அத்தியாயம் 7
என் காதலை நீ சந்தேகித்தால்
அதை என்னால் கட்டாயம்
நிரூபிக்க முடியும்
என் உயிரைத் தந்து!!!
சுசீலா இருக்கும் கார் செல்வதற்கு முன்பே லிசாவை கடத்திய கார் யுவனின் கோட்டைக்குள் நுழைந்தது. அதற்காகவே காத்திருந்த யுவன் கோட்டைக்குள் இருந்து வெளியே வந்தான்.
“பையா நீங்க சொன்ன வேலையை முடிச்சிட்டோம். கேசவ் கார் பின்னாடி வருது”, என்று சொன்னான் ஒரு பாடி கார்ட்ஸ்.
“என்ன நடந்தது? ரெட்டி பத்தி கண்டு பிடிக்க முடிஞ்சதா?”, என்று கேட்டான் யுவன்.
“இல்லை பையா. கொஞ்ச நேரத்துல பெரிய ரிஸ்க் ஆகிருச்சு”, என்று ஆரம்பித்து நடந்த கதையை சொன்னான் அவன்.
“குட், நல்ல முடிவு எடுத்துருக்கீங்க. ரெட்டி போனா போறான். இவளைப் பிடிச்சதே போதும். என்னோட கோட்டைக்குள்ள இருந்து தப்பிச்சிருக்கான்னா அதுக்கான தண்டனை என்னன்னு உங்களுக்கு தெரியுமே? அதை செய்ங்க. பாதாள அறைக்கு இவளை இழுத்துட்டு போங்க. இவ செஞ்ச காரியத்துக்கு இவ வருந்தனும்”, என்று யுவன் உத்தரவிட்டதும் மீண்டும் பழைய இடத்துக்கே இழுத்துச் செல்லப் பட்டு கட்டப் பட்டாள் லிசா.
அடுத்த கட்ட நடவடிக்கையாக அவளுக்கு தண்டனை வழங்க பட ஆரம்பித்தது. பல பெண்களின் வாழ்வை சீரழித்த லிசா வலி தாங்க முடியாமல் கதற ஆரம்பித்தாள்.
அப்போது சுசீலா வரும் கார் கேட்டுக்குள் நுழைய அங்கிருந்த செக்யூரிட்டியிடம் எதையோ சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான் யுவன்.
கேசவ் உள்ளே வந்து காரை நிறுத்தியதூம் அனைவரும் இறங்கினார்கள்.
யுவன் தனக்காக அங்கே காத்திருப்பான் என்று எண்ணிய சுசீலா அவன் இவர்கள் காரைக் கண்டதும் அவன் திரும்பி போவதைப் பார்த்து ஏமாந்து போனாள்.
“என் முகத்தை கூட பாக்காத அளவுக்கு இவ்வளவு வெறுப்பா? அந்த லிசாக்காக இங்க காத்திருந்தவன் நான் வரது தெரிஞ்சும் உள்ள போய்ட்டானே?”, என்று எண்ணிக் கொண்டு அங்கேயே நின்றாள்.
“என்ன ஆச்சு? பையா உள்ள போயிட்டாங்க. எங்க கிட்ட எதுவுமே கேக்கலையே?”, என்று கேட்டான் கேசவ்.
“இப்ப வரைக்கும் பையா நின்னாங்க. லிசாவுக்கு தண்டனை கொடுக்க சொல்லிட்டு, இப்ப யாரும் என்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாங்க”, என்றான் செக்யூரிட்டி.
தன்னைப் பார்க்க பிடிக்காமல் தான் உள்ளே சென்று விட்டான் என்று நன்கு புரிந்தது சுசிலாவுக்கு.
மனம் பாரமாக கணக்க அந்த வீட்டுக்குள் நுழைந்தாள். முதல் முறை வந்த போது இருந்த எந்த பயமும் தயக்கமும் இப்போது அவளுக்கு இல்லை. வீட்டில் இருக்கும் மூவரும் தன்னை என்ன நினைப்பார்கள் என்று அவளுக்கு கவலை தான் அதிகம் இருந்தது.
வீட்டுக்குள் சென்றதும் யாரையும் பார்க்காமல் அவளுடைய அறைக்குச் செல்ல அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. ஹாலிலே எதையோ யோசித்த படி இருக்க அப்போது அங்கே ஓடி வந்தாள் மாயா.
