அத்தியாயம் 6
உன்னைக் கண்டதும்
இதயம் படபடக்கும்
புதிதான உணர்வை
உணர்ந்தேன் நான்!!!
புது எண்ணில் இருந்து இந்நேரம் அழைப்பு வரவும் திகைத்த மாயா நேரடியாக யுவனுக்கு தான் கனெக்சன் கொடுத்தாள். இது எப்போதும் செய்வது தான் என்பதால் யுவனும் லைனில் தான் இருந்தான்.
“ஹலோ யாரு?”, என்று ஹிந்தியில் கேட்டாள் மாயா.
“மாயா நான்…. நான் சுசீலா”, என்று திக்கி திணறினாள் சுசீலா.
பேசியது சுசீலா என்றதும் தூக்கம் பறந்தோட “சுசீலா நீங்களா? என்ன இந்நேரம்? ஒரே வீட்டுக்குள்ள இருந்து போனா? என்ன விஷயம்?”, என்று கேட்டாள் மாயா.
“நான் அவ வீட்ல இருந்து வந்தது இவளுக்கு தெரியாது போல?”, என்று எண்ணிய சுசீலா “வெரி சாரி மாயா. நான் இப்ப உங்க வீட்ல இல்லை. அங்க இருந்து தப்பிச்சு வேற ஒரு ஆள் கிட்ட மாட்டிக்கிட்டேன். யுவன் கிட்ட சொல்லி என்னைக் காப்பாத்த சொல்லேன்”, என்றாள்.
“என்ன சொல்றீங்க நீங்க? எதுக்கு இங்க இருந்து தப்பிக்கணும்? என்ன ஆச்சு? இப்ப எங்க இருக்கீங்க?”, என்று பதறினாள் மாயா.
“பதறாத மாயா. அவ காணாம போனா நீ எதுக்கு பயப்படுற? நம்ம கிட்ட இருக்குறது சேப் இல்லைன்னு நினைச்சு சொல்லாம கொல்லாம தப்பிச்சு போனவ கிட்ட இந்நேரம் எதுக்கு பேச்சு? லைனைக் கட் பண்ணு”, என்று இடையில் புகுந்து பேசினான் யுவன். பேசிக் கொண்டே மாயாவின் அறைக்குள் வந்து விட்டான்.
யுவன் குரல் கேட்டதும் “யுவன், யுவன் நீங்க லைன்ல தான் இருக்கீங்களா? நான் பண்ணது பெரிய தப்பு தான். பிளீஸ் என்னைக் காப்பாத்துங்கோ”, என்றாள் சுசீலா.
“உன்னை எப்பவும் காப்பாத்திட்டு இருக்க நான் என்ன நீ வச்ச ஆளா? படிச்சு படிச்சு சொல்லியும் ஓடிப் போன உன்னை தேடி அலையுறது தான் என்னோட வேலையா?”, என்று கோபத்துடன் கேட்டான் யுவன்.
“தப்பு தான்… தப்பு தான். எல்லாமே தப்பு தான். பிளீஸ் இந்த ஒரு தடவை மட்டும் காப்பாத்துங்க”
“இந்த கெஞ்சல், எல்லாம் என்கிட்ட வேலைக்காகாது புரிஞ்சிக்கோ. நீ ஒரு தடவை என்னோட உயிரைக் காப்பாத்தின. நான் பதிலுக்கு உன்னைக் காப்பாத்தினேன். அதுக்கப்புறமும் நான் உன்னை வீட்டை விட்டு போகச் சொல்லலை. நீயா போய் மாட்டிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பா?”
“யுவன் பிளீஸ், இக்கட்டான சூழ்நிலைல தான் உதவி கேக்குறேன். எனக்கு உங்களை விட்டா யாருமே இல்லை. மாயா…. சொல்லு மாயா பிளிஸ்”
“பையா சுசீ பாவம்”, என்றாள் மாயா.
“உனக்கு ஒண்ணும் தெரியாது மாயா. பாதில வந்தவ பாதிலே போயிட்டா. அதுவும் நாம துரத்தலை. அவ விதி அப்படி இருக்கும் போது நாம என்ன செய்ய முடியும்?”
“யுவன் பிளீஸ், இந்த ஒரு தடவை மட்டும் காப்பாத்துங்க. எனக்கு பயமா இருக்கு”
“பயமா? உனக்கா? நான் கடத்தி வச்ச அந்த பொறுக்கியையே காப்பாத்த சொல்லு. அவ நல்லவன்னு நினைச்சு தானே அவ கூட போன? இனி எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ காப்பாத்துன அவ உனக்கு நிறைய மாமனுங்களை காட்டுவா. அவங்க கூட போ. பை மாமி”, என்று நக்கலாக சொல்லி விட்டு போனை அணைத்தவன் மாயாவின் போனையும் அனைத்து வைத்தான்.
போனை வைத்ததும் அழுது கொண்டிருந்த சுசிலாவை நினைத்து கவலை தொற்றிக் கொண்டது அஸ்வதிக்கு.
