செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 20_1
காலமும் நேரமும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்னும் கூற்று மூர்த்தி விஷயத்தில் பொய்த்துப் போனது. அவன் துளசி.. அவனை விட்டு அதிக தூரம் சென்றுவிட்டதாக மூர்த்திக்கு தோன்றினாலும்.. அவன் இன்னும் அப்படியே தான் இருந்தான். மனதளவில் எந்த மாற்றமும் இல்லாமல்.
“சார் உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு” கல்லூரி வேலை நேரம் முடிந்திருக்க.. மூர்த்தி தொலைப்பேசியை நோக்கி சென்றான். அவன் அக்கா, பானுபிரியா அழைத்திருந்தார். அவனை உள்ளும் புறமும் புரிந்து அவனை அதிகமாய் நேசிக்கும் உயிர்.
மனிதன் ‘ஹலோ’ சொல்லி முடிக்கவில்லை.. வீட்டுக்கு வர கோரினார் எதிர்முனையிலிருந்த பானுபிரியா. மூர்த்தியைப் பார்த்தே ஆகவேண்டும் என்றார் விடாப்பிடியாக. அக்கா மேல் மதிப்பு.. மரியாதை மட்டுமில்லை அதையும் தாண்டி.. அவனின் இரண்டாவது தாய் அவர்.
“அக்கா… க்கா.. இன்னும் ரெண்டு மாசம் தான்.. காலேஜ் இயர் முடிஞ்சதும் வரேனே..” இங்கே ஒருத்தியோடு அவன் விடுமுறை தினங்கள் எல்லாம் கரைய.. வீட்டின் பக்கம் சென்று வருடம் ஒன்றாகப் போகிறது.
அவ்வப்போது தொலைப்பேசியில் பேசினாலும்… பார்ப்பது போல் வருமா?
“உன் கொம்மை ஏசறா.. மோன காணன்வேண்டி சட்டம்பி ரெண்டு தினமாயிட்டு கரச்சல். காத கொண்டு கேக்கான் பற்றுனில்ல மோனே. மோன் வா இவடத்தைக்கு. மூர்த்திய காணான் கொதியாயிட்டு உண்டு.” என்றுவிட்டார். பானு பேச்சிற்கு மறு பேச்சு பேசி பழக்கமில்லை. “வரேன் கா..” என்ற பின் பேச்சு நீடிக்கவில்லை.. தொலைப்பேசி கைமாறி இருந்தது. “மாமா..” என்றது எதிர்முனை.. விசும்பல் சத்தம் கேட்க.. இவனுக்கும் ஏக்கம் எட்டிப் பார்த்தது. “வரேன் டா தங்கம்.. அழாத” என்று விசும்பலை நிருத்த முயற்சிதான். “ஏமாற்றாம வருவியளா..?”, அக்கா மகள் தங்கமா கேட்டாள்.
“மாமா பொய் பேசுவேனா தங்கம்? ஏமாத்த மாட்டேன். கண்டிப்பா வரேன். நீ அழாம இருந்தா வருவேன்.” ஒருவாரு சமாதானப் படுத்தி இருக்கைக்கு வந்தவன் முகம் முழுவதும் ஏக்கம்.. வீட்டு ஆட்களைப் பார்க்கவேண்டும் என்ற பேராவல். மனம் முழுவதும் தங்கம் ஆட்கொண்டாள்.
“என்ன மூர்த்தி?” சிந்தனையோடு அமர்ந்திருந்தவன் முகம் பார்த்துக் கேட்டது, அவன் தோழி ரதி.
[the_ad id=”6605″]
“வருஷம் ஒன்னாக போகுது வீட்டு பக்கம் தலை காட்டி! போன் போட்டு வான்னு கூப்பிடுறாங்க! தங்கம் கண் முன்ன நிக்கிறா!”
