ஆதித்யதேவ் தன்னை ‘தன்யா பில்டர்ஸ்’சுடன் இணைத்துக்கொண்டு பதினைந்து நாட்கள் கடந்துவிட்டன. தனக்கு கொடுத்த வேலையை மட்டும் அல்லாது, மற்றவரின் வேலையிலும் கவனமாய் இருந்து, அவரவருக்கு தகுந்தபடி, திகட்டாதபடி உதவினான். முடிந்தவரை எந்த ஒரு சந்தேகம் எனினும், தன்யாவிடம் செல்வதற்கு பதில், தீர்வுகள் ஆதி வழியாகவே வழங்கப்பட்டன.
அங்கு வேலையில் இருக்கும் அனைவரிடத்திலும் தன் வாய்ஜாலத்தால் நட்பாகியிருந்தான் ஆதி. வந்த சில நாட்களிலேயே மூன்று பெரிய ப்ராஜெக்டுகளை அவன் வாங்கிக்கொடுக்க, வாரம் ஒருமுறை அலுவலகம் வரும் இராஜகோபால் கூட அவனைத்தேடி வந்து சந்தித்துவிட்டு போகும் அளவுக்கு நற்பெயர் எடுத்திருந்தான். வெளியே வாடிக்கையாளர்கள் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை.
‘அன்னைக்கு பேசுனாரே, மிஸ்டர் ஆதி! அவர்க்கிட்ட குடுங்க மேடம், நாங்க பேசிக்குறோம்’ என தன்யாவிடமே கேட்கும் அளவுக்கு தன் வாய்வரிசையால் குறுகிய நாட்களில் பெயர் பதித்துவிட்டான் என்றால் அது மிகையல்ல. வடக்கில், சொந்த நிறுவனத்தை லாபத்தோடு கட்டி மேய்த்துக்கொண்டிருந்தவனுக்கு, இங்கே அவனுக்கென ஒதுக்கப்பட்ட வேலை, யானை பசிக்கு சோளபொறியென குறைவாகவே இருந்தது.
கோகுலுக்கு, ‘நித்திய கண்டம், பூர்ண ஆயுசு’ தான்! ஒவ்வொரு நாள் பொழுதும் முடிகையில் அவனை விட நிம்மதி அடைபவர் யாரும் இருக்க முடியாது. ‘ஹப்பாடா, இன்னைக்கு எதுவும் ஆகலை.. ஆனா, நாளைக்கு?’ என்ற பீதியுடனே நாட்கள் சென்றது.
ஆதி எல்லோரிடமும் நல்ல பேர் எடுத்துவிட்டாலும், எடுக்கவேண்டியவளிடமோ இன்னும் இன்னும் வம்பு வளர்த்து சீண்டிக்கொண்டே தான் இருந்தான் ஆதி. தினமும் அவள் ஆபிஸ் கிளம்புவதற்க்கே, ‘ஐயோ போணுமா?’ என சலிக்க வைத்திருந்தான். நாள் முழுக்க அவன் அடாவடிகளில் அயர்ந்து போகும் தன்யா, அவனை வகையாய் மாட்டிவிட ஒரு காரணம் கிடைக்காதா? என அவன் வேலைகளில் கண்க்கொத்தி பாம்பாய் கவனம் வைத்தாலும் இம்மி கூட எதுவும் சிக்காததால், வெறுப்படைந்து வீடு செல்கையில், அண்ணன் சுரேந்தர் தான் அவள் புலம்பல்களை கேட்க காத்திருக்கும் ஒரே அடிமை!!!
தினமும் அவள் எதை பற்றி பேசுவாளோ இல்லையோ! ‘இன்னைக்கு அவன் என்ன செஞ்சான் தெரியுமா?’ என பீடிகையாய் ஆரம்பித்து நாள் முழுக்க நடந்த கூத்துகளை சொல்லி முடிக்கையில் அதற்கு மேல் இருவருக்கும் பேசவே ஒன்றும் இருக்காது.
சுரேன் கூட, ‘யாருடா அவன்? எனக்கே அவனை பார்க்கணும் போல இருக்கு!’ என கிண்டல் செய்கையில், அவளோ, ‘ஒன்னும் தேவையில்லை! போ’ என முறுக்கிக்கொண்டு அழைப்பை அணைத்துவிடுவாள்.
