நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடல் அலைகள் கால்களை தொட்டு விட்டு சென்றன.
சுள்ளென்று சுட்டெரித்த சூரியன் கடலுக்குள் செல்ல இதமான கடற்கரை குளிர் காற்று மேனியை வருடியது.
மதுமிதா, கீதா இருவரும் கடல் அலையில் கால் நனைத்தவாறு நடந்து கொண்டிருந்தனர்.
“நீ தைத்து கொடுத்த பிளவுஸ் ரொம்ப நல்லா இருந்துச்சாம். பக்கத்து வீட்டு பொண்ணு ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணா. இன்னும் அஞ்சு பிளவுஸ் ஒரு வாரத்தில் தைத்துக் கொடுக்க முடியுமானு கேட்டா.”
“ஐயையோ. ஏற்கனவே எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னும் அஞ்சு பிளவுஸ் ,அதுவும் ஒரு வாரத்திலேயேவா? சான்சே இல்ல.”
“அவசரமா வேணும்னா வேற யார்கிட்டயாவது கொடுத்து தைத்து வாங்கிக்க சொல்லு. ஏற்கனவே ரொம்ப பிசியா இருக்கேன்.
அதுவும் நான் ஏனோதானோன்னு இந்த வேலையை செய்ய மாட்டேன். பார்த்து பார்த்து ரசித்து தான் செய்வேன். அதனாலதான் டைம் எடுக்குது. ஆனால் ரொம்ப அழகாகவும் வரும். கஸ்டமர் சந்தோஷமா வாங்கிட்டு போவாங்க.” என்று கூறியபடி ஓரிடத்தில் வந்து அமர்ந்தனர்.
அப்போது அங்கு நான்கு ஆண்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அதில் ஒருவன் இவர்களை பார்த்து
“ரெண்டுமே சூப்பர் பிகரா இருக்கு. எங்களுக்கு கம்பெனி கொடுக்கிறீர்களா?” என்று வழிந்து கொண்டே கேட்டனர்.
இருவரும் எதுவும் பேசாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பினர்.
ஆனாலும் அவர்கள் விடாமல் கீதாவின் பக்கத்தில் ஒருவனும் மதுமிதாவின் பக்கத்தில் இன்னொருவனும் உட்கார்ந்து கொள்ள மற்ற இருவரும் நின்று கொண்டிருந்தனர்.
“மது வா. எழுந்து போகலாம்.” என்று அவளது கையை பிடித்து இழுத்துக்கொண்டு கீதா நடக்க ஆரம்பித்தாள். ஆனால் நால்வரும் இவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.
இரு பெண்களும் வேகமாக நடந்தனர். எனினும் அந்த நால்வரில் இருவர் அவர்களுக்கு முன்பு வந்து நின்று வழிமறித்தனர்.
கீதா பயந்துபோய் எங்கேயாவது காவலர்கள் இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆனால் அவள் கண்களுக்கு எவரும் தென்படவில்லை.
சரி. கடற்கரையில் இருக்கும் மற்ற யாரையாவது உதவிக்கு கூப்பிடலாமா என்று பார்த்தாள்.
ஆனால் யாரும் இவர்களை கவனிக்கவில்லை. அப்படியே கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ளாமல் அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர்.
கீதாவை கவனித்த மதுமிதா, அவளது எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டாள்.
“இங்கே நமக்கு யாரும் ஹெல்ப்புக்கு வர மாட்டாங்க. நீ பயப்படாத.” என்று தோழிக்கு தைரியம் கூறினாள்.
“டேய் ஒழுங்கா இங்க இருந்து போயிடுங்க. அப்படி போகவில்லை என்றால் நான் போலீஸ்க்கு கால் பண்ணுவேன்.” என்று தன்னிடமிருந்த கைப்பேசியை எடுத்தாள்.
இதனை கவனித்த ஒருவன் அவளது கையை தட்டிவிட்டான்.
கைபேசி கடற்கரை மணலில் விழுந்தது. இன்னொருவன் கீதா கையில் வைத்திருந்த பையை பிடுங்கினான்.
“இப்போ என்ன செய்வீங்க?” என்று சிரித்தான் ஒருவன்.
“இப்போ நாங்க என்ன தப்பு பண்ணினோம் போலீசை கூப்பிட போற? என்று அலட்சியமாக கேட்டான் இன்னொருவன்.
