இதை கவனித்த அண்ணாமலை
“சரி மாதவா. நீ இவங்களுக்கு ரூமை காட்டு.” என்று கூறினார்.
மாதவன் இதற்காகவே காத்திருந்தது போல “சரி அப்பா”
என்றான்.
அவர்களை அழைத்து சென்று அங்கு இருந்த ஒரு அறையை காட்டினான் மாதவன்.
அந்த அறை மாதவனின் அறையின் நேர் எதிர் அறை. எல்லோரும் உள்ளே வந்தனர்.
“நீங்க எல்லோரும் பிரஸ் ஆகிட்டு கிழ வாங்க. டிபன் சாப்பிடலாம்.” என்று கூறி விட்டு வெளியே வந்தான்.
மதுமிதா அவன் வீட்டில் தங்கியிருக்கிறாள் அதுவும் நாளை நடக்கப்போகும் திருமண விழாவில் கலந்துகொள்ள போகிறாள். இதை நினைக்க நினைக்க அவனுக்கு ஆனந்தமாக இருந்தது.
காலையிலிருந்து வேலை செய்த அயர்வு கூட பறந்து போனது.
காற்றில் மிதப்பது போல அவ்வளவு லேசாக உணர்ந்தான்.
இரவு உணவை பார்வதி, மலர் இருவரும் பார்த்து பார்த்து சிதம்பரம் குடும்பத்திற்கு பரிமாறினர்.
“என்னப்பா உன் பையன் வரலையா?” என்று விசாரித்தார் அண்ணாமலை.
“அவனுக்கு ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு. அதனால அவனுக்கு லீவு கிடைக்கல.”
“சரிப்பா நீங்க மூணு பேரும் எங்க வீட்டு கல்யாணத்துக்கு வந்ததுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.” என்று பூரித்துப் போனார் அண்ணாமலை.
இரவு உணவை முடித்த பிறகு மதுமிதா அலங்கரிக்கப்பட்ட வீட்டின் அழகை ரசித்தாள்.
அவரை கவனித்த அண்ணாமலை
“மலர் இவங்களுக்கு வீட்டை சுத்தி காட்டுமா.” என்று கூறினார்.
இதனைக்கேட்ட “வள்ளி உங்களுக்கு இப்போ நிறைய வேலை இருக்கும். நாங்களே பார்த்துக் கொள்வோம்.” என்று கூறவும்
மலர் “அந்த வேலை எல்லாவற்றையும் விட இப்போ உங்களை கவனிக்கிறது தான் எங்களுக்கு முக்கியமான வேலை.” என்று விட்டு அவர்களை அழைத்து வீட்டை சுற்றி காட்டினாள்.
வீட்டை காண்பித்த பிறகு தோட்டத்தின் வாசலுக்கு கூட்டி
வந்தாள்.
“தோட்டத்தை நான் உங்களுக்கு காலையில சுத்தி காட்டுறேன். தோட்டத்தின் அழகு அப்போதான் தெரியும். இப்போ உங்க ரூமுக்கு போகலாம்.” என்று அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றாள் மலர்.
“மலர்” என்று பார்வதி அழைப்பது கேட்டது.
மலர் வாசல் வழியாக “என்ன அத்தை?” என்று மேலிருந்து கேட்டாள்.
“தாம்புல தட்டில் வைக்க வேண்டியதை தனியா எடுத்து வைத்து விட்டாயா?”
“அப்பவே வைத்துவிட்டேன் அத்தை.” என்றாள் மலர்.
“சரி மா.” என்று விட்டு சென்றார் பார்வதி.
“இந்த பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கு.” என்று வள்ளி. அணிந்திருந்த ரவிக்கையை காட்டி சொன்னாள் மலர்.
“தேங்க்ஸ்மா. இந்த பிளவுஸ் டிசைன் பண்ணது என் பொண்ணு தான்.” என்று பெருமைப்பட்டுக் கொண்டார் வள்ளி.
“அப்படியா ரொம்ப அழகா பண்ணி இருக்கீங்க மதுமிதா.” என்றாள் மலர்.
“தேங்க்ஸ். நான் உங்களை எப்படி கூப்பிடுறது?” என்று கேட்டாள் மதுமிதா.
“அக்கான்னு கூப்பிடு.” என்று வள்ளி சொல்ல மதுமிதா
“தேங்க்ஸ் அக்கா.” என்றாள்.
“ஆமாம். உங்க வீட்டு வாசல்ல யாரு கோலம் போட்டது?” என்று கேட்டாள் மதுமிதா.
“நான் தான் போட்டேன்.” என்றாள் மலர்.
“ரொம்ப அழகா கோலம் போட்டு கலர் கொடுத்து இருக்கீங்க. கலர் காம்பினேஷன் ரொம்ப நல்லா இருந்துச்சு. உங்களுக்கு வரைய தெரியுமா?”
