செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 14
நினைத்தது போல் இரண்டு நாட்களில் துளசிக்கு இருப்பிடம் அமையவில்லை. பத்து நாள் சென்றது.. ஒரு பாதுகாப்பான இடம் கிடைக்க.
அந்த பத்து நாட்களும் மூர்த்தி, துளசியைக் கையில் ஏந்தவில்லை அவ்வளவு தான். அவன் உலகமாய் மாறிப்போனாள். அவன் மனதில் மட்டுமே மனைவியாய் வாழ்ந்தவள் இன்று அவன் எதிரில்.. அவன் வீட்டில்… அவனோடு உண்டு.. கதை பேசி.. சிரித்து… கண்ணீர் சிந்தி.. பிடிவாதம் பிடித்து.. சண்டையிட்டு.. அவன் எல்லாமாய் மாறி அவன் மனதோடு அவன் வீட்டையும் அவள் சிரிப்பால் நிறைத்திருந்தாள்.
ஒரு நாள்… ஒரே ஒரு நாள், பட்டாம் பூச்சியாய் வாழ்வை வாழ முடியாதா என்று ஆசைப்பட்டவளுக்குக் காத்திருந்தது சுகமான பத்து நாட்கள். வாழ்வில் இருவருமே மறக்க முடியாத நாட்கள். வயிறு வலித்து கண்ணில் நீர் வழியும் வரை சிரித்த நாட்கள் அதிகம். மூர்த்தி அவள் உலகமாய் மாறிப் போனாலும் அதை ஏற்கும் நிலையில் அவள் இல்லாமல் போனது மட்டும் தான் துரதிஷ்டம்!
வீடு வந்து சேர்ந்த அன்று மாலையே துணிக் கடைக்குக் கூட்டிச் சென்றான். அவனோடு பைக்கில் ஏறி அமர கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. அவன் சென்ற வேகத்திற்கு வயிறு கொஞ்சம் புரட்டத்தான் செய்தது.. சில்லென்ற மாலை காற்று முகத்தில் அறையும் வரை! அதன் பின், வண்டியிலிருந்து அவளை இறக்குவது தான் பாடாய் போனது.
“மூர்த்தி சார்… இன்னும் கொஞ்சம் தூரம்.. ப்ளீஸ் மூர்த்தி சார். பாவம் மூர்த்தி சார் நான் இப்படி எல்லாம் போனதே இல்ல…” என்று கண் சுருக்கி கெஞ்சினாள்.
“இதையே இன்னும் எத்தன தரம் சொல்லப் போற துளசி?” அவளிடம் கோவிக்கவும் மனம் வரவில்லை.
“ரெண்டு… இல்ல இன்னும் மூணு தரம்..?” விரல் விட்டு எண்ணிக் காண்பித்தாள்.
“ஏற்கனவே ரெண்டு ரௌண்ட் போயாச்சு!” அவளுக்கு நினைவுபடுத்தி என்ன பயன்?
“நான் குட்டி பொண்ணுனு சொன்னீங்களே! உங்களுக்கு ஒரு குட்டி பொண்ணு இருந்தா.. அவ கேட்டா கூட்டிட்டு போக மாட்டீங்களா?”
“தெரியல துளசி. எனக்குத் தான் குட்டி பொண்ணு இல்லியே…”
“உங்களுக்கு அந்த குறையே வேண்டாம் மூர்த்தி சார். என்னை உங்க குட்டி பொண்ணா நினைச்சுக்கோங்க… ப்ளீஸ் மூர்த்தி சார்!” உதடு துருத்தி… கண் இமை மூடி மூடி அவனைப் பாவமாய் பார்ப்பவளுக்கு என்ன சொல்லுவான்?
[the_ad id=”6605″]
“சரி.. பத்தே பத்து நிமிஷம் தான். இப்பிடி முழுச்சு முழுச்சு பார்த்தே என்னை ஏமாத்திட்டதா நினைக்காத. நானே தான் பாவம் பார்த்து கூட்டிட்டு போறேன். ஆனா ஒரு ரௌண்ட் தான்.. சொல்லிட்டேன்” என்று இந்த முறையும் அதையே கூறி.. மைலாப்பூரை ஓராயிரம் முறை சுற்றிக் காட்டினான். அவனுக்கும் அவள் செய்த அட்டூழியம் சலிக்கவில்லை அவளுக்கும் பைக்கில் ஊர் சுற்றி அலுக்கவில்லை.
“மூர்த்தி சார்… உங்களுக்குப் பிறக்க போற பசங்க ரொம்ப லக்கி தெரியுமா… இப்படி அடிக்கடி உங்க கூட ஜாலியா வண்டியில ஊர் சுத்தலாமே..” என்றாள்.
“ஆமா துளசி அவங்களுக்கு ஜாலி தான்..! உன்ன மாதிரியே பிள்ளைகளும் வாலா இருந்தா… என் நிலமைய என்னால யோசைக்க கூட முடியல”
அவன் அவர்கள் பிள்ளைகளைச் சொல்ல… அது அவளுக்குச் சென்றடைந்ததாகத் தோன்றவில்லை.
துணிக் கடைக்கு வந்தவன், “உனக்கு என்ன என்ன தேவையோ அதை எல்லாம் வாங்கிக்கோ..” என்றுவிட்டான்.
“அது தான் பாம்பே-ல இருக்கும் போதே வாங்கிட்டோமே ஒரு பெட்டி நிறைய.”
“அது ஃபங்ஷனுக்கு வாங்கினது. வெளியில ரெகுலரா போடுற மாதிரி எடுத்துக்கோ”
அவள் பார்வையே சொன்னது ‘இது வீண் செலவென்று!’
“என்னால உங்களுக்கு செலவு… அப்படி ஏதாவது சொன்ன… எனக்கு செம்ம கோவம் வரும்.”
“நான் எங்க சொன்னேன்?” கூறிக்கொண்டே புடவையைப் புரட்ட ஆரம்பித்தாள்.
“துளசி..”
“ம்ம்?”
“நீ சின்ன பொண்ணு தானே.. இந்த சல்வார் எல்லாம் போடக் கூடாதா? உன் வயசு பொண்ணுங்க எல்லாம் போடுறாங்களே”
“வேண்டாம் மூர்த்தி சார்… வேட்டிக்குப் புடவை தான் பொருத்தமா இருக்கும்!”
சட்டென்று சொல்லிவிட்டாள்.. பின் கண்ணை இறுக்கி முடியவள். “இப்படியே பழகிடுச்சு..” என்று முடித்துக் கொண்டாள்.
அவளுக்கே எப்படியோ போல் ஆகிவிட ஒன்றும் பேசவில்லை. புடவையில் கண் பதியவில்லை. ‘தப்பு துளசி.. அப்படி ஒரு எண்ணம் வரவே கூடாது!’ மனம் கடிந்தது. ‘சத்தியமா நான் அப்படி எல்லாம் நினைக்கவே இல்ல… வாய் தவறி..’ உள்ளுக்குள் போராட்டம் நடந்தது.
கை மட்டும் இதையும் அதையும் மாற்றி மாற்றி எடுத்துப் போட.. அவன் தான், கூடவே நின்று, “இது உனக்கு அழகா இருக்கு…. இந்த கலர் நல்லாவே இல்ல…. இது பாரேன்… இது வேணுமா…” என்று கடையை அவளுக்காதத் திருப்பிப் போட்டான். இன்னும் சிறிது நேரம் இருந்திருந்தால் கடைக்காரன் அவன் காலில் விழுந்திருப்பான் என்பது சர்வ நிச்சயம்.
துளசியிடம் ஒன்றைக் கவனித்தான். அவளுக்கு எந்த உணர்வுகளையும் மறைக்க தெரியவில்லை. கோபமோ.. வருத்தமோ.. ஏதுவென்றாலும் பத்து நிமிடம் நீடிப்பதில்லை. குழந்தை குணம் இன்னும் மாறியிருக்கவில்லை. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை என்று எல்லாமாய் இருந்தாள். புரிந்து கொள்ள முடியாத புதிரில்லை. தெள்ளத் தெளிந்த நீர் போல் இருந்தாள்.
“சாப்பிடலாமா? பசிக்குதா?” அவள் தான் பசி தாங்க மாட்டாளே..
“இல்ல மூர்த்தி சார். சாயங்காலம் தானே சாப்பிட்டோம். உங்களுக்கு பசிக்குதா?”
“இல்ல… காய் வாங்கிட்டுப் போவோம். நாமளே செய்வோம்.. அதுக்குள்ள பசிக்க ஆரம்பிச்சிடும். உனக்கு என்ன வேணும் சொல்லு..”
கேட்டிருக்கக் கூடாதென்று உணர வெகு நேரம் பிடிக்கவில்லை.
நாய்க் குட்டி போல் அவன் பின்னாலேயே ஆசையாக சுற்றினாள். “இது என்ன? அது என்ன?” என்று கடை வீதியில் எதையுமே விட்டு வைக்கவில்லை. அவனும் சலிக்காமல் பதில் அளித்தான், வீடு வந்து சேரும் வரை.
இருவருமாகச் சமைக்க ஆரம்பித்தனர். அவள் மேடை மேல் அமர்ந்து சளைக்காமல் பேசிக்கொண்டே அவனுக்கு முழு ஆதரவு தர, அவன் சமையலை ஆரம்பித்தான்.
“நான் காய் வெட்டுவேன்…” சண்டை போட்டவள் நான்கு சின்ன வெங்காயம் உரிக்கும் முன் அவன் மற்றதை உரித்து வதக்கவும் ஆரம்பித்திருந்தான்.
மொச்சை கத்தரியோடு முருங்கையும் கார குழப்பாய் மண் சட்டியில் கொதிக்க..
“மணக்குது மூர்த்தி சார்..” என்று ஆரம்பித்தவள் தான்..
“எனக்கு டேஸ்ட் பாக்க எப்போ தருவீங்க?” என்று அனத்த ஆரம்பித்தாள்.
“ஆச்சா..? ஆச்சா?” “உருளை கிழக்கு பொடிமாஸ் எப்போ ரெடி ஆகும்?” “சாதம் வடிக்கும் போது கை சுடாதா?” “இந்த அடுப்புக்குள்ள மண்ணெண்ணெய் தவிர வேற என்ன ஊத்தலாம்?” அவனை பிடிங்கித் தின்றாள்.
“எனக்கு அம்மியில அரைக்கத் தெரியும்.. நான் தேங்கா அரைக்கிறேன்..” நம்பிக்கையில்லாமல் பார்த்தவனிடம்… “நிஜமா தான் மூர்த்தி சார்..” என்று பாதியை மேடைக்கு தானம் செய்து மீதி பாதியை அரைத்துக் கொடுத்தாள்.
தனியே சமைத்து, தனியே உண்டு.. பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் கணக்கு புத்தகத்தோடு மட்டுமே வாழ்ந்தவனுக்கு அவளின் அனத்தல் இன்ப அனத்தலாகத் தான் தோன்றியது. காய்ந்து கிடந்தவனுக்கு அவளின் சலசலப்பு சங்கீத ஸ்வரமே..
மணக்க மணக்க இறக்கி வைத்த குழம்பும்.. உருளைக் கிழங்கும் தொண்டையில் இறங்க.. மூக்கு முட்டத் தின்றவள், விரலிலிருந்த கடைசி பருக்கை வரை நக்கி விட்டே எழுந்தாள்.
முதல் வாய்க்கு..”ம்ம்” கொட்ட ஆரம்பித்தவள்.. கடைசி வாய் வரைக்கும் நிறுத்தவே இல்லை.
“மூர்த்தி சார்… உங்கள கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவங்க.” என்றாள் கையை சூப்பிக் கொண்டே.
அவன் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. அவளைப் பார்த்துப் புன்னகைத்ததோடு சரி.
அவள் படுக்கும் முன், “நான் பக்கத்து ரூம்ல தான் இருப்பேன். உனக்கு எதுவாது வேணும்னா என்னை எழுப்பு” என்றுவிட்டு கையில் புத்தகத்தோடு ஹாலில் அமர்ந்துகொண்டான்.
“குட் நைட் மூர்த்தி சார்..”
“நாளைக்கு முதல் வேலையா ஹாஸ்டல் பார்க்க போகணும்.” முகுது பின் அவன் சத்தம் கேட்டது. பதில் அளித்தாளில்லை.
மூர்த்தியை விட்டுப் போகவேண்டுமா? மனம் ஒரு நிலையில் இல்லை. நிதர்சனம் அது தானே. அவள் இங்கே இருக்க அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? ‘ஏதோ நல்ல மனிதனாய் போகவே இன்று வரை காத்துவருகிறார். எந்த பந்தமும் இல்லாத வயது பெண்ணோடு ஒரே வீட்டிலிருந்தால் ஊர் தப்பா பேசாதா? நாளை இவருக்கு மணமுடிக்கும் வேளை கேள்வி எழாதா?’ ஏதேதோ எண்ணம். மனம் மீண்டும் தனிமைப் படுத்தப்பட்டது. இருந்த மகிழ்ச்சி எல்லாம் வடிந்தே போனது.
[the_ad id=”6605″]
‘பார்த்த அன்றே.. பிடித்துப் போனதுமே நேரே பேசி இருந்திருக்க வேண்டும். பேசி இருந்தால்… கௌரவிடம் மாட்டி இருக்க மாட்டேன்..’ அவளை அறியாமலே பழையதை மனது அசை போட்டது. கண்டிப்பாக அதைப் பற்றி நினைக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்தாளே…
ஒரு மணி நேரம் படுக்கையில் புரண்டவள் கண் லேசாக அசரவும் யாரோ அவள் மேல் கை போட.. மூச்சிரைக்க எழுந்து அமர்ந்து கொண்டாள். மெல்ல விளக்கை உயிர்ப்பிக்க யாருமே அங்கு இல்லை. கதவு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தாலும், உள்ளே யாரும் இல்லை என்று தெரிந்தாலும், உடல் நடுக்கம் நிற்கவே இல்லை. யாரேனும் உண்மையிலேயே இருந்தால்? கட்டிலுக்கடியில் பார்க்கவில்லையே…? உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்தது. மீண்டும் படுக்கப் பயம்!
விழித்திருக்கும் வேளை என்ன தான் தைரியமாக இருந்தாலும்.. உள்ளுக்குள் உறைந்து போன பயம் அவள் தனிமையில் இருப்பதாக உணரவும் எழுந்து அவளைப் படுத்தி எடுத்தது.
வெளியே விளக்கு அணையப்படாமல் இருக்கவும் நடுக்கூடத்திற்கு வந்தாள். ஓரமாய் இருந்த மேசையில் புத்தகங்கள் விரிந்து கிடக்க.. மூர்த்தி எதையோ எழுதிக் கொண்டிருந்தான்.
மூச்சு சீரானது. தண்ணீர் குடித்து வந்தவளுக்குத் தெம்பு மீண்டது. மூர்த்தி இருக்கையில் பயம் தேவை இல்லையே..
அருகில் வந்து பார்த்ததுமே தெரிந்தது அது கணக்கு புத்தகங்களென்று.
அவள் வந்தது கூட உணராமல் புத்தகத்தில் புதைந்திருந்தவனை, “மூர்த்தி சார்…” எனவும்,
அவள் சத்தம் அவன் கவனத்தைக் குலைக்க, தலையை நிமிர்த்திப் பார்த்தான்.
“என்ன துளசி?” என்றான்.
அவள் முகத்தில் பெரிதான புன்னகை.
“தூங்கலையா நீங்க?” என்றாள் மேசை மீதிருந்த ஒரு புத்தகத்தை புரட்டி கொண்டே
“நான் கேக்கணும். அப்போவே படுக்கப் போன.. தூங்காம என்ன பண்ற?”
புத்தகத்திலிருந்து முகத்தை எடுக்காமலே, “பயமா இருக்கு” என்றாள்.
ஏன் என்று கேட்கவில்லை. அவனுக்குத் தான் ஏன் என்று தெரியுமே!
[the_ad id=”6605″]
“நான் இங்க தானே துளசி இருக்கேன்… என்னைத் தாண்டி ஒருத்தரும் வர மாட்டாங்க. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“யாரோ உள்ள இருக்காங்க மூர்த்தி சார்” என்றாள். கண்ணில் ஈரம் எட்டிப் பார்த்தது.
‘என்ன டா பண்ணி வச்சிருக்கீங்க இவள?’ கோபமாய் வந்தது அவனுக்கு. கையில் கிடைத்தால் அத்தனை மிருகங்களையும் கொன்று குவிக்கும் அளவு வெறி. கையிலிருந்த பென்சில் பட்டென்று இரண்டாய் உடைந்தது.
“வா… பார்க்கலாம்..” என்று இருக்கையை விட்டு எழுந்தான். குரலில் மென்மை மட்டுமே.
உள்ளே சுற்றும் முற்றும் பார்த்தாள். கட்டிலின் அடியில் பார்த்தாள். அவன் அவளைப் பார்க்க… வலியோடு புன்னகைத்தாள். “யாரும் இல்ல மூர்த்தி சார்” என்றாள்.
“ஆமா யாரும் இல்ல. என்னை தவிர உன் பக்கத்தில யாரையும் வர விட மாட்டேன்.” என்றான்.
“நிஜமா?” கேள்வியாய் பார்த்தாள்.
அவள் கண் பார்த்து, “நிஜமா… சத்தியமா!” என்றான்.
“என்ன யோசிச்சுட்டே படுத்த துளசி?”
“ஒண்ணும் இல்ல மூர்த்தி சார்..”
“துளசி?”
மெத்தையில் அமர்ந்தவளுக்கு வார்த்தை வரவில்லை. நினைத்த எல்லாவற்றையும் கூற முடியாதே. முந்தி கையில் மாட்டி தவித்தது.
“வாழ்க்கை ஒரு ரயில் பயணம் மாதிரி… போய்ட்டே இருக்கும். வழியில நிறைய ஸ்டேஷன் வரும்.. நின்னுட்டு கிளம்பிடும். இந்த நீண்ட பயணத்தில நிறையச் சோதனை.. கஷ்டம்.. சந்தோஷம்.. சவால் எல்லாம் வரும். நின்னு அனுபவிச்சுட்டு கடந்து போய்டே இருக்கணும். தேங்கி நிக்கக் கூடாது. ஆறுக்கு இருக்க மதிப்பு குட்டைக்கு இருக்கதில்ல. தேங்கி போனா நல்ல தண்ணீ கூட நாறி போயிடும்.
நடந்த விஷயம் ரொம்ப வலி நிறைஞ்ச விஷயம் தான். ஆனா அது முற்று புள்ளி இல்ல. வேறும் அரைபுள்ளி தான். கடந்து போனா.. வாழ நிறைய விஷயம் இருக்குன்னு புரியும்.
கடந்த காலம்னு ஏன் சொல்றோம் தெரியுமா.. அது திரும்பவும் வராது. முடிஞ்சு போனதை நினைச்சு ஏன் நம்ம நிகழ்காலத்தை பாழாக்கணும் சொல்லு? நீ நினைச்சு பாத்து வருந்திற அளவுக்கு அதுக்கு மதிப்பு இல்ல துளசி.
பழச உதறிட்டு வா துளசி.. புதுசா ஒரு பாதையில பயணம் செஞ்சு தான் பார்ப்போமே…”
இருவரும் புன்னகைத்துக் கொண்டனர். “படுக்கும் போது மனசைச் சாந்த படுத்திற பூக் படிக்கிற பழக்கம் ஏற்படுத்திக்கோ.”
மனம் மறையாமல் உரைத்தாள். “நீங்க என்னை ஹாஸ்டல் அனுப்ப போறதா சொன்னீங்க இல்ல. ஏன்னு யோசிச்சேன். எனக்கு இங்க இருக்க உரிமை இல்லல்ல.. அப்புறம் உங்களுக்குக் கல்யாணம் பண்ணும் போது என்னால பிரச்சை வந்திடும் இல்ல.. அதுனால நான் போறது தானே நல்லது. அப்படி யோசிக்கும் போது.. வேற ஏதேதோ நினைப்பு வந்திடுச்சு!”
[the_ad id=”6605″]
“யோசிச்ச வரைக்கும் போதும் இனி எதையும் யோசிக்காம படு. நாளைக்கு ஹாஸ்டல் பாக்க போக வேண்டாம். உனக்காகத் தான் ஹாஸ்டல் பாக்கணும்னு சொன்னேன். எனக்காக இல்ல துளசி. சரி படு போ..” இந்த நிலையில் அவளை எப்படி தனியே அனுப்புவது? யோசனையாய் அவன் செல்ல கூடவே வந்தாள்.
“என்ன துளசி மா?”
“படிக்கறீங்களா?”
“ம்ம்..” என்று மீண்டும் மேசையருகில் அமர்ந்துகொண்டான்.
“மூர்த்தி சார்… உங்களுக்குக் கணக்கு பிடிக்கும்னு அதோடேயே குடும்பம் நடத்தறீங்களா? இல்ல கணக்கு மண்டையில ஏற மாட்டேங்குதேன்னு அத கட்டிக்கிட்டு அழறீங்களா?” என்றாள்
அவனிடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாய் வந்தது. மீண்டும் புத்தகத்தோடே ஆழ்ந்துவிட்டான் போலும். கருவிழி மட்டும் அசைந்தது.
மேசை மீது சாய்ந்து கொண்டு ஒரு புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தாள்..
“ஒண்ணும் புரியலை… பெரிய படிப்போ?” என்றாள்.
“ம்ம்”
“நீங்க மக்கு மூர்த்தி இல்லியா?” வாய்க்குள் முணுமுணுக்க.. அவனுக்கு நன்றாகவே அது கேட்டது.
“என்ன?” என்றான் சிரித்துக்கொண்டே, சத்தமாக.
“எதுக்கு இப்படி மாஞ்சு மாஞ்சு படிக்கிறீங்க?”
“பி.ஹெச்.டி பண்றேன்” என்றான்.
“ஓ.. பெரியாள் தான் நீங்க..”
“ம்ம்ம்” புத்தகத்தை மேசை மீது வைத்துவிட்டு அவள் முகம் பார்க்க..
அவனைப் பார்த்துச் சிரித்தவள்… புத்தகத்தால் அவன் கையை தட்டிவிட்டு “நீங்க படிங்க மூர்த்தி சார்… உங்களுக்கு என் ஹெல்ப் எல்லாம் வேண்டாம்” கூறிக்கொண்டே அவள் கையிலிருந்த கணக்கு புத்தகத்தோடு அங்கிருந்த ஆள் நீள ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் படுத்துக் கொண்டு புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தாள்.
ஊஞ்சலின் சந்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. அவன் எதிர்பார்த்தபடியே அடுத்த பத்தாவது நிமிடம் ‘டப்’ என்று கீழே விழுந்தது அவன் புத்தகம்.
“ஐயோ… இவ கீழப் போட்டே என் புக்க கிழிச்சிடுவா போல இருக்கே..” புலம்பிக்கொண்டே புத்தகத்தை எடுத்தவன் கண் அவள் முகத்தில் நிலைத்து நின்றது. ‘துளசி’ வாய் முணுமுணுத்தது.
கலைந்த கூந்தலோடு கலைந்த ஓவியமாய் தெரிந்தாள். வர்ணனைக்கு அப்பார்பட்ட அழகு. கண்ணைச் சுற்றி லேசான கருவளையம். இருந்தும் கண்ணைப் பறித்தாள்.
‘இத்தனை அழகாய் இருந்திருக்காமல் இருந்திருந்தால் வேட்டை ஆடி இருக்க மாட்டார்களோ.’ நீண்ட பெருமூச்சு வெளிவந்தது.
‘ஏன் துளசி இத்தன அழகா பிறந்த?’
முகத்தில் கிடந்த முடியை ஒதுக்க ஆசை தான்… சற்று மேலே ஏறிய புடவையை கீழே இறக்கவிட ஆசை தான்… உனக்குத் துணையாய் என்றுமே நான் இருப்பேன் என்று நெற்றியில் முத்தம் பதிக்க ஆசை தான்… இதில் எது செய்தாலும் அவள் விழித்துவிட்டால்? அவனையும் தவறாக எண்ணி விட்டால்..?
‘என்று இதையெல்லாம் உரிமையோடு செய்யப் போகிறாய் மூர்த்தி?’ மனம் ஏங்கியது.
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி..
தலையை உயர்த்தி கொண்டுவந்த தலையணையை தலைக்கடியில் வைத்து, போர்வையைப் போர்த்திவிட, புடவை விலகியிருந்த கணுக்காலில் கண் நிலைத்தது. அதையே பார்த்து நின்றான். இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது.
[the_ad id=”6605″]
ஒற்றை விரலால் வருடினான். கை நடுங்கியது. கொலுசு போல் கணுக்காலை பற்றியிருந்த தழும்பை கை உணரவும் கண் பனிக்க ஆரம்பித்தது. அவன் விரல் படவும் கால் நகர்ந்தது. புடவையோடு காலும் விலக அடுத்த காலும் பளீர் என்று கண்முன் வந்தது. அதிலும் கணுக்காலை சுற்றி அதே போல் தழும்பு! காலை கம்பியால் கட்டி வைத்திருந்திருப்பார்கள் போலும்.. புண் ஆறியபின்னும் அந்த வெண்ணெய் காலில் தனியே தெரிந்தது அந்த வடு! அவனையும் அறியாமல் இரண்டு சொட்டு நீர் அவள் கணுக்காலில் பட்டுத் தெறித்தது.
போர்வையைப் பாதம் அடியில் சொருக.. பாதம் கிழிந்ததற்கான தடம் அங்கும் தெரிய.. உயிர் வரை வலித்தது. உள்ளுக்குள் எழுந்த வலி எல்லாம் வெறியாக மாறியது. ‘இவள தொட்ட.. தொட நினைச்ச ஒருத்தன கூட விடக் கூடாது’.. உள்ளுக்குள் பச்சை குத்திக்கொண்டான்.
அவன் இடத்தில் அமர்ந்து கொண்டவன் பார்வை மட்டும் புத்தகத்தின் மேல்.. எண்ணம் முழுவதும் பம்பாயும்.. கௌரவும்.. தடியனும் தான். சத்யன் கூறிய அனைத்தையும் ஒரு முறை உள்ளுக்குள் ஓட விட்டான். சத்யனிடம் பேசவேண்டும்.. அவர்களைப் பற்றிய தகவல் எல்லாம் வேண்டும் என்றது மனது.
அன்று இரவு அவளைத் தனியே நடுக்கூடத்தில் விட மனமில்லாமல் ஒரு ஓரத்தில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டான்.
விடியற் காலை கண் விழித்தவள் முதலில் பார்த்தது அறையின் ஒரு ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவனைத் தான்.
முன் இரவு அவன் செய்த அதே வேலையை அவள் செய்தாள். அவன் முன் வந்தவள் உறங்கிக் கொண்டிருந்தவனைத் தான் கண்ணிமைக்காமல் பார்த்து நின்றாள். ‘மூர்த்தி சார்’ வாய் முணுமுணுத்தது. தெய்வமாய் தோன்றினான். ‘ஏன் மூர்த்தி சார்?’ அதே கேள்வியை மனம் கேட்டது.
முதல் முறை ஒரு ஆணோடு எந்த வித வலியும் இன்றி, ஒரே அறையில்! கணவனாய் இல்லாமல் போனால் என்ன? தோழனாய் கிடைத்தானே? அவன் அன்பை இப்படியேனும் ருசிக்க கிடைத்ததே. நினைக்கும் போதே தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. மென்மையான அந்த முகம்.. பார்க்கப் பார்க்க ஆசை அடங்காது. யாருக்குத் தெரியும் இப்படி ஒரு ஆண்மகனுக்குள் இப்படி ஒரு மென்மை உள்ளதென்று? உதடு தானாக விரிந்தது.
ஆனந்தம் மிகுதியினால் கூட கண்ணில் நீர் துளிர்க்குமாமே.. அவளுக்கு அதனால் தான் நீர் துளிர்த்ததோ.. இரண்டு சொட்டு உருண்டு வந்து அவன் கன்னத்தில் பட்டு தெறித்தது.
என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது