செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 15
சூரியன் துயில் எழும்முன் அதிசயமாக எழுந்தவள் வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்த கிணற்றில் நீர் இறைத்து காலைக் கடனை முடித்து, ஒரு வாளி தண்ணீரோடு முற்றத்திற்குச் சென்றாள்.
கொஞ்சம் பெரிய இடம்.. நடுவே இரண்டு அடுக்கு மாடி வீடு. வீட்டைச் சுற்றி அதிக அக்கறை இல்லாமல் காலியாகக் கிடந்தது. காம்பொண்ட் கேட்டின் அருகில் சிகப்பு அரளி ஒன்று பூத்துக் குலுங்கியது. புல் பிடித்து காடு போல் இல்லையென்றாலும், தும்பையும் குப்பை மேனியும் இடத்தை ஆக்கிரமித்திருந்தது.
நீர் தெளித்து முற்றம் பெருக்கி, வீட்டின் வலது மூலையிலிருந்த மாடிப்படிக்குக் கீழே இருந்த கோலமாவோடு வந்து நின்றாள்.
புள்ளி இட்டாள்.. அதன் பின் புள்ளிகளை இணைத்தாள். ஏதோ சாதித்த புன்சிரிப்பு. தள்ளி நின்று பார்த்தாள்.. கட்டமும் முக்கோணமுமாகத் தெரிந்தது.
“அவர் தான் கணக்கா படிக்கிறார்னா… கோலமாவுக்கும் அதையே சொல்லிக் கொடுத்து வச்சிருக்கார்!” வாய் முணுமுணுத்தது. அவளால் அதை கோலமென்று ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. கோலத்தை அழித்துவிட்டு, புள்ளி வைத்தாள்… புள்ளிகளுக்கு இடையே பிசிறி.. திட்டு திட்டாக நெளிந்து வளைந்த கோடுகள்.. அது கோலமென்று சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.
“சமத்து டீ நீ… சாதிச்சுட்ட” பாராட்டிக் கொண்டு, போதும் என்று எழவும் தொப்பென்று அதன் மேல் வந்து விழுந்தது ‘தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’! போட்ட கோலம் அலங்கோலம் ஆனது.
“நாளைக்கு வா.. உன்ன வச்சே கோலம் போட வைக்கிறேன்.. எருமை மாடு!” வாய்க்குள்ளே திட்டிக் கொண்டே அழிந்த கோலத்தை மீண்டும் கழுவி விட்டாள்.
அவள் கஜினி முகமது போல்… அவ்வளவு சீக்கிரம் முயற்சியைக் கைவிட மாட்டாள் போலும்! மீண்டும் சுத்தம் செய்த இடத்தில் ஆராம்பித்தாள். கோலம் என்ற பெயரில் எதையோ வரைந்து வைத்தாள். அவளுக்கே தெரிந்தது அது கர்ண கொடூரமாயிருப்பது. ஆனால் அவள் திறமைக்கு அதுவே அதிகம் என்று விட்டுவிட்டாள்.
சைக்கிளின் பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும் தலை நிமிர்த்திப் பார்க்க, பூட்டியிருந்த இரும்பு கேட்டிற்கு வெளியே பால்காரன் நின்று கொண்டிருந்தான்.
“யாருமா நீ? சார் கண்ணாலம் கட்டிகிச்சா… சார் பொஞ்சாதியா மா நீ? கண்ணாலத்துக்கு போறேன்னு சொல்லிச்சு!அது கண்ணாலம்னு சொல்லவே இல்ல பாரேன்! நாலு நாள்ல வந்திடும்ன்னு பார்த்தேன்.. அது தான் தம்பி வர வாரம் ஒண்ணாச்சா? போ மா சொம்பு எடுத்தா..” என்றான்.
புடவையைத் தூக்கிச் சொருகி, ஒரு கையில் கோல மாவும் மறு கையில் கோலமாவு பாத்திரம் ஏந்தி, அழகு ஓவியம் போல் தான் இருந்தாள்.
“என் வீட்டம்மா தான் இங்க வாசல் கூட்டி கோலம் போடும்.. நாளைக்கு வர சொல்லவா?”
“வேண்டாங்க… நானே பாத்துக்கறேன். வேணும்னா சாரே உங்கட்ட சொல்லுவாங்க!”
‘பொஞ்சாதி’ வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. எப்படி உணர்ந்தாள் என்று புரியவில்லை. அந்த பாதை செல்ல மனம் ஒப்பவில்லை. ‘மூர்த்தி சாருக்கு பொஞ்சாதியா இருக்க தகுதி இல்ல பால்காரரே.. அவருக்கு அவர மாதிரியே நல்ல குணமான.. அழகான.. ராஜ குமாரி யாராவது வருவாங்க.. அவர மாதிரி தூய்மையான அன்போட’ மனதில் சொல்ல, இதழில் புன்னகை கீற்று.
“என்ன பகல் கனவா?” பொங்கி வந்த பாலை கீழே இறக்கி வைத்துக்கொண்டே மூர்த்தி அவளைப் பார்க்க, சுயத்திற்கு வந்தவள், “எழுந்துட்டீங்கா? பால்காரர் என்னை பார்த்திட்டு உங்க வைஃப்-ஆனு கேட்டார்..?”
“அத நினைச்சு தான் சிரிச்சியா?” உள்ளுக்குள் ஒரு சாரல்.
“இல்ல இல்ல…”
[the_ad id=”6605″]
பல்பிற்கு மட்டும் தான் ஃப்யூஸ் போகுமா என்ன?
“கொஞ்சம் நாளுக்கு அப்புறம் உங்க நிஜம் வைஃப்-அ பார்த்தா அவர் உங்கள பத்தி என்ன நினைப்பார்? ரெண்டு பொண்டாட்டிக்காரர்னு நினைக்க மாட்டாரா? அப்புறம் உங்க வைஃப் உங்கட்ட சண்டைக்கு வர மாட்டாங்களா?”
அவன் சிரித்தான். “என்ன? நீங்க எதுக்கு சிரிக்கிறீங்க?”
“ஒண்ணுக்கே வழி இல்ல… இதில சண்டை வரைக்கும் கனவு கண்டியாக்கும்…”
காபியோடு வீட்டின் பின்னால் இருந்த படியில் அவள் அமர, ஒரு படி மேலே அவள் முகம் தெரியுமாறு அமர்ந்து கொண்டான்.
வானம் இருட்டை களைந்து விடியலின் அழகைப் பூசிக்கொண்டிருந்தது. லேசான பனி காற்று. புடவையை இழுத்து மூடிக்கொண்டாள்.
அரை கிரவுண்டுக்கு இடம் காலியாக கிடக்க.. இடது பக்கம் பெரிய கிணறு. அருகே தண்ணீர் ஊற்றி வைக்க ஒரு தொட்டியும் துணி துவைக்கும் கல்லும். துவைத்த துணியைக் காய வைக்க அங்கேயே கொடி கட்டியிருக்க, வலது பக்கம்.. பெரிய வேப்பமரம் அந்த முழு இடத்திற்கும் நிழல் பரப்பி நின்றது. இருட்டில் பயமுறுத்திய வேப்பமரம் பகலில் வனப்போடு மிளிர்ந்தது.
காகம் கரைந்துக் கொண்டிருக்க.. நேற்று தான் பார்வை கிடைத்தவள் போல் விழியை சுற்ற விட்டாள்.
“மூர்த்தி சார்..”
“சொல்லு துளசி..”
“அந்த கிளை.. நல்ல தடியா இருக்கில்ல?”
“ஆமா துளசி… நாப்பது வருஷமா இருக்க மரமாம்.. அது தான்..”
“அந்த கிளை என் கனத்த தாங்குமா?”
“ஏன் தாங்கிறதுக்கு என்ன.. உன்னை மட்டும் இல்ல… என்னையும் சேர்த்தே தாங்குமே..”
“எனக்கு ஊஞ்சல் கட்டி தரீங்களா?”
காபியை உறிஞ்சிக் கொண்டே மரத்தைத் தான் பார்த்திருந்தாள். அவன் அவளைப் பார்ப்பது தெரிந்தாலும் முகத்தைத் திருப்பவில்லை.
“எங்க வீட்டு வாசல்ல இதே மாதரி பெருசா ஒரு மாமரம் இருக்கும் மூர்த்தி சார். அதுல எனக்குப் பெரிய ஒரு ஊஞ்சல் இருக்கும். தாத்தா கட்டி தந்தது. நித்தமும் அதுல தான் விளையாடுவோம்..”
“விளையாடுவோம்-னா யாரெல்லாம்?”
“நானும், என் சுந்தரியும், எங்க கருப்பனும். அதுல ஆடும் போது அப்படியே எங்கேயோ ஆகாசத்தில பறக்கிற மாதரி இருக்கும் மூர்த்தி சார். சுந்தரி என் எழில் சித்தி பொண்ணு.. என்னை விட ஆறு மாசம் பெரியவ..”
“ம்ம்ஹும்ம்…”
“சுந்தரி திட்டினாலும் ஆட்டிவிடுவா.. கருப்பன் என் பின்னாடியே ஓடி வருவான். மேல வரைக்கும் அப்படியே பறந்து போவேன்.”
“ம்ம்ம்..”
“சுந்தரி என்னை மறந்திட்டா போல… நான் டெல்லியில இருக்கும் போது நிறைய லெட்டர் போட்டேன். ஒரு தரம் கூட அவ எனக்கு லெட்டர் போடவே இல்ல. என்வலப் கவர்க்குள்ள இன்லேண்ட் லெட்டர் எல்லாம் வச்சு அனுப்பினேன்.. அப்போ கூட ஏனோ எனக்கு லெட்டர் போடவே இல்ல.. ஏழு மாசமும் அவ கிட்ட இருந்து ஒரே ஒரு லெட்டர் வராதான்னு காத்தே இருப்பேன்..”
“அவ கண்டிப்பா போட்டிருப்பா துளசி.. எங்கேயாவது மிஸ் ஆகி இருக்கும்!”
“அப்படி கூட ஆகுமா? அது தானே பார்த்தேன்.. எனக்கு தெரியும் என் சுந்தரி என்னை மறக்கவே மாட்டா. நான்னா அவளுக்கு உயிரு மூர்த்தி சார். டெல்லிக்கு போறேன்னதும் அப்பிடி அழுதானா பாருங்களேன்” கண்ணெல்லாம் கனவு மின்ன பேசிக்கொண்டிருந்தாள். அதெல்லாம் அவள் வாழ்வின் இனிதான பக்கங்கள் என்பதால் இருக்கலாம்.
“ம்ம்”
“நான் ரொம்ப சேட்டை செய்வேன்… ரொம்ப அடம் பிடிப்பேன்.. சொன்ன பேச்சே கேக்க மாட்டேன்.. இருந்தும் தாத்தா பாட்டி என்னை எதுக்கும் அடிச்சதே இல்ல… அம்மா அப்பா இல்லாத பிள்ளைன்னு ஒரே செல்லம். சித்தி கண்டிப்பாங்க ஆனாலும் சித்திக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் தெரியுமா?”
“உன்ன அடிக்க யாருக்கு மனசு வரும்? அம்மா அப்பான்னா கண்டிப்பாங்க. தாத்தா பாட்டி எல்லாம் நமக்கு எப்பவும் செல்லம் தான்..”
“ஆமா மூர்த்தி சார். என்னை ரொம்ப செல்லமா வச்சுகிட்டாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க மூர்த்தி சார். உங்கள மாதரியே..”
இருவரும் பேசிக் கொள்ளவில்லை. காகம் கீதம் வாசித்தது. வழு வழு கழுத்தும்… அதன் அழகிய கருமை நிறமும்.. அதன் அருமையான அழைப்பும்.. அவளை அதன் வசம் இழுத்தது.
“காக்கா… ரொம்ப அழகு மூர்த்தி சார். நீங்க கவனிச்சு இருக்கீங்களா?” என்றாள் சம்பந்தமே இல்லாமல்.
அவள் கண் மரத்திலேயே இருக்க… உதடு மட்டும் அசைந்தது. அவள் இதயம்.. அது படு வேகமாக அடித்துக் கொண்டிருக்க.. அவள் எதையோ சொல்ல அவஸ்தைப் படுவது நன்கு தெரிந்தது.
அவனும் அவன் பார்வையை அவளை விட்டுத் திருப்பினானில்லை. தென்றல் காற்று, அவளை வருடி அவன் மேல் மோதிச் சென்றது. இனிமையான காலை நேரம். காற்றிற்கு, பின்னலில் சேராத முடி சில எழுந்து அசைந்து கொடுத்தது. அவனைப் பார்த்து ‘என்னை அடக்கு பார்ப்போம்’ என்பது போல் அடங்காமல் ஆடிக்கொண்டிருந்தது.
“காக்கா அழகா இருந்தாலும் வேற காக்கா அத கஷ்டப்படுத்தாது இல்ல? எதுக்குமே அடிவாங்கினதே இல்ல மூர்த்தி சார். பதினேழு வருஷம் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். யார் கண்ணு பட்டுதோ… எல்லாம் மாறிடுச்சு… அதுவும் கடைசி ஆறு மாசத்தில எல்லாமே தரை மட்டம் ஆகிடுச்சு!”
காகத்திற்கு என்ன புரிந்ததோ.. அதுவும் கரைவதை நிறுத்திவிட, நீண்ட மௌனம்.
“எனக்கு தெரியல மூர்த்தி சார்.. இந்த அழகான உலகத்தில் கோரமான மிருகங்க மனுஷ உருவத்தில இருப்பாங்கனு எனக்கு தெரியவே இல்ல மூர்த்தி சார். தாத்தாக்கும் பாட்டிக்கும் கூட தெரியல மூர்த்தி சார். தெரிஞ்சு இருந்திருந்தா சொல்லி வளர்த்திருப்பாங்க இல்ல..? சின்னதில நான் சட்டை இல்லாம ஓடினா.. சாப்பிடாம அடம் பிடிச்சா பாட்டி சொல்லுவாங்க ‘அஞ்சு கண்ணன் வந்து தூக்கிட்டுப் போவான்’னு.. நான் பெருசானதும் எனக்கு சொல்லவே இல்ல அஞ்சு கண்ணன் அரக்கன் மாதிரி இல்ல… சிரிச்சுகிட்டே அழகா அன்பா பேசற பக்கத்து வீட்டுக்காரனா கூட இருக்கலாம்னு!”
தென்றலின் குளுமையும்.. காலை நேர இனிமையும் அந்த கனத்த நிமிடங்களோடு கரைவது அவனுக்குத் தெரிந்தது. அவள் பேச்சைத் திசை திருப்பவேண்டுமா இல்லை சுமையை இறக்க அனுமதிக்க வேண்டுமா?
“முதல் அடிக்கே… நாலடி தள்ளி விழுந்தேன். தலை போய் சுவர்ல்ல இடிச்சுது. வலி உயிர் போய்டுச்சு… ஆனா உயிர் போகவே இல்ல. உதடு கிழிஞ்சு என் இரத்தம் என் வாய்க்குள்ள.. மயக்கம் கூட வர மாதிரி இருந்துது.. அடுத்து அடுத்து வாங்கின மிதில அதுவும் பயந்து வந்த இடம் தெரியாம போயிடுச்சு. மயக்கம் வர வரைக்குமா அடிப்பாங்க? அப்படி தான் அடிச்சாங்க!”
அழவெல்லாம் இல்லை. வெறித்த பார்வை மட்டும் தான். அவள் கொட்டட்டும் என்று முடிவெடுத்தான். முன் இரவு அவள் கணுக்காலை பார்த்தபின் அவனுக்கும் நிறைய விஷயங்கள் தெரியவேண்டி இருக்கவே மனதைக் கல்லாக்கிக் கொண்டு கேட்க முடிவு செய்தான். அவளை திசை திருப்பவில்லை.
அதுவரை அவன் கட்டுபாட்டிற்குள் இருந்த கை.. அவன் பேச்சு கேட்காமல் அவள் தலையை வருடியது.
மெல்ல அவனை திரும்பி பார்த்தவள், “எனக்கு அடினா ரொம்ப பயம் மூர்த்தி சார். ரொம்ப வலிக்குமில்ல அது தான். எத்தன தரம் வாங்கினாலும் மரத்தே போகல… ஒவ்வொரு தரமும் வலிக்கும்.” என்றாள்.
அவன் தான் இரவு பார்த்தானே அவள் வாங்கிய அடிகளின் வீரியத்தை. அவன் கண் கரித்தது. தொண்டை அடைக்க ஒன்றுமே பேசவில்லை. ஏன் இப்படிப் பட்ட ஓநாய்கள் எல்லாம் தண்டிக்கப் படுவதே இல்லை? அப்படி என்ன சுகத்தைக் காண்கிறார்கள் ஒரு பெண்ணின் வேதனையில்? ஒருவனுக்குக் காம இச்சை. ஒருவனுக்குப் பணத்தில் மோகம். இதில் பலியாவது?
அவளை மடிமீது வைத்துக் கட்டிக் கொண்டு ஆறுதல் படுத்த முடியாத நிலை. வெகு நேரம் அவள் தலையை வருடுவதை நிறுத்தவே இல்லை. அவளுக்குள்ளும் ஏதோ வேகம்.. அவன் மேல் இருந்த அளவு கடந்த நம்பிக்கை, பிடித்தம், அன்பு.. மருத்துவர் கேட்டும் கூறாததை எல்லாம் அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தாள். அவனும்.. எதையும் விட்டு வைக்கவில்லை… அவளுக்குத் தெரிந்த அனைத்தையும் அவளிடமிருந்து வாங்கியிருந்தான்.
அவன் மடி சாய்ந்து கழுத்தைக் கட்டி கொண்டு கதற வேண்டும் போல் தோன்றிய விருப்பத்தை உள்ளுக்குள் புதைத்தாள்.
அவன் கை விலகியதும்.. சட்டென்று வார்த்தைகள் நின்று போனது. ஆனால் நிறுத்தும் எண்ணமில்லை போலும்.. அவளாகவே அவன் கையை எடுத்து தலையில் வைத்துக்கொள்ள.. அவன் முகம் புன்னகையை பூசா..
“ஏன் நிறுத்தினீங்க? சும்மா எல்லாம் கதை சொல்ல முடியாது.. வேலை செஞ்சிட்டே கதை கேளுங்க” அவனுக்குக் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. அதை அவன் சலிக்காமல் நிறைவேற்றவும் செய்தான்.. வாஞ்சையாய்.
பேச்சினிடையே திடீர் சந்தேகம். கலவரம் எட்டி பார்க்க கேட்டாள்.. “நான் சேட்டை செஞ்சா… உங்க பேச்சு கேக்கலைனா, நீங்க என்னை அடிப்பீங்களா?” என்று..
‘மாட்டேன்’ என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான். அவனுக்குப் பேச்சே வரவில்லை.
சட்டென்று அவள் முகம் தெளிவாகவும் பேச்சில் ஒரு துள்ளல். “எனக்குத் தெரியும் நீங்க அடிக்க மாட்டீங்கன்னு… சும்மா கேட்டேன். ஸ்கூல்ல எனக்கு ஒரு கணக்கு வாத்தியார். பிடிக்கவே பிடிக்காது. அவருக்கும் என்னை பிடிக்காது எனக்கும் அவரைப் பிடிக்காது. சொட்டை மண்ட! எனக்கு வந்த ரெண்டு டீச்சருமே அப்படி தான்! நான் நினைச்சேன் கணக்கு படிக்கிற எல்லாருமே படு கேவலமா சொட்டையா இருப்பாங்கன்னு… ஆனா நீங்க பாக்க அப்டி இல்லியே..”
“அப்போ எப்டி இருக்கேனாம்? பாக்க நல்லா இருக்கேனா?” கன்னக்குழி எட்டிப் பார்த்தது.
“ம்ம்..? ரொம்ப கனவு காணுவீங்களோ? நல்ல ஐயனார் சாமி மாதிரி இருக்கீங்க!” என்றாள் அலட்டாமல்.
அவன் சத்தமாகச் சிரிக்க, விழி விரித்து அவனையே பார்த்திருந்தாள்.
மின்னும் பற்களும், கண்களும்.. அவன் கன்னக்குழிக்குள் அவளை இழுத்துப் போட்டது. புன்னகையோடே அவனைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.
தாத்தா சிரிப்பார் இப்படி. அவளுக்கு இப்படிச் சிரித்தால் பிடிக்கும் என்பதற்காகவே அவர் சிரிப்பார்… நன்றாய் குரலெழுப்பி, அவள் மொக்கை ஜோக்கிற்கு!
“ஏன் மூர்த்தி சார்?” என்றாள். ஏன் அவளிடம் அவன் அன்பாய் இருக்கவேண்டும்? ஒட்டுமில்லை.. உறவுமில்லை!
புன்னகைத்தான். பதிலுக்கு அவளும் புன்னகைத்தாள்.
“இன்னைக்கு என்ன பண்ண போறோம்?” அவனோடு ஊர் சுற்ற பிடித்ததினால் வந்த கேள்வி.
“இன்னைக்கு.. உன் பேர மாத்த என்னென்ன செய்யணுமோ.. அத பார்ப்போம்!”
“இன்னைக்கே மாத்திடலாமா?”
“இல்ல… இன்னைக்கு ஆரம்பிப்போம். ரெண்டு இல்ல மூணு வாரம் ஆகலாம். தெரியல. விசாரிப்போம்!”
“ம்ம்.. அப்புறம்”
[the_ad id=”6605″]
“அப்புறம்.. சத்யன் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் பத்தி சொன்னான். அவங்கள போய் பார்ப்போம். இந்த நைட் நேர கனவுக்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டணும்! சோ அவங்கள கண்டிப்பா பார்க்கணும்!”
“ம்ம்… அப்புறம்?”
“உனக்கு ஹாஸ்டல் பாக்கணும்!”
“ஏன் மூர்த்தி சார்? என்னை பிடிக்கலியா?”
“பச்! என்ன பேச்சிது?”
“தெரியும் மூர்த்தி சார்… உங்கள நான் படுத்தறேன்! அதனால் என்னை வேண்டாம் சொல்றீங்க!”
“இல்ல துளசி! அப்படி எல்லாம் இல்ல! எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்”
“நீங்க நம்ம அக்ரிமென்ட்ட மறந்திட்டீங்க?”
“இல்ல… நான் உண்மை தான் சொல்றேன். எனக்கு உன்னைப் பிடிக்கும் துளசி! நீ சின்ன பொண்ணு. உன் வயசு பொண்ணுங்க கூட பழகு.. என் பின்னாடியே எத்தன நாள் சுத்துவ? உனக்கும் ஒரு பிடித்தம்.. வாழ்க்கைன்னு வேண்டாமா? காலேஜ் போ..”
“ம்ம்.. படிக்க வேற ஊருக்கு அனுப்பிடுவீங்களா?”
“இங்க மெட்ராஸ்ல இல்லாத காலேஜா? நாளைக்கு காலேஜ் பிரின்சிய பார்ப்போம்… அப்படியே பக்கத்தில இருக்க லேடீஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விடுறேன். நல்லா படி!”
“நான் வீட்டு வேலை எல்லாம் கத்துக்கிறேன்… சமத்தா எல்லா வேலையும் செய்யறேன்.. சேட்டை செய்ய மாட்டேன். காலேஜ், ஹாஸ்டல் எல்லாம் வேண்டாம் மூர்த்தி சார்”
“என்ன பேச்சிது? ஒழுங்கா படிக்கிற வழிய பாரு”
யோசனையாய் அவள் அமர்ந்திருக்க, எப்பொழுதும் போல் அவன் அட்வைஸ் மழையை “நாம சுயமா நிமிர்ந்து நிக்கணும் துளசி..” என்று ஆரம்பித்து, “புரியுதா?” என்று முடிக்க..
“ம்ம். புரியுது. நீங்க நல்லா பேசறீங்க மூர்த்தி சார். அட்வைஸ் பண்ண ஒரு ச்சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்றதே இல்ல…” உதடு முழு நீளத்திற்கும் நீண்டது.
“வாய் வாய்… அந்த வாயா என்ன பண்ணலாம்?”
“வாய ஒண்ணும் பண்ண வேண்டாம். ஆனா உள்ள தீனி போடலாம்!”
“நீ போய் குளிச்சிட்டு கிளம்பு..”
பின்னோடு வால் பிடித்து வந்தாள். “மூர்த்தி சார்.. ஹாஸ்டல் பார்த்தே ஆகணுமா? காலேஜ் இங்க இருந்து போகக் கூடாதா? படிக்கணும்னு இப்போ ஆசை எல்லாம் இல்ல மூர்த்தி சார்.. நிஜத்துக்கு எனக்கு ஒரு ஆசையும் இல்ல.. எதுவும் வேண்டாமே..” அவளுக்கு இங்கிருந்து போக மனமே இல்லை. வெளி உலகைப் பார்க்கும் தைரியம் சுத்தமாக இல்லை. இங்கே ஒரு ஓரத்தில், அவன் நிழலில் புதைந்து போனால் போதும் என்றிருந்தது.
என்ன சொல்லவென்று யோசித்தவன், “உன்ன மாதிரி பிள்ளைகளைப் பார்த்ததும் ஆசை எல்லாம் தானா வரும்..அப்புறம் நீயே வந்து, அவ இத வச்சிருக்கா.. அவ அத வச்சிருக்கா.. எனக்கும் வாங்கி தான்னு ஆசையா கேப்ப! இப்போ நீ போய் குளிச்சிட்டு வா டிபன் பண்றேன்.. சாப்பிட்டுட்டு கிளம்புவோம்..”
பிடிவாதமாய் அடுப்பின் முன் நின்று கொண்டாள். “மாட்டவே மாட்டேன்… நீங்க, என் பேச்ச கேளுங்க.. நான் தான் செய்வேன். என் கால்ல நிக்க விடுங்க” என்றாள்.
[the_ad id=”6605″]
“உனக்கு சமையல் தெரியாதுன்னு சொன்ன?”
கண்ணை உருட்ட… “அப்போ தெரியுமா?” அவனுக்கு நம்பிக்கை இல்லை.
“நீங்க ரெடி ஆகிட்டு வாங்க… அசத்திடுறேன்!” என்றாள்.
“கைய மட்டும் சுட்டுக்காத.” பத்திரம் சொல்லி அடுப்பை பற்ற வைத்துச் சென்றான்.
ஒரு மணிநேரம் கழித்து கிளம்பி வந்த இருவரும் அமர்ந்தனர் உணவு உண்ண. பரிமாறத் தான் முயன்றாள்… ஆனால் சிகப்பு கோந்து கட்டி கட்டியாகக் கரண்டியோடு ஒட்டிக் கொள்ள.. பேய் முழி முழித்தாள்.
“இது என்ன புது அயிட்டமா இருக்கு?”
“அன்னைக்கு ஸ்டேஷன்ல சாப்பிட்டோமே கிச்சடி.. அது!” என்றாள்.
பேய் முழி.. அவன் முழித்தான். ‘இதுக்கு அதுவே நல்லா இருந்துதே’
“என்ன? கிச்சடியா? ஓ.. அது எல்லாம் கேரட் பீன்சா?”
“இல்ல இல்ல… கிச்சடி இல்ல. இது ரவ பிரியாணி” என்று கீழ் உதட்டை கடித்துக்கொண்டே பெரிதாய் சிரித்தாள்.
“கேசரி பொடி போட்டியா?”
“இல்ல காரத்துக்கு மிளகா பொடி, அப்புறம் நீங்க தானே சொன்னீங்க மல்லி பொடி, மஞ்சள் பொடி எல்லாம் நல்லது வயிறுக்குன்னு! நேத்து நீங்க குழம்புக்கு போட்டீங்களே அதே மாதிரி போட்டேன்” என்றாள்.
“ஓ..?” அதற்கு மேல் என்ன சொல்லவேண்டும் என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.
“பாக்க தான் இப்படி இருக்கு.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..சாப்பிடுங்க…” என்று வாயில் வைக்க.. முகம் ஒரு கோணத்துக்குச் சென்றது.
“என்ன ஆச்சு? உன் பிரியாணி எப்படி? ரொம்ப டேஸ்டா இருக்கு போல.. முகமே பேசுதே” சிரித்தான்.
“சும்மா சும்மா என்ன சிரிப்பு வேண்டி இருக்கு? உப்பு போட நீங்க சொல்லவே இல்ல! எல்லாம் உங்களால தான் நல்ல ருசியான சாப்பாடு நாசமா போச்சு!” பழியை அவன் மேல் போட்டாள்.
ஒரு கைதேர்ந்த மனைவிக்கான எல்லா தகுதியும் அவளுக்கு இருக்க, அவனுக்கு சிரிப்பு தான் அடக்க மாட்டாமல் வந்தது.
“இப்போ சாப்பாட்டுக்கு என்ன மூர்த்தி சார் பண்றது? இப்பவே பசிக்குதே..” உதடு பிதுக்கி நிற்பவளிடம் என்ன சொல்ல?
“காந்தி அக்கா கடையில இருந்து ப்ரெட்டும் முட்டையும் வாங்கிட்டி வரேன்.. ப்ரெட் ஆம்லேட் சாப்பிடலாம்… எதுக்கும் கொஞ்ச நாளைக்கு நீ செஃப் ஆகர முயற்சி வேண்டாம்.. சமையல நானே செய்யறேன். உனக்கு நல்லா வரத மட்டும் நீ செய்.” என்றான்.
அவள் பங்கிற்கு, “நான் இந்த பொதைச்சிட்டு வரேன்” என்றாள்.
அவன் வினோதமாக அவளைப் பார்க்க. “நாயும் பாவம் தானே” என்றாள் கண்சுருக்கி.. பாவம் போல்.
“நீ இருக்கியே… முடியல போ..” வாய் விட்டி சிரித்தான்.
எது எப்படியோ இருவருக்கும் பொருந்தி வந்தது. இழுத்துப் பிடிக்க வேண்டிய இடத்தில் இழுத்துப் பிடித்து… விட்டு கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்து.. அவள் போக்கில் சென்று அவள் தேவைகளை சந்தித்தான்.
வாடிய செடி மெல்ல மெல்ல தலை நிமிர்ந்து கொண்டிருந்தது.