“இவளுக்கும் என்னோட நிலை தானா? கடவுளே இவளைக் காப்பாத்து”, என்று வேண்டிக் கொண்டவள் “அழாத சுசீ, அடுத்து என்ன பண்ணன்னு யோசிக்கலாம். ரெட்டி உன்னை தேடுறதுனால வேற யாரும் உன்கிட்ட நெருங்க மாட்டாங்க. லிசா ரெட்டி கிட்ட பெரிய லெவல்ல பேரம் பேசி தான் உன்னை அனுப்புவா. அது வரைக்கும் உனக்கு டைம் இருக்கு”, என்றாள்.
“ம்ம், பயமா இருக்கு அஸ்வதி”
“ஒண்ணும் ஆகாது நம்பு டி”
“அத்தை மாமா கிட்ட பேசுனியா அஸ்வதி?”
“இல்லை சுசீ, அவங்க கிட்ட என்ன பேச சொல்ற? பணம் பணம்னு பணக்கார இடமா பாத்து அவனை எனக்கு கட்டி வச்சாங்க. அவங்களுக்கு போன் பண்ணினா என் வாழ்க்கை இப்படி ஆகிருச்சுன்னு சொல்ல வேண்டியது வரும். இந்த போனே ஒரு நாள் வந்தவன் கொடுத்துட்டு போனது. நான் அவங்க கிட்ட பேசி என்னைப் பத்தி ஏதாவது சொல்லி அவங்களுக்கும் கஷ்டம்னு தான் இது வரை அவங்க கிட்ட பேசலை. ஆனா வாங்கிய கடனுக்காக உன்னை வித்துருப்பாங்கன்னு இப்ப தானே தெரிஞ்சது. இனி எனக்கும் அவங்க அம்மா அப்பா கிடையாது. சரி நீ இங்க இரு. நான் வெளிய போய் என்ன நிலவரம்னு பாத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள் அஸ்வதி.
அவள் வெளியே சென்றதும் கதவை தாழிட்டு விட்டு ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தாள்.
அப்போது எவனோ ஒருவன் அஸ்வதியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
“இவன் யாரா இருக்கும்? அந்த ரெட்டியோட ஆளா இருக்குமோ?”, என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சுசீலா.
திடீரென்று அஸ்வதியின் தோள் மீது அவன் கை போட அவனுடன் ஒரு அறைக்குள் அஸ்வதி செல்லும் காட்சி சுசீலா கண்ணில் பட்டது.
அருவருப்புடன் கண்களை மூடிக் கொண்டாள் சுசீலா. அஸ்வதியை நினைத்து மனம் ஊமையாக அழுதது. “எப்படி இருந்தவ இவ? இன்னைக்கோ… கடவுளே… ஏன் சில பெண்களின் வாழ்க்கை இந்த இழி நிலைக்குச் செல்கிறது? இது எவ்வளவு பெரிய கொடுமை. கட்டியக் கணவனுடனே காதல் இல்லாமல் உறவாட முடியாது. ஆனால் இங்கே நிலையோ வாயில் சொல்ல முடியாது”, என்று அவளுக்காக வருந்தினாள்.
“அடுத்தவங்களுக்காக வருத்தப் படுற? நாளைக்கு உனக்கும் இதே நிலைமை தான்”, என்று எடுத்துரைத்தது மனசாட்சி.
“கடவுளே கிடைச்ச பாதுகாப்பை இப்படி உதறித் தள்ளிட்டு இங்க வந்து மாட்டிக்கிட்டேனே? இந்த மாதிரி கேவலமான தொழில் செய்ற லிசா உயிரோட இருந்தா என்ன, செத்தா என்ன? இவளைக் காப்பாத்த போய் இப்படியா வந்து சிக்குவேன்?”, என்று நொந்து போனாள்.
சிறிது நேரம் கழித்து வெளியே எதுவோ அரவம் கேட்கவும் எட்டிப் பார்த்தாள். அஸ்வதியுடன் சென்ற ஆள் அஸ்வதி கையில் பணத்தைக் கொடுத்து விட்டு சென்றான்.
கையில் இருந்த பணத்தை வெறித்து பார்த்த அஸ்வதி அதில் பாதியை அங்கிருந்த ஒரு கூடையில் போட்டு விட்டு மீதியை சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு சுசீலா அறையை நோக்கி வந்தாள்.
அஸ்வதி கதவை தட்டுவதற்குள் சுசீலா கதவை திறந்து அவளை கட்டிக் கொண்டாள்.
அவளை தன் தோளில் சாய்த்த படியே கதவை தாழிட்டாள் அஸ்வதி.
“எப்படி அஸ்வதி உன்னால இப்படி எல்லாம் முடியுது? பாக்குற எனக்கே கஷ்டமா இருக்கு”, என்றாள் சுசீலா.
“எனக்கு பழகிருச்சு. இது தான் இப்போதைக்கு என்னோட உழைப்பு”, என்று கசப்பான குரலில் சொன்னவள் “உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரவா?”, என்று கேட்டாள்.
