செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 21_2
சிரித்த முகமாய் காட்சியளித்தாலும்.. உள்ளுக்குள் ஏதோ உருத்தல் இருந்து கொண்டே இருக்க.. மௌனமாய் இருவருக்கும் பிடித்த கடற்கரையில் அமர்ந்தனர்.
“என்ன துளசி.. தண்ணில கால் நனைக்க போகலியா?” அவள் முகம் சரியில்லை.. ஏதோ யோசனையில் நெற்றி சுருங்க அமர்ந்திருந்தாள். விடுதியிலிருந்து கிளம்பியபின் வாய் திறந்தாளில்லை. ரதியை நினைத்து குழப்பமா?
“இல்ல மூர்த்தி சார்.. வேண்டாம்”
அவள் பேச ஆரம்பிப்பதாகத் தெரியவில்லை.
“தேடினியா துளசி?” அவனுக்கு அவளைத் தெரிந்த அளவு கூட அவளுக்கு அவனைத் தெரியவில்லை. அவள் தேடியதும், பட்டினி கிடந்ததும் அவனுக்குத் தெரியாதா என்ன?
“இல்ல மூர்த்தி சார். சனிக்கிழம கொஞ்ச நேரம் காத்திருந்தேன்.. அப்புறம் நீங்க வரலனதும், என் வேலைய பார்க்க ஆர்ம்பிச்சுட்டேன்.” வாய் கூசாமல் பொய்யுரைத்தாள்.
“ஓ… அப்போ சரி. லீவுக்கு ஒரு மாசம் வீட்டுக்குப் போவேன். நீ தேடுவியேன்னு நினைச்சேன். இப்போ அந்த சந்தேகம் போச்சு! நிம்மதியா போயிட்டு வருவேன்” அசராமல் அவன் கூற.. இடியிறங்கியது போல் தோன்றினாலும், “போயிட்டு வாங்க மூர்த்தி சார்..” இழுத்து பிடித்து புன்னகைத்தாள்.
‘ஒரு மாசமா? நான்கு வாரங்களா? வாழ்க்கை முழுவதும் அவர் உன்னோடா வர போகிறார்? பழகிக் கொள்’ அவள் சிந்தனை அதையே சுற்ற..
“வீட்டில எல்லாரும் எப்பிடி இருக்காங்கன்னு கேக்க மாட்டியா துளசி?” என்றான்.. கேள்வியாய் அவள் முகம் பார்த்து.
பின்னியிருந்த கைகளுக்கு நடுவே.. கால் முட்டிகள் இரண்டையும் மடித்து.. நெஞ்சோடு சேர்த்து பிடித்திருந்தவள்.. ஒரு கையை மட்டும் விலக்கி.. மண்ணை அளைந்தாள்.
“எப்படி இருக்காங்க?” ஜீவனே இல்லாமல் கேட்க..
குதூகலம் ததும்ப, “ம்ம்… ரொம்ப நல்லா இருக்காங்க துளசி” என்றான்.
மண்ணை பார்த்துக் கொண்டே புன்னகைத்தாள்.
“எதுக்குக் கூப்பிட்டாங்கன்னு தெரிய வேண்டாமா?”
“எதுக்கு மூர்த்தி சார்?” முகம் மெல்ல அவன் முகம் பார்த்தது.
“எனக்கு பொண்ணு பார்த்திருக்காங்க… எப்போ பரிசம் போடலாம்னு கேக்க..” ஆழம் பார்த்தான்.
என்ன முயன்றும் பெண் முகம் வெளிறித் தான் போனது. மிதமிஞ்சிய கோபம்.. வருத்தம்.. இயலாமை. தன்னை விட்டுப் போய் விடுவானா? எல்லாம் முடிந்தே போனதா? தாளமுடியவில்லை. உணவு இடைவேளையில் வெண்ணிலா பேசியது தான் நினைவில் வந்தது.
“உனக்கும் அவருக்கும் என்ன டி உறவு?” மதியம் மூர்த்தியின் டப்பாவோடு துளசி அருகில் அமர்ந்த வெண்ணிலா கேட்டாள்.
“எவருக்கும்?”
“அது தான் டி… உன் சாருக்கும் உனக்கும்?”
“ஏன் திடீர்ன்னு?”
“கார்டியன்னா.. அவர் உன் சொந்தம் தானே… என்ன உறவு?”
“அத்தான்”
“அப்படினா கட்டிக்க போறியா?”
“லூசு மாதிரி உளறாத! அவர் எங்க.. நான் எங்க?”
“அப்போ அந்த மாதிரி உனக்கு எண்ணம் இல்லல..?”
“ம்ஹூம்.. ஆமா இப்போ எதுக்கு இந்த கேள்வி?”
“இன்னைக்குத் தான் முதல் முதலா அவரை அவ்வளவு கிட்டப் பார்த்தேன்… கிரு கிரு-ன்னு வந்திடுச்சு. மேக்ஸ்-ல சூர புலியாம்.. அறிவு ஜீவி எல்லாம் கொஞ்சம் லூசு மாதிரி தானே இருப்பாங்க. ஆனா இவர் சின்னதா சிரிச்சார் பாரேன்… நான் அந்த கன்னக்குழிக்கே அவர் மேல லூசாகிட்டேன். ஷோட்டர் பார்த்தியா 42” இருக்கும்.. அதுல ஏறி படுத்துக்கலாம் போல். அந்த மீசையை அவர்..” அவள் அடுக்கிக்கொண்டே போக இவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“வாய மூடு. அறிவுகெட்டவளே… விவஸ்தை இல்ல. அவர் உனக்கு குரு. யாரை சைட் அடிக்கணும்னு ஒரு வரம்பு இல்ல..” கொட்டி தீர்த்தாள்.
“ரொம்ப பொங்காத. அவர் ஒன்னும் நமக்கு பாடம் எடுக்கல… சோ அவர் என் குரு இல்ல. சைட் அடிக்க.. எல்லாம் உரிமையும் இருக்கு. அப்படியே பாடம் எடுத்தா தான் என்ன? எனக்கு அது பத்தி எல்லாம் ஒன்னும் கவல இல்ல!”
“அவர பத்தி இந்த மாதிரி பேசாதா… யோசிக்கக் கூட யோசிக்காத. தப்பு தப்பா பேசினாலோ.. பார்த்தாலோ… உன் தலையில கல்ல போட்டுடுவேன் ஜாக்கிறத!” துளசி கொந்தளித்தாள்.
“நீயும் படுக்காத தள்ளியும் படுக்காத” கூறிய நிலா கோவத்தில் எழுந்து சென்றுவிட்டாள்.
அவள் கூற்று உண்மை தான் போலும்!! மூர்த்தி வேண்டும். மூர்த்தி வேண்டாம்.
மூர்த்தி அவள் முகத்தைக் கூர்ந்து நோக்க பெண் சமாளித்தாள். “ரொம்ப சந்தோஷம் மூர்த்தி சார்..”
“நிஜமாவே சந்தோஷமா துளசி? நான் போனா பொதும்ன்னு பாக்கிறியா?” அவன் முகம் வாடிவிட…
அடுத்து உச்சரித்த அவள் ‘மூர்த்தி சாரில்’ வலி இழைந்தோடியது.
என்ன செய்ய வேண்டும் என்று பெண்ணுக்குப் புரியவில்லை. அவளுக்கே அவள் மனம் புரியவில்லை. ஏதேதோ முடிவோடு தான் வந்தாள். இருந்தும்.. மூர்த்தி வேண்டும்… கணவனாய் வேண்டாம். ஆனால் என்றும் வேண்டும்.
வெறும் நட்பு மட்டும் போதும் என்று இவர்கள் வாழ்வில் ஒன்று சேர்வது சாத்தியம் இல்லாத ஒன்று. உணர்வும், துடிப்பும், கனவும் நிறைந்த ஒருவனுக்குக் கொடுக்கும் தண்டனை இது. அவள் விலகினால் தானே அவனுக்கென்று ஒரு வாழ்க்கை அமையும்? வலிக்க வலிக்க.. “நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு சந்தோஷம் தான் மூர்த்தி சார்” என்றுவிட்டாள்.
“நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். நீ ரொம்ப சந்தோஷ பட வேண்டாம்.” குரலில் காரம் எட்டிப் பார்த்தது.
“..”
அவள் மௌனம் அவனைத் தணிக்க.. “ட்ரெயின் ஏறதுக்கு முன்ன… ஹாஸ்டல் வந்தேன் துளசி… உன்ன பார்த்து சொல்லிட்டு போக..”
அவன் சொல்லி முடிக்கக் கூட இல்லை. யோசிக்காமல் கூறிவிட்டாள்.. “ஓ அப்படியா? நான் ராட்னியோட வெளியில போயிருந்தேன் மூர்த்தி சார். உங்கட்ட சொல்ல மறந்துட்டேன். அவன் கூட இருந்தா ரொம்ப ஜாலியா இருக்கா.. அதனால அவன் கூப்பிட்டதும் யோசிக்காம அவன் கூட போயிடுறேன்.”
மூர்த்தி கோபப்படுவான் என்று நினைத்தாளோ? அவனோ, “ஆமா அவன் கொஞ்சம் ஜாலி டைப் தான். நல்ல ஃப்ரெண்ட்ஷிப் என்ஜாய் பண்ணு. அது எல்லாம் என் கிட்ட சொல்லணும்னு நான் எதிர்ப்பார்கல துளசி.” என்றுவிட்டான்.
“சந்தோஷமா போ.. போய்ட்டு ஜாக்கிரதையா வந்து சேரு! அவ்வளவு தான்.”
இது தான் அவளுக்கு, அவன் கூறியது. எங்குச் சென்றாலும் என்னிடம் வந்துவிடு என்றான்.. வெளிப்படையாகக் கூறவில்லை அவ்வளவு தான்.
“எனக்கு ராட்னிய தான் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் இறுகிய முகத்தோடு. ‘தான்’னில் ஏன் அத்தனை அழுத்தம் துளசி?
‘ஏன் நீயும் பாடுபட்டு என்னையும் படுத்திக்கொண்டிருக்கிறாய் துளசி’ என்று பார்த்தான். கையில் ஒட்டி இருந்த மணலை தட்டியவன்
“அப்போ பேசியாச்சுனா.. கிளம்பலாமா?”, அனல் பறந்தது. குரலில் ஏன் இத்தனை கோபம் மூர்த்தி சார்?
அவள், அவனைப் பார்க்க.. அவனோ கடலை தான் வெறித்தான். முகத்திலும் கோப சாயல். ‘இன்னும் எப்படி இவளுக்குப் புரிய வைக்க?’- இது அவன் மனம்.
‘உடலோடு மனமும் அடிப்பட்டவளிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? பொறுமை! பொறுமை வேண்டும்’ என்றதும் அவன் மனம் தான்.
“இப்போ தானே வந்தோம்? இன்னும் கொஞ்ச நேரம் மூர்த்தி சார்?” வேண்டுதலாய் அவனைப் பார்க்க.. அவனிடமிருந்து பதிலில்லை. அவன் பார்வை அலைகளின் மேல் தான். அதுவும் அவனைப் போலவே ஓயாமல் அவளைத் தேடி வந்து கொண்டே இருந்தது.
அவளால் அவனை அப்படி கோப முகத்தோடு பார்க்க முடியவில்லை போலும்..
“மூர்த்தி சாஆஆர்…”
“ம்ம்?”
“நான் பொய் சொன்னேன். எனக்கு உங்கள தான் ரொம்ப பிடிக்கும் மூர்த்தி சார்” என்றாள் அப்பாவியாய்.
‘துளசி மா..’ இவளை எந்த லிஸ்டில் சேர்க்க? “தெரியும் துளசி” என்றான்.
சிறிது நேர மௌனம். அதன் பின் அவள் பேச ஆரம்பித்தாள். பேசிக் கொண்டே இருந்தாள். இருவருக்குமான இந்த சூழல் அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் பேசினாள். இரண்டு வாரக் கதையைப் பேசினாள்.
விடுதியில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் பார்த்த ஒலியும் ஒலியும் பற்றிக் கூறினாள்.
“எப்போ பார்த்தாலும் ஒரே பழையா பாட்டா வரும். இந்த வாரம் எல்லாம் புது பாட்டு மூர்த்தி சார்! நதியா தெரியுமா? அவ பாட்டு போட்டான். செம்ம அழகு..”
‘உன்னை விடா..’ வாய் வரை வந்தது. கேட்டானில்லை.
“மஹா பாரதம் பார்த்தேன்.. மூர்த்தி சார்.. ரொம்ப நல்லா இருக்கு தெரியுமா? எனக்கு ஏற்கனவே மஹாபாரத கதை தெரியுமே..” பெருமை பீத்தினாள்.
“ஏன் மூர்த்தி சார் அதுல யாருமே அவங்களா சுயமா யோசிக்கவே மாட்டேன்றாங்க? எப்போவும் மத்தவங்க சொல்றத தான் கேப்பாங்களா?” தலையாய சந்தேகத்தைக் கேட்டாள்.
“ஷாருக் கான்னு ஒரு ஹிந்தி பையன், மூர்த்தி சார்.. எங்க ஹாஸ்டல் பொண்ணுங்க, அவன் நடிக்கிற ட்ராமா நைட் வருமா, அத அப்படி விரும்பி பாக்கறாங்க. அவன் செம சார்மிங் தெரியுமா?” என்றாள்.
டாம் அண்ட் ஜெரி என்ற பூனை எலியைப் பற்றிக் கூறி வயிறு குலுங்கச் சிரித்தாள்.
பிடித்த பாடல்கள் என்று பலவற்றை அடுக்கினாள்.
அவள் பேசி பேசியே அவனைச் சரி கட்ட.. கோபம் தளர்ந்து மௌனி பேச ஆரம்பித்தான். “உனக்கு மோகன் பாட்டு தான் பிடிக்குமா?”
“ம்ம்… வெறும் மோகன் இல்ல மைக் மோகன். அவர் பாட்டும் பிடிக்கும். இளையராஜா பாட்டுனா ரொம்ப பிடிக்கும்.” லயித்து கூறினாள்.
அவளே மீண்டும், “நிலா டேப் ரெக்கார்டர் எல்லாம் வச்சிருக்கா. மூணு காலி கேசட் வச்சிருக்கா… நாங்க பாடினா அதுல ரெக்காட் ஆகுமே..’ கண்விரித்து கதை கூறினாள்.
“எனக்கும் ஒரு நாள் பாடி ரெக்கார்ட் பண்ணி தா.. நானும் கேட்பேன் இல்ல?”
“அச்சோ.. போங்க மூர்த்தி சார். நாங்க பொழுதன்னைக்கும் இத தான் செய்வோம்.. எங்க சத்தத்தை எங்களாலேயே கேக்க முடியாது.. நீங்க வேற” இடியெனச் சிரித்தாள்.
“பாடி குடு.. கேக்கிற மாதிரி இருக்கா இல்லியான்னு நான் சொல்றேன்.”
சிரித்தாள்.
“எனக்காக ஒரு தரம் பாடேன்.. பாடுவியா?”
“ம்ம்.. கண்டிப்பா பாடறேன்… அப்புறம் ஏன் கேட்டேன்னு நீங்க தான் அழுவீங்க”
“ஹ ஹ ஹா.. நீ பாடு. கண்ணீர் விடாம இருக்க ட்ரை பண்றேன்”
“பச்… இது தேவ இல்லாத ரிஸ்க் மூர்த்தி சார்!” கலகலவென சிரித்தாள்.
“ஹ ஹ ஹா… நீ எஸ்கேப் ஆக ட்ரை பண்றன்னு தோணுது!”
“சரி பாடுறேன். கண்ணீர் மட்டும் விட்டிங்க.. அப்புறம் நான் சொல்ற பேச்ச கேக்கணும்.. ஓகேன்னா சொல்லுங்க?”
“சரி ஒத்துக்கிறேன். நீ பாடுறத கேட்டு நான் கண்ணீர் விட்டா.. நீ சொல்லற ஒரு விஷயத்தைக் கண்டிப்பா கேப்பேன்! நீ சீக்கிரம் ஒரு பாட்ட பாட ரெடி ஆகு! ஒரு நல்ல நாளா பார்த்துப் பாடு!”
புன்னகை மாறாமல் பேச்சு நீண்டது. பேச்சு.. பாடல்களைச் சுற்றியே வந்தது.
“‘பூவே பூச்சூடவா..’ன்னு ஒரு பாட்டு.. கேட்டு இருக்கீங்களா?”
“இம்ம்… கேட்டிருக்கேன். நல்லா இருக்கும். பாட்டி பேத்தி ரிலேஷன்ஷிப் பத்தின பாட்டு தானே..”
“ஆமா ஆமா… அதே தான்! அத கேட்டா என் தாத்தா பாட்டி தானே நினைப்பு வரணும்.. எனக்கு நீங்க தான் மூர்த்தி சார் நினைவுக்கு வரீங்க!” என்றாள்.
“அத கேட்டா.. நானா நினைவுக்கு வரேன்? ஏன் மா?”
நீண்ட மௌனம். அலை ஓசையை உள்வாங்கிக் கொண்டிருந்தாள். தொண்டையை அடைத்தது. ‘இதை சொல்ல தானே வந்தாய்.. சொல்லிவிடு’ என்றது மனது. நீண்ட மூச்சு காற்று வெளி வந்தது அவளிடமிருந்து.
“சாக்கடைக்குள்ள புழுவா மிதந்தேன் மூர்த்தி சார். ஒருத்தனை நம்பி எவ்வளவு கேவலமா ஏமாந்திருக்கேன். உங்கள பார்த்தேனே அதுக்கு கொஞ்ச நாள் முன்னால தான் எனக்குமே சந்தேகம் வந்துது. அவனுங்க எல்லாம் என்னைத் துடிக்க வச்ச போது கூட வலிக்கத் தான் செஞ்சுது. ஆனா… பணத்துக்காக நான்.. என்னை…”
“வேண்டாம் துளசி..”
“கூசுது மூர்த்தி சார். இன்னுமே என் மனசும் உடம்பும் ரொம்ப கூசுது! பணத்துக்காகத் தான் என்னை அப்படி எல்லாம்… பச்! உண்மை தெரிஞ்சதும் உயிரோட செத்தே போய்டேன், மூர்த்தி சார். என் உடம்பே எனக்கு பிடிக்கல. இந்த சதைய எல்லாம் கிழிச்சு எடுக்கணும்னு போல தோணிச்சு! இப்போவும் தோணுது! என்னை அப்படி ஒரு சாக்கடையில தள்ளினவன என் கையாலேயே நொறுக்கி.. கிழிக்கணும்னு ஒரு வெறி. அவன் இடுப்ப ஒடச்ச பிறகு தான் கோபம் அடங்கிச்சு!”
மீண்டும் மௌனம். இத்தனை நாள் இவள் சிரித்தது எல்லாம்? மறக்கவில்லையா?
“நான் என்ன புண்ணியம் பண்ணினேனோ தெரியல. சாக்கடையில இருந்த என்னை காப்பாத்த தெய்வம் மனுஷ ரூபத்தில வந்திருக்கு!”
“போதும் துளசி. நிறுத்து! இது தான் கடைசி! இனி இந்த மாதிரி பேசக் கூடாது. பழசை நீ நினைச்சு அதுல வாழத் தான் நான் யோசிச்சு யோசிச்சு உன்ன பார்த்துக்கிறேனா? வெளில வா… உலகத்த பாரு! இப்போ இந்த நிமிஷம் தான் உண்மை.. அத பாழாக்காத! புரியுதா? ஆமா அந்த இடமே சாக்கடை தான்! ஆனா நீ… நீ துளசி! நீ அழுக்காகவே முடியாது! புரியுதா?”
“புரியுது மூர்த்தி சார்!” என்றாள்.
“செய்யாத தப்புக்கு நீ தண்டனை அனுபவிக்காத துளசி. புரியுதா?”
“ம்ம்..புரியுது மூர்த்தி சார்”
“நீ தண்ணில வாழற செடிய பார்த்திருக்கியா? அது இலை மேல ஒரு மெழுகு மாதிரி ஒரு கோட்டிங் இருக்கும்… தண்ணில அந்த இலையை முக்கி எடுத்தாலும் அதுல தண்ணி படாது. நீயும் அப்படி தான்! சுத்தமானவ! உன்ன நீயே என்னைக்கு கேவலமா பார்க்கறியோ அன்னைக்கு அந்த மெழுகு கரைஞ்சு போயிடும்! நீ சுத்தம்… உன் மேல களங்கம் இல்ல… அத நம்பு! தலை நிமிர்ந்து நில்லு துளசி!” என்றான் ஆவேசமாய்.
“ம்ம்..”
உடைந்த குரலில் அவனே மீண்டும்.. “நல்லா தானே மா இருந்த.. இப்போ ஏன் துளசி மா இப்படி எல்லாம் பேசற? அழிச்சிடு! கடல் மண்ணுல எழுதின எழுத்தா நினைச்சு அந்த நினைவுகள அழிச்சிடு!” என்றான்.
“தினமும் குளிக்கும் போது, காயம் விட்டு போன தழும்பெல்லாம் கண்ணுல படுதே.. பழசை நினைவு படுத்துது மூர்த்தி சார். அழிக்க எல்லாம் முடியாது மூர்த்தி சார். மறக்க முடியும்னு தோணலை.”
“பச்! துளசி!?”
சம்பந்தமே இல்லாமல்
“நான் ஒன்னு சொல்லட்டா மூர்த்தி சார்? கோபப்படாம கேப்பீங்களா?”
ஏதோ வில்லங்கமாக பேச போகிறாளா? உஷாரானான்.
“கோபம் வராத விஷயமா சொல்லு”
“ராட்னியோட நான் எங்கேயும் போகல. அவன் எனக்கு ஃப்ரெண்டு மட்டும் தான் மூர்த்தி சார்.
எனக்கு நீங்கனா கொள்ளை பிரியம் மூர்த்தி சார். முதல் முதலா உங்களைப் பார்த்த அன்னைக்கே பிடிச்சுது. பொய் சொல்ல விரும்பல. இந்த அஞ்சு நாள் உங்களுக்கு என்ன ஆச்சோன்னு ரொம்ப துடிச்சிட்டேன். உங்கள எப்போ பார்ப்பேன்னு ரொம்பவே ஏங்கிப் போனேன். காதல் எல்லாம் இல்ல மூர்த்தி சார். அது வரவும் வராது. இப்போ மாதிரியே உங்க கூடவே இருக்கணும்னு மனசார ஆசை தான்… ஆனா அது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லனு எனக்கு தெரியும் மூர்த்தி சார்.
உங்க மனசு தெரியாம இல்ல மூர்த்தி சார். அதுல வாழற தகுதி எனக்கு இல்ல மூர்த்தி சார்.
ஒரு மனைவியா.. ரதி மேடம் தான் உங்களுக்கு எல்லா விதத்திலும் பொருத்தம் மூர்த்தி சார், எனக்கு அந்த இடத்துக்கான தகுதியும் இல்ல… அந்த தகுதி வர போறதும் இல்ல. தாலிய வாங்கினாலும் என்னை என்னால சாக்கடை புழுவா தான் பார்க்க முடியும். உங்க மனைவிங்கற புனிதமான ஸ்தானத்துக்கு வரவே முடியாது. நான் உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமான அவங்கள கல்யாணம் பண்ணிகிட்டு பிள்ளையும் குட்டியுமா சந்தோஷமா இருக்கணும். நீங்க என்ன சொன்னாலும் நான் மறுத்துப் பேசினது இல்ல.. இந்த தரம் நான் பேசியிருக்கேன். பதில் பேசாதீங்க மூர்த்தி சார். யோசிச்சு உங்க வாழ்க்கைக்கு நல்ல முடிவா எடுங்க.” நா தழுதழுக்க… தொண்டை அடைக்கச் சொல்ல நினைத்து வந்ததை.. தணலாய் அவன் தலையில் கொட்டி விட்டாள். (Ultram)
அவன் முறைக்க…
அவள் புன்னகைத்தாள். எதிரில் இருப்பவனுக்காக.. வலிக்க வலிக்க சிந்திய புன்னகை அது. “உங்க புண்ணியத்தில சந்தோஷமா இருக்கேன் மூர்த்தி சார். உங்க சந்தோஷமும் முக்கியம் இல்லையா? பதில் சொல்லிடாதீங்க மூர்த்தி சார்.”
‘நீ தானே என் சந்தோஷம்… உனக்கு என் மனம் புரியவே புரியாதா?’ அவனும் அதே வலியோடு புன்னகைத்தான்.
கைகள் இரண்டும் மடித்த கால்களை நெஞ்சோடு கட்டிக் கொண்டிருக்க… இமை சிமிட்டாமல் கடலை தான் வெறித்தாள்.
“கண்களும் ஓய்ந்தது..
ஜீவனும் தேய்ந்தது..
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்..
இந்த கண்ணீரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்..” அலைகளைப் பார்த்துக்கொண்டே கண்ணில் நீர் வழியப் பாடினாள்.
ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் ஆயிரம் நன்றிகள் அடக்கம்.
அவனும் அவள் பாடல் கேட்டு எவ்வளவோ முயன்றான்… கண்ணீர் வராமல் இருக்க..