அவன் திரும்பி வந்த பிறகு சொல்ல வேண்டும் என்று எண்ணி மீண்டும் அறைக்கு வந்து கட்டிலில் படுத்தவள் சிறிது நேரத்தில் அவளையே அறியாமல் நன்கு தூங்கி விட்டாள்.
அவள் நல்ல தூக்கத்தில் இருக்கும் போது அதே டுமீல் என்ற துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் கண் விழித்தவளுக்கு இப்போது மனதில் எந்த பயமும் எழவில்லை. மெதுவாக எழுந்து ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்தாள்.
அங்கே லிசாவின் பிணத்தை புதைப்பதற்கு குழியைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள். தரையில் தலை தொங்கிய நிலையில் கிடந்தாள் லிசா.
கண் முன்னே ஒரு கொலை நடந்திருக்கிறதே என்று இந்த முறை லிசாவுக்காக சுசிலாவின் மனதில் பயம் உருவாகவில்லை. அவளுக்காக பரிதாபமும் உருவாகவில்லை.
பல பேரின் வாழ்க்கையை சூறையாடிய ஒரு ராட்சசி இறந்து விட்டாள் என்ற நிம்மதியுடன் திரும்பி கட்டிலை நோக்கி நடந்தாள்.
“என்னை அந்த ரெட்டி கிட்ட வித்து நீ பணம் சம்பாதிக்க தானே நினைச்ச? எத்தனை பொண்ணுங்களை அவங்க உடலை விக்குற நிலைக்கு தள்ளின? உனக்கு இது தேவை தான்”, என்று மனதார எண்ணினாள் சுசீலா. லிசாவின் இறப்புக்காக சந்தோஷமும் பட்டாள்.
“இப்படிப் பட்டவளை கொன்னா என்ன தப்பு? யுவன் செய்யுறதுல தப்பே கிடையாது. இதுவெல்லாம் விஷ கிருமிகள். இவங்க சாகுறது தான் நல்லது. யுவன் நல்லவன். ரொம்ப நல்லவன்”, என்று எண்ணிய படியே அமர்ந்திருந்தாள். அஸ்வதி நினைவு அவளை ஆட்டிப் படைத்தது.
அவளுடன் ஒரே வீட்டில் பல வருடம் வாழ்ந்திருக்கிறாள். இருவரும் அன்புடன் கட்டிப் பிடித்து உருள வில்லை என்றாலும் இருவருக்கும் எந்த சண்டையும் வந்தது கிடையாது. எங்கு சென்றாலும் ஒன்றாகவே சுற்றுவார்கள். அவர்களுக்குள்ளே ஒரு தோழமை இருக்கும். அதை அவர்கள் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். அதை அவர்கள் உணர்ந்தார்களா இல்லையா என்பது கூட ஆச்சர்யமே.
தன்னுடன் இருந்த அஸ்வதி திருமணம் என்றதும் சந்தோசத்துடன் துள்ளிக் குதித்ததும் மாப்பிள்ளையாக வரப் போறவனைப் பார்க்க துடித்ததையும் அருகில் இருந்து கண்டாளே. அப்படிப் பட்டவன் அல்லவா இன்று அவள் வாழ்வுக்கே உலை வைத்து விட்டான்.
எப்படியாவது அவளை இங்கே அழைத்து வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவன் வரவுக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவன் கார் வரும் சத்தம் கேட்டது.
அவன் அறைக்குள் அவன் சென்றது தெரிந்ததும் அவன் அறைக் கதவை தட்டினாள்.
கதவைத் திறந்த யுவன் சுசிலாவைக் கண்டதும் திகைத்து பின் “உள்ள வா”, என்று புன்னகையுடன் அழைத்தான்.
அவன் புன்னகையை ரசித்த படியே மௌனமாக அவன் பின்னே சென்றவள் அவனுக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்தாள்.
“சொல்லு சுசீ”, என்றான் யுவன். அவனுக்கு அவள் எதற்காக வந்திருப்பாள் என்று குழப்பமாக இருந்தது.
“உங்க கிட்ட பேசுறதுக்கு கூட எனக்கு தகுதி கிடையாது. நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கேன்னு தெரிஞ்சும் என்னை காப்பாத்திருக்கீங்க? நான் பண்ணின தப்பு எனக்கு இப்ப தெளிவா புரியுது. எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி”, என்று சுசீலா சொன்னதும் அவன் மனம் திக்கென்று அதிர்ந்தது.
