அத்தியாயம் – 23
மறுநாளிலிருந்து மாயாவை தனியாக உட்காரவே கார்த்திக் விடவில்லை. ஒருவித புது உத்வேகத்துடன் மாயாவிடம் பழகத் தொடங்கினான். காலையில் டிபன் வேலை முடிந்தது, தான் இன்று வீட்டிலேயே வேலை பார்ப்பதாக கூறி, லேப்டாபும் கையுமாக அவன் அமர, மாயா மீண்டும் படுக்கப் போனாள். “ஹே மாயு இங்க வா. நெட்லயிருந்து நிறைய பாட்டு டவுன்லோட் பண்ணேன் கேக்கறியா??” தன் செல்போனை காட்டி கார்த்திக் கேட்க, மாயா இடமும் வலமுமாக தலையசைத்துவிட்டு படுத்துக் கொண்டாள்.
கார்த்திக்கிற்கும் வேலை இருந்ததால் மாலை பார்த்துக் கொள்ளலாம், என விட்டு விட்டான். மாலை மங்கும் வேளை, காபி அருந்தும் போது கீழே இருக்கும் சிறுவர் விளையாடும் இடத்திற்கு செல்லலாம் என அழைத்தான்.
காபியே கஷ்டப்பட்டு அருந்தும் மாயா அதற்கு ஒத்துக்கொள்வாளா என்ன?? வேண்டாம் என்ற தலையசைப்பு மட்டும் வந்தது அவளிடமிருந்து. அவளையே பார்த்துக் கொண்டு, அடுத்த வெடிகுண்டை போட்டான் கார்த்திக். “மாயா நாளைக்கு மைதிலி அக்கா வந்திருவாங்க.”
அதனால் என்ன என்பது போல மாயாவின் கண்கள் வினவ, “இல்ல நீ நாளைக்கு அந்த வீட்டுக்கு போகனும், அதான் சொன்னேன்.” என்றான் அவளின் முகத்தை ஆராய்ந்தபடி. மாயாவுக்கு அதிர்ச்சி தான். ஆனால், சட்டென்று எப்படி தன் மறுப்பை சொல்வது என்று தெரியவில்லை. “ஏன் போகனும்?? நான் இங்கயே இருக்கேன்.”
“இல்ல மைதிலிக்கா கேப்பாங்க இல்ல…. அப்போ என்ன சொல்றது?”
“அக்காவும் நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க இல்ல?? ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. உன்னை தனியா விட்டு நான் போகமாட்டேன்.”
உளறலாக மாயா கூறியதை கேட்டு கார்த்திக்கு சிரிப்போ சிரிப்பு. தன்னால் அவன் தனிமை அனுபவித்தது போதும் என்ற எண்ணம் மாயாவுக்கு இருந்தது தான்…. ஆனால், அதை மட்டுமே காரணமாக எடுத்துக் கொள்ள கார்த்திக்கின் மனம் மறுத்தது. அவளை பார்த்துக் கொள்ள தான் இருக்க, தன்னை தனியாக விட்டுச் செல்ல அவள் தயாராக இல்லை என்றதே அவன் சிரிப்புக்கு மூலதனம்!! எப்படியோ மாயா தன் கூடவே இருப்பாள் என்ற உணர்வு கொடுத்த மகிழ்ச்சியுடன் அன்றைய இரவை கழித்தான்.
மறுநாள் காலையே மைதிலி தன் குடும்பத்துடன் வந்திவிட்டாள். மாயாவின் பொருட்கள் ஏற்கனவே கார்த்திக் எடுத்து வந்திருந்தான். அதனால், மாயாவை காண லேகாவை மைதிலி கூட்டி வர, மாயா அவளிடம் கடினப்பட்டு தெளிவாக பேச முயன்றாள்.
வழக்கம் போல் மைதிலி எதுவும் துருவவில்லை! ஆனால், மாயா தன் கணவனுடம் சேர்ந்ததில் தனக்கிருந்த சந்தோஷத்தை மட்டும் கூறினாள் தயங்காமல்…..