அவனை எப்போதும் புகழ்ந்துக்கொண்டே இருக்கும் தந்தை முன்னே, அவனை கீழிறக்க, அவன் செய்யும் ஒரே ஒரு தவறு சிக்காதா? என தருணம் பார்த்து காத்திருந்தாள் தன்யா. அன்றைய பொழுது, அவளுக்கென ஒரு வாய்ப்பை கொடுத்தது.
ஒரு தனியார் நிறுவனத்துக்கு பன்மாடி அமைப்புக்கொண்ட இரண்டு சொகுசு அப்பார்ட்மென்டுகளை கட்டித்தருவதற்க்கான ஆர்டரை பெற்றுக்கொண்டு அலுவலகம் வந்திருந்தான் ஆதித்யா.
தன்யாவின் அறைக்கு சென்றவன், “ஹாய் மேடாம்” என்றான் வாசலிலேயே.
அவனை ‘வா’ என்பது போல தலையசைத்தவள், கணினியில் வேலையில் இருக்க, கையில் இருந்த கோப்புகளை அவளிடம் நீட்டினான் ஆதி.
“அக்ரீமென்ட் போட்டாச்சு மேடாம்! ஒன்ஸ் செக் பண்ணிட்டு சார்க்கிட்ட அனுப்பிடுங்க!” என்று சொல்ல, வார்த்தையின்றி சிறு தலையசைப்போடு அவனுக்கு விடைக்கொடுத்தாள் தன்யா.
அவனிடம் பேசினால் தானே இடக்கு மடக்காக போய் தலைவலி என்று! இப்போதெல்லாம் முடிந்தவரை அவனிடம் வாய் கொடுப்பதே இல்லை. இது அவனுக்கும் நன்றாக புரியவே செய்தது.
ஏனோ அன்று அப்படியே திரும்பி செல்ல மனமில்லாதவன் போல அவன் நிற்க, நிமிர்ந்து, ‘என்ன?’ என்பது போல புருவம் உயர்த்தினாள் தன்யா.
“கோவிலுக்கு ஏதாவது விரதமா?” என்றான்.
சம்பந்தமில்லாத அவன் கேள்வியால், “வாட்…?” என அவள் முகம் சுருக்க,
“இல்ல… மௌன விரதமோன்னு டவுட்டு!!!” என கேட்டு ‘ஈஈஈ’ என சிரித்தான் ஆதி. ‘வேணாம்… பேசாத தன்யா’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள், சிறு தலை குலுக்கலோடு மீண்டும் கணினியிடம் திரும்பிக்கொண்டாள்.
அவள் திரும்பியதும், “நான்கூட இன்னைக்கு மௌன விரதம் தான் மேடாம்” என அவன் சொல்ல, “ஹான்?” என விழிவிரித்தவளிடம், “மனசுக்குள்ள மட்டும்! ஹிஹி! புது வகை விரதம்” என பல்லைக்காட்டினான் ஆதி.
‘ஓ காட்’ என முனகிய தன்யா, “மிஸ்டர்… உங்களுக்கு வேற ஏதாவது வேலை இருந்தா அதை தயவுசெஞ்சு போய் பாருங்களேன்” என சொன்னதும், மனமே இன்றி, “ஓகே” என நகர்ந்துவிட்டான் ஆதி.
அவன் அறையை விட்டு சென்றதும், ஆசுவாசமாய் நாற்காலியில் சாய்ந்தவள், கையில் அவன் கொடுத்த அக்ரீமெண்டை எடுத்து புரட்டினாள். முழுவதுமாய் அவள் பார்க்கையில் ஓரிடத்தில் அவள் கண்கள் இடுக, மறுநொடியே, ‘மாட்டுனடா மவனே’ என குஷியாய் எழுந்தாள் தன்யா.
ஆதியை வர சொல்லலாம் என ஒரு நொடி அவள் நினைக்க, மறுகணம், ‘வேண்டாம்’ என தானே எழுந்து வெளியே சென்றாள்.
ஆதியின் கேபின் அருகே சென்றவள் கோபமாய், “ஷீலா! ஆதியை கூப்பிடு!” என உத்தரவிட, அந்த பக்கம் ஒரு வேலையாய் வந்திருந்த ஷீலா, பதறிப்போய் ஓடினாள் அவன் கேபினுக்கு.
தன்யாவின் சத்தம் கோகுலுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘ஆஹா! கிரகம் ஆரம்பிச்சுடுச்சோ?’ என நினைக்கும்போதே, வெளியே வந்தான் ஆதி. இதர வேலையாட்கள் எல்லாம் வித்தை நடப்பதை பார்ப்பது போல இவர்களையே பார்க்க, “என்னாச்சு மேடம்?” என்றான் ஆதி இன்முகமாய்.
அவன் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காதபடி, அந்த அக்ரீமென்ட்டை அவன் முகத்திற்கு நேரே விசிறி அடித்தாள் தன்யா. உள்ளிருந்த காகிதங்கள் சில தெறித்து விழ, அவள் செய்கையை எதிர்ப்பாராதவன் முதல்முறை உஷ்ணம் ஏறிய விழிகளுடன் அவளை எதிர்க்கொண்டான்.
அவனுக்கு சளைக்காத பார்வை பார்த்தவள், “என்ன பார்க்குற? ஒரு வேலை உருப்படியா செய்யணும்! செய்ய தெரியலன்னா தெரிஞ்சவங்கக்கிட்ட கேட்கணும்! உனக்கு தான் அப்டி எந்த பழக்கமும் இல்லையே!” என்றாள் சிறு எள்ளலுடன்.
“என்ன செஞ்சுட்டேன்!” என்ற ஆதியின் குரல் இறுகிப்போய் இருந்தது.
“நம்ம கம்பெனிக்குன்னு சில ரூல்ஸ் அண்ட் டர்ம்ஸ் இருக்கு! அதை மீறி நீயா ஒரு ரூல் போட்டா, என்ன அர்த்தம்? இங்க வேலை பார்த்தா நீயே ஓனர்ன்னு நினைச்சுட்டு இருக்கியா?” என்றாள் அவன் பாஷையிலேயே.
அவளையே பார்த்தவன், “என்ன செஞ்சேன்னு கேட்டேன்” என்றான்.
“கீழ கடக்குற பேப்பர் எடுத்து பாரு, மார்க் பண்ணிருக்கேன்” என அவள் அலட்சியமாய் சொல்ல, அவன் சிவந்த முகம் மேலும் சிவந்தது கோவத்தால்.
கோகுல் அதற்குமேல் ஒதுங்கி நிற்க முடியாமல், “மேம், என்ன பாஃல்ட்டுன்னு சொன்னா கரெக்ட் பண்ணிடப்போறான்ன். அதுக்கேன் எல்லார் முன்னாடியும் இப்படி பீகேவ் பண்றீங்க?” என்றான்.
அவனை வெடுக்கென திரும்பி முறைத்தவள், “உங்க வேலை என்னவோ அதை மட்டும் நீங்க பாருங்க… எனக்கு என்ன செய்யணும்ன்னு தெரியும்!” என சொல்லும்போதே, அவ்விடம் சட்டென அமைதியாய் போக, ‘ராஜகோபால் வருகிறார்’ என புரிந்து போனது அவளுக்கு.
‘போன்ல சிசிடிவி கனெக்ட் பண்ணதும் பண்ணாரு, என்ன நடக்குதுன்னு பார்த்துத்துட்டே இருந்துட்டு மூக்கு வேர்த்த மாறி எங்கிருந்தாலும் உடனே வந்துடுறது! ச்ச!’ என சலித்தவள், ‘வந்தா மட்டும் என்ன? அவன் பண்ணது தப்பு தானே?’ என நிமிர்ந்து நின்றாள்.
ஆதி அவளை பார்த்தான் என்பதை விட, அதீதமாய் முறைத்தான் என்று சொல்வதே சரியாக இருக்கும்! ராஜகோபால் வந்தும் கூட அவன் பார்வை மாறவில்லை.
வந்தவர், “என்ன நடக்குது இங்க?” என கேட்க, தன்யா சொல்லட்டும் என அங்கிருந்த ஒருவரும் பேசவில்லை. தங்களுக்கு அபிமான ஒருவரை அனைவர் முன்னும் இப்படி நடத்தியது அவர்களுக்கே சினத்தை உண்டாக்கியது போலும்.
பணியாட்களின் பார்வை தன்யாவை சரணடைவதை கண்ட ராஜகோபால், “ஆதி, என்னப்பா ப்ராப்ளம்?” என்றார் அவனிடமே.
அவனோ தன் பார்வையை ஒரு நொடி மட்டும் அவரிடம் கடன் கொடுத்தவன், மீண்டும் தன்யாவை முறைத்துக்கொண்டே, “அந்த எம்.எல் ப்ரொஜெக்ட் அக்ரீமென்ட் இன்னைக்கு சைன் ஆகிடுச்சு” என்றான்.
அவர் மகிழ்வுடன், “சூப்பர் ஆதி! நீ பேசி ஒருத்தன் ப்ரொஜெக்ட் தராம போய்டுவானா என்ன? ஆனாலும் அவன் ரொம்ப பிகு பண்ணிட்டு இருந்தானே? எப்படி சமாளிச்ச?” என்று வியப்புடன் சிரிக்க, அவர் சிரிப்பில் கலந்துக்கொள்ளாதவன், “அதுல என்ன மிஸ்டேக்ன்னு எனக்கு தெரியல! மேடம் அக்ரீமென்ட் பிளாப்பியை என் முகத்தில விட்டேரிஞ்சுட்டு, எல்லார் முன்னாடியும் திட்டிட்டு இருக்காங்க” என சொல்ல, தன்யா அதை செய்தபோது தோன்றாத தவறுணர்வு, அதை அவன் வாயால் கேட்கையில், குத்தியது அவளுக்கு.
அவன் சொல்ல மாத்திரத்தில் தன்யாவை முறைத்த ராஜகோபால், அவளிடம் ‘தான் பேச மாட்டேன்’ என்பதையும் விடுத்து, “வாட் இஸ் திஸ் தன்யா? இதென்ன ஸ்கூலா இல்ல காலேஜா? அங்க கூட இப்போ இப்படி யாரும் நடந்துக்க முடியாது! அவர் தப்பு செஞ்சா உங்க கேபினுக்கு கூப்பிட்டு தானே சொல்லிருக்கணும்?” என்றவர்,
“அப்படியே அது பெரிய தப்பா இருந்தாலும், ஒரு மேனேஜரா உங்க டியூட்டி என்ன? அதை எம்.டி, என்கிட்ட சொல்றது தானே?” என்றதும், முணுக்கென்று அவள் கண்கள் கலங்கி விட்டது,
‘அப்போ இது என் கம்பெனி இல்லயா? நான் வெறும் வேலையாள்ன்னு எல்லார் முன்னும் அப்பா சொல்றாரா?’ என்ற எண்ணத்தில் அவள் மனம் வலிக்க, கண்கள் நீரை சுரக்க தயாராயின.
ராஜகோபால், “ஓகே கேபினுக்கு போலாம்! நோ மோர் டிஸ்கஷன்ஸ் ஹியர்” என அவர் திரும்ப, ஆதி, “வெயிட் அ மினிட் சார்! பிரச்சனை எல்லார் பார்வைக்கும் வந்தாச்சு! தீர்ப்பு மட்டும் ஏன் நாலு சுவத்துக்குள்ள? அதையும் இங்கயே பேசிடுவோம்” என்றான் திண்ணமாய்.
அவன் சொல்லை ஏனோ அவரால் அலட்சியப்படுத்த முடியவில்லை.
தன்யாவிடம், “அவர் பண்ண தப்பு என்ன?” என்று ராஜகோபால் கேட்டதும், தன்னை சமாளித்தவள், “அக்ரீமென்ட் ரூல்ஸ் அண்ட் டெர்ம்ஸ்ல அவங்களுக்கு கட்டிக்குடுக்குற எல்லா வீட்டுக்கும் ஆகுற செராமிக்ஸ் செலவுல பிப்டி பர்சென்ட் நம்ம ஆஃபர் குடுக்குறதா போட்டுருக்கு!” என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில்.
அவள் குரல் பிசிறு தட்டுவதை உணர்ந்தவனின் உஷ்ணம் மெல்ல இறங்கியது.
அதைக்கேட்ட ராஜகோபால் மட்டுமல்ல, அங்கிருந்த வேலை தெரிந்த ஆட்களுமே திகைத்துப்போயினர்.
ராஜகோபால், “என்னது? ஐம்பது பர்சன்ட் ஆஃபரா?” என அதிர்ந்து போய் கேட்க, “ஆமா சார்” என்றான் ஆதி அலுங்காமல்.
“என்ன ஆதி பேசுற? செராமிக் வொர்க் நம்ம செஞ்சு குடுக்குறது வழக்கமே இல்லை! அதுல போய் ஐம்பது சதவீதம் டிஸ்கவுன்ட் தரேன்னு சொல்லிருக்கியே? இதனால நமக்கு எவ்வளோ நஷ்டம் வரும் தெரியுமா?” என்றார்.
“அவர் எதுக்குமே ஒத்து வரலை சார்! இந்த ப்ரொஜெக்ட் சரியா முடிச்சுக்குடுத்தா, அடுத்து சிட்டிக்கு நடுல அவர் பண்றதா சொல்லிருக்குற ப்ரோஜெக்டும் நமக்கே வரும்… அதான் அவரை ஒருவழியா கன்வின்ஸ் செஞ்சு, இந்த டீல்க்கு ஒத்துக்க வச்சேன்!”
“அதுக்காக? நமக்கு லாபம் குறைவா வந்தாக்கூட பரவால்ல! ஆனா, இது முழுக்க நஷ்டத்துல தான் முடியும்! நம்ம கைல இருந்து காசு குடுக்குற மாறி வேற இருக்கும்… தேவையா இது?” என அவர் கட்டமாய் சொல்ல,
“நஷ்டம் வராம என்னால செஞ்சுக்குடுக்க முடியும் சார்” என்றான் ஆதி.
“அதெப்படி உன்னால முடியும்?”
“நான் இதுக்கு முன்னாடி வேலை பார்த்தது செராமிக்ஸ் கம்பெனி தான்! அங்க நான் சொன்னா, ரேட் கொஞ்சம் கம்மி பண்ணிப்பாங்க! அவங்ககூட லிங்க் வச்சுக்கிட்டா அதுக்கு அடுத்து வர ப்ரோஜெக்டுக்கும் நம்மலே இதையும் எடுத்து செய்யலாம்! லாபம் அதிகமா வரும்… அவங்களுக்கு வேண்டிய ஷேரை குடுத்துடலாம்!” என சொல்ல, யோசனையில் ஆழ்ந்தார் ராஜகோபால்.
ஆதி, “ரொம்ப நல்ல கம்பெனி அது! மகாராஷ்டிரால அவங்களுக்கு நல்ல பேரு! பொருள் எல்லாமே தரமா இருக்கும்”
ஆதி, “இது பெரிய முடிவு, உங்களை கேட்காம நான் இதை செஞ்சுருக்கக்கூடாது! ஆனா, இதை விட்டா வேற வழி இருக்கமாறி தெரியலை எனக்கு! டீல் கையை விட்டுப்போக வேண்டாமேன்னு உங்களை கேட்காம பண்ணிட்டேன்!!” என்றவன், ‘மன்னிப்பு’ மட்டும் கேட்கவே இல்லை.
ராஜகோபால் அவனை ‘மெச்சுதல்’ பார்வை பார்த்தவர் இதழோரம் துளிர்த்த சிரிப்புடன், அவனது தோள் தட்டி, “அந்த செராமிக்ஸ் கம்பெனி டீடெல்ஸ் குடு! பேசி பார்ப்போம்!!” என்றதும், “அதெல்லாம் நானே பேசிடுறேன் சார்” என்றான் ஆதி அவசரமாய்.
அவரோ இன்னும் விரிந்த புன்னகையுடன், “சரி, பேசிட்டு சொல்லு! ஒருமுறை கம்பெனி எம்.டி-யை நேர்ல பார்த்துடலாம்!” என்றதும், மலர்ந்த முகத்தோடு ‘சரி’ என தலையாட்டினான் ஆதி.
இரண்டடி சென்றவர், நின்று திரும்பி, “ஆனா, இனி ஒரு முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லிருக்கணும்! சரியா?” என சொல்லிவிட்டே சென்றார்.
தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காது தந்தை பேசிவிட்டு சென்றதில் தன்மானம் அடிப்பட, யாரையும் நிமிர்ந்தும் பாராமல் விறுவிறுவென தன் கேபினுக்குள் சென்று அடைந்துக்கொண்டாள் தன்யா.
அவள் கண் விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றிருந்தவனை அணுகிய கோகுல், “ஏன்டா, உன் இஷ்டத்துக்கு முடிவு எடுத்துருக்க? பாதி விலைக்கு செராமிக்ஸ் எல்லாம் உங்கொப்பனா குடுப்பான்?” என காய, ஆதி அசராது, “எங்கப்பன் தான் குடுப்பான், வேற யாரு?” என சிரித்தான்.
“அடப்பாவி! அப்போ உங்க கம்பெனியை தான் சொல்லிட்டு இருந்தியா நீ?”
“ஆமா, வேற எந்த இளிச்சவாயன் பாதி விலைக்கு தருவான்?” என கேட்டு ஆதி மீண்டும் சிரிக்க, “எதுக்கு இப்போ உங்க அப்பாவை இங்க கோர்த்து விட ப்ளான் பண்ற நீ?” என சுற்றிவளைக்காது சரியாய் கேள்வி கேட்டான் கோகுல்.
அவனுக்கு பதில் சொல்லாமல் சத்தமாய் சிரித்த ஆதி, “அது இருக்கட்டும்! நீ என்ன உங்க ‘மேடாஆஆமையே’ எதிர்த்து பேசிட்ட? நான் ஏதாது பேசுனாலே தையா தையான்னு குதிப்ப?” என கேட்க,
“அதுக்காக, நண்பனுக்கு ஒன்னுன்னா பார்த்துட்டு நிக்க முடியுமா? இந்த வேலை போனா வேற வேலை, ஆனா, நட்பு?” என நிறுத்தி, “நாங்கல்லாம் ‘சசிகுமார்’ வம்சாவழிடா” என காலரை தூக்கிவிட்டு சொன்ன கோகுலுக்கே சிரிப்பு வந்தது.
பின்பு, “இப்ப என்ன செய்ய போற நீ?” என்றான் கோகுல்.
“நம்ம நந்தினி மெஸ்ல இன்னைக்கு ஆட்டுக்கால் குழம்புன்னு சொன்னாங்க! வரும்போது கேட்டேன்! உடனே போய் ஒரு புடி புடிக்கணும்ன்னு என் ஐம்புலனும் அர்ஜென்ட் பண்ணுது” என ஆதி சொல்ல, “ஏய் தின்னுசெத்தவனே! நான் உங்க அப்பாக்கிட்ட எப்படி இந்த டீல் பத்தி பேசுவன்னு கேட்டேன்” என்றான் கோகுல்.
“அதை என்னத்துக்கு அவர்க்கிட்ட பேசிக்கிட்டு?”
“பின்ன, சரக்கு எப்படி இங்க வரும்?”
ஆதி, “அது சோ சிம்பிள்! ஆபிஸ்ல என் ஆளுங்க எக்கச்சக்கமா இருக்காங்க! அவங்கக்கிட்ட சொன்னா, கேக்குற லோட கச்சிதமா அனுப்பி வச்சுடுவாங்க!” என்றான்.
“இந்த காண்ட்ராக்ட், அக்ரீமென்ட் இதெல்லாம் இருக்கே? எப்படி உங்கப்பா சைன் போடுவாரு?”
“இது அதைவிட சிம்பிள்” என சிரித்தவன், “கம்பெனி ஷேர்ல முக்கால்வாசி எங்க அம்மா பேருல தான் இருக்கு! சைன் போட்டு அனுப்புமான்னு சொன்னா ஒரு டசன் பத்திரத்துல கூட போட்டு அனுப்புவாங்க” என அவன் நகைக்க, வாயடைத்து போனான் கோகுல்.
“என்னடா? எங்களை பார்த்தா பிரம்மிப்பா இருக்கா?”
கோகுல், “ச்ச…ச்ச… உங்க அப்பாவை நினைச்சு தான் பாவமா இருக்கு!!!” என்றான் வருத்தமாய்.
அவன் வருத்ததைக்கண்டு மேலும் சத்தமாய் நகைத்தவன், “சரி, நான் போய் நம்ம ‘மேடாஆஆமை’ பார்த்து ‘ஹாய்’ சொல்லிட்டு வரேன்” என ஓடினான் ஆதி.
‘ஐயையோ, டேய், அவங்களே சோகமா இருப்பாங்கடா’ என கோகுல் சொன்னதெல்லாம் அவன் காதில் விழுந்தால் தானே?!!!