“எனக்கு பசிக்கலை. சாப்பிடுற மன நிலையிலயும் இல்லை அஸ்வதி”
“சாப்பிடாம இருக்குறது தப்பு சுசீ. உனக்கு தப்பிக்க சந்தர்ப்பம் வந்தா கூட நீ தப்பிக்க உனக்கு தெம்பு வேணும். இரு எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
அதே நேரம் “பையா சுசீயை காப்பாத்தணும்”, என்றாள் மாயா.
“நீ கவலைப் படாத மாயா. நான் அப்படி எல்லாம் அவளை அம்போன்னு விட்டுற மாட்டேன். நான் பாத்துக்குறேன். நீ நிம்மதியா போய் தூங்கு”
“அவ வர வரைக்கும், எனக்கு தூக்கம் வராது. நான் பட்ட வலிகளை அவ தெரிஞ்சிக்க கூட வேண்டாம் பையா. சீக்கிரம் இங்க கூட்டிட்டு வந்துரு”
“சரி, அம்மா கிட்ட எதுவும் காட்டிக்க வேண்டாம். வீணா வருத்தப் படுவாங்க”
“சரி பையா”, என்று சொல்லி விட்டு படுத்தாள். அங்கிருந்து தன்னுடைய அறைக்கு சென்ற யுவன் அடுத்து என்ன செய்ய என்ற யோசனையில் ஆழ்ந்தான்.
அந்த நேரத்தில் பீமா ரெட்டி போன் ஒலித்தது. “யாரா இருக்கும்?”, என்று எண்ணிக் கொண்டு போனை எடுத்துப் பார்த்தான்.
தெரியாத எண் என்றதும் “யார் நீ?”, என்று கேட்டான்.
“என்னோட பேர் லிசா, நீங்க தேடிட்டு இருக்குற பொண்ணு என்கிட்ட தான் இருக்குறா”
“என்ன சொல்ற நீ? நிஜமாவா? அவளைத் தான் நான் வலை வீசி தேடிட்டு இருக்கேன்? என் கண்ணுல பட்ட அவ எப்படி தப்பிக்கலாம்? அவ எங்க இருக்கா?”
“இப்ப அவ என்னோட வீட்ல தான் இருக்குறா”
“எப்படி அவ உன்னோட வீட்டுக்கு வந்தா? என்னோட தம்பியை கொன்னு அவளை கூட்டிட்டு போயிருக்காங்க. எனக்கு தெரிஞ்சு அவளோட பேக்ரவுண்ட் பெருசு எல்லாம் கிடையாது. அவளுக்கு யாரோ உதவி செஞ்சிருக்காங்க. அவளோட அழகு அப்படி பட்டது. அவ அழகுக்காகவே அவளை அடையணும்னு நினைச்சேன். ஆனா என்னோட தம்பி சாவுக்கு காரணமானவனை அவளை வச்சு தான் நான் கண்டு பிடிக்கணும்”
“அவ யுவன் நாயக்கோட கோட்டைக்குள்ள இருந்தாள். இப்ப என் கஷ்டடில வச்சிருக்கேன்”
“என்ன? யுவனா?”
“ஆமா”
“யுவன்… யுவன்…”, என்று கத்திய ரெட்டி “கொஞ்ச நாளாவே என்னோட வழில அவன் குறுக்கிட்டுட்டு இருக்கான். அவனோட நோக்கம் என்னன்னு புரியலை. சரி அதை நான் பாத்துக்குறேன். எனக்கு அந்த பொண்ணு வேணும். என் ஆட்களை அனுப்பவா?”, என்று கேட்டான்.
“அதெல்லாம் வேண்டாம், யாருக்கும் தெரியாம நான் அவளை உங்க இடத்துக்கு கொண்டு வரேன். ஆனா எனக்கு அதனால என்ன யுஸ்னு தெரிஞ்சிக்கணுமே?”
“என்ன எதிர் பாக்குற? எவ்வளவு வேணும்?”
“பணம் எல்லாம் வேண்டாம். நானும் பொண்ணுங்களை வச்சு சின்னதா பிஸ்னஸ் பண்ணிட்டு தான் இருக்கேன். என்னை உங்க கூட சேத்துக்கணும்”
“அவ்வளவு தானே? நீ வா, நாம பேசலாம். நீ அவளை பத்திரமா கொண்டு வந்துருவியா?”
“கூட்டிட்டு வந்துருவேன். என்னோட ஆட்கள் என்கூட இருப்பாங்க”
“சரி உடனே கிளம்பி வா. அவ மேல எந்த கீரலும் விழக் கூடாது. நான் அட்ரஸ் அனுப்புறேன்”, என்று சொல்லி விட்டு வைத்தான் அந்த ஐம்பது வயது மதிக்கதக்க கிழவன்.
எதற்கெல்லாம் கூட்டணி போட வேண்டும் என்று தெரியாத விஷ ஜந்துவானா லிசா, ரெட்டியை பார்க்க தன்னை தயார் செய்து விட்டு நேராக சுசிலாவைப் பார்க்க சென்றாள்.