Hi friends, It was so hectic for me to write. So, have posted a small episode . Do read and comment. Thank you friends for your patience.
அதிகாலை 6 மணிக்கு அலாரம் அடித்தது. மதுசுதன் அலாரத்தை நிறுத்திவிட்டு ‘லீவு நாள் தானே’ என்று நினைத்துக்கொண்டு போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு திரும்பவும் படுத்தான்.
“சுதா சுதா” என்று சிதம்பரம் அழைப்பதை கேட்ட மதுசுதன் கோபமாக எழுந்தான்.
“அப்பா, சுதா சுதான்னு கூப்பிடாதீங்கனு எத்தனை தடவை சொல்றது?”
“இல்லைப்பா மதுமிதாவை மதுனு கூப்பிடுவோம். அதனால உன்னை மதுசூதன்னு முழுப் பெயரையும் சொல்லி கூப்பிட வேண்டியதா இருக்கு.
ஏதோ சில நேரம் மறந்துபோய் சுதான்னு கூப்பிடறேன். அது ஒரு தப்பா?”
“தப்புதான் எங்க ரெண்டு பேருக்கும் மதுல ஆரம்பிக்கற பேரை எதுக்காக வச்சீங்க?
அது உங்க தப்பு தானே? அதனால நீங்க என்னை முழு பெயரையும் சொல்லி கூப்பிடுங்க. அப்படி இல்லைனா மகனேனு பிளாக் அண்ட் வொயிட் படத்துல வர்ற மாதிரி பாசமா கூப்பிடுங்க. அதை விட்டுட்டு சுதா சுதான்னு கூப்பிட்டு என் மானத்தை வாங்காதீங்க.
போனவாரம் கோயில்ல வச்சு என்னை சுதான்னு கூப்பிட்டீங்க. நானும் ஏதோ ஞாபகத்துல என்ன அப்பான்னு கேட்டேனா, அங்க இருந்த நாலு பொண்ணுங்க என்னை ஒரு மாதிரி பாத்தாங்க.
ஏம்பா இப்படி பண்றீங்க?” என்று நொந்து போய் கேட்டான் மதுசுதன்.
“சரி சரி இனிமேல் அப்படி உன்னை கூப்பிட மாட்டேன். ஓகே வா?”
“சரி இப்ப எதுக்காக என்னை கூப்பிட்டீங்க? அதை சீக்கிரமா சொல்லுங்க. நான் தூங்கணும்.” என்றான் மதுசூதனன்.
“என்னது தூங்கணுமா? இன்னிக்கு என்ன கிழமை தெரியுமா? சனிக்கிழமை!” என்று அழுத்தமாக கூறினார் சிதம்பரம்.
“என்னது சனிக்கிழமையா? என்று வாயை பிளந்து கத்தினான் மதுசூதன்.
அவனது குரலை கேட்ட ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த அம்மாவும் மகளும் விழுந்து விழுந்து சிரித்தனர் .
“ஆமாண்டா சனிக்கிழமைதான். சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு வா. போகலாம். நமக்கு இன்னிக்கி தலைக்கு மேல வேலை இருக்கு. மறந்துட்டியா?” என்று ஞாபகப்படுத்தினார் சிதம்பரம்.
“நான் மறந்துட்டேன்னு சொன்னா விடவா போறீங்க? வாங்க போகலாம்.” என்று சலித்துக் கொண்டே போர்வையை அந்தப் பக்கம் தள்ளி எழுந்தான் மதுசூதன்.
மதுசுதன் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்
வழிந்துகொண்டிருந்தது. சிதம்பரம் நெற்றியில் வியர்வை ஆறு பெருக்கெடுத்து ஓடியது.
பக்கத்தில் இருந்த துண்டை எடுத்து இருவரும் கண்களையும் நெற்றியையும் துடைத்துக் கொண்டனர்.
“வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதா?” என்று கேட்டபடி அங்கு வந்தாள் மதுமிதா.
“ கேப்ப டி கேப்ப. இன்னிக்கி தான் சனிக்கிழமை ஆச்சே. நீ அப்படித்தான் கேட்ப.” என்று கடுப்புடன் பதிலளித்தான் மதுசூதன்.
“இல்லைனா திரும்பவும் எல்லாத்தையும் முதல்ல இருந்து பண்ணனும். அதனால ஒழுங்கா பண்ணிடுங்க. போனவாரம் மாதிரி சொதப்பனீங்க, திரும்பவும் பண்ண வெச்சுடுவோம் அவ்வளவுதான். சொல்லிட்டேன் பார்த்து நடந்துக்கோங்க.” என்று இருவரின் நிலையையும் பார்த்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு எச்சரித்து விட்டு சென்றாள் மதுமிதா.
