செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 08_2
இரவு முழுவதும் கௌரவிற்காக கோமல் காத்திருக்க அவன் வரவில்லை. காலை பின் வாசல் கதவில் சத்தம் கேட்க.. அதை அவள் திறக்க, திறந்து கொண்டது. தடியன் அங்கிருந்த மரத்தடியில் விறைப்பாய் நின்று கொண்டிருந்தான்.
கழிவறை வெளியே இருக்க, காலைக் கடனை கழிக்க பின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறான். எங்கும் நகராமல் அங்கேயே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்குச் செல்ல அருவருப்பாய் இருந்தாலும் வேறு வழி இல்லை.
பின் வாசலை அதன் பின் பூட்டப் படவில்லை. இவளுக்குத் தெரியும் அவன் அங்கு தான் இருப்பானென்று. தப்பிக்கவெல்லாம் முடியாது என்பது புரிந்தது. கதவை பூட்டிக் கொண்டு உள்ளே அமர்ந்துகொண்டாள்.
காலை பத்து மணியளவில் கௌரவ் வந்தான்.
“கோமல்…” என்றான்.. எப்பொழுதும் போல் காதலாய்… மோகமாய். இன்றோடு அவள் சென்றுவிட்டால்.. அவளைக் கண்ணில் கூட காண முடியாதே. அப்படி விட்டுவிட முடியுமா? ஒரு முறையேனும் அவளை அனுபவிக்காமல் விடுவதா?
“கோமல்…” அழைத்துக் கொண்டே அவளை நெருங்கினான்.
தன் சொந்த பெயரே ஒருத்திக்கு இத்தனை அருவருப்பைக் கொடுக்க முடியுமா? நாராசமாய் ஒலித்தது.
“நான் இல்லேனா செத்து போய்டுவேன்னு சொன்னீயே கௌரவ்..?” கேட்டவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
“ஆமா கோமல்… நீ இல்லேனா செத்தே போய்டுவேன்..” இந்த பூனையும் பால் குடிக்குமா ரேஞ்சுக்கு பேச.. அவளுக்கு வந்த கோபத்திற்கு..
“அப்போ செத்துடேன் டா…!” என்றாள் பட்டென்று.
“என்ன?” திகைத்துப் போனான்.
“காது கேக்கலியா? செத்துடுன்னு சொன்னேன். ஏன்னா எனக்கு இருக்க வெறியில… நீயா சாகாட்டா நானே உன்ன கொன்னுடுவேன்” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டே.
ஒரு இரவில் இவளுக்கு என்ன ஆனது? அவனுக்குப் புரியவில்லை.
“என்ன ஆச்சு கோமல்? ஏன் கோவம்?”
நொண்டிக் கொண்டே அவள் அருகில் வர..
“இன்னும் எதுக்கு கௌரவ் நொண்டிட்டு வர?” கேலியாய் ஒலித்த அவள் சத்தத்திற்கு நின்றுவிட்டான்.
நீண்ட மூச்சு விட்டவன்.. “தெரிஞ்சிடுச்சா?” என்றான், ‘எல்லாம் நல்லதுக்குத் தான்’ என்பது போல்.
கோமல், “எதுக்கு இப்படி எல்லாம் செய்யற? நான் பாடு படுறதால உனக்கு என்ன சந்தோஷம்?”
“சந்தோஷம் எல்லாம் இல்ல கோமல். ஆதாயம்! பணம்.. கோமல் பணம்.” என்றான் கண் மின்ன..
“பணமா?” அதிர்ச்சி தான். அதை விட அருவருப்பு முகத்தில் “உனக்கு பணம் வேணும்னா நீ தானே உழைக்கணும்? நான்.. நான் எதுக்கு… ச்சீ… இதுக்கெல்லாம் கூட பணமா? என்ன ஜென்மங்க டா நீங்க எல்லாம்? நீ… நீ இத்தன அருவருப்பானவனா?”
அவனைப் பார்த்த அன்றிலிருந்து அவன் பேசிய வார்த்தைகளின் உள்ளர்த்தம் எல்லாம் விளங்கியது. ‘உன் புண்ணியத்தில் சுய தொழில் ஆரம்பிக்க போறேன்-லிருந்து… கௌஷி வீட்டைப் போல் ஒன்றை எனக்கு வைத்துத் தருவாயா’ என்று கேட்டது வரை காதில் எதிரொலித்தது.
“நீ மட்டும் சரின்னு சொல்லு கோமல்.. ‘கோமல் தான் அடுத்த கௌஷி’… என்ன சொல்ற.. சேர்ந்து செய்யலாமா?”
“டேஏஏஏய்…” அவன் மேல் முழு பலம் கொண்டும் பாய.. இரண்டடி தள்ளி விழுந்தான். உடல் முழுவதும் சுறுசுறுவென பற்றிக் கொண்டு வந்தது.
“என்ன டா நினைச்ச என்னை… நீ தான் எச்சில தின்ற பண்ணினா.. உன்ன மாதிரி என்னை நினைச்சியா?” சுற்றும் முற்றும் பார்த்தாள். ஏதாவது கிடைக்காதா.. இவன் தலையில் போட்டு இன்றே இந்த கேவல பிராணியைக் கொன்று போட முடியாதாவென்று.
அங்கு அவளுக்கு உதவ எதுவுமே இல்லை. அவன் எழுந்துவிட.. கொத்தாய் அவள் தலை முடியைப் பிடித்தவன் அவளை அடிக்க கை ஓங்க.. அவளும் ஒரு வெறியில் இருக்கவே நெற்றியால் அவன் மூக்கை குறிவைத்துத் தாக்க அவன் நகர்ந்துவிடவே.. நெற்றி அவன் வாயில் இடித்து பல் உதட்டைக் கிழித்து இரத்தம் வழிய.. அவளை பின்னோடு தள்ளியவனுக்கும் கோபம் தான்!
“விட்டா ஓவரா போற? வெளியில இருக்கவன கூப்பிடணுமா?”
“என்ன.. சின்ன பொண்ண பார்த்து பயந்துட்டியா கௌரவ்? பூச்சாண்டி காட்டுறியா? அவன மட்டும் இல்ல கூப்பிடு உன் அல்ல கை எல்லாத்தையும்… எனக்குப் பயம் இல்ல.
உன்ன விட அவனுங்க தேவல்ல… வெறும் உடம்ப தான் உடைச்சானுங்க.. துரோகி நீ!!
பணத்துக்காக.. ஆச வார்த்தை பேசி.. என் பாதுகாப்பில இருந்து என்னை கூட்டிட்டு வந்து.. அதுவும் எப்படி? ஊரெல்லாம் சுத்தி.. அப்பா என்னைக் கண்டே பிடிக்க முடியாதபடி அந்த பாழா போன இடத்துக்கு கூட்டிட்டு போய்..
ஊரு பேரு பாஷை தெரியாத இடத்தில நிர்க்கதியா நிக்கவிட்டு… நீயே ஓநாய்களுக்கு என்னை வித்துட்டு.. என் கிட்ட நல்லவன் வேஷம்..? உனக்கு எல்லாம் தொண்டைக்கு அடியில எப்படி டா தண்ணி இறங்குது? படுத்தா தூக்கம் வருது?
இது எல்லாம் போதாதுன்னு ஒரு ரௌடி கும்பலுக்கு இப்போ என்னை விலை பேசி இருக்கத் தானே.. பிணம் தின்னி பிசாசே.. உன் ஆசைக்கு அளவே இல்லையா… உன் ஆசைக்கு நான் பலியாகணுமா? இன்னும் என்னை மாதிரி எத்தனை பேருடா? சத்தியமா சொல்றேன் நீ எல்லாம் புழு பிடிச்சு தான் சாவ.
நேத்து பார்த்த அந்த குழந்த.. எட்டு வயசு இருக்குமா? அத என்ன சொல்லி டா கூட்டிட்டு வந்தீங்க… குழந்தை டா அது, அம்மா மடியில பால் சோறு சாப்பிட வேண்டிய குழந்த டா… கூட்டிட்டு வந்த ராட்சசியும் ஒரு பொம்பள… ச்ச.. என்ன ஜென்மங்களோ நீங்க எல்லாம்? வாழ வழி தெரியலனா செத்து தொலைங்களேன் டா.. எதுக்கு பூமிக்கு பாரமா? ஏன் அப்பாவி பிள்ளைங்கள கொடுமை படுத்துறீங்க! அந்த தெய்வம் இத எல்லாம் பார்த்துட்டு தான் இருக்கு. உன்னையும் உன்ன மாதிரி இருக்க ராட்சசங்களையும் அழிக்காம விடாது..”
கௌரவ் சலிப்பு தட்ட.. “ஷ்ஷ்ஷ்..ஷப்பா… பொங்கிட்டியா? போதும் நிறுத்து! நேரம் ஆச்சு. கிளம்பறதுகுள்ள.. வா! உனக்கு பிடிக்கலைனா என்ன? எனக்கு பிடிச்சு இருக்கு! நானாவது சந்தோஷமா இருந்துட்டு போறேனே… நீயா வந்தா நான் மட்டும் தான். இல்ல அவனும் உள்ள வருவான். எப்படி வசதி?”
கோபத்தில் மூச்சு வாங்கவே ஆரம்பித்துவிட்டது..
சுவரோடு அவளைச் சாய்க்க… அவள் மேல் அவன் சரிய.. பல் அவன் கழுத்து வளைவைப் பதம் பார்த்தது. அவன் என்ன அலறியும் அவள் விடவே இல்லை. சதை கிழிய.. அலறிக்கொண்டே தன்னை விடுவித்துக்கொண்டவன் கண்ணில் அவள் குத்த… அவன் நிலை தடுமாறிப் போனான். ஏதாவது கிடைக்காதா.. அவன் தலையில் போட முடியாதா என்று அவன் பார்வை நாலா பக்கமும் போகும் முன்னே உள்ளே வந்திருந்தான் தடியன்.
அவளுக்கு அவனைக் கொன்றுவிடும் வேகம்.. ஆனால் அந்த வேகம் மட்டும் போதவில்லை. ஆயுதம் தேவைப்பட்டது. அது அவளுக்குக் கிடைக்கவில்லை.
உள்ளே நுழைந்த அஜானுபாகு இவனை எழுப்பி விட்டி அவளை ஓங்கி அறைய அறையின் மூலையில் சுருண்டாள்.
“வேண்டா அவள நீ ஒண்ணும் செய்யாத… வெளியில இரு. டாக்டரை பார்த்துட்டு வந்து நான் யாருன்னு அவ துடிக்கத் துடிக்க அவளுக்கு நானே நரகத்தை காட்டறேன்.
உனக்கு கௌஷி இல்ல நான் தான் இனிமேல்… இன்னைக்கு வரைக்கும் பார்த்தது எல்லாம் ஒண்ணுமே இல்லன்னு உன்னை நினைக்க வைக்கிறேன்… பாவம் பார்த்தா என் கிட்டயேவா.. கால மட்டும் இல்ல, வந்து பல்லையும் சேத்து உடைக்கிறேன்” வலி தாள முடியாமல் இரத்தம் வழிய சூளுரைத்துவிட்டுச் சென்றான்.
கதவு இரண்டும் பூட்டப்படவுமே… கன்னத்தைப் பிடித்துக்கொண்டே.. இருந்த வேகம் எல்லாம் வடிய உடம் நடுங்க சுவரோடு சரிந்து அமர்ந்துவிட்டாள்.
புடவையில் வாயைத் துடைத்தவள் உடல், பயத்தில் குளிரெடுத்து ஏகத்திற்கும் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
இதற்கு முன்னும் கடித்திருக்கிறாள்.. ஆனால் அதன் பின் விழும் அடி எல்லாம் மரண வலி கொடுக்கும். கால் பாதம் கிழிக்கப்பட்டது நினைவில் வந்தது. இவன் தான் அடித்திருக்கிறான். அவனுக்கு அடித்தால் வலிக்குமா? அந்த கலவரத்திலும் அவனை அடித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அவளுக்குள் எழத்தான் செய்தது.
கண்டவனை நம்பி வீட்டை விட்டு வந்ததின் பலன் இது! மலையளவு பெரிய தவறை சாதாரணமாய் செய்துவிட.. அதன் விளைவு? தேனாய் பேசியவனைக் குருட்டுத் தனமாய் நம்பி, இப்படி பிள்ளைகள் வீட்டை விட்டு வந்த பின் அவர்கள் நிலை அவலம் என்றால்.. அவர்களை தொலைத்தக் குடும்பத்தின் நிலை?
இன்றோ.. என்றோ ஒரு நாள், கண்டிப்பாக கோமலைக் காப்பாற்ற மூர்த்தி வந்துவிடுவான். கோமலும் துளசியாக மாறி நல்வாழ்வு வாழ்வாள். ஆனால் அங்கு மாட்டிக்கொள்ளும் எல்லா கோமல்களும் கோமல்களாகவே மறித்துப் போகும் அவலம் தான் அதிகம். அவர்களுக்காக மூர்த்தி வருவதுமில்லை… அவர்கள் துளசியாய் மாறுவதுமில்லை என்பது நிதர்சனம்.
தந்திரமான நரியை நம்பி வந்ததிற்குப் பட்ட வலி எல்லாம் போதாதா? பெண் மனம் பதறியது.
அழுகையை அடக்கவே முடியவில்லை. இருந்தும் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை வெளிவரவிடவில்லை. அவன் வருவதற்குள் செத்துப் போக வழி கிடைக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ‘ஆண்டவா என்னைக் காப்பாற்று இல்லையேல் கொன்றுவிடு’ மனம் இறைவனைத் கூப்பிட்டது.
அவனைத் தான் கொல்லவேண்டும்! எப்படி? சுவரில் பிடிப்பில்லாமலிருந்த இரண்டு ஆணிகளைப் பிடுங்கி விரல் நடுவில் வைத்துக்கொண்டாள். அருகே வந்தால் நேரே கண்ணிலும் தொண்டையிலும் குத்தி கொன்றுவிட வேண்டும் என்ற முடிவில் அமர்ந்துவிட்டாள்.
தண்ணீர் குடித்தே ஒரு நாள் ஆகியிருக்க.. இருந்த அழுத்தமும், பயமும், பசியும் ஒன்று சேர்ந்து அவளை மயக்கத்திற்குள் தள்ள, கண் இருள ஆரம்பித்தது.
அவளே அவள் கையை கடித்துக்கொண்டாள். ‘மயங்காதே.. மயங்காதே..’ என்று சொல்லிக் கொண்டாலும் உடல் அசதியில் பாதி மயக்கத்திற்கு உடல் அழைத்துச் சென்றது.
முழங்காலில் முகம் புதைத்துப் பாதி மயக்கத்தில் எத்தனை மணி நேரம் இருந்தாளோ தெரியவில்லை.
‘படாஆஆஆர்’ என்ற சத்தத்தோடு கதவு திறக்கவும் முழு உணர்ச்சிக்கு வந்தவள் பயந்தடித்துக் கொண்டு அடித்துப் பிடித்து எழுந்து நிற்க.. அவள் காலில் சாஷ்டாங்கமாக வந்து விழுந்தான் கௌரவ்.
படபடப்பு அடங்க மறுத்தது. இதயம் அதன் ரிதத்தை கூட மறந்தே போனது. முதலில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்து நரகத்தைக் காட்ட சூளுரைத்தவன் அவள் காலடியில் என்ன செய்கிறான் என்று தான் பார்த்தாள்.
வாசலில் நிழலாட, காலடியில் விழுந்து கிடந்தவனைப் பார்த்து நின்றிருந்தவள் முகம் நிமிர.. பார்வை உயர்ந்தது.
வாசில் நின்றிருந்தான் அவன். வேட்டி நுனி வலது கை விரல் நுனியில் சிக்கியிருக்க.. இடது கை ஆட்காட்டி விரல் மீசையை மேல் துக்கி விட்டுக் கொண்டே… பார்வை சுவரோடு சுவராய் நின்றிருந்தவளை ஊடுருவிக் கொண்டே.. அவன் துளசியைப் பார்த்து நின்றான் மூர்த்தி.