“திருப்பியும் இங்க இருக்க பிடிக்கலை. என்னை எங்கயாவது அனுப்பிருங்கன்னு சொல்ல வந்திருக்காளோ?”, என்று அவனுக்கு பயமாக இருந்தது.
இந்த பயம் அவளை அவனுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று அவனுக்கே உணர்த்தியது. இந்த ஈர்ப்பு எதனால் வந்தது, எப்போது வந்தது என்று அவன் அறியான். ஆனால் அவள் மேல் இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வந்ததை அவன் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.
ஏனோ அவள் இந்த வீட்டில் இருந்து செல்லக் கூடாது என்று அவன் ஆசைப் பட்டான். அவள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க என்ன சொல்ல என்று தெரியாமல் “நீ உண்மையை புரிஞ்சிக்கிட்டாலே போதும் சுசீ. மன்னிப்பும் வேண்டாம், நன்றியும் வேண்டாம்”, என்றான்.
“இது தான் உங்க பெருந்தன்மை. அப்புறம் நீங்க எனக்கு இன்னொரு உதவி செய்யணும்”
“நானே இதைப் பத்தி பேசணும்னு நினைச்சேன் சுசீ. உனக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னு தெரியும்…”, என்று யுவன் சொன்னதும் “அது இல்லை…”, என்று ஏதோ சொல்ல வந்தாள் சுசீ.
“நான் பேசி முடிச்சிறேன் சுசீ, நாங்க இருக்குறது நிழல் உலகம். இங்க எப்ப என்ன நடக்கும்னு தெரியாது. நான் நல்லவனா கெட்டவனான்னு தெரியாது. ஆனா நான் யாருக்கும் கெட்டதுன்னு நினைச்சு எதுவும் செய்யலை. ஆனா நீ வாழ்ந்த விதம் வேற. உனக்கு இங்க இருக்க கண்டிப்பா பிடிக்காது தான். உன்னை திருப்பியும் இங்கயே இருக்க வச்சா நீ திருப்பியும் தப்பிக்கணும்னு நினைப்ப. இந்த தடவை உன்னை வேணும்னு தான் தப்பிக்க வச்சேன். இன்னொரு தடவை நீயா கூட தப்பிச்சு ஏதாவது ஆபத்துல மாட்டிக்கலாம். அதனால நானே உன்னை இங்க இருந்து அனுப்பிறேன். கவலைப் படாதே, உனக்கு பாதுகாப்பு எல்லாம் நானே செஞ்சு தரேன். நீ எங்க போக விருப்ப படுறன்னு மட்டும் சொல்லு”
“சாகுற வரைக்கும் இங்க இருந்து போக கூடாதுன்னு நினைக்கிறேன் போதுமா?”, என்றாள் சுசீலா.
“சுசீ….”, என்று ஆனந்தமாக அதிர்ந்தான் யுவன்.
“உண்மைலே தான் சொல்றேன் யுவன். எனக்கு இங்க இருந்து போக பிடிக்கலை. நீங்களா அனுப்பினாக் கூட என்னால போக முடியாது. நான் வேற ஒண்ணு கேக்க வந்தேன்”
“நிஜமாவா? ரொம்ப சந்தோஷம்”, என்று அவன் முகம் புன்னகையில் மலர்ந்தது.
“நான் இங்க இருக்க போறேன்னு சொன்னது இவங்களுக்கு இவ்வளவு சந்தோஷமா? எதனால இப்படி?”, என்ற கேள்வி அவளுக்குள் உருவானது. அவன் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தாள். அந்த நீல விழிகள் அவளிடம் எதையோ யாசித்தது.
“வேற என்ன ஹெல்ப் வேணும்? சொல்லு சுசீ. நான் செஞ்சு தரேன்”, என்று அவன் உதடுகளும் மொழிந்தன.
“அன்னைக்கு ஒரு நம்பர்ல இருந்து கால் பண்ணேன்ல? அது அஸ்வதியோட நம்பர். அஸ்வதி என்னோட மாமா பொண்ணு”
“ஆன். அந்த பொண்ணுகிட்ட நானும் பேசுனேன். உன்னைக் காப்பாத்த சொல்லி என்கிட்ட கெஞ்சி கேட்டுச்சு. ஆனா அவ தான் உன்னை வித்த அந்த மாமாவோட பொண்ணா?”