வீட்டு ஆட்கள் பற்றிய பேச்சு சில நிமிடங்கள் நீடிக்க… “போயிட்டு வாங்க மூர்த்தி. இப்போ கல்சுரல் டைம் தானே…” என்று அவன் எண்ணத்தை ஊக்குவித்தாள்.
கல்வி ஆண்டின் இறுதி தருவாய்.. அதிக வேலை தான். இருந்தும், தங்கம் கேட்டபின் அவனுக்கும் வீட்டுப் பக்கம் செல்லாமல் இருக்க முடியவில்லை. அக்கா கூப்பிட்ட பின் வீட்டு நினைவாகவே இருக்க.. மூன்று நாள் விடுப்பு வாங்கி.. ரயில்- பயண சீட்டும் எடுத்துவிட்டான். வெள்ளி இரவு சென்று வியாழன் கல்லூரிக்கு வருவதாகத் திட்டம்.
எந்நேரமும் ஒன்றாய் சுற்றித் திரியும் துளசி, நிலா, ராட்னி, ஜக் இப்பொழுதெல்லாம் கேட்கவே வேண்டாம்.. ‘கல்சுரல்ஸ்’ என்ற பெயரில் ஒரே லூட்டி! எல்லாம் மூர்த்தியின் கண்ணில் படாமல் இல்லை. ஆனால் அவன் வாய் திறப்பதில்லை. பார்ப்பதோடு சரி. அவன் பேராசிரியர்.. அவனால் கல்லூரியில் துளசியை நெருங்க முடியாது. முடியாது என்பதை விட விருப்பமில்லை எனலாம்! அவனால் முடியாததை ராட்னி செய்து கொண்டிருக்க.. தள்ளி நின்று துளசி சிரிப்பதை பார்த்தான்.
கடற்கரை சாலையில்.. இரவு ஒளியில்.. காரில் உலா போவது மிகவும் பிடித்துப் போக.. அதுவும் நின்றபாடில்லை. மாதங்கள் முன் துளசி கூறியது போல் ராட்னியோடு வெளியே செல்ல விரும்பினால் மூர்த்தியிடம் முன்பே கேட்டுவிடுவாள். எங்கு.. எப்போது.. எதற்கு.. யாரெல்லாம் என்று கூறி.. ஏக்க பார்வை பார்ப்பவளிடம் என்ன கூற முடியும்?
“கூட்டத்தோட இரு.. தனியா போகாத, பத்திரமா போயிட்டு வா. எட்டரைக்குள்ள ஹாஸ்டல் போயிருக்கணும்!” என்று விடுவான்.
பெண்களாக போனால் மெரினா கடற்கரை! ஒட்டுமொத்த கூட்டமும் என்றால்.. அருணின் பேக்கரி. வாரம் ஒரு முறை கூட்டம் பேக்கரியை முற்றுகை இடுவது வழக்கமாய் போக.. நாளடைவில் அதை அவள் கேட்பதும் இல்லை. இதை தவிர வேறு எங்கும் செல்லவதும் இல்லை என்பதால் அவன் அதில் தலையிடுவதும் இல்லை.
துளசி, அவன் மேல் அளவு கடந்த மரியாதை வைத்திருக்க… அதுவே இருவருக்கும் நடுவே சுவராய் போனதோ? தெரியவில்லை அவனுக்கு! ஆனால் அந்த சுவர் அவனை இம்சித்தது. ஏன் அவளுக்கு அவன் மனம் புரியவில்லையா? புரியாமல் போக அவன் புரியாத புதிர் எல்லாம் இல்லையே. அவள் நெருங்க விரும்பவில்லை. அவள் நெருங்கினால் அவன் வாழ்வு பொசுங்கிவிடும் என்பதாலேயே தள்ளி நின்றாள்.
வெள்ளி மாலை ரயில் ஏறப் போகும் முன் துளசியை காணச்சென்றான், ஊருக்குப் போவதை அறிவிக்க. விடுதியில் அவளில்லை. எங்கு சென்றாள்? ‘யாருக்குத் தெரியும்?’ என்றுவிட்டார் வார்டன். வார்டனுக்கு என்ன கோபமோ. “அவ ஒரு நாளும் ஒம்பதுக்கு முன்ன ஹாஸ்டல் வரதில்ல” என்று பற்ற வைத்தார்.
ஆனால் பற்றிக்கொள்ளவில்லை. “ப்ரெண்டு கூட தான் போயிருப்பா… சீக்கிரம் வந்திடுவா. வந்ததும் நான் வந்து போனதா சொல்லிடுங்க. ஊருக்கு போறேன். வர நாலஞ்சு நாள் ஆகும்னு சொல்லிடுங்க..”
சென்றுகொண்டிருந்தவன் முதுகுக்கு பின் சற்று சத்தமாகவே முணுமுணுத்தார். “என்ன பொண்ண வளத்து வச்சிருக்காங்களோ… ப்ரெண்டு ரெண்டும் ரூம்ல கிடக்கு. எந்த ப்ரெண்டு கூட போனாளோ? எவன் கிட்ட ஏமாந்துட்டு வந்து நிக்க போகுதோ?”
அவனுக்குத் துளசியைத் தெரியாதா? நம்பவில்லை. இருந்தும் கோபம் தான். பேசியவர் மேலும்.. இப்படிப் பட்ட பேச்சுகளுக்கு ஏன் இடம் தரவேண்டும் என்று அவள் மேலும். இந்த மாதிரி பேச்சுக்கள் கேட்கக் கூடாதென்று தானே விடுதியில் சேர்த்துவிட்டான்!
“சின்ன பொண்ணுங்கள உங்க பொறுப்பில விட்டுட்டு போறோம்னா.. உங்க மேல இருக்க நம்பிக்கையில. இத்தன வருஷமா எத்தன பிள்ளைங்கள பார்த்திருப்பீங்க? கள்ளுக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியலன்னு சொல்லாதீங்க. அவ கொஞ்சம் துருதுரு டைப் தான். அதனால் உங்களுக்கு அவ மேல கோபம் இருக்கலாம்! துளசிக்கு தெரியாம கூட ஒருத்தருக்கும் கெடுதி நினைக்கத் தெரியாது. அவ மேல தப்பான சேறை தெளிக்காதீங்க. ஒரு பையனோட ஊர் சுத்தறான்னு சொல்றீங்க..! தப்பு செய்ய நினைச்சா… உங்க கண்ணு முன்ன வந்து போக மாட்டாங்க ரெண்டு பேரும். அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருக்க நல்ல நட்பை, ஆரோக்கியம் இல்லாம மாத்திடும் நம்ம பேச்சு! பொறுப்பான இடத்தில் இருக்க நீங்க.. தப்பு செய்யறான்னு தோனிச்சுன்னா கூப்பிட்டு விசாரிங்க. அதை விட்டுட்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாதீங்க. கத்திய விட நாக்குக்குக் கூர்மை அதிகம். அவள காயப்படுத்த போய் நீங்க காய பட்டுடாதீங்க!” பொறுமையாக நின்று நிதானமாக மரியா கண் பார்த்துக் கூறிச் சென்றான். கடைசி வரிக்கு அர்த்தம் புரியவில்லை அவருக்கு, ‘அவளை நோகடித்தால்… என்னை நோகடிப்பானா இவன்? என்ன கூற வருகிறான்?’ அவன் சிந்தனையிலிருந்து மீளும் முன் மூர்த்தி சென்றிருந்தான்.
[the_ad id=”6605″]
அவன் தலை மறைந்த இரண்டாவது நிமிடம் சைக்கிளை பூட்டிவிட்டு, கையில் கூடை பையோடு வந்தாள். அறைக்குள் அவள் நுழைய வெண்ணிலா சுருண்டு படுத்திருந்தாள். துளசி சென்ற பொழுதும் இப்படி தான் படுத்திருந்தாள்.
“இன்னும் கஷ்டமா இருக்கா நிலா? எழுந்திரு.. நீ விரும்பி சாப்பிடுற க்ரீம் பன் வாங்கிட்டு வந்திருக்கேன்… ஏதாவது சாப்பிடு அப்போ தான் மாத்திரை போட முடியும்”
வயிற்று வலியில் படுத்திருந்த வெண்ணிலாவிற்கு தின்பண்டங்களும் குளுக்கோஸ், மாத்திரை என்று சிலவற்றை வாங்கி வந்திருந்தாள். வார்டனுக்கு தெரியாமல் இல்லை. எதற்கும் வார்டனிடம் போய் நிற்காமல் அவளே அவள் வேலைகளைப் பார்த்துக் கொள்ளுவது, கண்டித்தால் நியாயம் பேசுவது, எந்த சத்தமும் இல்லாமல் இருந்த விடுதி கேலி கும்மாளத்தோடு அவர் காதை அடைக்கச் செய்தது.. என்று பல காரணங்களால் அவருக்குத் துளசியை அதிகம் பிடித்தமில்லை போலும்!
அவர் போட்ட வீண்பழியை மூர்த்தி நம்பவில்லை என்றாலும்.. சின்ன குண்டூசி உறுத்தல். ‘எவன் கிட்ட ஏமாந்துட்டு வந்து நிக்க போகுதோ?’ எப்பேர்ப் பட்ட வார்த்தை அது! கூடிய சீக்கிரம் இந்த மாதிரி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! எப்படி? திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள் என்று தெரியும். அவள் சம்மதிக்கும் முன் வீட்டில் பேசிப் பயனில்லை. ‘என்ன தான் செய்ய? துளசி மா.. உயிரோட கொல்ற என்னை!’ இந்தியாவின் தெற்கு எல்லையை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்த ரயிலில் அமர்ந்திருந்தவன் மனம் முழுவதும் துளசி தான். அவளைத் தாண்டி தான் மற்ற யோசனைகள்.
இருட்டு விலகாத விடியற்காலை ஊர் போய் சேர்ந்தான். வெள்ளை அம்பாசிடர் ரயில் நிலையத்திற்கு வெளியே காத்து கொண்டிருந்தது, அவன் வரவுக்காக.
“சுகம் தன்னே மூர்த்தி..! ப்ராயாணம் வசதியா இருந்துதா?” கேட்டவருக்கு ஐம்பதைத் தொடும் தோற்றம். மூர்த்தியின் மூத்த அண்ணன், சுவாமி நாதன்.
“நல்ல இருந்துது வலியண்ணா..”
தேவைக்கு அதிகமாய் ஒரு வார்த்தை பேச மாட்டார். குணமே அப்படி தானா இல்லை மூத்தவர் என்ற மரியாதையில் அவரிடமிருந்து அனைவரும் ஒரு அடி ஒதுங்கி இருக்கவே அவர் இப்படி மாறிப்போனாரா? தெரியவில்லை. மூர்த்தி பார்த்த அன்றிலிருந்தே சுவாமி இப்படி தான்.
வீட்டை அடையும் முன் வீட்டில் நடந்த முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து அவனிடமிருந்தும் விஷயங்களை வாங்கிக்கொள்வார்.
மனைவி சுவர்ணம். ஐந்து மக்கள். மூத்த இரண்டும் கல்லூரி செல்லும் பெண் பிள்ளைகள். இளையது மூன்றும் ஆண் பிள்ளைகள். பள்ளிக்குச் செல்லும் சிட்டுக் குருவிகள்.
நிலையத்திலிருந்து மிதமான வேகத்தில் வந்த வாகனம்.. கரடு முரடான மலைச் சரிவைப் போன்ற பாதைக்குள் நுழைந்தது. கிரமம் முழுவதுமே ஒரு கார் செல்லும் அளவு தான் பாதை இருந்தது. மலையடிவாரம் என்பதால் ஒவ்வொரு வீடும் ஒரு உயரத்தில் இருக்கும். தெருவில் நடப்பதே பாதி ஓட்டமும் நடையுமாகத் தான் இருக்கும் அரை மணிநேரத்தில் கரடு முரடான பாதை ஒரு முடிவுக்கு வந்தது… வீட்டின் முன் வண்டி நின்றது.
காரின் அரவம் கேட்கவுமே அங்கு வேலை செய்யும் சுப்பிரமணி வந்தான். முப்பதுகளிலிருந்தான். ஒரு கால் மற்றதை விட சிறியது என்பதால் கொஞ்சம் நொண்டிக் கொண்டே நடப்பான். அவன் உடல் குறைபாடு என்றுமே அவன் சுறுசுறுப்பைக் குறைத்தது இல்லை. இரண்டு வார்த்தை விசாரிப்பின் பின் பெட்டியோடு அவன் சென்றுவிட..
காரை விட்டு வெளியே வந்தவன் முகத்தில் ‘ஹப்பாடா..’ என்ற நிம்மதி ரேகை. சுகமான ஏகாந்த உணர்வு. சொந்த மண் அல்லவா? மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான். சுத்தமான குளிர் காற்று நுரையீரலை நிறைத்தது. காரை நிறுத்திய இடத்திருந்து ஐந்து நிமிடம் நடக்க வேண்டும் வீட்டு வாசலை அடைய.
உதட்டைக் குவித்து மென்மையாக விசில் அடிக்க… புயல் வேகத்தில் கருப்பு நாய் ஒன்று எங்கிருந்தோ நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடி வர.. இவன் முகம் பளீர் என்ற புன்னகையில். வந்த வேகத்தில் மூர்த்தியின் நெஞ்சின் மீது பாய.. அதன் வேகமும் கனமும் தாள முடியாமல் அவன் சரிய.. அடுத்த ஐந்து நிமிடம் இருவரும் மண்ணில் கட்டி புரண்டு விளையாட்டு.
“போதும் விடுடா..” தூசி தட்டிக்கொண்டே எழுந்தவன் காலை தேய்த்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வந்து அதன் அன்பைக் காட்டியது கருப்பன்.
பெரிய நிலபரப்பு. ஏக்கர் கணக்கில் பூமி. நடுவே தேக்கு தூண்களோடு பெரிய வீடு. வீட்டைச் சுற்றி செம்மண் தரை. முன் வாசல் செம்மண் முற்றம் மட்டுமே இருக்கும் 4000 சதுர அடி. இரண்டு வாண்டுகள் தூங்கி வழிந்துகொண்டே வாசல் பெருக்கி கொண்டிருந்தனர். சின்ன அண்ணனின் பெண்ணும் அதில் அடக்கம்.
முற்றத்தின் ஒரு ஓரத்தில் பசு சத்தம் எழுப்பிக் கொண்டிருக்க.. மூர்த்தியின் கால்கள் தன்னால் மாட்டுக் கொட்டகையை நோக்கிச் சென்றது. புஷ்டியான இரண்டு கன்றுக் குட்டிகள். மூன்று நாட்டு பசுக்கள். மயிலை.. செவலை என இரண்டு வகை காங்கேயம் குடும்பத்தைச் சார்ந்த பசுக்கள், திடகாத்திர தோற்றம், நீளமான கொம்புகளில் வர்ணம் என பார்க்கவே ஒரு கம்பீரம். காளைகள் இரண்டு உண்டு, அது தோட்டத்து வீட்டில் இருக்கும்.
கன்றுகளுக்கு போக அவர்கள் வீட்டுத் தேவைக்கும் அதிகமாகவே பால் கிடைக்கும். சின்ன அண்ணன், தங்கதுரை பால் கரந்து கொண்டிருந்தார். நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் தோற்றம். மனைவி, முல்லை. இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு பத்து வயது. இரண்டாவது வெளி வந்து மூன்று வருடம் ஆக.. மூன்றாவதிற்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். ஆண் குழந்தை பிறக்கும் வரை முயற்சியை விடுவதில்லை என்ற முடிவில் மனிதன் இருப்பதாகக் கேள்வி!
[the_ad id=”6605″]
“வந்தோ டேய்? எங்கோட்டு உண்டு மூர்த்தி?”
இவன், தள்ளி தனியே நின்று கொண்டிருந்த செவலை பசுவைத் தடவி விட்டுக்கொண்டே அவர் கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்தான். முரட்டுப் பசுக்கள். வேற்றாள் அருகே செல்ல முடியாது.
மூத்தவர் பேச யோசிப்பார்… இளையவர் பேச யோசிப்பதே இல்லை. அவன் பசுவைப் பார்ப்பதைப் பார்த்து பதில் தந்தார். “ரெண்டு தினத்தில குட்டி வரும்… லக்ஷ்மிக்கு இது முதல் பிரசவம் அல்லே அதோண்டு மனசிலோடி கொறச்சு வெப்ராளம்.”
மாட்டைப் பெருமூச்சோடு தடவிக் கொடுத்தவர், “மூர்த்தி உள்ளுக்கு போ..” என்று நகர்ந்தார்.
ஆடுகளை கூட்டிக்கொண்டு எதிரே வந்தது, வீட்டின் கடைக் குட்டி.. மூர்த்தியின் தம்பி, செல்வன். இருபதுகளின் ஆரம்பத்திலிருந்தான்.
“லேய்… காலத்தே பிள்ளையள எங்கல கொண்டு போவுத?” இது சின்ன அண்ணன்.
“அம்மே அங்கன கட்ட சொல்லிச்சு.. கொச்சண்ணன் சோலிய பாத்துட்டு போவியளா..” இது செல்வன், தங்கதுரையிடம்.
“இந்த வருசம் எங்கில்லும் எழுதின அரியர் எல்லாம் கிட்டுமான்னு கேளு மக்களே?” மூர்த்தியிடம் கொளுத்திப் போட்டுவிட்டுக் கரந்த பாலோடு அண்ணன் வீட்டிற்குள் செல்ல..
சின்னவன், இஞ்சியைத் தின்ன எதுவோ போல் விழித்தான். அவனும், எப்படி எல்லாமோ புத்தகத்தை விரித்து வைத்து அதில் தலை குப்புறப் புரண்டு விட்டான்… படிப்பு தான் மண்டையில் ஏறியதாக தெரியவில்லை. அதுவும் கணக்கில் படு சுமார். எதற்கு என்றே தெரியாமல் கல்லூரி செல்கிறான்.
“என்ன செல்வன்.. நல்லா இருக்கியா?”
“இருக்கேன் கொச்சண்ணா” மற்ற அண்ணனிடம் பேசியது போல் மூர்த்தியிடம் பேச முடிவதில்லை, சின்ன அண்ணனே என்றாலும் இவன் மேலிருக்கும் கொஞ்சம் பயமும், நிறைய பக்தியுமே காரணம்.
“படிப்பு எப்பிடி போகுது செல்வன்?”
‘எங்க போகுது? அங்கேயே தான் நிக்குது’ வாத்தியார் தம்பியின் பதில் இதுவாக தான் இருக்கவேண்டும் என்றபோதும்.. “பிரஷ்ன இல்லண்ணா. ஒருவாடு பாடுபட்டு படிச்சிட்டுண்டு.” என்று கூச்சமே இல்லாமல் உரைத்தான்! இது தேராத கேஸ் என்று மூர்த்தி மட்டும் தான் கைவிடவில்லை தம்பியை. “ம்ம்.. குட். நல்லா எழுது. டவுட் இருந்தா நான் போகிறதுக்குள்ள க்ளியர் பண்ணிக்கோ..”
“சரி கொச்சண்ணா..” என்றவன் ஆடுகளோடு நடையை கட்டினான்.