“இல்லை சாரும்மா மாயாவை நல்லா பாத்துக்க சொன்னாங்க. ஆனா என்னால முடியலை. நான் பேசுறப்ப நல்லா இருக்குறவ அதுக்கு அப்புறம் அவளோட கூட்டுக்குள்ள போயிறா. உனக்கு என்ன ஆச்சுன்னு கேட்டு அவளோட வலிகளை கீறி விடவும் எனக்கு மனசு இல்லை. ஆனா அப்படியே அவளை விடவும் கூடாது. அவளை எப்படியாவது சரி செய்யனும். அது உங்களால முடியும்னு தோணுது”
“எனக்கும் என்ன செய்யன்னு தெரியலை சுசீ. என்கிட்ட கூட அவ பேச்சைக் குறைச்சிக் கிட்டா”
“நீங்களே இப்படி சொன்னா என்ன அர்த்தம்? அவளுக்கு தகுந்த வழியை நீங்க தானே காட்டனும்?”
“நீ ஏதோ ஒரு வழியை யோசிச்சிருக்கன்னு புரியுது. அது என்னன்னு நீயே சொல்லேன். சரின்னா அது படியே செய்யலாம்”
“மாயாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிறலாமா?’, என்று கேட்டதும் அவளை அதிர்ச்சியாக பார்த்தான் யுவன்.
“நீ என்ன சொல்ற சுசீ?”
“ஏன் நான் சொல்றதுல அப்படி அதிர்ச்சியாக என்ன இருக்கு? கல்யாணம் தானே பண்ணி வைக்க சொன்னேன். இப்போதைக்கு அவளோட கல்யாணம் தான் அவளுக்கு ஒரு மாற்றத்தை கொண்டு வரும்”
“கண்டிப்பா கொண்டு வராது. அவ கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசினா அவ வயலண்ட்டா தான் மாறுவா? வேற ஏதாவது வழி தான் யோசிக்கணும் சுசீ”
“ஏன்னு நான் கேக்க மாட்டேன். அவளுக்கு என்ன நடந்ததுன்னு நீங்க என்கிட்ட சொல்ல வேண்டாம். அதை கேக்குற உரிமையும் எனக்கு இல்லை. ஆனா அவளுக்கு கூடவே இருக்குற மாதிரி ஒரு துணை தேவை. உங்களுக்கு புரியுதா? நாம அவ கூட பேசலாம் பழகலாம். ஆனா அவளோடவே இருந்து அவ உணர்வுகளைக் பாத்துக்க ஒரு ஆள் வேணும். அது கண்டிப்பா அவளோட கணவனால தான் முடியும்”, என்று சுசீலா சொன்னதும் யுவனிடத்தில் ஒரு பெரு மூச்சு வந்தது.
“நாம என்ன சொன்னாலும் அவ கல்யாணத்தை பத்தி பேச விட மாட்டா சுசீ. அவளோட ரணம் அப்படி. அவ யாரு தெரியுமா?”
“மாயா யாருனு எனக்கு தெரியாது. ஆனா அவ உங்க தங்கையில்லைன்னு மட்டும் தெரியும்”
“அம்மா அன்னைக்கு சொன்னதை வச்சு தெரிஞ்சிக்கிட்டியா?”
“இல்லை, அதுக்கு முன்னாடியே தெரியும். அஸ்வதி சொன்னா. உங்களுக்கு குடும்பமே கிடையாதுன்னு அவ சொன்னப்ப எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும் அதைப் பத்தி யார் கிட்டயும் கேக்க எனக்கு மனசு வரலை. ஆனா மாயாவைப் பத்தி சொன்னா அவளை எப்படி சரி பண்ணன்னு யோசிக்கலாம். மாயாக்கு என்ன ஆச்சு? சொல்றதா இருந்தா சொல்லுங்க. கட்டாயம் இல்லை”
“சொல்றேன், அதுக்கப்புறமா அவளுக்கு என்ன பண்ணலாம்னு நீ யோசி. அவ மேல முழுமையான அக்கறையைக் காட்டுற உனக்கு தெரிஞ்சா தப்பில்லை”, என்று அவன் குரல் இறுக்கமாக ஒலித்தது.