“ஆமா, அம்மா அப்பா பண்ணின பாவத்துக்கு இவ என்ன பண்ணுவா. அஸ்வதி வாழ்க்கையே சீரழிஞ்சு போச்சு. என்னைக் காப்பாத்த நீங்க வந்த மாதிரி அவளையும் யாராவது காப்பாத்திருந்தா இந்நேரம் அவ வாழ்க்கை இப்படி அமைஞ்சிருக்காது. பிளீஸ் யுவன். அவளையும் காப்பாத்துங்களேன். எனக்காக”
அனைவரும் அவனை பையா என்றோ சார் என்றோ அழைக்க அவள் அழைத்த யுவன் என்ற தன்னுடைய பெயர் அவனுக்கு அதிக சந்தோசத்தைக் கொடுத்தது.
“காலைல லிசாவை பிடிச்சு அடிச்சு விசாரிச்சதுல அவளோட ஆட்கள் எந்த இடத்துல எல்லாம் பொண்ணுங்களை லாக் பண்ணி வச்சிருக்காங்கன்னு உண்மையைக் கக்கிட்டா. அந்த இடத்துக்கு எல்லாம் ஆள் அனுப்பி தப்பிக்க நினைக்கிற பெண்களை எல்லாம் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பிட்டோம். அதுல நீ சொன்ன பொண்ணும் அடக்கம். அவளை இங்க வான்னு தான் கூப்பிட்டேன். ஆனா, வேண்டாம். என்னைப் பாக்குறப்ப எல்லாம் எங்க அம்மா அப்பா பண்ணின துரோகம் தான் சுசிலாவுக்கு நினைவுக்கு வரும். நான் இப்படியே என்னோட வாழ்க்கையை ஓட்டிருவேன்னு சொல்லுச்சு. உன்னை நான் நல்லா பாத்துக்கனும்னு சொன்னா”, என்று அஸ்வதி சொன்னதை சொன்னதும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள் சுசீ. அவள் காப்பாற்றப் பட்டது சுசிலாவுக்கு அவ்வளவு மனநிறைவைக் கொடுத்தது. அந்த சந்தோஷம் கண்ணீராக வெளிப்பட்டது.
அஸ்வதியை காப்பாற்றியதைச் சொன்னால் சுசீலா சந்தோஷப் படுவாள் என்று அவன் நினைக்க அவளோ அழுது கொண்டிருந்தது யுவனுக்கு திகைப்பைக் கொடுத்தது.
“ஏய், சுசீ என்ன இது? சின்ன பிள்ளைத் தனமா அழுதுகிட்டு?”, என்று யுவன் கேட்டதும் அவன் கைகளைப் பற்றிக் கொண்டவள் அதிலே முகம் புதைத்து அழுதாள்.
தனக்கு நேர்ந்த ஆபத்து, அஸ்வதியின் அவல நிலை என அனைத்தும் அவளுக்கு அழுகையை வர வழைத்தது.
அவள் அப்படி அழுததை தாங்க முடியாமல் அவனுடைய கைகள் அவளை அணைத்துக் கொண்டது.
அவள் பாரம் தீரும் மட்டும் அவன் நெஞ்சில் சாய்ந்து அழுது தீர்த்தாள் சுசீலா. அவள் தன்னுடைய கைக்குள் இருப்பது அவனுக்கும் ஒரு மன நிறைவைக் கொடுத்தது.
ஒன்று இரண்டு அல்ல. நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்வைக் காப்பாற்றியிருக்கிறான் யுவன். ஆனால் அத்தனை பெண்களில் யார் மீதும் வராத உணர்வு சுசீலா மேல் அவனுக்கு வந்திருந்தது. அந்த உணர்வுக்கு அவனே வடிவம் கொடுக்க வில்லை.
தன் தோள் மீது சாய்ந்து அழும் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தான். ஏனோ இத்தனை வருஷம் சாய்ந்து அழ தோள் கிடைக்காத சுசீலா இன்று அது கிடைத்ததும் அதை விடாமல் பற்றிக் கொண்டாள்.
“பையா, ஒரு முக்கியமான விஷயம்”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்து விட்ட சுமன் அவர்கள் இருவரும் அணைப்பில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான்.
சுமனின் சத்ததில் யுவனும் சுசீயும் கூட பதறிப் போனார்கள்.
“சாரி பையா, முக்கியமான விஷயம், அதான் கதவை தட்டாமல்…”, என்று குற்ற உணர்வுடன் சொன்னான் சுமன்.
“சுமன், நீ டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒண்ணும் இல்லை. சுசீலா அழுதா அதான்”, என்று விளக்கம் கொடுத்த யுவன் “என்ன முக்கியமான விஷயம்? சொல்லு”, என்றான்.