“ஒழுங்கா வழியை விடுங்க. இல்லைனா நடக்குறதே வேற.” என்று எச்சரித்தாள் மதுமிதா.
“என்னடி செய்வ?” என்று கேட்டபடி மதுமிதாவின் கையை பிடித்தான் ஒருவன்.
“அவள் நெற்றியை பாருடா. எங்கேயோ போய் அடிபட்டு தழும்பு ஆகியிருக்கு. இந்த அம்மா வீர பரம்பரை போல இருக்கு. அதனாலதான் வாய் ரொம்ப நீளுது.” என்றான் இன்னொருவன் அலட்சியமாக.
“ஆமாண்டா. நான் வீரப்பரம்பரை தான்.” என்று கூறியவள் சொன்னதோடு நிற்காமல் அதை செயலிலும் காட்டினாள்.
அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் மதுமிதா.
இதனை எதிர்பார்க்காத அந்த நால்வரும் அதிர்ந்து “டேய் என்னையே அடிச்சுட்டா பாருடா. என்னையா அடிச்ச?” என்று அவளை நெருங்கினான்.
அப்போது அவன் மூக்கை நோக்கி ஓங்கி ஒரு குத்து குத்தினாள் மதுமிதா. அவன் தடுமாறவும், கீழே கிடந்த மண்ணை மதுமிதா, கீதா இருவரும் இரண்டு கைகளிலும் எடுத்து தங்களின் கண்களை மூடிக்கொண்டு நால்வரின் கண்களிலும் அடித்துவிட்டு கீழே கிடந்த கைப்பை, கைபேசி இரண்டையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்தனர்.
ஓடிவந்த இருவரும் மதுமிதாவின் காரில் ஏறி சூளைமேடு வந்து கொண்டிருந்தனர். அப்பாடியோ என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனி இவ்வளவு நேரம் இங்கு தனியா இருக்க கூடாது என்று சொன்னாள் கீதா.
அப்போது மதுமிதாவின் கைபேசி ஒலித்தது. கார் ஓட்டும்போது மதுமிதா போன் பேசுவது கிடையாது. எனவே கீதா அவளது கைபேசியை எடுத்து பேசினாள்.
வள்ளி தான் பேசினார். போனை எடுத்த கீதா
“மது கார் ஓட்டிக்கிட்டு இருக்கா. அதனாலதான் நான் போனை எடுத்தேன் ஆன்ட்டி. சொல்லுங்க.” என்று போனை எடுத்ததும் கூறிவிட்டாள்.
அவள் குரலை வைத்து கீதா என்று கண்டுபிடித்த வள்ளி
“ கீதா. மதுவிடம் வரும்பொழுது ஹோட்டலில் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லிடு. நான் வெளியே கோயிலுக்கு வந்தேன். கோயிலில் ரொம்ப கூட்டம். திரும்பி வர நேரமாகும். அதுக்கு மேலே சமையல் பண்ண முடியாது. அதனால நீங்க வர வழியில சாப்பாடு வாங்கிட்டு வந்துடுங்க. அப்பா என் கூட தான் இருக்கிறார். அண்ணனுக்கு போன் பண்ணினேன். அவன் எடுக்கவே இல்ல. நாங்க தரிசனம் முடிச்சுட்டு ஹோட்டலுக்கு போறதுக்குள்ள அந்த ஹோட்டலை மூடி விடுவான். அந்த ஹோட்டலில் வாங்கினாதான் இவங்க எல்லாருக்கும் பிடிக்கும். அதனால மதுமிதாவை வாங்கிட்டு வர சொல்லு.” என்று கூறிவிட்டு போனை வைத்தார்.
“என்ன கீதா? அம்மா என்ன சொல்றாங்க?” என்று கேட்டாள் மதுமிதா.
“உங்க தெருவுல இருக்குற ஹோட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வர சொன்னாங்க.”
“நாமலே அந்த ரவுடி பசங்க கிட்ட இருந்து தப்பிச்சி ஓடி வந்ததில் டயர்டா இருக்கிறோம். இப்போ அங்க வேற போகணுமா?” என்று சோர்வாக கேட்டாள் மதுமிதா.
“அது நமக்கு தானே தெரியும். அம்மாவுக்கு தெரியாதே.”
“ஆமால்ல. சரி நாம வாங்கிட்டு போயிடலாம்.” என்று கூறியவள் ஹோட்டலின் முன்பு வண்டியை நிறுத்தினாள்.
இருவரும் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.