வள்ளி “ஆனாலும் நீ அவங்கள ரொம்ப தான் படுத்துற. பாவம்” என்று வீட்டு ஆண்களுக்காக பரிந்து பேசினார் வள்ளி.
சிறிது நேரம் கழித்து காற்றில் பரவிய வாசத்தை நுகர்ந்த வள்ளி
“ போச்சுடா இன்னைக்கும் இப்படி ஆயிடுச்சா?” என்று கேட்டுக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தார்.
“இன்னுமா டா வெங்காயம் கட் பண்ணிட்டு இருக்க? சீக்கிரம்.” என்று அவசரப்படுத்தி கொண்டிருந்தார் சிதம்பரம்.
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க? கருகின வாசனை வருது பாருங்க.” என்றார் வள்ளி அவசரமாக.
“ஐயையோ” என்று பதறியபடி அடுப்பை அணைத்தார் சிதம்பரம்.
“கேஸ் ஸ்டவ்வை இப்படியா தூக்கி விடுவீங்க?” என்று இடுப்பில் கைவைத்தபடி கேட்டார் வள்ளி.
“நான் தூக்கி விடவில்லையே?” என்று கூறியபடி மகனைப் பார்த்தார் சிதம்பரம்.
“ஆமாப்பா நான்தான் தூக்கி விட்டேன். சீக்கிரமா வேலை முடியட்டும்னு தான் எவ்வளவு நேரம் இங்கேயே நின்னுகிட்டு இருக்கிறது ?”என்றான்.
“எவ்வளவு அறிவு டா உனக்கு? இப்போ எல்லாமே சுத்தமா முடிஞ்சு போச்சு.” என்றார் சிதம்பரம் சோகமாக.
“அது எல்லாம் ஒன்னும் முடியல. கொஞ்சம் இருங்க.” என்று கூறிய வள்ளி அந்த பாத்திரத்தை திறந்தார். அதில் உருளைக்கிழங்கு பட்டாணி அடியில் கருகி இருந்தது.
வள்ளி மேலே கருகாமல் இருந்த உருளைக்கிழங்கு பட்டாணியை கீழே கலக்காமல் எடுத்து இன்னொரு பாத்திரத்தில் வைத்தார்.
“பாருங்க உருளைக்கிழங்கு பட்டாணி வெந்து போச்சு. கீழே கருகிப் போனதை விட்டுடலாம். அவ்வளவுதான்.” என்று சாதாரணமாக முடித்தார்.
“சூப்பர் ஐடியா! எங்க ரெண்டு பேரையும் சேவ் பண்ணிட்டீங்க.” என்று தாயின் தோளை பிடித்துக்கொண்டான் மதுசுதன்.
“ஆமா நீ எதுக்கு வெங்காயம் கட் பண்ணிக்கிட்டு இருக்க?” என்று மகனை பார்த்து கேட்டார் வள்ளி.
“அதுவா அப்பா தான் வடை போடணும்னு சொன்னாரு.”
“என்னது வடையா? எதுக்குங்க இப்படி இழுத்து போட்டுக்கிட்டு கஷ்ட படுறீங்க” என்று கணவனை பார்த்து கேட்டார் வள்ளி.
“எனக்கு இதுல எந்த கஷ்டமும் இல்லை வள்ளி. உங்களுக்கு சமைச்சு போடுவது எனக்கு சந்தோஷத்தை தான் கொடுக்கும். நான் இதை ஹாப்பியா தான் பண்றேன். இவனுக்குதான் கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறேன்.
இருக்கட்டும். வாரத்திற்கு ஒரு நாள் தானே. இந்த ஒரு நாளாவது நாங்களும் சமையல் செய்து பார்த்தால் தான் அதில் இருக்கும் உழைப்பு எங்களுக்கு தெரியவரும். முக்கியமா இவனுக்கு.” என்று மகனை காண்பித்தார்.
“அப்பதான் உன்னோட சமையலை குறை சொல்லாமல் அதிலிருக்கும் உழைப்பை புரிந்துகொண்டு ஒழுங்கா சாப்பாட்டை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவான். ” என்று மகனைப் பார்த்தார்.
