி வேணும்”, என்று அவளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தான் அவளின் காதல் கணவன்.