“அந்த லிசாவோட போன் கார்ல கிடைச்சது. அந்த போனுக்கு ஒரு நம்பர்ல இருந்து போன் வந்துட்டே இருந்தது. அதனால போனை ஆப் பண்ணிட்டேன். வந்தது யார் நம்பர்னு டிரெஸ் பண்ணுனோம். அது ரெட்டியோட நம்பர்னு தெரிஞ்சது. உங்க கிட்ட அவ போனைக் கொடுக்க தான் அவசரமா உள்ள வந்துட்டேன். இந்தாங்க”, என்று சொல்லி அவன் கையில் கொடுத்தான்.
அதை வாங்கிக் கொண்ட யுவன் அதை ஆராய்ந்தான். அவனையே பார்த்த படி நின்ற சுசீலா கண்கள் கலங்கிச் சிவந்திருந்தது.
“சரி சுமன், நான் என்னன்னு பாக்குறேன். நீ உன் அடுத்த வேலையைப் பாரு”, என்று யுவன் சொன்னதும் சிட்டாக பறந்து சென்றான் சுமன்.
அவனுக்கு கேசவிடம் தங்களின் தலைவனின் காதலியான சுசிலாவைப் பற்றி சொல்ல வேண்டும் போல் இருந்தது.
ஓடிச் சென்று தான் பார்த்த காட்சியை கேசவிடம் சொன்னான் சுமன்.
“சுமன், விளையாடாதே. நீ உண்மையைச் சொல்றியா? பொய்ச் சொல்றியா? பையாவும் அந்த பொண்ணும் கட்டிப் பிடிச்சிட்டா நின்னாங்க?”, என்று கேட்டான் கேசவ்.
“உண்மைலே தான் சொல்றேன் சுமன். அந்த பொண்ணு பையா நெஞ்சில் சாஞ்சு அழுதுட்டு இருந்தது. அது கூட சாதாரண நிகழ்வா இருக்கும்னு பாத்தா நம்ம பையாவும் அந்த பொண்ணைக் கட்டிப் பிடிச்சிட்டு நின்னாங்க. என்னால நம்பவே முடியலை தெரியுமா?”
“என்னாலயும் நம்ப முடியலை சுமன். ஒரு வேளை மாயா மேடம் மாதிரி தங்கச்சின்னு நினைச்சு….”
“அப்படி இருக்காதுன்னு எனக்கு தோணுது. நம்ம கிட்ட அந்த பொண்ணைக் காப்பாத்த சொன்னப்ப பையா முகம் எப்படி இருந்ததுன்னு நினைச்சு பாரு. பையா முகத்தில் அப்படி ஒரு தீவிரம்”
“ஆமா. எனக்கும் அந்த குழப்பம் உண்டு. ஒரு வழியா நம்ம தலைவனுக்கு ஒரு காதலியும், இந்த கோட்டைக்கு ஒரு ராணியும் கிடைச்சாச்சுன்னு சொல்லு”
“ஆமா கேசவ். ரொம்ப சந்தோஷமா இருக்கு”
“ரொம்ப சந்தோஷப் படாத சுமன். இது உண்மையா இருந்தாலும் பையா அந்த பொண்ணை திருமணம் செய்யுற சூழ்நிலை இப்போதைக்கு இல்லை. பையாவோட நோக்கம் உனக்கு தெரியும் தானே? பையாவோட போராட்டம் இன்னும் முடிவுக்கு வரலை”
“ஆமா தான். ஆனாலும் சந்தோஷமா இருக்கு”
“எனக்கும் தான். அந்த பொண்ணை காப்பாத்த பையா ஏன் இப்படி துடிச்சாங்கன்னு இப்ப தானே புரியுது?”, என்றான் கேசவ். இருவரும் சந்தோஷமாக கதை பேச ஆரம்பித்தார்கள்.
அந்த போனையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த யுவன் நிமிர்ந்து அவளை பார்த்தான். எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள் சுசீலா.
“எதையும் மனசுல நினைக்காம போய் தூங்கு சுசீ. அப்புறம் பேசலாம்”, என்றான் யுவன்.
அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதது அவளுக்கு கூச்சத்தைக் கொடுக்க அவன் முகத்தை பார்க்க முடியாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் போகச் சொல்லவும் அது தான் சாக்கென்று அங்கிருந்து ஓடியே விட்டாள்.
அப்போது அவன் கையில் இருந்த போன் இசை எழுப்பியது. ரெட்டி திரையில் மின்னினான். அதைக் கண்டு யுவனின் முகம் மாறியது. புலியின் சீற்றத்தோடு அதை காதில் வைத்தான்.
காதல் தொடரும்…..