“சுசீ”, என்று கத்திக் கொண்டு ஓடி வந்தவள் சுசிலாவை இறுக அனைத்துக் கொண்டாள்.
சுசிலாவும் மாயாவை அணைத்துக் கொண்டாள். எப்படிப் பட்ட அன்பை நான் மிஸ் பண்ணிருக்கேன்?”, என்று அவள் மனதே அவளை திட்டித் தீர்த்தது.
“சாரி மாயா, என்னை மன்னிச்சிறு”, என்றாள் சுசீலா.
“ஐயோ என்ன மன்னிப்பு எல்லாம்? நீங்க இங்க இருந்து போனதை நினைச்சு எனக்கு தூக்கமே வரலை. இப்ப நீங்க திரும்பி வந்த அப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருக்கு. இனி இப்படி பண்ணாதீங்க”
“சரி”
“உங்களுக்கு என்ன கஷ்டம்னு சொன்னா நான் சரி செஞ்சு தரேன். இங்க இருக்குறது தான் நமக்கு பாதுகாப்பு. இது பையாவோட சிறகுக்கு அடியில் இருக்குற மாதிரி பாதுக்காப்பைத் தரும். எதனால இங்க இருந்து நீங்க போனீங்க?”
“இங்க நிறைய கொலை நடக்குது மாயா. என்னால அதை பாத்துட்டு இருக்க முடியலை. பயத்துல தான்…”
“என்கிட்ட நீங்க விளக்கம் கேட்டுருக்கலாம்ல? நான் காரணம் சொல்லிருப்பேனே?”
“நீங்க உங்க அண்ணனுக்கு சாதகமா பேசுவீங்கன்னு நினைச்சு தான் உங்க கிட்ட பேசலை”
“பையா ரொம்ப நல்லவங்க சுசீ. அவங்க செய்றது எல்லாமே சரியா தான் இருக்கும். நான் பையாவோட தங்கச்சி கிடையாது”
ஏற்கனவே யுவனுக்கு குடும்பமே இல்லை என்று அஸ்வதி சொல்லியிருந்ததால் அதிர்ச்சியாக இல்லாமல் குழப்பமாக மாயாவைப் பார்த்தாள் சுசீலா.
“உண்மை தான் சுசீ, பையா என்னோட பிறந்தவங்க கிடையாது. சாரும்மாவும் எங்களுக்கு அம்மா கிடையாது. எப்படி இக்கட்டான சூழ்நிலைல நீங்க இங்க வந்தீங்களோ அப்படி பையா கிட்ட வந்தவங்க தான் நானும் சாரும்மாவும். பையா ரொம்ப நல்லவங்க சுசீ. அவங்களை இனி தப்பா நினைக்காதீங்க. நான் இன்னொரு நாள் எல்லா உண்மையும் சொல்றேன். இப்ப கூட பையா, சுசீ வந்துட்டா. அவளைப் போய் பாருன்னு சொல்லி தான் அனுப்பினாங்க. இப்ப கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க வாங்க”, என்று சொல்லி அழைத்தாள் மாயா.
“மாயா கிட்ட நான் வந்துருக்குறதைச் சொன்ன யுவன், எதுக்கு என்னைப் பாக்க வரலையாம்? அப்படின்னா என் மேல யுவனுக்கு அக்கறை இருக்கு. அதே நேரம் கோபமும் இருக்கு போல”, என்று புரிந்து கொண்டாள் சுசீலா.
உண்மையும் அதுவே தான். சுசிலாவைக் கண்டதும் கோபத்தை அவளிடம் காட்டி விடுவோமோ என்று எண்ணி தான் விலகி ஓடினான் யுவன்.
“இவ எப்படி என்னை விட்டு போகலாம்?”, என்ற கோபம் அவனை ஆட்டிப் படைத்தது.
ஏனோ அவள் மீண்டும் வீட்டுக்கு வந்தது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. அதே நேரம் சுசீலா மீண்டும் இது போல தப்பான முடிவை எடுக்க கூடாது என்று எண்ணியவன் அவளிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.
தன்னுடைய அறைக்குச் சென்றதும் அழுப்பு தீரக் குளித்த சுசீலா மாயா கொண்டு வந்த உணவை உண்டு விட்டு கட்டிலில் அமர்ந்தாள்.
பல நினைவுகள் அவளை ஆட்டிப் படைத்தது. அவளால் இன்னும் யுவன் வீட்டுக்கே திரும்பி வந்ததை நம்ப முடியவில்லை.
எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ள பார்த்தாள்? படித்து படித்து சொன்னானே? இங்கிருந்து சென்றால் ஆபத்து என்று.
கேட்காமல் ஜான்சி ராணி போல் களத்தில் இறங்கி ஒரு கொடூரமானவளை காப்பாற்றி, கடவுளே அவள் பொம்பளையா? அரக்கி. எத்தனை பெண்களின் வாழ்க்கையை குதறியிருக்கிறாள்? அதில் அஸ்வதியும் அடக்கமே.
அவள் மனம் உலைகலமாக கொதித்தது. அம்மா அப்பா இல்லையென்றாலும் அமைதியான வாழ்க்கையை தானே வாழ்ந்து கொண்டிருந்தேன்? எதற்காக எனக்கு இந்த நிலைமை. இந்த ஊருக்கு எல்லாம் நான் வருவேன் என்று கனவா கண்டேன்?
ஐயோ இந்த மாமாவும் அத்தையும் எனக்கு கொடுமை செய்ததற்காக தான் அஸ்வதிக்கு இந்த நிலைமையா? ஆளே மாறிப் போய்ட்டாளே? இவளைப் பற்றிய விஷயம் மாமாவுக்கும் அத்தைக்கும் தெரிஞ்சா என்ன ஆவாங்க?
தெய்வம் நின்று கொள்ளும் என்பது இது தானா? ஆனாலும் அஸ்வதியை நினைச்சு என்னால சந்தோஷப் பட முடியலையே?
அஸ்வதியைக் காப்பாற்ற முடியுமா? யுவனிடம் கேக்கலாமா?
ஆனால் அவன் என்னை காப்பாற்றியதே பெரிய விஷயம்?
அவனுக்கு எவ்வளவு பெரிய துரோகம் செஞ்சிட்டேன்? என்னை இனி மன்னிப்பானா என்று பலவிதமான எண்ணங்கள் அவள் மனதில் உலா வந்தது.
தான் இப்போது பாதுகாப்பான யுவனின் கோட்டைக்குள் இருக்கிறோம் என்பதை அவளால் சுத்தமாக நம்ப முடியவில்லை.
இவள் யோசனையில் மூழ்கியிருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தாள். யுவன் தான் முதலுதவி பெட்டியுடன் உள்ளே வந்தான்.
அவனை நிமிர்ந்து பார்க்கவே அவளுக்கு தயக்கமாக இருந்தது. அவளுடைய குனிந்த தலையையே பார்த்த படி அவளை நெருங்கி வந்தான் யுவன் நாயக்.
அவன் அருகில் வந்தும் கூட அவனை நிமிர்ந்து பார்க்காமல் இருந்தாள் சுசீலா.
அவள் அருகே கட்டிலில் அமர்ந்தான். இப்போது அவனை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அந்த நீல விழிகள் அவளிடம் எதுவோ கதை பேச அது புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளைத் தான் பார்த்தான்.
இருவர் பார்வையும் பின்னிப் பிணைந்தது. அவன் கண்களில் இருந்த ஒரு வித நேசம் அவளை மூச்சடைக்க செய்தது.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ முதலில் யுவன் தான் அந்த முதலுதவி பெட்டியை எடுத்து மருந்தை வெளியே எடுத்தான்.
பின் அவள் கைகளைப் பற்றி அவள் முழங்கையில் இருந்த காயத்துக்கு மருந்து போட ஆரம்பித்தான்.
“இவன் எப்படி இந்த காயத்தைப் பார்த்தான்? இது அன்னைக்கு அந்த கட்டுக்குள் ஓடினப்ப வந்த காயமாச்சே? அஸ்வதி கூட இந்த காயத்தை கவனிக்கலை? ஆனா இவன் சரியா கவனிச்சிருக்கானே”, என்று எண்ணினாள்.
அவனோ காரியாமே கண்ணாக மருத்திட்டுக் கொண்டிருந்தான். அவன் செய்கைகளை நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் மருந்திட்டதும் எறிந்ததால் “ஸ்ஸ்”, என்றாள்.
“ரொம்ப வலிக்குதா?”, என்று மென்மையாக கேட்டான் யுவன்.
அவனுடைய அக்கறையான குரலுக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக தலை குனிந்தவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். “என்னை மன்னிச்சிரு சுசீ. நீ இங்க இருந்து தப்பிக்கும் போதே நான் உன்னை போக விட்டுருக்க கூடாது. நீ யார் எப்படின்னு உண்மையை தெரிஞ்சிக்கணும்னு தான் உன்னை போக விட்டேன். அந்த லிசா உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டாளா? என்னை மன்னிச்சிரு”, என்றான் யுவன்.
அவள் விழிகள் வியப்பால் விரிந்தன. அவள் இங்கிருந்து தப்பித்து சென்றதற்கு, அதுவும் அந்த லிசாவை காப்பாத்தியதற்கு அடிப்பான், கோப படுவான் என்று அவள் எதிர் பார்த்தாள். ஆனால் அவனோ இத்தகையை சூழ்நிலையை அவளுக்கு உருவாக்கிருக்க கூடாது என்று மன்னிப்பு கேட்கிறான். இதை அவள் எதிர் பார்க்கவே இல்லை. அவனை எந்த வகையில் சேர்க்கவாம்?
“இது எத்தகைய அன்பு? இந்த அன்பான கோட்டையை விட்டு, அன்பானவர்களை விட்டு சென்று புதை குழியில் சிக்கி சின்னா பின்னாமாக பார்த்தோமே?”, என்று எண்ணியவளின் கண்கள் கலங்கியது.
நொடிக்கொரு தரம் கொலை செய்யக் கூட அஞ்சாதவன் இப்போது அவளிடம் மன்னிப்பு கேட்கிறான். அதுவும் அவளுக்காக பார்த்து. இவன் தான் எவ்வளவு நல்லவன்? இவனா கொடூரன்? இவனையா கெட்டவன் என்று எண்ணினோம்?
அவனையே வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் காயங்களுக்கு மருந்திட்டு விட்டு நிமிர்ந்து அவளை பார்த்தான். அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுசீலா. இப்போது அவளுடைய பார்வைக்கு அர்த்தம் தெரியாமல் அவன் விழித்தான்.
அவன் பார்த்ததும் அவள் விழிகள் தாழ்ந்தன. கண்கள் மின்ன “இப்ப என்னை நம்புறியா சுசீ?”, என்று கேட்டான் யுவன்.
“ம்ம்”, என்ற படி தலை அசைத்தாள். அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் தலை குனிந்தே இருந்தது. மெதுவாக கையை அவள் முகத்தின் அருகே கொண்டு சென்று அவள் நாடியை நிமிர்த்தி தன்னைக் காண வைத்தான்.
கண்களை மூடியவாறே நிமிர்ந்து அமர்ந்தாள். அந்த நேரத்தில் அவ்வளவு அழகாக இருந்தாள் சுசீலா. அவளையே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நாடியில் பதிந்திருந்த அவனுடைய கைகளை எடுத்ததும் கண்களை திறந்து அவனைப் பார்த்தாள்.
“தேங்க்ஸ் சுசீ என்னை நம்புறதுக்கு. உண்மையிலே என்னை தொட்டுட்டு போற காத்து கூட உனக்கு கெடுதல் நினைக்காது சுசீ. இதை நீ நம்பனும். நான் செய்றது எல்லாம் தப்புன்னு தெரிஞ்சும் நான் செய்றேன்னா அதுக்கு பின்னாடி வலுவான காரணம் இருக்குனு புரிஞ்சிகோ சுசீ. என்னை நம்புவ தானே?”
“ம்ம்”
“சரி அப்புறம் பேசலாம். நீ ரொம்ப களைப்பா இருக்க. ரெஸ்ட் எடு”, என்றவன் அங்கிருந்து எழுந்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “சாரி”, என்று மனதார முணுமுணுத்தாள். அதில் அவன் இதழ்கள் மலர்ந்தது. தன்னையே கட்டுப் படுத்த முடியாமல் அவளை நெருங்கி அவள் நெற்றியில் தன்னுடைய இதழ்களை பதித்தவன் “குட் நைட்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
அந்த முத்தத்தில் அவளுக்கு இது வரை கிடைக்காத ஒரு அரவணைப்பை பெற்றது போல உணர்ந்தாள் சுசீலா. எதனால் அப்படிச் செஞ்சான்? இதற்கு என்ன அர்த்தம் என்று குழம்பினாள். அதை அவள் எதிர் பார்க்கவும் இல்லை. திகைத்து அப்படியே அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து தான் அஸ்வதியை பற்றி அவனிடம் சொல்ல வில்லையே என்று நினைவு வந்தது. அவனிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவள் கீழே வரும் போது அவன் வெளியே சென்று விட்டான் என்று தெரிந்தது.