செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 11_2
அன்று இரவு தோழர்கள் அனைவரும் விடை பெற்றுச் செல்ல, தனித்து நின்றிருந்தனர் ஆருயிர் தோழர்கள் இருவரும்.
“என்ன மூர்த்தி முடிவு பண்ணி இருக்க?” தனிமையில் சத்யன் கேட்க
“இனி மேல் முடிவு பண்ண என்ன இருக்கு சத்யா?” என்று தான் பதில் கொடுத்தான்.
“கோபப்படாத. இன்னைக்கு உணர்ச்சிவசப்பட்டு நீ முடிவெடுக்கலாம். ஆனா நாளைக்கு பின்ன… நடந்த விஷயங்க உன் மனசில நெருடல உருவாக்கினா… அந்த பொண்ணு பாவம் டா. தாங்கமாட்டா. எதனாலும் யோசி மூர்த்தி. உன்னால பல பேர் நாசம் பண்ணின பொண்ணோட… புரியுதா நான் சொல்ல வரது?”
“அவ என் துளசி சத்யா! என் மனைவி டா. அப்படி தான் என் மனசில பதிஞ்சு போயிருக்கா! விடமுடியாது. நான் ஒரு விடோவர்.. எனக்கு ஒரு குட்டி பாப்பா இருக்குன்னு ஒரு பொண்ணு இவட்ட சொன்ன போது, கொஞ்சம் கூட முகம் சுளிக்காம.. என் குழந்தைய அவ குழந்தையா வளப்பான்னு சொன்னவ. அப்போ நான் ஏற்கனவே ஒருத்தி கூட இருந்தேன்னு அவ யோசிக்கவே இல்லையே. அப்போவே என் மனசை மொத்தமா எடுத்துகிட்டா சத்யா. அவ மனசு ரொம்ப சுத்தம் டா.. அவள இந்த ஜென்மத்தில ஒருத்தனாலும் களங்கப் படுத்தவே முடியாது சத்யா. அவ அழகு தான்.. ஆனா அந்த அழகு என்னை திரும்பி பாக்க வைக்கல சத்யா. அதனால எனக்கு அவ திகட்ட மாட்டா…”
சத்யனால் ஒன்றுமே பேச முடியவில்லை. கட்டி தழுவிக்கொண்டான்.
“உன்ன மாதிரி ஒருத்தனை என் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்க ரொம்ப பெருமையா இருக்கு மூர்த்தி! ஜெம் ஆஃப் எ பெர்சன் டா நீ! உன் ஃப்ரெண்டா இருக்க நான் என்ன புண்ணியம் செஞ்சேனோ…”
“டேய் மடையா… அடங்கு… புது பொண்டாட்டியைக் கட்டி பிடிக்கிறத விட்டுட்டு என்னை கட்டி பிடிச்சு டையலாக் எல்லாம் பேசிகிட்டு! போடா போடா.. பொண்ணு இங்க வந்திட போகுது உன்ன தேடி…”
“ஏன் டா மூர்த்தி.. உன் பின்னாடியே வர பொண்ணுட்ட உன் மனசைச் சொன்னா என்ன? நீ தான் அவளுக்குப் பார்த்த பையன்னு சொல்லலாமில்ல?” சத்யன் கேட்க,
“சொல்லலாம்.. சொல்லி? நான் உன்னை காப்பாத்திட்டேன்… கைமாறா உன்னை எனக்கு தான்னு கேக்கிற மாதிரி ஆகிடாது? அவ மனசெல்லாம் வலில இருக்கு டா. காயம் ஆறட்டும். அவளுக்கா என் அன்பு புரியும். இப்போ நிற்கதியா நிக்கும் போது கை பிடிச்சா.. ஏதோ தெய்வத்தை பார்க்கிறமாதிரி பாப்பா. என் சந்தோஷத்துக்காக வாழறதே அவ வாழ்கையோட குறிக்கோள் ஆகிடும். அது வேண்டாம். சின்ன பொண்ணு. சிறக விரிச்சி சந்தோஷமா வாழணும். அவளுக்கா என் மேல ஒரு நாள் காதல் வரும். அன்னைக்கு அவ கை பிடிப்பேன். இப்போ நீ உள்ள போடா…”
உள்ளுக்குள் இருந்த காதல் எல்லாம் அவனை ஏதோ லோகத்தில் சஞ்சரிக்கச் செய்தது. கற்பிற்கும் உடல் சதைக்கும் சம்பந்தம் இல்லை என்ற எண்ணத்தினால் அவனுக்குத் துளசியின் வலி மட்டும் தான் தெரிந்தது. அவனை பொருத்தமட்டில் அவன் துளசி எல்லா வகையில் பவித்திரமான துளசி தான்.
திருமணம் முடிந்த அடுத்த இருதினத்தில் இருவரும் கிளம்பிவிட்டனர். அங்கிருந்தவரை பிள்ளைகளோடு குடும்பத்தில் ஒருத்தியாய் இருந்தது மனதிற்கு மிகவும் பிடித்துப் போனது.
எங்கு கூட்டிச் செல்கிறாய் என்று கேட்கவில்லை. அது அவள் சிந்தனையில் வரவும் இல்லை. அவனையே சுற்றி வந்தாள். குட்டிப் போட்ட பூனை போல் அவனையே சுற்றி வருபவளை பார்க்க ஆசையாகத் தான் இருந்தது அவனுக்கு. இருந்தும் இரண்டடி தள்ளியே நின்றான்.
புன்னகை முகமாக சத்தியன் குடும்பத்தினரிடமிருந்து விடை பெற்றுச் சென்றனர்.
“நீ நடந்த எதைப் பத்தியும் யோசிக்காத மூர்த்தி. இவனுங்கள நான் பார்த்துக்கிறேன். துளசிய பார்த்துக்கோ… நான் சொன்ன சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட காட்டு. நல்ல முடிவா எடுங்க!” சத்தயன் கட்டி அணைத்து விடை கொடுத்திருந்தான்.
கூட்டத்தில் நீந்திச் சென்று எப்படியோ இரயில் ஏறிவிட்டிருந்தனர். இரவு ஒன்பது மணிக்கு இரயில் தடதடக்க ஆரம்பிக்கும். தில்லிக்கு அவளை அனுப்ப அவனுக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. தெரிந்தோ தெரியாமலோ… உணர்ந்தோ உணராமலோ… மகளைப் பாழ் கிணற்றில் தள்ளியது ராஜன் தான் என்பதை மூர்த்தி கண்மூடி நம்பினான். அதனால்..
“அப்பாட்ட போகணுமா?” என்று அவன் கேட்கவில்லை.
கடந்து வந்த பாதையின் பாரம் அவளை அழுந்த, அடுத்த நிமிடம் பற்றிய யோசனை எழவில்லை. அதனால்..
“அப்பாட்ட போறேன்” என்று அவளும் கூறவில்லை.
அப்பா என்றவர் அவள் வாழ்வின் என்றுமே இருந்ததில்லை என்றதால் கூட இருக்கலாம். அன்று போல் இன்றுமே அவளுக்கு உரிமையோடு செல்லக் கூடிய போக்கிடம் என்று ஒன்று இல்லை.
“நான் ஜன்னல் கிட்ட…” ஓடி சென்று இடம் பிடித்துக் கொண்டாள். நின்று கொண்டிருக்கும் ரயிலிலிருந்து எவ்வளவு நேரம் வெளியே பார்ப்பது? அவனைப் பார்த்தால், அவனோ புத்தகத்தை புரட்டிகொண்டிருந்தான். இவள் அவனையே பார்த்துகொண்டிருக்க.. குனிந்திருந்தவன் முகத்தில் புன்னகை கீற்று.
“என்ன வேணும்?” என்றான் முகத்தை திருப்பாமலே..
“வயிறு பசிக்குது..” என்று ஆரம்பித்தாள்.
அதிர்ச்சியாய் அவன் பார்க்க… தப்பாக எதுவும் கேட்டுவிட்டோமோ என்ற சந்தேகமே வந்துவிட்டது பெண்ணுக்கு.
“ஏன் அப்டி பாக்கறீங்க? பசிக்குதுனு தானே சொன்னேன்?”
குழப்பமாகப் பார்த்தவளைப் பார்த்தவன் முகத்தில் சிரிப்பு எட்டிப்பார்த்தது. ஏனோ நான்கு நாட்களாகவே அவனுக்குள் ஒரு துள்ளல்.
“சாயங்காலம் சாப்பிட்டியே..? அதுகுள்ள பசிக்குதா?”
“ஆறு மணிக்கு சாப்டது. அதுவும் நைட்டுக்கு அவங்க பேக் பண்றாங்களேன்னு நாலே நாலு பூரி தான் சாப்டேன்.. இப்போ பசிக்குது. எனக்கு அதுல இல்லியா? தர மாட்டீங்களா?”
“நாலு பூரி, ஒரு டம்ளர் ரோஸ் மில்க், ரெண்டு குலாப் ஜாமுன்… முழுசா முழுங்கி நாலு மணி நேரம் ஆகல.. அதுக்குள்ள பசிக்குதா?”
“பாட்டி சொல்லி இருக்காங்க… இந்த வயசில கல்ல சாப்பிட்டா கூட கரைஞ்சிடுமாம். ஐயோ… எனக்கு பசிக்குது! சாப்பாடு தாங்க..”
வயிற்றுப் பசி தாங்காமல் அவனை அவள் அனத்த…
அவன் கண்ணுக்கு, கை கால் முளைத்த ரசகுல்லா கருப்பு விழி உருட்டி பேசிக்கொண்டிருப்பது போல் தான் தோன்றியது.
“க்கும்…!” என்றாள்
“க்கும்!” என்றாள்
“ஏங்க…? என்னங்க?” என்றாள்
பல ‘க்கும்’ ‘என்னங்க’-விற்கு பின் அவன் உலகத்திலிருந்து மீள.. அவளுக்கு பெருத்த சந்தேகம் இவரை எப்படிக் கூப்பிடுவதென்று.
“உங்கள எப்படி கூப்பிடுறது?” என்று அவனைப் பார்க்க.. வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை அவனால்.
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட..”
எதற்கும் சிரிப்பு தானா மூர்த்தி சார்?
“அது தான் கேட்டுடேனே.. சொல்றது” அவள் அலுத்துக் கொள்ள..
“மூர்த்தி! மூர்த்தி என் பேரு. உனக்கு என்னை எப்படி கூப்பிடணும்னு தோணுதோ அப்பிடியே கூப்பிடு!” என்றான்.
பேசிக்கொண்டே சத்யன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த உணவை இருவருமாக உண்டு முடிக்கவும் எதிர் இருக்கையில் ஒரு முதியவரும் அவர் பத்து வயது பேரனும் வந்து அமர்ந்தனர். சாமியாடிக் கொண்டே வந்த சிறுவன்.. வந்ததும் மேல் பர்த்தில் குறட்டை விட ஆரம்பித்தான். பெரியவருக்கு அருகிலிருந்த இருக்கையில் வயதான பெண்மணி ஒருவர் அமர்ந்தார்.
மூர்த்தி அருகில் அமர வேண்டியவன், வந்ததும் மேல் பரத்தில் படுத்துக் கொண்டான்.
இரயில் கிளம்ப.. ஜன்னல் வழி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். கண்ட காட்சி எல்லாம் பின்னோடு சென்றது. தாத்தா மரணத்திற்குப் பின் நடந்த நிகழ்வுகளின் நினைவுகளும் அப்படியே சென்றால் எவ்வளவோ நன்றாயிருக்கும். பழைய நினைவுகள் உள்ளத்தைக் கிழிக்க.. கண்ணை மூடிக்கொண்டாள்.
ஊரே இருட்டில் மூழ்கியிருக்க, பார்த்து ரசிக்க ஒன்றுமில்லாததாலோ.. காலை முழுவதும் பிள்ளைகளோடு விளையாடியதாலோ.. இல்லை மூக்கு முட்ட உணவை உண்ட மயக்கத்தினாலோ.. அமர்ந்த வாக்கில் உறங்கி இருந்தாள்.
அவள் உறங்கிவிட, இன்னும் விளக்குகள் அணைக்கப்படாததால் அவன் கதவை திறந்து வைத்துக்கொண்டு வெளியே வேடிக்கை பார்க்கச் சென்றுவிட்டான். மனம் முழுவதும் அடுத்தடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணவோட்டங்கள்.
எத்தனை நிமிடங்கள் உறங்கினாளோ..
“கோமல்..” என்ற அழைப்பு அவளை உலுக்கியது. கௌரவ் தான் நின்றிருந்தான். சிரித்தான்.. “வா கோமல் என்னோட.. நான் இருக்கேன்..” என்றான்.
“கோமல்..”.. காதலாய் மோகமாய்… அவன் அழைக்க… சத்தம் நாராசமாய் மூளையைத் தாக்கியது.
தூக்கத்தின் நடுவில் அவள் பெயரைக் கேட்டதும் உடல் தன்னால் நடுங்க ஆரம்பித்தது. கண்ணிமைகள் கனக்க.. என்ன முயன்றும் அதைத் திறக்க முடியவில்லை.
“மாட்டேன்.. என்னை விடு..!” மெல்ல முனக ஆரம்பித்தாள்.
தூங்கிக் கொண்டிருந்தவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது கௌரவின் “கோமல்”. அந்த அழைப்புக்கு பின் இவளை எங்காவது கூட்டி சென்றுவிடுவார்கள். ஒருவன் வருவான். இதோ… வந்துவிட்டானே! வந்தவன் இவள் அருகில் வரவும் கால் ஓட எத்தனிக்க.. ஏனோ அது அசையவே இல்லை. என்ன பாடு பட்டும் நகர முடியவில்லை. அவன் விட்ட அறையில் கன்னம் எரிந்தது. கண் இருட்டியது. அவன் பாய்ந்தான். அவள் துடித்தாள்.
மூளையில் சுரீர் என்றது. கண்ணைப் பாதி திறந்தும் திறக்காமலும், “வேண்டாம் வேண்டாம் என்னை விட்டுடு. எனக்கு வலிக்குது போதும் போதும்… விடு என்னை..” என்று சத்தமாக அலற ஆரம்பித்தாள்.
கதவருகில் நின்றிருந்தவன் அப்பொழுது தான் இருக்கைக்கு வந்தான். பார்த்த காட்சியில் உறைந்து போனான்.
ஜன்னலில் தலை சாய்ந்து அமர்ந்தவண்ணம் தூங்கிக் கொண்டிருந்தவள் இருந்த வாக்கிலேயே, கண்முன் உருவம் இருப்பதாய் நினைத்து காற்றை அடித்துக் கொண்டே கண்ணீர் விட்டுக் கதறியவளைப் பார்த்தவன் மனம் உடைந்து போனது.
அவள் அருகில் சென்று அவளை எழுப்ப எத்தனிக்க.. அவனையும் நெருங்க விடவில்லை. “என்ட்ட வராத.. போ..” என்று அவள் அலற.. சக பயணிகள் அவளையும் இவனையும் ஒரு மாதிரி பார்க்க…
“ஷ்… கோமல், நீ கனவு காணற.. எழுந்திரு..” என்று அவளை உலுக்கவும் கண் திறந்தவளுக்கு ஒரு நிமிடம் பிடித்தது சுற்றம் உணர. திருவிழாவில் தொலைந்த குழந்தை போல் தான் தெரிந்தாள். அவனுக்குப் பேச்சே வரவில்லை. அருகில் அமர்ந்து கொண்டான்.
தண்ணீர் ஊற்றிக் கொடுத்தவன், “கண்ணைத் துடைச்சுக்கோ… இத குடி!” என்றான்.
“அவன்… அவன் வந்தான்…” என்றாள்.
“அவன் இனி மேல் வரவே மாட்டான்..” என்றான்
“நெஜம் மாதிரியே இருந்துது. பயந்திட்டேன்..” என்றாள்
“நான் இருக்கேன். யாரும் உன் கிட்ட வர முடியாது. தைரியமா இரு.”
“ம்ம்”
குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் படி பேச, அவள் அங்கிருந்தவர்களை நோட்டமிட, அவர்கள் பார்வையும் இவர்கள் மேல் தான்.
பெரியவர், “ஏன்மா… இவனால ஏதாவது பிரச்சினையா?” எனவும், இவன் திரும்பிப் பார்க்க, அந்த பார்வையில் அவர் சகலமும் நடுங்கியது.
இருந்தும் பெரியவர் அதை காட்டிக்கொள்ளவில்லை.
“சொல்லுமா… இவர் பிரச்சினை பண்றாரா?”
‘இல்லை’ என்பது போல் தலையசைத்தவள் அவனைப் பார்க்க அவனும் அவளை தான் பார்த்தான்.
புருவம் மட்டும் உயர்த்தி, ‘என்ன?’ என்பது போல் அவன் பார்க்க… மீண்டும் அதே ‘இல்லை’ என்ற தலையசைப்பு மட்டுமே பதிலாய் வந்தது.
குனிந்து அவள் காதருகில் “மாத்திரை போட்டுக்கறியா?” என்றவனுக்கு.. மீண்டும் அவளிடம் இருந்து ஒரு தலையசைப்பு.
“நான் இருக்கேன். பழச நினைக்காத!” என்றான் ஆறுதலாய்.
“ம்ம்ம்… சரி..” என்றாள் குனிந்த தலை நிமிராமலே.
“என்ன(னை) பாரு” என்றான்.
தலை நிமிர்த்தி அவனைப் பார்க்க…
“எதுக்கும் யாருக்கும் பயப்பட கூடாது. எதிர்ல இருக்கவங்க முகத்தை பார்த்துப் பேசு.. தலைய தொங்க போடாத எப்பவுமே.. யாரும் உன்ன ஒண்ணும் செய்ய முடியாது. நான் எப்பவுமே உனக்காக இருப்பேன்.. என் மேல நம்பிக்கை இருக்கில்ல?”
“ம்ம்… நிறைய” என்று தலையை மேலும் கீழும் வேகமாய் ஆட்டி வைத்தாள்.
“இந்தா மாத்திரை போட்டுக்கோ..”
பார்த்துக் கொண்டிருந்த பெரியவருக்கு அவர்கள் பேசுவது கேட்கவில்லை. காட்டெருமை முயல் குட்டியை மிரட்டுவது போல் தான் தோன்றியது. ஏதோ சரியில்லை என்று தோன்றி விட, “என்னை உன் அப்பாவா நினைச்சுக்கோ… சொல்லுமா.. இந்த ஆள் உன் கிட்ட பிரச்சினை பண்றானா? பயப்படாத… போலிஸ் கிட்ட பிடிச்சுக் கொடுத்திடலாம்!” என்றார்.
கண்ணை மூடியவளுக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ.. ‘அப்பா.. என்று எண்ணியவன் என்ன செய்தான்… அப்பாவாம் அப்பா..! யாருக்கு வேணும் இந்த மாதிரி அப்பாக்கள்’.
‘இருக்க பொறுக்கி எல்லாரையும் விட்டுட்டு இவர போலீஸ்ட்ட பிடிச்சு கொடுக்க போறாராமே..’
பார்த்துக்கொண்டிருந்த முதியவரைக் கூர்ந்து பார்த்து, “எனக்கு அப்பா வேண்டாம். இவர் போதும். இவர் மட்டும் போதும்.” என்றுவிட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டாள்.
மூர்த்தியின் முகத்தில் புன்னகை அரும்ப.. ‘உனக்கு இது தேவையா?’ என்பது போல் முதியவரைப் பார்த்தாலும்.. “அவளுக்குக் கொஞ்சம் முடியல. எதையோ பார்த்து பயந்திட்டா போல..” என்று அவருக்குத் தெளிவு படுத்தினான்.
மாத்திரை செய்த மாயத்தில்.. பத்தே நிமிடத்தில் தூங்கியிருந்தாள். அவளின் வார்த்தைகள் செய்த மாயம்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு மூர்த்தியும் தட தடக்கும் ரயிலின் தாலாட்டில், தன்னை மறந்து நிம்மதியாக நித்திரா தேவியின் மடியில் சரணடைந்தான்.
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ… ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…