[the_ad id=”6605″]
கார்த்திக் கூப்பிட்ட போது, கீழே செல்ல மறுத்த மாயா அதே மறுப்பை லேகாவிடம் காட்ட முயன்றாள். ஆனால், லேகா அதை மதிக்கவில்லை. குழந்தை அடம்பிடிக்க, வேறு வழியில்லாமல் கார்த்திக்கை பார்த்தாள், கெஞ்சலுடன். அவனும் அவர்களுடன் இறங்க, வெகு நாட்கள் கழித்து சிறுவர் விளையாடும் இடத்திற்கு சென்றாள் மாயா.
கார்த்திக் அவளை தொடுவதே கிடையாது! இருந்தாலும் அவன் உடன் இருந்தால், மனதில் நம்பிக்கை விதை தானாக தூவப்பட்டது போல் ஓர் எண்ணம் அவன் மனைவிக்கு! முன் போல் இல்லையென்றாலும், கார்த்திக்கும் கலந்துக் கொள்ள சிறிது விளையாடினாள் மாயா. லேகா அதற்கே, “ஏன் சித்தி உம்முனு இருக்கீங்க??” என்று கேள்விகளால் மாயாவை வம்பிழுத்தாள். அவளை திசை திருப்பவென, மாயா மீண்டும் விளையாட வேண்டியிருந்தது!!
இப்பழக்கம் தினமும் தொடர்ந்தது, கார்த்திக்கால்…. தினமும் அலுவகத்தில் இருந்து வீடு திரும்பியவுடன் லேகாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்து, விளையாட செல்லலாம் என நிற்பான். மாலை நேரத்தில் வீசும் காற்றில், மனம் லேசாவது மாயாவுக்கும் சில நாட்கள் கழித்து பிடித்திருந்தது.
இது மட்டுமன்றி வேறு சிலவற்றை செய்து மாயாவின் காயத்திற்கு மருந்தாகினான். அவளை யோகா வகுப்பில் சேர்த்துவிடுவது, சமையல் வேலையில் அவளை பங்கு கொள்ளச் செய்வது, வீட்டை சிறு சிறு பொருட்களால் அலங்கரிப்பது என அவனால் முடிந்த மட்டும் அவளை மீட்க முயற்சித்தான். இது எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல், காலேஜில் இருந்த அதே கார்த்திக் போலவே கலகலப்பாக பேசினான். அவள் சரியாக பதில் கூறவில்லை என்றால் கூட, அவன் பேச்சு தடைப்படாது. இப்படி ஒவ்வொரு செயலிலும் அவனின் தூய அன்பை மட்டுமே காட்டினான் முற்றும் முதலுமாக.
மாயாவிற்கு அவனை பார்க்கவே பெருமையாகவும், அதே நேரம் இவனுக்காகவேனும் தான் மாற வேண்டும் என்ற நினைப்பு தோன்றியது. ஆனால், மறக்க நினைப்பதை மனம் தவறாமல் அவளுக்கு நினைவூட்டியது அவர்களின் துரதிஷ்டமே!!!
நாட்கள் இப்படியே செல்ல, மாயா தன் கல்லூரி செல்லும் நாளும் வந்தது. ஏற்கனவே பத்து நாட்கள் கல்லூரி தொடங்கியும் அவள் செல்லவில்லை! மருத்துவர் கீதாஞ்சலியும் சில நாட்கள் கழித்து அவளை அனுப்பலாம், விடுமுறைக்கு தான் மெடிக்கல் சர்டிபிகேட் வேறு மருத்துவரிடம் வாங்கித் தருவதாக கூறவும், கார்த்திக்கும் சம்மதித்தான்.
ஆனால், பத்து நாட்கள் கழித்தும் மாயா கல்லூரி செல்வதற்கு முகம் கோண, கார்த்திக் அவளை உட்கார வைத்து பேசினான்.
“மாயா இன்னும் எத்தனை நாள் நீ இப்படியே வீட்டுலயே இருப்ப சொல்லு?? கண்டிப்பா நீ காலேஜ் போய் தான் ஆகனும். அது நாளைக்கு போகப் போற அவ்வளவு தான்!” மாயா பேசாமல் கீழே குனிந்தவாரு இருக்க, அடுத்த கேள்வி அவளை நிமிர வைத்தது. “உன்னோட கிளாஸ் பசங்க எப்படி??”
“அவங்க எல்லாம் நல்லாதான் நடந்துப்பாங்க!”
“அப்புறம் என்ன பிரச்சனை? ஏன் டல்லா இருக்கன்னு கேட்டா உடம்பு சரியில்லை, அதான் இப்படின்னு சொல்லிடு. சரியா…. நான் டெய்லி உன்னை டிராப் பண்றேன் காலேஜ்ல. முடிஞ்ச அளவுக்கு ஈவ்னிங் வரப் பார்க்கிறேன். மேரேஜ் ஆன விஷயத்தை சொல்லிட்டல??”
“ஹ்ம்ம்… நீ பெங்களூர்ல இருக்கன்னு சொல்லிருக்கேன்.”
“சூப்பர்…. இப்போ சென்னைக்கு ஷிப்ட் ஆகிட்டார்ன்னு சொல்லு….”
மாயா அவனின் முகத்தையே கூர்ந்து நோக்கவும், “இல்ல…. ஷிப்ட் ஆகிட்டான்னும் சொல்லலாம்!! ஒண்ணும் பிரச்சனையில்ல….” என்றான் தோள்களை குலுக்கிக் கொண்டு!
ரொம்ப நாள் கழித்து, மாயாவின் முகத்தில் அன்று தான் புன்னகை தவழ்ந்தது. இது அப்படியே தொடராதா என கார்த்திக் அவனிடம் மேலும் மாயா நெருங்கும் பொழுதுகள் அடுத்தடுத்து தொடர்ந்தன.
கல்லூரி செல்ல ஆரம்பித்தவுடன் ஒரு நாள் அபிராமி அழைத்தார் காலையில். மாயா அலைபேசியில் பேச, கார்த்திக் இருவருக்கும் மதியத்திற்கு சாப்பாடு கட்டிக் கொண்டிருந்தான் சமையல் அறையில். அபிராமி ஒழுங்காக சாப்பிடுகிறாயா, சரியாக தூங்குகிறாயா என வழக்கம் போல் ஆயிரம் கேள்விக் கேட்க, மாயாவின் ஒற்றை பதில் அபிராமியின் வாயை பூட்டி, நெஞ்சை நிறைத்தது என்றால், கார்த்திக் செய்யும் கை வேலையை விட்டுவிட்டு அப்படியே ஆனந்தத்தில் சிலையாக உறைய வைத்தது!
“அம்மா அதேல்லாம் உன்னோட மருமகன் உன்னைவிட என்னை நல்லாவே பார்த்துக்கறான்மா. நீ இதெல்லாம் கேக்கவே வேண்டாம்.”
தாயின் மனம் குளிர்ந்தது என்றால், கணவனின் மனது அவள் முதன் முதலாக தன்னை கணவனாக ஏற்றுக் கொண்டதை எண்ணி களித்து, தன்னிடம் சிறிது சிறிதாக நெருங்குகிறாள் என உணர்ந்தது! அந்த வார சனிக்கிழமையே, விதி மாயாவை அடுத்த கட்டமாக கார்த்திக்கை நோக்கி தள்ளியது. அன்று இரவு உணவு முடிந்து, கார்த்திக் அனைத்தையும் சமையல் அறையில் ஒதுக்கி வைத்திருக்க, மாயா மாத்திரை எடுத்துக் கொண்டு, டிவியில் ஓடும் படத்தில் கவனத்தை வைத்திருந்தாள்.
அப்போது பார்த்து தானா அந்த படத்தில் கற்பழிப்பு காட்சி வர வேண்டும்?? பார்த்த மாயாவுக்கு மூச்சு வாங்கி, கண்களில் நீர் கோர்த்தது. அவசர அவசரமாக ரிமோட்டை தேடினால், அதை காணவில்லை! என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என அறியாமல், டிவியின் சுவிட்சை ஓடி அணைத்துவிட்டு, “கார்த்தி” என கத்தியபடி சமையல் அறைக்கு ஓடினாள்.
இவளின் சத்தம் கேட்டு கார்த்திக்கும் திகைத்து சமையல் அறைவிட்டு வெளியே வர, அவனின் மேலேயே மோதினாள் மாயா. அவளை பிடித்து நிறுத்தி, “என்னாச்சுமா??” என கார்த்திக் வினவ, மாயா எதுவும் சொல்லாமல் அவன் தோளிலேயே சாய்ந்து அழ ஆரம்பித்தாள். கார்த்திக்கிற்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. பின், தொலைக்காட்சியில் பார்த்த படத்தில் எதையோ கண்டு பயந்திருந்க்கிறாள் என யூகித்தான்.
“என்னமா பேய் படம் எதாவது பார்த்தியா பயந்துட்டியா??” என கேட்க, பதில் வராமல் மேலும் அவனை இறுக அணைத்துக் கொண்டு தன் கவலைகளை கண்ணீரில் கரைத்தாள்.
ஒருவழியாக அழுது ஓய்ந்து மாயாவே தட்டுத்தடுமாறி தான் பார்த்ததை விவரிக்கவும், கணவனுக்கு உருகிற்று. அவளை சமாதானப்படுத்தி படுக்கையறையில் படுக்க வைத்து தூங்கும் வரை உடன் இருந்தான். பின் அவனும் கீழே படுத்து உறங்கத் தயாரானான். ஆனால், மனதில் பயப்பந்து உருண்டது…. காலை மாயா என்ன செய்வாளோ?? நடந்ததை நினைத்து மீண்டும் பழைய நிலைமைக்கு சென்றால் என்ன செய்ய??
இதே எண்ணங்களோடு கார்த்திக் உறக்கத்தை தழுவ, அவன் வீண் வருத்தங்கள் எதுவும் தேவையில்லை என்பது போல மாயா மறுநாள் புது மலராக காட்சி அளித்தாள். ஆனால், மாயா அந்த சம்பவத்தை மனதின் மூளையில் தள்ளிவிட்டாள் என்பது அவனுக்கு தெரியவில்லை. கார்த்திக்கும் எல்லாவற்றையும் மறந்து சந்தோஷமாக திரிந்தான். அன்று மீண்டும் மருத்துவரிடம் செல்லும் நாள். இப்போது எல்லாம் மாதம் ஒரு முறை செல்கின்றனர்.
[the_ad id=”6605″]
அன்று கீதாஞ்சலியை பார்த்ததும், நேற்று படத்தில் பார்த்த அந்த சம்பவம் தன்னை எவ்வளவு தூரம் பாதித்தது என்பதை கூறினாள். மருத்துவரும் கேட்டுவிட்டு இதெல்லாம் நடப்பது தான் என்பதை எடுத்துரைத்தார். “கண்டிப்பா உனக்கு ஒரு ஜெர்க் இருக்கும். மனசு படபடன்னு அடிக்கற மாதிரி தான் இருக்கும். பட், எல்லாம் கொஞ்ச நாள் தான். முதல்ல என்ன சொன்ன?? என்னால காலேஜ் போய் மறுபடியும் படிக்க முடியாது, கேமராவுல பழைய மாதிரி போட்டோ கூட எடுக்க முடியுமா தெரியலைன்னு சொன்ன.
ஆனா, இப்போ உன்னால எல்லாமே செய்ய முடியுது தான?? அதே மாதிரி இதுவும் கடந்து போகும்னு நினைச்சுக்கோ. அது மட்டும் இல்ல… உன்னை விட ரொம்ப மோசமா வந்தவுங்க எல்லாம், இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா?? லா படிச்சுட்டு ரேப் விக்டிம்ஸ்க்கு ஒரு ஹோம் ஆரம்பிச்சு, அவங்களுக்காக கோர்ட்ல கேஸ் எடுத்து நடத்தறாங்க! அந்த லேடிக்கு உன்னை மாதிரி ஃபேமிலி சப்போர்ட் கூடயில்ல…. பட், செய்யறாங்க. அப்போ உன்னால எவ்வளவு செய்ய முடியும்னு மட்டும் யோசி!”
பெரிய உரை ஆற்றுவிட்டு மருத்துவர் அமைதியாக, மாயாவின் மனம் வேலை செய்தது! நேற்றைய நிகழ்வுகளையும், இன்றைய மருத்துவரின் பேச்சையும் அசைப்போட்டு வர, சட்டென்று ஓர் இடத்தில் தன் யோசனை பயணத்தை நிறுத்தினாள்.
அது அவள் கார்த்திக்கை ஓடிச் சென்று அணைத்து, ஆறுதல் தேடிய தருணம்!
இவ்வளவு நாள் அவனின் தொடுகை இல்லாமல் இருந்தவளுக்கு, தானே சென்று அவனை அணைத்தது ஆச்சரியத்தை கொடுத்தது. தனக்கு அவனின் தொடுகை எந்தவித அருவருப்பையும் தரவில்லை என்பது மனமும் அறிவுறித்தியது! தான் அவனை கணவனாக ஏற்றுக் கொண்டோமா??
இதே சிந்தனை கார்த்திக்கும் கொண்டான், முன்தினமே. இருந்தாலும், அவள் ஒரு ஆவேசத்திலும், ஆறுதலிலும் நெருங்கியதை வைத்து அவள் மனம் மாறியதாக நம்ப அவன் தயாராகயில்லை. இப்படியே இருவரும் சிந்தித்து வீடு வந்து சேர்ந்தனர். வரும் வழியிலேயே இரவு உணவை வாங்கி வந்திருந்ததால், மாயா வந்தவுடன் அதை உட்கொண்டு மாத்திரை சாப்பிட்டு உறங்கச் சென்றாள்.
கார்த்திக்கின் மனது ஏனோ ஒரு மாதிரி இருக்க, அவன் தன் கைப்பேசியுடன் ஹாலில் இருந்த சோபாவில் விழுந்தான். காதில் ஹெட்செட்டை மாட்டியபடி தனக்கு மிகவும் பிடித்த பாரதியார் பாட்டுகளை ஓடவிட்டவன், சிறிது நேரத்திலேயே மாயாவை அங்கே எதிர்பார்க்கவில்லை!
கேள்வியெழுப்பிய கண்களுடன் வந்து அவன் முன் நின்றவள், “ஏன் இங்க உட்காதிருக்க??” என்று வார்த்தையிலும் அதை வடித்தாள். அதிசயமாக மாயாவை பார்த்தபடி, “ஒண்ணுமில்ல…. சும்மா தான், அப்படியே பாட்டு கேட்டுட்டு.” என்று பதிலளித்தான். கார்த்திக்கை ஒரு கணம் நோக்கியவள், பின் அவன் அருகிலேயே அமர்ந்தவள் செல்போனை வாங்கி, “என்ன பாட்டு கேக்குற??” என்று கேட்டபடி பார்வையை அதில் ஓட்டினாள்.
“பாரதியார் சாங்ஸ்.”
“உனக்கு பாரதியார் பாட்டுனா ரொம்ப பிடிக்குமா??”
“ஹ்ம்ம்ம் ஆமா….”
ஏனோ கார்த்திக்கிற்கு வார்த்தைகள் தடுக்கினத்தோம் ஆடியது! ஏன்னென்று அவனே அறியான். மாயாவே அடுத்து அவன் காதிலிருந்து ஒரு பக்க ஹெட்செட்டை எடுத்து தன் காதில் வைத்துக் கொண்டு பாட்டை கேட்டாள்.
பாம்பே ஜெயஸ்ரீயின் உயிரை உருக்கும் குரலில், ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடல் ஓடிக் கொண்டிருந்தது. கண்களை மூடி மாயா அந்த பாடலை ரசிக்கவும், கார்த்திக் அவளின் முகத்தையே ஆராய்ந்துக் கொண்டிருந்தான். பாடல் முடிந்ததும், அடுத்து ‘சின்னஞ்சிரு கிளியே கண்ணம்மா’ பாடல் ஒலிக்கவும், மாயா அதில் முழுவதும் கரைந்தாள்.
[the_ad id=”6605″]
எதுவும் பேசாமல், கண்களை மூடி கார்த்திக்கின் தோளில் சாய்ந்து அவள் மனம் நிம்மதி கொள்வதை சிறிது சிறிதாக ரசித்தாள் மாயா. கார்த்திக்கின் நிலையோ முற்றிலும் வேறாக இருந்தது.
தன் மேல் சாய்ந்திருக்கும் தன் கண்ணம்மாவிற்கு சிறு அசைவும் கொடுக்காமல், அமைதியாக அவளுடன் சேர்ந்து பாடலைக் கேட்டான். அவன் உடல் தான் எவ்வித அசைவும் இன்றி இருந்தது…. மனமோ வானத்திற்கும் பூமிக்கும் எகிறி குதித்து சந்தோஷத்தில் மிதந்தது!!!