செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 02
கடந்து சென்ற மாதங்களில், “ஏன் தனியா இருக்க.. வா எங்க கூட பேசு!”
“சாப்பிடறியா?”.. “இன்னும் தூங்காம என்ன பண்ற?”
“ஹிந்தி புரியுதா?”.. “படிக்க ஆசையா? காலேஜ் சேர்த்து விடவா?”
“தாத்தா நினைவாவே இருக்கா? அழாத..”
இப்படிப்பட்ட அக்கறையான வார்த்தைகள் பஞ்சமாய் போன வேளையில்.. கோமல் வாழ்வில் சாரலாய் வந்தவன் தான் கௌரவ்.
புத்தகக் கடை மூலமாக பரிசயமான கௌரவிற்கு தில்லி சொந்த ஊர் இல்லை என்றான். வேலை பார்க்க வந்ததாகக் கூறினான். இருந்தும் ஹிந்தி சரளமாய் பேசினான்.
பல இடங்களில் வேலை புரிந்திருப்பான் போலும், மராத்தி, பெங்காலி, கொங்கனி, ஆங்கிலம் எல்லாம் தண்ணீர் பட்ட பாடு!
அவன் பல மொழிகளில் பேச.. பல தேசங்கள் பற்றிப் பேச.. பெண் ஆச்சரிய பார்வை பார்த்தான். அவள் பார்வையில் அவன் பன்மடங்கு உயர்ந்து தெரிந்தான். ஏதோ மெத்தப் படித்த மேதாவியைப் பார்ப்பது போல் பார்த்தாள்.
“இவ்வளவு விஷயம் தெரியுது. நீங்க படிக்கலைன்னு சொன்னா என்னால நம்பவே முடியல. ஏன் நீங்க படிக்கல?” இன்னும் ஆச்சரிய பார்வை தான்.
“எனக்கு அம்மா அப்பா இல்ல கோமல்.. படிக்க வைக்க ஆள் இல்ல. எட்டாவது வரை படிச்சு இருக்கேன். மத்தது எல்லாம் வேல செஞ்ச இடத்தில கத்துகிட்டேன்.. உன்ன மாதிரி தான்.. படிக்க ஆசை இருந்துது, ஆனா வழி இல்லை”, அவன் மனம் திறக்க, அவளின் அனுதாப வட்டத்துக்குள் விழுந்தான்.
“அச்சோ… கவல படாதீங்க. படிக்கலேனா என்ன? படிச்சவங்களை விட அறிவா பேசறீங்க. நிறைய விஷயம் எல்லாம் தெரியுதே… இப்போ புக் ஸ்டோர்ல்ல வேலை. உங்க திறமைக்கு சீக்கிரமே சொந்தமா தொழில் பண்ண ஆரம்பிப்பீங்க!”
கண்களில் மின்னல் மின்ன, “உன் வாய் முகூர்த்தம் கோமல்… நானும் அதை நான் நினைச்சிட்டு இருக்கேன். எத்தனை நாள் தான் அடுத்தவனுக்கு வேலை பாக்கிறது? இனி மேல்.. சுய தொழில் தான். உன் ஆசி… என் ஆசை.. நிறைவேறும் நாள் கிட்டத்தான்! நானே தொழில்ல நேரா இறங்க போறேன்.” என்றான் புன்னகையோடு!
“உங்க மனசு போல தொழில் ஆரம்பிக்க.. இப்பொவே என் வாழ்த்துகள்!” மனமாற வாழ்த்தினாள்.
வீடு, வீட்டை விட்டால் அருகிலிருந்த கோவில்.. வழியில் புத்தகக் கடை.. அது மட்டும் தான் கோமலின் வாழ்வாய் மாறிப்போன வேளை, “ஏன் முகம் வாடி இருக்கு? சாப்பிடலையா?” என்று அக்கறையாய் பேசுவதோடு நிறுத்தாமல்.. ஏதேனும் அவன் செலவில் வாங்கியும் தருவான்.
உணவில் விருப்பமில்லாமல் போனது. காரம் சாரமாய் மூக்கில் நீர் வழிய.. நீந்துவதும், நடப்பதும், பறக்கத் தெரியாமல் ஓடுவதையும், அமோகமாய் உண்டவளுக்கு உப்பு சப்பில்லாத சப்பாத்தியும், காயும், கீரையும் தொண்டையில் இறங்குவேனா என்று அடம் பிடித்தது.
அவள் நிலை கண்டு அவனும் அவள் வரும் நாள் கணக்கிட்டு சில தென் இந்திய உணவு வகைகளைச் சமைத்து எடுத்து வந்தான்.
[the_ad id=”6605″]“நல்லா இருக்கா? உனக்காகவே ஹோட்டல்ல வேலை செய்யறவங்கட்ட கேட்டுக் கேட்டு கஷ்டப்பட்டு செஞ்சேன்.. கைய கூட சுட்டுகிட்டேன்.. பாரேன்! சமையல் பிடிச்சிருக்கா?”
அவன் பட்ட கஷ்டமெல்லாம் அவளுக்காக என்று உணர.. அவன் அன்பில் திக்குமுக்காடிப் போனாள் பெண். “ம்ம்… பார்டர் பாஸ்.. இன்னும் கொஞ்சம் புளியும் காரமும் சேர்க்கலாம்..”, எனச் சிரிப்பாள். படு கேவலமான உணவையும் இன்முகமாய்.. ஆசையாய் உண்பாள்.
அவளைப் பற்றி அதிகம் கேட்பான். ஏனோ அவளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கு மிகுதி. அவளுக்கா கசக்கும் அவள் தாத்தா பாட்டியைப் பற்றி கூற. அவள் நேற்று அணிந்த உடை வரை தெரிந்து வைத்துக் கொண்டான். அவள் மேல் அக்கறையோ.. ஆர்வமோ… ஏதோ ஒன்று, அவன் வாஞ்சையாய் கேட்டுக்கொள்ள அவள் மனம் பூரித்துப் போனது.
அவள் வாடிய முகம் பார்த்தால் போதும், “முகம் வாடி இருக்கே கோமல்? தாத்தாவ நினைச்சு அழுதியா? அழாதா கோமல்.. மனசுக்கு எப்படியோ இருக்கு..”, உருகிக் கொண்டே ஆறுதல் வார்த்தை கூறுவான்.
அவன் ஆறுதலில் நெகிழ்ந்து போனாள்.
“ச்ச..ச்ச… அழற வேலையே கிடையாது. இல்லாததை நினைச்சு ஆழ மாட்டேன். என் கூட அவங்க இருந்த நாட்களை நினைச்சு சந்தோஷப் படுவேன். இது இந்த ஊர் வெயில் தாங்க முடியலை அது தான்..”, என்பாள்.
பக்கத்தில் இருக்கும் கோவில் வரை கூடவே நடந்தான், அவள் மனநிம்மதிக்காகத் தமிழ் புத்தகமாய் வாங்கி அடுக்கினான். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது அருகிலிருந்த இடம் கூட்டிச் செல்வான், அவளின் ஒற்றை புன்னகைக்காய். அவன் தோழமை பிடித்துப்போனது.
தமிழில் பேச முயன்றான். தமிழில் கோமல் என எழுதக் கற்றுக்கொண்டான். “நீ ஹிந்தி கத்துக்க வேண்டாம். உனக்காக நான் தமிழ் படிச்சுக்கிறேன்” என்றான் காதலாய். ‘எனக்காக என்னவெல்லாம் யோசிக்கிறான்?’ பெண் அசந்து நின்றுவிட்டாள்.
நட்பு ஆழம் பிடித்தது. புன்னகை சிரிப்பாய் மாறியது. மாற்றியிருந்தான். அவனோடு பேச, அவளின் தனிமை திசை தெரியாமல் சென்றது. கௌரவ் என்றால், ‘அன்பான அக்கறையான வார்த்தைகளின் ஊற்றிடம்’ என்பாள். அப்படி தான் அவளிடம் பேசுவான், பழகுவான்.
அவனோடு நேரம் செலவிட அவன் குணம் மட்டுமே அவளுக்கு போதுமானதாக இருக்க… அவனிடம் தோழமையை தவிர வேறு எதையும் அவள் எதிர்பார்க்கவில்லை.
அவளின் பேச்சும்… சிரிப்பும் அவனுக்குள்ளும் ஏதோ செய்திருக்க வேண்டும். அவன் கண்ணில் காதல் கரைபுரண்டது. அவளும் அதை கண்டு கொண்டாள். ஆனால் பேசப்படவில்லை.
எந்த வித்திலுமே அவன் அவளுக்குப் பொருத்தமில்லை. கண்ணிருக்கும் அனைவருக்குமே அது தெரியும்.
வீட்டிற்கு மறைத்து எதையுமே அவள் செய்ய நினைக்கவில்லை. அவனோடு வெறும் தோழமை தான். சித்தியும் பார்க்கத்தான் செய்தாள்.. இருவரும் கடையில் பேசிக்கொண்டிருப்பதை.
‘பேசு… பேசாதே..’ ஒன்றுமே கூறவில்லை. உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் சென்றுவிடுவாள்.
“ஆட்டத்தைக் குறை. ஒழுங்கா படி.. படிச்சு அப்பா மாதிரியே நாலு பேர் மதிக்கிற மாதிரி உத்தியோகத்துக்கு போற வழிய பாரு”… பாட்டி கடிந்து கொண்ட நாட்கள் மனதில் வந்து செல்லும். அன்று கசந்த வார்த்தைகள் இன்று இனித்தது. அது அக்கறையின் வார்த்தைகள். பாசம் இருப்பவர்களால் மட்டும் தான் அக்கறையாய் கடிய முடியும். இன்று உணர்ந்தாள்.
“கண்டவனோடு என்ன பேச்சு?” ஒரு முறை மாதுரி கேட்டிருக்கலாம்.
[the_ad id=”6605″]“உன் வயசை விடப் பெரிய பசங்க கூட பேசாதே…” ஒரே ஒரு முறை சொல்லி இருக்கலாம். கோமல் கேட்டிருப்பாள். வீட்டுப் பெரியவர்கள் வார்த்தையைத் தட்டி பழக்கமில்லாத பெண்.
“சாப்பிடு”.. “விளக்கை அணைச்சிட்டு படு..” “இத செய்யாதா” “அங்க போகாத..” “ஊர் சுத்தாம நேரத்துக்கு வீட்டுக்கு வா..” “படிச்சியா… சொல்லித்தரவா? இப்படி மார்க் எடுத்தா… எப்படி உருப்படுவ?”
எத்தனை குழந்தைகளுக்கு இது அக்கறையான வார்த்தைகள் என்று தெரியும்? இப்படியான வார்த்தைகள் தன் காதில் விழாதா என்று ஏங்கும் பிள்ளைகளுக்கு மட்டும் தான் தெரியும் பெற்றவளின் கண்டிப்பில் இருக்கும் பாசம்.
நாட்கள் நகர, ஒரு நாள் ரிஷி கண்ணில் பட்டது கௌரவோடு அவள் பேசி நின்ற காட்சி. வீட்டிற்கு வரும் வரை கூட அவனால் காத்திருக்க முடியவில்லை. அவனுக்குள் அப்படி ஒரு கோபம்.
“கண்டவனோடு உனக்குக் காதல் கேட்குதோ..?”, என்று எடுத்ததும் கை நீட்ட முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இல்ல… வெறும் ஃப்ரெண்ட்..” என்றாள்.
அவன் கேட்டானில்லை. “கால உடைச்சு அடுப்பில வச்சிடுவேன்” என்றுவிட்டுச் சென்றான்.
எரிந்த கன்னத்தைத் தடவ மட்டும் தான் அவளால் முடிந்தது. அழுகை வரவில்லை. கோபமும் வீம்பும் வந்து ஒட்டிக்கொண்டது.
[the_ad id=”6605″]ஏதோ வீட்டில் நடப்பதுக்கும் மாதுரிக்கும் சம்பந்தம் இல்லாதது போல் இருந்துவிட்டாள். அதை பார்த்த கோமலுக்கு கோபம் தலைக்கேறியது. ‘யாராம் நான் இவருக்கு? மகள் தானே..?’
ரிஷியின் அடக்குமுறை.. ‘நீ யாரு டா… என்னை அடிக்க? யாரும் கேக்க இல்லேனா.. நீ என்னை அடிப்பியா? அடிச்சா பயப்படணுமோ? அப்படி தான் நான் அவனைப் பார்ப்பேன்’ என்று தான் அவளுக்குள் தோன்ற வைத்தது. அவள் வயதிற்கு வேறு எதை எதிர்பார்ப்பது?
வயது பெண்ணிடம், அவளோடு நெருக்கமாய் இருக்கும் நபர் பொறுமையாய் பேசி இருக்க வேண்டும். நாட்டு நடப்புகளை எடுத்துக் கூறி இருக்கவேண்டும். வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரிய விடாமல், எதிலாவது அவள் நாட்டத்தைத் திசை திருப்பி இருக்க வேண்டும்.
இதை எதையுமே செய்யாமல்.. தவறே செய்யாத, செய்ய நினைக்காத பெண்ணிடம் அவன் வீரத்தைக் காட்டி தவறு செய்தான், ரிஷி! எதையுமே கண்டு கொள்ளாமல் மாதுரி அவள் தரப்பு தவறு செய்தாள். பெற்றதோடு வேலை முடிந்தது போல் மகளை மறந்த தகப்பன் தவறு செய்தார். விளைவை மட்டும் தனியே அவள் அனுபவிக்கிறாள்.. பாலை வனத்தில்!
கௌரவ் மேல் காதல் எண்ணமோ.. ஆசையோ கொஞ்சம் கூட இல்லை… ஒரு பிடித்தம் இருந்தது அவ்வளவு தான். நட்பைத் தாண்டாத பிடித்தம். அவன் பார்வையில் பேச்சில் வாஞ்சை தெரிந்தாலும் அவன் அவளிடம் தன் மனதைத் திறந்தானில்லை. அதனாலேயே தன்னோடு பேசி சிரித்து ஆறுதலாய் இருக்கும் ஒருவனையும் விட மனமில்லாமல் நட்பை மட்டுமே பாராட்டி கொண்டிருந்தாள்.
கன்னம் எரிய ரிஷி மேல் எரிச்சல் வந்தது. ‘இவனும் இவன் பார்வையும். அவன் ஒரு நாள் தப்பா பார்த்திருப்பானா? ஏன் அவன லவ் பண்ணினா என்ன?’ என்ற எண்ணம் எட்டி பார்த்தது. காதல் எப்படிச் செய்ய வேண்டும் என்று இன்னும் ஒழுகாய் தெரியவில்லை. அதை பற்றி யாரிடம் கேட்பதாம்? தெரியவில்லை.
அவளுக்குள் காதலும் இல்லை அதை அவனிடம் அவள் உணரவும் இல்லை. ஆனால் ‘காதலித்தால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது உண்மை.
இரவு தூக்கமில்லாமல் புரண்டவள் யோசனை இதனைச் சுற்றி தான்.
காதல்! காதல்..? அதற்கு அவன் வாட்டம் சாட்டமாக இருக்க வேண்டாமா? அப்படி தானே அவள் பார்த்த சினிமாவில் ஹீரோ இருப்பான்?
தனக்கானவனைப் பார்த்ததும் மனம் துள்ளிக் குடிக்க வேண்டாமா? அப்படி தான் திரைப்படத்தில் காட்டினார்கள்.
ஏன் இத்தனை அன்பானவனைப் பார்த்து மனம் துள்ளிக் குதிக்க மறுக்கிறது?