அவன்
“அப்பா சொல்றதுலயும் பாயிண்ட் இருக்கு நானே செய்யும்போதுதான் இது அவ்ளோ ஈஸி இல்லைன்னு எனக்கு புரியுது. எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. ஆனாலும் நீங்க இதை சாப்பிட்டு பார்த்து நல்லா இருக்குன்னு சொல்லும்போது கஷ்டமெல்லாம் பறந்து போய் ஹாப்பி ஆயிடுவேன்.” என்றான் மலர்ந்த முகத்துடன் மதுசுதன்.
“சரிம்மா நீங்க போங்க. நாங்க சமையல் எல்லாத்தையும் இன்னும் 10 நிமிஷத்துல முடிச்சு மணக்க மணக்க சாப்பாடு எடுத்துட்டு வருகிறோம்.” என்று தாயை சமையலறைக்கு வெளியே விட்டு விட்டு வந்து சொன்னபடியே இருவரும் சமையலை முடித்தனர்.
“எல்லோரும் வாங்க சாப்பிடலாம்.” என்று சிதம்பரம் அழைக்க இரு பெண்களும் வந்து அந்த டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.
“சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு பட்டாணி, வடை, பாயாசம், ரசம் இதுதான் மெனு.” என்று பாத்திரங்களை திறந்து காட்டி கூறினார் சிதம்பரம்.
“ம்ம்ம்” என்று வாசத்தை பிடித்த மதுமிதா
“எல்லாமே நல்ல வாசனையா இருக்கு.” என்ற மதுமிதா எல்லோருக்கும் தட்டு எடுத்து வந்து வைத்தாள்.
அவரவர் அவரவர்களுக்கு தேவையான சாதத்தை எடுத்து போட்டுக்கொண்டு சாம்பார், உருளைக்கிழங்கு, வடை என்று வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.
முதலில் ஆர்வமாக சாப்பிட்டது மதுமிதா தான்.
வாயில் வைத்த அவளுக்கு உணவின் ருசி அற்புதமாக இருப்பது தெரிந்தது.
“அப்பா சாப்பாடு செம டேஸ்டா இருக்கு. இந்தவாரம் கலக்கிட்டீங்க. கீப் இட் அப்.” என்று தந்தையின் தோளை தட்டி பாராட்டினாள் மதுமிதா.
“ என்னமோ அப்பா மட்டும்தான் சமையல் பண்ண மாதிரி பேசற. பாதி வேலை நான் பண்ணினேன். ஞாபகம் இருக்கட்டும்.” என்றான் மதுசுதன்.
“அதானே என் பையன் கஷ்டப்பட்டு ஹெல்ப் பண்ணி இருக்கான். நீ அவனைப் பத்தி எதுவுமே சொல்லலையே. நீ கவலைப்படாதே டா. நான் சொல்றேன்.” என்று கூறிய வள்ளி அவனது கையை குலுக்குவதற்காக கையை நீட்டினார்.
ஆனால் அதற்குள் சாப்பிட தொடங்கியிருந்த மதுசூதன்
“அம்மா சாப்பாடு பஸ்ட். சேகன் நெக்ஸ்ட்.” என்று கூறிவிட்டு திரும்பவும் சாப்பிட ஆரம்பித்தான்.
இதனை பார்த்த மதுமிதா, சிதம்பரம் இருவரும் சிரித்தனர்.
“ஆமாம் ஆமாம். இவன் கண்ணீர்விட்டு கட் பண்ணி கொடுத்த வெங்காயத்தால் தான் சாம்பார் ரொம்ப டேஸ்டா வந்துச்சு?” என்று மகனை பார்த்து கேட்டார் சிதம்பரம்
“ஓகே ஓகே. சும்மா பேசிக்கிட்டே இருக்காமல் என்னை கொஞ்சம் சாப்பிட விடுங்க.” என்று கூறிவிட்டு மதுசுதன் வடை பாயசம் இரண்டையும் எடுத்துப் போட்டுக் கொண்டான்.
“டேய் மக்கு அண்ணா எல்லோருக்கும் பாயசம் வேண்டும். நீயே காலி பண்ணிடாத.” என்று முன்னெச்சரிக்கையாக கூறினாள் மதுமிதா.
“பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறா பாரு இவ. உனக்கு வேணும்னா டைரக்டா கேளு.” என்று கூறியவன் அவளது தட்டில் கொஞ்சம் பாயசம் மற்றும் வடையை வைத்தான்.
“போதும் போதும். இப்படி சாப்பிட்டா, நான் வெயிட் போட்டு விடுவேன்.” என்று அவனை நிறுத்தினாள் மதுமிதா.
எனினும் தந்தை மற்றும் அண்ணனின் பாசத்தை கண்டு மகிழ்ந்தாள்.