அத்தியாயம் 8
வண்ண வண்ண
நினைவுகளை கொடுத்து
விட்டு நீங்கிச் சென்ற
காதல் தீ நீ!!!
இரண்டு குடும்பமும் கதிருக்கும் தேன்மொழிக்கும் அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் என்று முடிவு செய்தார்கள்.
பழைய விஷயங்களை அனைவருமே மறந்து விட்டார்கள். எல்லாருமே சந்தோஷமாக பேசிக் கொண்டார்கள். “உன் காதல் நிறைவேறிருச்சு அண்ணா”, என்று செல்வாவும் தினேஷும் கதிர் காதில் சொல்லி சிரித்தார்கள்.
கதிரும் உள்ளுக்குள் சந்தோசமாகவே இருந்தான். ஆனால் அதை முகத்தில் காட்ட வில்லை. இவ்வளவு எளிதாக அனைத்தும் நடக்கும் என்று அவன் எதிர் பார்க்க வில்லை. இது அனைத்தும் பாட்டியால் தான் என்று அவனுக்கு நன்கு தெரியும். அன்னத்தின் கைகளை மெதுவாக பற்றிக் கொண்டான்.
அவனைப் பார்த்து மென்மையாக சிரித்தாள் அன்னம். “என் பேரன் எதுக்கும் கலங்க கூடாது ராசா”, என்று சொல்லி அவனைப் பார்த்து சிரித்து விட்டு தேன்மொழியைப் பார்த்தாள். தேன்மொழியோ ஏதோ யோசனையிலே இருந்தாள்.
அனைவரும் அங்கு சந்தோஷமாக இருக்க அங்கே உள்ளுக்குள் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது தேன்மொழி மட்டுமே. அவளைத் தவிர அனைவருமே அடுத்து என்ன என்பது போல பேச ஆரம்பித்து விட்டார்கள்.
அன்னத்தின் முகம் கூட நன்கு தெளிந்தது போல இருந்தது. அங்கிருந்த நர்ஸ் வந்து “எதுக்கு இவ்வளவு கூட்டம்? பாட்டி கண் விழிச்சிட்டாங்க தான? அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
அனைவரும் கிளம்பினார்கள். கதிரின் வீட்டுக்கு வந்தவர்கள் அன்னத்தை அவளுடைய அறையில் படுக்க வைத்தார்கள்.
தேன்மொழியை பைக்கில் வந்த கண்ணன் அழைத்துச் சென்று விட்டான். “சரி நேரம் ஆகிருச்சு. நாங்க கிளம்புறோம். நாளைக்கு வந்து பாக்குறோம்”, என்று சொல்லி கிளம்பினார் தர்மதுரை.
[the_ad id=”6605″]
“ஆமா மச்சான், நாளைக்கு மத்த கதையை பேசிக்கலாம்”, என்று மதியழகனிடம் சொன்ன ராஜதுரை “சகு நீ வேணும்னா அத்தையை இங்க இருந்து பாத்துக்கோ”, என்றார்.
இத்தனை நாள் பிறந்த வீட்டில் இருந்து ஒதுக்க பட்ட சகுந்தலா இந்த வாய்ப்பை விட்டு விடுவாளா என்ன? சந்தோசத்துடன் “சரி”, என்றாள்.
ராஜதுரையும் தர்மதுரையும் செல்வி மற்றும் சண்முகம்மாளை அழைத்துக் கொண்டு கிளம்பி சென்றார்கள். “நீ அத்தை கூடவே படுத்துக்கோ சகு. ஏதாவதுன்னா என்னை எழுப்பு. வெண்ணி பிளாஸ்க்ல இருக்கு”, என்று சொன்னாள் வேணி.
“சரி மதினி, நீங்க போய் தூங்குங்க. அம்மாவை நான் பாத்துக்குறேன். மாத்திரை கொடுத்ததும் தூங்கிருவாங்க”, என்று சகுந்தலா சொன்னதும் அங்கிருந்து சென்றாள் வேணி.
ஆண்களும் அவரவர் அறைக்கு சென்று விட்டனர். அதன் பின்னர் அன்னமும் சகுந்தலாவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
அன்னம் தூங்கியதும் சகுந்தலாவும் படுத்துக் கொண்டாள். அனைவரும் நன்கு உறக்கத்தில் இருக்கும் போது தூங்காமல் விழித்திருந்தது தேன்மொழி மட்டும் தான்.
ஏன் அவள் தூக்கத்தைக் கெடுத்த கதிர் கூட ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். என்ன யோசித்தும் கதிரை நினைத்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தாள் தேன்மொழி.
“ஒரு நாய் என்னை கட்டி வச்சது. அவன் கிட்ட இருந்து கதிர் காப்பாத்துனான். அப்புறம் கதிரும் என்னை மிரட்டுனான். அதுவும் அவனை கல்யாணம் பண்ண சொல்லி. அதையும் செஞ்ச அப்புறம் அவன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றான். இன்னைக்கு என் முகத்தையும் பாக்கல. என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்? அவன் சொன்னது என்ன? ஆனா நடப்பது என்ன? இவன் கூட என் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்? பிள்ளையாரே உன்னை சுத்தி சுத்தி வந்ததுக்கு எனக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்துருக்க. இனி உன்னை பாக்கவே வர மாட்டேன் பாரு”, என்று கடவுளையும் திட்டினாள்.
அடுத்த நாள் தர்மதுரையும் ராஜதுரையும் செல்வி மற்றும் சண்முகம்மாளை அழைத்துக் கொண்டு கதிர் வீட்டுக்கு சென்றார்கள்.
அன்னம் உடல் நிலை சரியாகி விட்டது. அது அனைவருக்கும் திருப்தியைக் கொடுத்தது. அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் எப்போது என்று முடிவு எடுத்தார்கள்.
புதன் கிழமை முகூர்த்தம் இருப்பதால் என்று நிச்சயம் வைக்க என்று பேச்சு எழுந்தது. முந்தின நாள் வைக்கலாம் என்றால் அது செவ்வாய் கிழமை.
“செவ்வாய் வெறுவாய்ன்னு சொல்லுவாங்க. அதனால திங்கள் கிழமை சாயங்காலம் நிச்சயம் வச்சிக்காலம்”, என்று அன்னம் சொன்னதும் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கதிர் மனதில் உல்லாசமாக இருந்தான். வெளியே கொஞ்சம் இறுக்கமாகவே காட்டிக் கொண்டான். அவன் முகத்தைப் பார்த்து வேணி சிறிது தடுமாறினாள்.
[the_ad id=”6605″]
“ஒரு வேளை கதிருக்கு தேனைப் பிடிக்கலையோ? அதான் இப்படி இருக்கானோ?”, என்று மனதில் நினைத்து மதியழகனிடம் சொல்லவும் செய்தாள்.
“எதுக்கு குழம்பிக்கிட்டு இருக்க? அதை உன் மகன் கிட்டயே கேட்டு தெளிவு படுத்திகோ”, என்று அவர் சொன்னதும் கதிர் அருகில் சென்றாள் வேணி.
“ஏப்பா கதிரு, உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான? உனக்கு தேனை பிடிச்சிருக்கா? உன் முகமே சரியில்ல கண்ணு. அதான் கேக்குறேன்”
“அப்படி எல்லாம் இல்லை மா. இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்னு நான் நினைக்கல. அதான் யோசனை. வேற ஒண்ணும் இல்லை. எவ்வளவு நாள், ரெண்டு குடும்பமும் பிரிஞ்சு இருக்கும்? இப்ப ஒண்ணா சேந்த உடனே எல்லாருக்குமே சந்தோஷம் தான மா?”, என்று சொல்லி வேணியை தெளிய வைத்தான்.
வேணியை சமாளித்து அறைக்கு வந்தவன் மனக் கண்ணில் வந்து போனாள் தேன்மொழி.
இரட்டை சடையுடன் பள்ளி சீருடையில் அன்று மலர்ந்த மலர் போல் இருந்த தேன்மொழியை நினைத்துப் பார்த்தவன் மனம் கணிந்தது.
பள்ளியில் படிக்கும் போது ஒரு நாள் வழியில் போன தேன்மொழியை “ஏய் குள்ளவாத்து”, என்று அழைத்து வம்பிழுத்தான் கதிர்.
அதில் சிலிர்த்துக் கொண்டு திரும்பிய தேன்மொழி, “நீ ஐய்யனார் மாதிரி இருந்துகிட்டு என்னை குள்ளவாத்துன்னு சொல்றியா? போடா கருவாயா?”, என்று திட்டி விட்டு சென்றாள்.
அன்று நடந்ததை நினைத்துப் பார்த்து சிரித்தான் கதிர். “என்னை மன்னிச்சிரு தேனு, உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும் டி. ஆனா என்னவோ தெரியலை, என் மனசுல இருக்குற அன்பை உன்கிட்ட எனக்கு புரிய வைக்க தெரியலை. நீ வேணும்னு மனசு ஏங்குச்சு. ஆனா ரெண்டு குடும்பமும் பிரிஞ்சு கிடக்குற நிலையில உன்னை எப்படி என் பக்கம் என்னால திருப்ப முடியும்? அதனால அந்த ராஜேந்திரன் போட்ட பிளானை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன். நீ என் கூட இருந்தா போதும். என் அன்பை நான் உனக்கு புரிய வச்சிருவேன். உன்னை மிரட்டுனதுக்கு எல்லாம் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும். உன்னை என் கால்ல நான் ஏண்டி விழ வைக்கணும்? நானே உன் கிட்ட மயங்கி இருக்கேன் கண்ணம்மா. உன்னை நினைச்சு நான் தவிச்ச நிமிடங்கள் அதிகம் டி. எப்ப டி நீ என் கிட்ட வருவ? உன்னை கட்டிப் பிடிச்சு…“, என்று யோசித்துக் கொண்டே வந்தவன் தன்னுடைய சிந்தனை தறிகெட்டு ஓடுவதை நினைத்து தன் பின்னத்தலையில் ஒரு தட்டு தட்டி சிரித்துக் கொண்டான்.
பழைய விஷயங்களை எண்ணிப் பார்த்தான். கதிரின் பார்வை எப்போதுமே தேன்மொழியை தான் வட்ட மடிக்கும்.
அந்த ஊரில் உள்ள அவனுடைய இரண்டு நண்பர்களான விக்கி என்ற விக்னேஷுக்கும், கிரிக்கும் கதிர் அவளை விரும்புவது நன்கு தெரியும். தேன்மொழியை எங்காவது பார்த்தால் கதிருக்கு உடனே தகவல் சொல்லி விடுவார்கள். அவனும் அடுத்த நிமிடம் அங்கு வந்து அவளிடம் வம்பிழுப்பான்.
அப்படி தான் அன்று ராஜேந்திரனை தேன்மொழி காண செல்லும் போது அவளுடைய பண்ணையில் வைத்து அவளை அவர்கள் பார்த்தது. “என்ன இந்த நேரத்துல இந்த பிள்ளை இங்க இருக்கு?”,என்று கேட்டான் கிரி.
“அதான் மாப்பிள்ளை தெரியல. கூட யாரும் வந்த மாதிரியும் இல்லையே”, என்றான் விக்கி.
“மாப்பிள்ள கதிருக்கு போனைப் போடு”, என்று கிரி சொன்னதும் உடனே கதிருக்கு அழைத்து சொல்லி விட்டான் விக்கி.
கதிருக்கும் குழப்பமாக இருந்தாலும் “சரி இன்னைக்கே அவ கிட்ட என் மனசுல உள்ளதை எல்லாம் சொல்லணும்”, என்று எண்ணிக் கொண்டு வந்து கொண்டிருந்தான் கதிர்.
ஆனால் அவன் வரும் வரை அங்கேயே இருந்த விக்கி மற்றும் கிரி கண்களில் பட்டான் ராஜேந்திரன். இவன் என்ன இங்கே என்று இருவருக்கும் குழப்பமாக இருந்தது.
தேன்மொழிக்கும் ராஜேந்திரனுக்கும் கல்யாணம் என்பது இருவருக்கும் தெரியுமாததால் தேன்மொழி ஒரு வேளை ராஜேந்திரனை விரும்பி இருப்பாளோ என்று இருவருக்கும் குழப்பம் வந்தது.
அப்படி தேன்மொழி மனதில் ராஜேந்திரன் இருந்தால், தங்களின் நண்பன் நிலை என்னவாகும் என்று பயந்து தான் அந்த அறைக்கு அருகில் இருவரும் சென்றார்கள்.
அங்கு ராஜேந்திரன் பேசியதையும், பின் தேன்மொழியைக் கட்டியதையும் ஜன்னல் வழியே பார்த்தவர்கள் கதிர் வந்த உடனே அவனிடம் சொன்னார்கள்.
ராஜேந்திரனை நினைத்து கொலை வெறி வந்தாலும், இதில் தனக்கு சாதகமாக ஏதாவது நடக்குமா என்று அவன் மூளை யோசித்தது. அதற்குள் கிரியே இந்த ஐடியாவை சொன்னான். “மாப்பிள்ளை பேசாம, நீயே அந்த சேதுவுக்கு பதில் நீயே உள்ள இரேன். நாங்க காலைல வந்து கதவை திறக்குறோம். அப்புறோம் எல்லாரும் சேந்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க”, என்றான் கிரி.
“டேய் லூசு மாதிரி பேசாத. அப்படி மட்டும் நடந்தா அந்த பொண்ணுக்கு மட்டும் இல்லை. கதிருக்கும் தான் அசிங்கம். நம்ம ஊர்ல பேசியே கொன்னுருவாங்க”, என்று விக்கி சொன்னதும் கிரி “ஆமா டா, இதை நான் யோசிக்கலையே”, என்றான்.
[the_ad id=”6605″]
அப்போது கதிர் தன்னுடைய யோசனையை சொன்னதும் மற்ற இருவருக்கும் இது சரி என்று படவே முத்துவை போனில் அழைத்தான் கதிர். அவனும் வந்ததும் திட்டம் போட்டார்கள்.
முத்துவுக்கு கதிரின் காதல் தெரியாது. ஆனால் தேன்மொழியை ராஜேந்திரனிடம் இருந்து காப்பாற்ற எண்ணினான். அதனால் கதிருக்கு உதவினான்.
ராஜேந்திரன் சேதுவை அழைக்க சென்றதும் கதவை பார்த்து விட்டு பின் சாவி செய்ய மூவரும் சென்றார்கள். கதிர் மட்டும் அந்த அறைக்குள் வெளியவே இருந்தான்.
உள்ளே அவனுடைய மனதுக்கு இனியவள் இருந்தும் அதை வெளிக் காட்ட முடியாத தன்னுடைய முட்டாள் தனத்தை நொந்த படியே இருந்தான்.
சிறு வயதில் இருந்த அவளிடம் பக்குவமாக பேசியிருக்க வேண்டுமோ? அவளிடம் அதிகாரமாக பேச போய் தான் என்னை அவளுக்கு பிடிக்கலையோ என்று சுய அலசலில் இருக்கும் போது ராஜேந்திரன் சேதுவுடன் வந்தான்.
பின் சேதுவை விட்டு விட்டு ராஜேந்திரன் சென்றதும் கதவை உடைக்கலாமா என்று அருகில் போனான்.