“ஆமாம். நான் நல்லா வரைவேன். அதான் கோலத்தை பார்த்தாலே தெரியுது. கொடி கொடியா அழகா கோலம் போட்டு இருக்கீங்க. சூப்பர்.” என்றாள் மதுமிதா.
“தேங்க்ஸ் மதுமிதா.” என்றாள் மலர்.
அதே நேரம் பார்வதி மீண்டும் மலரை அழைத்தார்.
மேலிருந்து வாசல் வழியாக “என்ன அத்தை?” என்று கேட்டாள் மலர்.
“சமையல்காரர்கள் பாயாசத்துக்கு முந்திரிப்பருப்பு குறைகிறதாம். நம்ம வீட்டுல முந்திரிப்பருப்பு இருக்கா மலர்?” என்று கேட்டார்.
“இருக்கு அத்தை. ஸ்டோர் ரூம்ல பஸ்ட் செல்பில இருக்கு.” என்று கூறினாள்.
“சரிமா. நான் சொல்லிடறேன்.” என்றுவிட்டு சென்றார்.
“மலர்” வந்து மீண்டும் மதுமிதாவின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“வீட்ல விசேஷம் இருக்கிறதுனால வேலை இருக்கு. அதனால உங்க கூட உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசக்கூட நேரமில்லை.” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் பார்வதி
“மலர்” என்று அழைத்தார்.
“உங்க அத்தைக்கு நீ இல்லாமல் எந்த வேலையும் நடக்காது போல இருக்கே.” என்று ஆச்சரியமாக கேட்டார் வள்ளி.
“ஆமாம் அத்தைக்கு யார் பக்கத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் நான் இருக்கவேண்டும். அப்பதான் வேலை ஓடும்.” என்றாள் பெருமையாக.
“நீ சொல்றது சரிதான் மா. அதான் பார்க்கிறோமே. நீ போய் உன் அத்தை கூட இரு. நாளைக்கு பங்க்ஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் நாம சாவகாசமா பேசலாம்.” என்று மலரை அனுப்பி வைத்தார் வள்ளி.
மலர் வேகவேகமாக படி இறங்கி வந்து “சொல்லுங்க அத்தை” என்று கேட்டு அவருக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்தாள்.
“இந்த மலர் பொண்ணு ரொம்ப பொறுப்பான பொண்ணு போல இருக்கு. இந்த சின்ன வயசுல இவ்வளவு பெரிய வீட்டை நிர்வாகம் பண்றா. பார்க்கவே எனக்கு ஆச்சரியமா இருக்கு.” என்றார் வள்ளி .
“ஆமாம் வள்ளி. நானும் அதையே தான் பார்த்துட்டு இருக்கேன். நல்ல திறமையான பொண்ணு.” என்றார் சிதம்பரம்.
இரவு படுத்த மாதவனுக்கு தூக்கம் வர மறுத்தது.
ஏனோதானோ என்று ஏதோ ஒரு தட்டை எடுத்து வைத்திருந்தான். அதனை மாற்றி திருமண விழாவிற்கு அணிய வேண்டியவற்றை பார்த்து பார்த்து எடுத்து வைத்தான்.
அடுத்த நாள் அவன் மனம் கவர்ந்தவள் கண்களில் அவன் அழகாக தெரிய வேண்டுமே.
காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து இருந்தாள் மலர்.
குளித்துமுடித்து ஒரு இளம் பச்சை நிற பட்டுப் புடவை எடுத்து அணிந்து கொண்டு அதற்கேற்ற மாதிரி பச்சை கல் வைத்த தங்க நகைகளை அணிந்துகொண்டு எல்லா வேலையும் ஒழுங்காக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள்.
தூக்கம் வராமல் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்த வள்ளியின் கண்களில் அவள் பட்டாள்.
‘இந்த பொண்ணு எவ்வளவு சுறுசுறுப்பா எல்லா வேலையையும் முகமலர்ச்சியோடு பண்ணிக்கிட்டு இருக்கு’ என்று ஆச்சரியப்பட்டார்.
ஆறு மணி அளவில் சுதாராணி அதேபோன்று இளம்பச்சை நிற பட்டுப் புடவையில் அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்தாள் .
அவளைப் பார்த்ததும் மதுமிதாவை எழுப்பினார் வள்ளி.
“மது சீக்கிரம் எழுந்திரு.” என்றார்.
“அம்மா முகூர்த்தத்துக்கு இன்னும் டைம் இருக்கு. பொறுமையா எழுந்திருக்கலாம்.” என்று மீண்டும் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தாள் மதுமிதா .
‘இப்படி ஒரு பொண்ணு என்று மலரை பார்த்து நினைத்துக்கொண்டு இப்படி ஒரு பொண்ணு என்று தன் மகளை பார்த்து நினைத்துக்கொண்டார்’
“மது எழுந்திரு. இப்போ கிளம்ப ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும். நீ புடவை கட்ட ஒரு மணி நேரம் ஆகும்.” என்றார் அதட்டலாக வள்ளி.
சிதம்பரம் குளித்துமுடித்து வந்து கொண்டிருந்தார்.
“மது அம்மா சொல்றதை கேளு . சீக்கிரம் எழுந்து கெளம்பு. எல்லோரும் கிளம்பி ரெடியா இருக்காங்க பாரு. நீ மட்டும் தூங்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?” என்றார்.
“சரி சரி” என்று சலித்த படி எழுந்து குளித்து புடவை கட்டி தயாரானாள் மதுமிதா.
அவளும் இளம்பச்சை நிற பட்டுப்புடவை கட்டி மகாலட்சுமி பதித்த வைர நகைகளை அணிந்து இருந்தாள்.
வீட்டுப் பெண்கள் சுதா ராணி, மலர் இருவரும் ஒரே மாதிரி இளம்பச்சை நிற புடவையில் இருக்க வீட்டு ஆண்கள் ஆறுமுகம் மற்றும் மாதவன் ஒரே மாதிரி பட்டு வேஷ்டி சட்டையில் இருந்தனர் .
மதுமிதா அணிந்திருந்த இளம் பச்சை நிற பட்டுப் புடவையும் ஓரளவு அவர்கள் அணிந்திருந்த பட்டுப்புடவை போலவே இருந்தது.
முன்னாள் கட்டி எடுத்து வைத்திருந்த மல்லிகை மொட்டுக்கள் மலர்ந்து இருந்தன. அதனை பிரித்து துண்டுகள் ஆக்கினாள் சுதாராணி.
அதில் ஒரு துண்டை பார்வதியிடமும் மற்றொன்றை மலரிடமும் கொடுத்தாள். இன்னொன்றை தானும் வைத்துக் கொண்டாள்.
இந்த மூன்று துண்டுகள் போக மிச்சம் ஒரு துண்டு இருந்தது.
அதை கையில் வைத்துக்கொண்டு
இப்போ இவ்வளவு பூ மிச்சம் இருக்கு. இதை என்ன பண்றது?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.
அங்கு வந்த மாதவன்
“அதான் உன்னோட பிரின்ட் இருக்காங்களே. அவங்களுக்கு கொடு.” என்றான்.
சுதாராணி “என்னோட பிரண்டா? யாரும் இந்த கல்யாணத்துக்கு வரவே இல்லையே.” என்று அவனைக் கேட்டாள் சுதாராணி.
“பிரெண்டுனு நான் சொன்னது மதுமிதாவை தான். அவள் கிட்ட நீ நல்லா பேசிட்டு இருந்ததை நான் பார்த்தேன். அதான் அவளும் நீயும் பிரெண்டுனு நினைச்சேன். அப்போ மதுமிதா உன்னோட ஃப்ரண்ட் இல்லையா?” என்று அவளை ஞாபகப்படுத்தினான் மாதவன்.
“ஆமாம் ஆமாம். அவள் என்னோட பிரண்டு தான் . ஆனால் இது வீட்டு பொண்ணுங்களுக்கு ஸ்பெஷலா மலர் அண்ணி கையால் கட்டியது அதனாலதான் யோசிக்கிறேன்.” என்றாள் சுதாராணி.
“இதுல என்ன இருக்கு சுதா? பூ வீணா போகாமல் இருந்தால் சரி. நீ இதை மதுமிதாவுக்கு கொடு.” என்றார் பார்வதி.
“சரி அம்மா.” என்றவள் அந்த பூவை எடுத்து வந்து மதுமிதாவுக்கு கொடுத்தாள்.
வள்ளி அந்த பூவை மதுமிதாவின் தலையில் வைத்தார்.
மாதவனுக்கு மிகுந்த ஆனந்தம். இவளும் கூடிய சீக்கிரம் நம் வீட்டு பெண்ணாகி விடுவாள் என்று நம்பிக்கை கொண்டான்.
ஆதித்யா குட்டி பட்டு வேஷ்டி சட்டை துண்டுடன் கூலிங் கிளாஸ் அணிந்து கலக்கலாக நடமாடிக் கொண்டிருந்தான்.
சுதாராணி அவனைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பினை ஏற்று அவன் பின் ஓடிக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் தோட்டத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
ஆதித்யா தொடர்ந்து ஓடி ஓரிடத்தில் நின்று திரும்பிப் பார்த்தான்.
சுதாராணி அங்கு இல்லை. எனவே திரும்பி நடந்து வந்து “ அத்தை” என்று கூறிய படி இளம்பச்சை நிற புடவை கட்டியிருந்த பெண்ணின் முந்தானையை பிடித்து இழுத்தான். அவள் திரும்பினாள். அது மதுமிதா.