“நீ இங்கேயே இரு கீதா. நான் போய் புட் ஆர்டர் பண்ணிட்டு வரேன்.” என்று விட்டு சென்றாள் மதுமிதா.
சிறிது நேரம் கழித்து வந்தவள் வரவேற்பறையில் காத்திருந்தாள்.
“என் நெற்றியில் தழும்பு ரொம்ப அசிங்கமா தெரியுதா?” என்று அதனை தடவியபடி கேட்டாள் மதுமிதா.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை மது. அவனுங்க நம்மளை வம்பிழுக்க அப்படி பேசி இருக்காங்க. அதுவும் அவன் அதைப்பற்றி பெருமையா தானே சொன்னான். விட்டுத்தள்ளு.” என்றாள் கீதா அவளை சமாதானப் படுத்தும் குரலில்.
“ எல்லாம் அந்த திருட்டு பையனால் வந்தது. இருக்கட்டும். அவன் எப்படியும் ஒரு நாள் என்கிட்ட சிக்குவான். அப்போ அவனை நான் சின்னாபின்னம் ஆக்குகிறேன்.” என்று சூளுரைத்துக் கொண்டாள்.
கீதா லேசாக சிரித்தாள்.
“எதுக்கு கீதா சிரிக்கிற?” என்று கோபமாக கேட்டாள் மதுமிதா.
“அது ஒன்னும் இல்லை.” என்று மறைக்க முயன்றாள் கீதா.
“ஒன்னும் இல்லைன்னு சொல்லும்போதே ஏதோ இருக்குன்னு தெரியுது. சொல்லு டி.” என்றாள் அதட்டலாக.
“நான் சொல்லிடுவேன். ஆனால் தேவையில்லாமல் உன்னை டென்ஷன் பண்ண வேண்டாம்னு பார்க்கிறேன்.” என்றாள் கீதா.
“இப்போ நீ விஷயத்தை சொல்லலைன்னாதான் நான் டென்ஷன் ஆவேன். ஒழுங்கா சொல்லிடு.” என்றாள் மதுமிதா.
“எனக்கு என்னமோ தினமும் திட்டிக்கிட்டே அவனை நீ லவ் பண்ற மாதிரி தெரியுது.” என்றாள் தயங்கி தயங்கி கீதா மெல்லிய குரலில்.
“என்னடி சொன்னே? உன்னை” என்று கீதாவின் கையை பிடித்து முறுக்கினாள்.
“அம்மா தாயே. உனக்கு கராத்தே, குங்பூ எல்லாம் தெரியும்னு எனக்கு தெரியும். அதையெல்லாம் நீ என்கிட்ட காட்டாதே.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்த அந்த நாலு ரவுடி பசங்க கிட்ட காட்டியிருந்தால் பிரயோசனமாக இருந்திருக்கும். அதை விட்டுட்டு அவங்ககிட்ட வீரப்பரம்பரைனு டயலாக் விட்டுட்டு ஓடி வந்துட்டு என்கிட்ட உன் வீரத்தை காமிக்கிற.” என்றாள் கீதா நக்கலாக.
“அவனுங்க நாலு பேரு இருந்தானுங்க. சுத்தி சுத்தி அடிக்கிறதுக்கு நான் என்ன சினிமாவில் வர்ற ஹீரோயினா?
ஏதோ ஒருத்தன், இரண்டு பேர் என்றால் அடித்திருக்கலாம். இவனுங்க எருமைமாடு மாதிரி நாலு பேர் இருக்கிறானுங்க. இவனுங்க கிட்ட சண்டை போடற அளவுக்கு நான் கராத்தே கற்றுக் கொள்ள வில்லை.
அதான் ஒரு அறை மட்டும் விட்டு அவனுங்களை திசைதிருப்பி ஓடி வர வேண்டியதா போச்சு.
கீதா. நீ பேச்சை மாற்றாதே. இனிமே விளையாட்டுக்கு கூட அவன் கூட என்னை சேர்த்து வச்சு பேசாத. ப்ளீஸ் என்னை அது ரொம்ப ஹர்ட் பண்ணுது. ப்ளீஸ்.” என்று சோகமான குரலில் கூறினாள்.
“சரி சரி நீ ஏன் டென்ஷன் ஆகுற? நான் இனி விளையாட்டுக்கு கூட அப்படி பேச மாட்டேன்.” என்றாள் கீதா.
அந்த ஹோட்டலில் இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஒரு ஜோடி காது கேட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை.