செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 21_1
சிகப்பு நிற சுவர்கள் கொண்ட பிரமாண்ட கட்டிடம். அரண்மனை போல் பெரிய படிகள்.. பெரிய அறைகள்.. காலத்திற்கும் கம்பீரம் மாறாமல் நிற்கும் ஆங்கிலேயத் துரைகளின் சிலைகள்.. வெயில் தெரியாமல் இருக்கத் தென்றலை கொண்டு வந்த பலவகை மரங்கள் என்று நினைவை விட்டு என்றுமே அகன்றுவிடாத அவள் கல்லூரி, துளசிக்கு இன்றுமே பிரமிப்பு தான்.
அவள் வேண்டாம் என்று அழுத பின்னும் ஏன் மூர்த்தி அங்குச் சேர்த்தான் என்பது அவளுக்கு நன்றாய் புரிந்தது. தகப்பன் ஸ்தானத்தில் நின்று, மூர்த்தி அவளுக்காகச் செய்து கொண்டிருக்கும் எதற்குமே அவளால் கைமாறு செய்ய முடியாது என்று தெரியாத பச்சிளம் குழந்தை இல்லை துளசி. தள்ளி நிற்பது தான் அவளின் கைமாறு என்பது அவள் எண்ணம்.
எண்ணம் நிறைவேறத் தள்ளித் தான் நிற்கிறாள். ஆனால் அவன் ஐந்தே ஐந்து நாட்கள் தள்ளிச் சென்றதும் பெண்ணுக்கு என்னவாயிற்று? பசலை நோயா? பார்த்தால் அப்படி தான் தெரிகிறது. வார்டன் அவளிடம் கூறியிருக்கவில்லை. ஆல் இந்தியா ரேடியோவோ, வெள்ளி மாலை அவள் வீட்டிற்குச் சென்றவள் இன்று மதியம் போல் வருவாள். இப்படியாக.. அவளுக்கு அறிவிக்க யாரும் இல்லாமல் போகவே.. மூர்த்தி ஊருக்குச் செல்லும் முன், விடுதி வந்து போனது பெண்ணிற்குத் தெரியவில்லை.
“எங்கு சென்றார்? ஏன் இந்த வாரம் வரவில்லை? உடலுக்கு ஏதாவது பிரச்சினையா? என்னை வெறுத்துவிட்டாரா? இனி நான் வேண்டாமா?” கேட்கப்படாத கேள்வி இல்லை. முடிந்த வரை தன்னை போட்டுக் குழப்பிக் கொண்டாள். படிப்பு பிடிக்கவில்லை.. பஞ்சணை தூக்கம் தரவில்லை.. உணவு ருசிக்கவில்லை.. நண்பர் கூட்டமும் ரசிக்கவில்லை. சிரித்து நான்கு நாளாகியிருக்க.. “எங்குப் போனாய் என்னை விட்டு?” என்ற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் வேண்டும் என்று மனம் துடித்தது.
மூர்த்தி கல்லூரி வந்திருப்பது தெரியாது. மதிய உணவு நேரம் ஆரம்பித்த பின்னும் அவள் மேசையில் தலை கவிழ்ந்து தான் கிடக்கிறாள். வெண்ணிலாவும் பாடாய் பட்டுவிட்டாள். ஒருவர் பேச்சும் துளசியின் செவிப்பறையை அடைந்ததற்கான அறிகுறி இல்லை.
கல்லூரியின் நீளமான காரிடரில் தனியே நடந்து கொண்டிருந்த வெண்ணிலா கண்ணில் பட்டான், துளசியின் கார்டியன். பெண் ஓட்டமும் நடையுமாக மூர்த்தியை பின் தொடர ஆரம்பித்தாள்.
[the_ad id=”6605″]
காரிடரில் சக பேராசிரியரோடு நடந்து கொண்டிருந்த மூர்த்திக்குப் பின்னோடு யாரோ வந்துகொண்டே இருப்பது போல் தோன்றவும்.. திரும்பிப் பார்க்க.. வெண்ணிலா அவஸ்தையோடு நெளிந்தாள்.
“அப்புறம் பார்க்கலாம் சார்..” கூடே வந்த பேராசிரியரை அனுப்பிவிட்டு..
“சொல்லுங்க வெண்ணிலா..” அவள் முகம் பார்க்க… பெண்ணுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘இவருக்கு என்னை தெரியுமா?’
சத்தமில்லாமல் போகவே.. மீண்டும் “சொல்லுங்க வெண்ணிலா..” என்றான். முகத்தில் புன்முறுவல்.
“சார்.. ஹாஸ்டல்ல.. நீங்க தான் துளசி கார்டியன்… அது தான்..” என்று இழுத்தாள் எச்சில் விழுங்கி..
‘வார்டன் மீண்டும் அவளை ஏதேனும் சொல்லி விட்டாரா?’ யோசனையைத் தள்ளி வைத்துவிட்டு.. “ஆமா… என்ன விஷயம்? தயங்காம சொல்லுங்க? வார்டன் ஏதாவது சொல்லிட்டாங்களா?”
விடியற்காலை மெட்ராஸ் வந்து சேர்ந்திருந்தான். இன்று காலை, வழக்கமாகத் துளசி அண்ட் கோ-வின் அரட்டை கச்சேரி நடக்கும் இடமும் காலியாக இருந்ததாக ஞாபகம்.
“இல்ல.. இல்ல… சார்” பரபரத்தாள். முகத்தில் லேசான சிரிப்பு அவளிடம். “அந்தமா தான் இவ கிட்ட வாங்கிகட்டிகிட்டாங்க..”
‘இது வேறையா…’ என்று பார்த்தான்.
“பிரச்சினை என்னன்னு தெரியல சார். எல்லா சனி, ஞாயறு நான் பெரியம்மா வீட்டுக்கு போயிடுவேன். விஜி, பக்கத்து ரூம் ஃப்ரெண்டு அவளும் இருக்கமாட்டா. துளசி தனியா தான் இருப்பா. இந்த வீக்கெண்டும் போய்ட்டு மண்டே மார்னிங் காலேஜ்-ல தான் பார்த்தேன். அவ யார் கிட்டேயும் முகம் கொடுத்துப் பேச மாட்டேங்கிறா சார். ஒரு நாளும் ஒழுங்கா சாப்பிடல. நைட் மட்டும் ரொம்ப கம்பல் பண்ணி நாலு வாய் சாப்பிட வச்சிடுவேன். உங்கட்ட சொல்ல வந்தா நீங்களும் இல்ல… இன்னைக்கும் காலைல சாப்பிடல. இப்போவும் சாப்பிட கூப்பிட்டா ‘பசி இல்ல’னு பென்ச்சில படுத்தே கிடக்கிறா சார்.”
நீண்ட மூச்சு விட்டவன், “கொஞ்சம் ஸ்டாஃப் ரூம் வரைக்கும் வாங்க வெண்ணிலா”, என்று கூட்டிச் சென்றவன், அவன் மதிய உணவு டப்பாவை அவளிடம் கொடுத்து, “இத துளசிட்ட குடுங்க. சாயங்காலம் சிக்ஸ் தர்ட்டி.. செவன் கிட்ட ஹாஸ்டல் வந்து பாக்கிறேன்னு சொல்லிடுங்க” என்று அனுப்பி வைத்தான்.
“சரி சார்” என்று மண்டையை ஆட்டியவள், ‘அவ சாப்பிட மாட்டேன்றா.. இப்போ இத குடுத்தா மட்டும்? வந்து என்ன விஷயம்ன்னு கேட்டா என்னவாம்?’ சத்தமில்லாம் உள்ளுக்குள் முனகிக் கொண்டே சென்றாள். அவளுக்கு எங்கே தெரியும்.. மூர்த்தியின் கைமணம் துளசியிடம் செய்யக்கூடிய மாயையை?
‘இருக்கும் போது சார் மோர்-ன்னு கடுப்பேத்தறது. பாக்க முடியலனதும்.. சாப்பிடாம என்னை தேடுறீயா? அவ்வளவு தானா நீ?’ மூர்த்தியின் உள்ளுக்குள் சாரல்.
மாலை வகுப்புகள் முடிந்து ஸ்டாஃப் ரூம் வந்தவன் கண்ணில் பட்டது அவன் மேசை மீதிருந்த அவனுடைய உணவு டப்பா. தூக்கிப் பார்த்தான். காலி டப்பா உணவருந்தியதை உணர்த்தியது. உள்ளே ஏதோ குலுங்கவும் திறந்து பார்த்தான். கழுவித் துடைத்த டப்பாவில், நான்காக மடித்த காகிதம்.
[the_ad id=”6605″]
‘தேங்க்ஸ் சொல்லி இருப்பாளோ…? இவ எங்கிட்ட தாங்க்ஸ் சொல்ல மாட்டாளே..’ யோசனையாய் பிரிக்க..
“நாளைக்குப் புளியோதரை, பொடேடோ ஃப்ரை கொண்டு வாங்க. போனா போகுதுனு அப்போ மன்னிக்கிறேன்.” கொட்டை எழுத்தில் அடுத்த நாளுக்கான மெனு!!
அடிபாவி! சிரித்துவிட்டான். ‘சேட்டை சிங்காரி..’
மூர்த்தியை இன்னும் பார்க்கவில்லை. ஒரு வார்த்தை பேசவில்லை. ஒரு டப்பா உணவு அவன் வரவை உணர்த்தவுமே முகம் புன்னகையை பூசிக் கொண்டது.
மூர்த்தி கொடுத்த உணவு டப்பாவோடு துளசி அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த நிலாவோ.. ‘இப்போ இத குடுத்தா மாட்டும் சாப்பிட போறாளாக்கும்’ என்ற எண்ணத்தோடு மூர்த்தி கொடுத்ததாக சொல்லவெல்லாம் இல்லை. டப்பாவைத் திறந்து, “சாப்பிடுறியா?” என்று அவளருகில் தள்ளி வைக்கவுமே.. அந்த வாசம் கூறியது அது யார் சமையல் என்று.
“உன்ட்ட எப்படி நிலா?” என்று குழப்பத்தோடு கேட்டவளிடம் “சார் உங்கிட்ட கொடுக்க சொன்னார்” சொல்லி முடிக்கும் முன் கண் பனிக்க.. டப்பாவைக் கையில் எடுத்துக்கொண்டாள் துளசி. ‘வந்துவிட்டாரா? எங்குப் போனாராம்? இது எதற்காம்? சமாதான உடன்படிக்கையோ? என் நினைவு வந்துவிட்டதோ?’ மன புழுக்கம், முதல் கைப்பிடி சோற்றோடு உள்ளே சென்றுவிட்டது.
வாயில் அடைத்துக்கொண்டே கேட்டாள்..“அவர் என்ன சாப்பிடுவார்?”
“கேன்டீன்ல சாப்பிடுவாரா இருக்கும்.. விக்கிக்காம பொறுமையா சாப்பிடேன் டீ.” தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் நிலா.
உள்ளே சென்ற உணவோ… இல்லை அதில் இழைந்தோடிய அன்போ.. எதுவோ ஒன்று துளசியைத் தட்டி எழுப்ப… நிலாவைப் பார்த்து பல்லை காட்டி சிரித்தாள்.
“போடி லூசு.. மூணு நாளா மனுஷிய பயமுறுத்தீட்டு இப்போ என்ன டி சிரிப்பு?” என்று அவளும் பொய்யாய் கோபிக்க.. பெண்கள் அவர்கள் இயல்புக்குத் திரும்பினர்.
இன்று.. வாரத்தின் அந்த நாள். அருணின் பேக்கரிக்கு படை எடுக்கும் நாள். கல்லூரி முடிந்ததும் இருவருமாகச் சென்றனர். அடுத்த பேருந்து நிலையம் அருகே இருந்தது, அவன் பேக்கரி. நடக்கும் தூரம் தான் என்பதால் இருவரும் பேசிக் கொண்டே சென்றுவிடுவது வழக்கம். ராட்னியும், ஜக்கும் வண்டியின் வந்துவிடுவார்கள். வழக்கமாக விஜி அங்கு தான் இருப்பாள். இன்று இருப்பாளா தெரியவில்லை. வாரத்தில் ஒரு நாள் தான் அந்த பேக்கரியில் கூட்டம் கூடும்.. சுமார் ஐந்து பேர் கூட்டம். அது இன்று! ஈ ஓட்டும் அளவிற்கு இன்னும் இறங்கவில்லை என்பது ஒரு ஆறுதல்.
பேக்கரியில் அமர்ந்து உண்ண மாட்டார்கள். நேரே செல்வது பின்னால் இருக்கும் அடுக்களைக்குத் தான். ருசி பார்த்து சாப்பிடுவதில் ஆர்வம் அதிகம் என்றதால் எளிதில் கற்றுக் கொண்டாள்.. சில பல பிஸ்கட் வகைகள், கேக் வகைகள், வித்தியாசமான மில்க் ஷேக் போன்றவற்றை கற்றுகொண்டதோடு நில்லாமல் உதவியும் செய்வாள்.
மற்ற மூவரும் மூக்கு முட்ட முக்குவதில் குறியாய் இருக்க.. ஆர்வத்தோடு கேட்கும் இவளுக்குச் சொல்லிக் கொடுக்க அருணிற்கு மிகவும் பிடிக்கும். ஆண்கள் என்றாலே விழுங்க நினைக்கும் ஓநாய்கள் என்ற எண்ணம் எல்லாம் இன்று இல்லை.
“அண்ணா.. எனக்கு தான் தெரியுது இல்ல… இன்னைக்கு நானே செய்யறேனே.. செஞ்சு நாமளே சாப்பிடலாம் ண்ணா. நல்லா இருந்தா நான் செய்யறதையும் விக்க ஆரம்பிசிடலாம்.” கெஞ்சிக் கூத்தாடி.. அவளே ஒரு கேக்கை செய்தும் விட்டாள். அது சூடு இறங்கியதும், அவள் விருப்பம் போல் வடிவமைத்துக் கொள்ளலாம்.
கேக்கும் சூடு தணிந்திருக்க… அவள் அதில் க்ரீம் பூசி மேலே பூ வைக்கும் வேளை நிலா வந்து அவள் தோளை இடித்தாள்.
“ஏய்.. லூசு.. பண்ணி மாடே… எதுக்கு டி அசைச்ச..?” துளசி பத்திரகாளி அவதாரம் எடுக்கவும்…
“கத்தாத மாடே.. வெளியில என் ஆளு வந்திருக்கார்” என்றாள் நமுட்டு சிரிப்போடே.
“உனக்கேது டீ ஆளு?” துளசி, இவளை ஏற இறங்கப் பார்க்க..
“அது தான்… இன்னைக்கு மதியதில இருந்து என் ஆள் ஆனாரே அவர்.. மூர்த்தி சார்” அவள் உதடு கடிக்கவும்…
“சாகடிச்சிடுவேன்.. மரியாதையா பேசு சொல்லிட்டேன். எனக்கு மட்டும் தான் மூர்த்தி சார். மத்தவங்களுக்கு மேக்ஸ் ப்ரொபசர்! இன்னும் ஒரு தரம் ஆளு.. கீளுன்னு சொல்லி பாரு.. என் கையால தான் உனக்கு சாவு” நிஜமாகவே முகத்தில் கோபம்.
“உக்கும்… போடி.. யாருக்கு வேணும் உன் மூர்த்தி சார்..” என்று ஆரம்பித்து ஏதோ புலம்பிக்கொண்டே அடுக்களை விட்டு வெளியே அரட்டை கச்சேரிக்கு நிலா சென்றுவிட.. இவள் முடித்துக் கொண்டிருந்த வேலையை அவசர அவசரமாக முடித்து.. மூர்த்திக்கு ஒரு துண்டை தட்டில் எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.
மூர்த்தியைக் காணும் ஆவலில் ஆசையோடு பேக்கரிக்கு உள்ளே அவசர அவசரமாக வந்தவள்.. ரதியை அங்கு எதிர்பார்க்கவில்லை. ஓடிவந்த கால்களோடு இதயமும் நிதானித்தது. ‘என்னை பாக்க வரலியா?’ எச்சில் விழுங்கி நின்றாள். இனி என்ன செய்ய வேண்டும்? அவளை இன்னும் மூர்த்தி பார்த்திருக்கவில்லை.
‘என்ன செய்ய? கேக்கை கொடுக்கவா? வேண்டாமா?’ உள்ளுக்குள் கேள்விகள். முதன் முதலாய் தானே செய்தது. போன நிமிடம் வரை மூர்த்திக்கு கொடுக்கும் எண்ணம் இல்லை தான். ஆனால் போன நிமிடம் அவன் வந்திருப்பது தெரிந்ததும் உள்ளம் துள்ளியது உண்மை தானே.. அவள் செய்த கேக்கை மூர்த்தி தான் முதலில் சுவைக்க வேண்டும் என்று விரும்பியதும் உண்மை தானே…
[the_ad id=”6605″]
மனதில் ஏகப்பட்ட கேள்விகளோடு நின்றிருந்தவள் காதில் அவர்கள் பேசுவது கேட்டுத் தொலைக்க வேண்டுமா?
பொதுவான பேச்சுகள் முடிந்திருந்தது.
பிராயாண களைப்பு அவன் முகத்தில் இருக்க… இடது கை விரல் மூடியிருந்த கண்ணை நீவிவிட்டுக் கொண்டே… “முக்கியமான விஷயம் ஏதோ பேசணும்னு சொன்னியே ரதி?”
“வீட்டுல எனக்கு மாப்பிளை பார்த்திருக்காங்க மூர்த்தி..”
“குட் நீயூஸ்… அமைஞ்சிடுச்சா?” இமை கனக்க.. கண் தூக்கத்தை வேண்ட.. இன்னும் அதே நிலை தான் அவனிடம்.
“நீங்க எனக்கு நல்ல ஃப்ரெண்டு மூர்த்தி… நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் நல்லா தெரியும். படிப்பு, வேலை, அந்தஸ்து.. குடும்ப பேக் கிரவுண்ட்… எல்லா விதத்திலயும் நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம். வீட்டில வேண்டாம் சொல்லக் காரணம் இல்ல.
என் மனசறிஞ்சு யாருக்கும் கெடுதல் நினைச்சது இல்ல. கொஞ்சம் நல்ல பொண்ணு தான். பொறுப்பு அதிகம், வீட்டு சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி போவேன்… உங்க குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா கண்டிப்பா இருப்பேன். என்னால உங்களுக்கு எங்கேயுமே தலயிறக்கம் வராது.
ஏன் மூர்த்தி நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது? நீங்களும் என்னை மாதரி ஒரு பொண்ண தானே எதிர்பார்பீங்க? நீங்க எதிர்பார்க்கிற தகுதி எல்லாம் என் கிட்டே இருக்கே.. எனக்கும் உங்களையும் உங்க குடும்பத்தையும் பிடிச்சிருக்கு. நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?”
முடிக்கக் காத்திருந்தவன், கண்ணிலிருந்து கையை எடுக்க.. பார்த்தது கண்டிப்பாக ரதியை இல்லை! முகம் வெளிறி ரதி முதுகு பின் நின்றிருந்தவளை..
‘துளசி..?’ தூக்கம் போன இடம் தெரியவில்லை.
துளசிக்குத் தான் மூச்சு வருவேனா என்று நெஞ்சில் மாட்டி நின்றது. ‘தகுதி? எங்குச் செல்வேன் தகுதிக்கு?’ மௌனமான கதறல்.
ரதி, மூர்த்தி கண் நோக்கிய திசைக்குத் திரும்ப.. நின்றவள் வேரூன்றி நின்றிருந்தாள்… மூர்த்தி மட்டும் தான் அவள் எதிரிலும் உலகத்திலும்.
எழுந்து வந்தவன், “துளசி.. துளசி மா..” என்ற பின்னும், ஒன்றும் புரியாமல் அவள் விழிக்க.. “என்ன துளசி மா? ஒன்னும் இல்ல டாமா. ஏன் இப்பிடி நிக்கிற?” மூர்த்தியின் மனம் பதறியது. எத்தனை மென்மையாக கையாண்டான் அவன் துளசியை? ‘இப்பிடியா சொதப்புவ ரதி?’
உணர்ச்சியற்ற குரலில்.. “க்கே… கேக்.. மூர்த்தி சார்” கூறிக்கொண்டே அதை அவன் கையில் வைத்தவள்.. அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.
விழுந்து போன அவள் முகம் கண்டு அவன் அகம் மலர வேண்டுமா? இல்லை மனம் வருந்த வேண்டுமா? வருந்தினான். ரதி இப்படி பேசுவாள் என்று அவனுக்குத் தெரியாதே… ரதி பின்னால் அவன் துளசி நின்றிருந்ததும் தெரியவில்லையே…
பின்னோடு ஓடவா முடியும்? ஒரு வயதுக்குப்பின் காதல் வந்தால் இது ஒரு தலை வலி… துள்ளிக் குதித்து.. துரத்தி.. குறும்பு பார்வை பார்த்து… காதல் வசனம் பேசி.. கை கோர்த்து மரத்தைச் சுற்றி ஓடி.. என்று எதுவும் செய்ய முடியாது! வீட்டிற்கு வெளியே வந்துவிட்டால் வயதுக்கேற்ற முதிர்ச்சியோடு நடந்துகொள்ள வேண்டும்.
அவன் இயலாமை அவனுக்கு எரிச்சலை கிளப்பியது. கூடவே, துளசிக்காக மனம் வருந்தியது. ‘சாரி துளசி மா. சத்தியமா இதில எனக்கு ஈடுபாடு இல்ல துளசி.. நம்பு’ இல்லாதவளிடம் சத்தமில்லாமல் மனம் பேசியது.
பத்து நிமிடம் ரதியிடம் பேசி அனுப்பிவிட்டு துளசியைத் தேட அவள் சென்றிருந்தாள். வீட்டிற்குச் சென்றவன் குளித்துவிட்டு, வீட்டிலிருந்து அவனுக்குக் கொடுத்தனுப்பிய பொருட்களையும் எடுத்துக் கொண்டு துளசியை காணச் சென்றான்.
விடுதி மொட்டை மாடியில் அரை மணி நேரமாக நிற்கிறாள் சாலையைப் பார்த்துக் கொண்டு. மனம் எதையோ அசைபோடுவது, முந்தி நுனி கைவிரலில் இழுபடுவதிலேயே தெரிந்தது. விபரீத முடிவு தான்! தெரியாமலில்லை.
பைக் சத்தம் தெருமுனையில் கேட்கவுமே.. மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டவள் கால் ஓட தயாரானது. கீழே பைக் நிற்கவுமே கேட்டின் அருகில் ஓடி வந்திருந்தாள்.
“மூர்த்தி சார்..” வாஞ்சையாய் கூப்பிட்டாள்.
முகம் பார்த்தான், தெளிந்திருந்தாள்.
“வெளியில போலாம் மூர்த்தி சார்..” ஆவலாய் அவன் முகம் பார்த்தாள்.
ஒரு மணி நேரம் முன்னிருந்த தூக்கக் கலக்கம் என்னானதோ? யோசிக்கக் கூட இல்லை. “வா போலாம். இத ரூம்ல வச்சிட்டு வா..” என்று கூறிக் கொண்டே பெரிய பார்சலை நீட்டினான்.
“என்ன மூர்த்தி சார்?” வேண்டாம் என்று கூறாமல் எப்பொழுதும் போல் அவன் கொடுக்க.. வாங்கிக் கொண்டாள்.
“ஐனி சக்கை, திரளி இலை கொழுக்கட்டை, நெல்லிக்கா ஊருகா, உப்பு மாங்க, நார்த்தங்கா ஊருகா, நேந்திரங்கா சிப்ஸ், கிண்ணத்தப்பம். அவ்வளவு தான் நினைக்கிறேன்”
“இவ்வளவும் எனக்கா?” கண் விரித்தாள்.
“ம்ம்… உனக்கு தான்.. துளசி”
“உங்களுக்கு?”
“நீ சாப்பிடு துளசி.. நான் தான் வீட்டிலேயே சாப்பிட்டேனே… உனக்காகத் தான் கொண்டு வந்தேன்”