அதை வைத்தே மாயாவுக்கு ஏதோ நடந்திருக்கிறதை உணர்ந்து கொண்டாள் சுசீலா.
“மாயாவை பத்து வருசத்துக்கு முன்னாடி அஸ்வதி இப்ப இருக்குற ஹோம்ல வச்சு தான் பாத்தேன் சுசீ. சாரும்மாவும் அங்க தான் இருந்தாங்க. ரெட்டி கையால சீரழிஞ்ச ஒரு பொண்ணை அந்த ஹோம்ல விடப் போனப்ப தான் நான் மாயாவை பாத்தேன். அப்ப அவ எப்படி இருந்தா தெரியுமா? பித்து பிடிச்சவ மாதிரி தான் அவ அப்ப இருந்தா. அவளுக்கு பதிமூனு வயசு இருக்கும் போதே சில நாய்கள் அவளோட வாழ்க்கையை சிதைச்சிருச்சு. நீ நியூஸ் எல்லாம் பாத்தியானு தெரியலை. ஏழு பேர் சேந்து ஒரு பொண்ணைக் கெடுத்து சாக்கடைக்குள்ள வீசிட்டாங்கன்னு நியூஸ் படிச்சா நினைவு இருக்கா? அந்த பொண்ணு மாயா தான்”, என்று யுவன் சொன்னதும் அதிர்ச்சியால் உறைந்து போய் நின்றாள் சுசீலா.
அவளால் அவன் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடையாமல் இருக்கக் முடிய வில்லை. அவள் அப்படி ஒரு செய்தி படித்தது அவளுக்கு நினைவில் இல்லை தான். ஆனால் அனுதினமும் அதே போல பல செய்திகள் படித்திருக்கிறாள்.
அப்போதெல்லாம் அதை படித்து விட்டு ஐயோ பாவம் என்று ஒற்றைச் சொல்லொடு கடந்து சென்ற சுசீலா அப்படி பட்ட ஒரு பெண் மாயா என்று தெரிந்ததும் திக் பிரம்மை பிடித்தது போல நின்றாள்.
“நான் சொல்றது உண்மை தான் சுசீ. மாயா சின்னக் குழந்தையா இருக்கும் போதே அந்த வலியை அனுபவிச்சிருக்கா. தப்பான தொழில் செய்யுற பெண்கள் கூட பணத்துக்காகவும் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காகவும் மனசுக்கு பிடிக்காம போனாலும் விருப்ப பட்டு தான் அப்படி பண்ணுறாங்க. ஆனா பதிமூனு வயசு பொண்ணுக்கு என்ன தெரியும் சொல்லு? அந்த குழந்தையை போய் அந்த மிருங்கங்கள்…..சீ… ஏன் இப்படி நடக்குதுன்னு இருக்கு…. சில விஷயங்களை நினைக்கும் போது ரொம்ப வலிக்கும் சுசீ”, என்று சொன்னவனின் குரலில் வலி இருந்தது.
“யுவன் நீங்க சொல்றது நிஜம் தானா? மாயா… மாயா…”, என்று திக்கித் திணறினாள் சுசீலா.
அனைவரும் அவனை பையா என்று அழைக்க தன்னுடைய பெயர் சொல்லிக் கூப்பிடும் சுசீலா கூட அவனுக்கு நினைப்பில் இல்லை. அவன் மனம் முழுவதும் மாயாவைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தது.
“சத்தியமான நிஜம் தான் சுசீ. அவள் இருந்த நிலையில் இருந்து அவளை இந்த அளவுக்கு மாத்த நாங்க எவ்வளவு கஷ்டப் பட்டோம் தெரியுமா? எதுக்கு அவளை நான் இங்க கூட்டிட்டு வந்தேன்னு இப்ப வரைக்கும் எனக்கு தெரியலை. பாவப் பட்டா, பரிதாப பட்டா எதுக்குன்னே தெரியலை. அவளைப் பாத்ததும் நான் இவளைக் கூட்டிட்டு போறேன்னு சொல்லி அவளை இங்க அழைச்சிட்டு வந்துட்டேன். அவளுக்கு துணைக்கு வந்தவங்க தான் சாரும்மா. அவங்க மட்டும் என்னவாம்? அவங்க யாரு தெரியுமா? சின்ன வயசுல இருந்து அவங்க கணவனே அவங்களை தப்பான தொழிலுக்கு யூஸ் பண்ணிருக்கான். எல்லாம் வெறுத்து போய் தான் அந்த ஹோம்ல இருந்தாங்க”
…..
“மாயா இங்க வந்தப்ப எல்லாம் ஆம்பளைங்களை கண்டாலே அலறுவா. கொஞ்சம் கொஞ்சமா தான் அவ தேறி வந்துருக்கா. இப்ப சொல்லு. அவ கிட்ட போய் நீ கல்யாணம் பண்ணிக்கோன்னு என்னால எப்படி சொல்ல முடியும்? அம்மா சொன்னதுல இருந்தே அவளுக்கு பழைய நினைப்பு வந்துருக்கும் போல? அதான் இப்படி இருக்கா? அவளை இப்படியே விட கஷ்டமா இருந்தாலும் அது தான் அவளுக்கு நல்லதுன்னு தோணுது”, என்று யுவன் முடித்ததும் இருவருக்குள்ளும் மௌனமே தொடர்ந்தது.
சிறிது நேரம் கழித்து சுசிலாவே அந்த மௌனத்தை உடைத்தாள். “இல்லை, நீங்க தப்பா யோசிக்கிறீங்கன்னு எனக்கு தோணுது. மாயாவை இந்த அளவுக்கு மாத்தின நீங்க, இதே நிலைமைல வச்சிருக்குறது தப்பு. அவளும் மத்த பொண்ணுங்க மாதிரி கல்யாணம் குழந்தைங்கன்னு வாழ்ந்தா தான் அவ மனசுல இருக்குற வலி மறையும். இல்லைன்னா அது ஏக்கமா உருமாறிரும்”
“நீ சொல்றதை கேக்க நல்லா இருக்கும் சுசீ. ஆனா அவ கிட்ட அம்மா பேசினப்பவே அவளோட நடவடிக்கைகளை நீ பாத்த தானே? அப்ப இருந்தே அவ அழுதுட்டு தான் இருக்கா. இப்படி இருக்குறவளுக்கு கட்டாயப் படுத்தியா கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?”
“இப்ப பிடிக்கலைன்னாலும் கட்டாயப் படுத்தி செஞ்சி வச்சா கொஞ்ச நாள்ல அவ வாழ்க்கை மாறலாம் இல்லையா?”
“சரி, நாம அப்படி செஞ்சு வைப்போம்னே வச்சிக்கோ. அவளுக்கு, அவளை நல்ல படியா பாத்துக்குற மாப்பிள்ளையை பாக்கணும். அப்படி நல்லவனை எங்க போய் நான் தேடன்னு சொல்லு. அது மட்டுமில்லாம அவளைப் பத்தி உண்மையை அவன் கிட்ட சொல்லி தான் நாம ஏற்பாடு செய்யனும். இந்த உண்மை தெரிஞ்சு எவன் அவளை கல்யாணம் பண்ண சம்மதிப்பான். இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை சுசீ. ஆகாயத்துல கட்ட பட்ட கம்பி மேல நடக்குற மாதிரி தான் இது. நாம நல்லவன்னு நினைச்சு ஒருத்தனைக் கட்டி வச்சு அவனே அவளுக்கு எமனா மாறிறக் கூடாது. நமக்கு தான் யாரும் இல்லை. ஆனா அஸ்வதியை எடுத்துகோ. அவளுக்கு அப்பா, அம்மான்னு எல்லாரும் இருந்தும் எப்படி ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்துருக்காங்க. அப்படி நம்ம தேர்ந்தெடுக்குறவனும் தப்பா போயிட்டா என்ன செய்யுறது?”
“உங்க பயம் புரியுது. யாருக்கோ மாயாவைக் கட்டிக் கொடுத்தா தானே பயம்? மாயா மேல உயிரையே வச்சிருக்குற ஆளுக்கு கட்டிக் கொடுக்கலாம் தானே?”
“அப்படி யார் இருக்கா?……சுசீ……நீ யாரையாவது மனசுல வச்சிட்டு சொல்றியா?”
“ஆமா, ஆனா கண்பார்மா என்னால சொல்ல முடியலை. ஆனாலும் சின்ன டவுட் இருக்கு. அதை நீங்க தான் கண்டு பிடிக்கணும்”
“கொஞ்சம் தெளிவா சொல்லேன்”, என்று கேட்டவனின் குரலில் பரபரப்பு தோன்றி இருந்தது.
“நான் சுமனைத் தான் சொல்றேன். சுமனுக்கு மாயா மேல ஒரு ஈர்ப்பு இருக்குனு எனக்கு தோணுது. ஆனா மாயா பத்தின விஷயம் சுமனுக்கு தெரியுமான்னு தெரியாது. கூடவே மாயா பத்தி தெரிஞ்சா சுமன் என்ன முடிவு எடுப்பார்னும் எனக்கு தெரியாது. ஒரு வேளை மாயாக்காக பிறந்தது அந்த சுமனா இருந்தால்…..”
“சுமனா?”, என்று அதிர்ச்சியாக கேட்டவன் “சுமனுக்கு மாயாப் பத்தி எல்லாமே தெரியும் சுசீ”, என்றான்.
“அப்படியா?”, என்று ஆச்சர்யமாக கேட்டாள் சுசீலா.
“இங்கயே பிறந்து வளந்த அவன் நான் படிச்ச நீயுசை படிச்சிருக்க மாட்டானா? அது மட்டுமில்லாம நான் அவளைக் கூப்பிட போகும் போது சுமன் தான் காரை ஓட்டிட்டு வந்தான். ஆனா அவன்… எப்படி மாயாவை?…. அதுவும் மாயா….”
“மாயாவுக்கும் சுமனை பிடிச்சிருக்குனு எனக்கு தோணுது. ஆனா அதை அவள் வெளிப்படுத்தாம இருக்குறதுக்கு காரணம் அவளுக்கு நடந்த கொடுமையை நினைச்சு தான் இருக்கும். நீங்க சுமன் கிட்ட பேசுங்களேன். அப்படி சுமன் சரி சொன்னா சுமன் உன்னை விரும்புறான்னு மாயா கிட்ட சொல்லி புரிய வைக்கலாம். மாயா ஒத்துக்குவாங்க”
“நான் சுமன் கிட்ட பேசிப் பாக்குறேன் சுசீ. அப்புறம் என்ன நடந்தாலும் அந்த கடவுள் பாத்துக்கட்டும். அப்படி மட்டும் சுமன் மாயாவை விரும்பிருந்தா இந்த உலகத்துலே அதிகமா சந்தோஷப் படுறது நானா தான் இருக்கும்”
“சரி, நாளைக்கே சுமன் கிட்ட பேசுங்க. தள்ளிப் போட வேண்டாம். ரொம்ப நேரம் பனில நிக்காதீங்க. உடம்புக்கு முடியாம போக போகுது. கீழே வாங்க”, என்று அவள் உரிமையாக சொன்னதில் அன்னையின் தாலாட்டைக் கேட்டதைப் போல் உணர்ந்தான் யுவன்.
அவளைப் பார்த்து மென்மையாக சிரித்தவன் “உன்கிட்ட பேசினப்புறம் ஏதோ மனசுல உள்ள பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு. தேங்க்ஸ் மாமி”, என்றான்.
அவனை சிரித்துக் கொண்டே முறைத்தவள் குட் நைட் என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். ஆனாலும் அவனுடைய பார்வையும், அவனுடைய நீலக் கண்ணில் வந்த மின்னலும் சுசீலாவின் மனதிலும் ஒரு இதத்தைக் கொண்டு வந்தது. அதனால் தான் உடனடியாக அங்கிருந்து அகன்று விட்டாள்.
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த யுவனின் மனமும் அவளை பின் பற்றியே சென்றது.
காதல் தொடரும்….