செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 23_1
மூர்த்தியிடம் எதையும் மறைத்து துளசிக்கு பழக்கமில்லை. அவள் எதையாவது மனதில் போட்டுப் புதைத்திருக்கிறாள் என்றாலே கண்டு கொள்வான்.
“துளசி மா.. நம்ம அக்ரிமென்ட் நினைவிருக்கா…” என்று மெல்ல ஆரம்பித்து மனதிலுள்ளதைக் கண்டு கொள்வான்.
இன்றைய நிலையில் துளசியின் பலம் பலவீனம் அனைத்துமே மூர்த்தி என்ற மனிதன் தான். மூர்த்தியின் ஒற்றை ‘துளசி மா..’ போதும் அவள் அவனிடம் சரணடைய. மூர்த்தியின்றி அவள் அணுவும் அசையாது என்ற நிலையில் ராட்னி இங்கிலாந்து கூப்பிட்டதும் எப்படி அந்த வேண்டுகோளுக்கு, ‘யோசிக்கணும் ராட். மூர்த்தி சார் கிட்ட பேசிட்டு தான் முடிவு எடுக்கணும் என்றாள்’ என்று இன்றும் அவளுக்குப் புரியவில்லை.
அந்த வார இறுதியில் மூர்த்தியின் முகம் பார்த்துப் பேசக் கூட முடியவில்லை. அவன் கேட்டும் விட்டான், “எதையோ போட்டு குழப்பிக்கிற. என்ன விஷயம் துளசி?” என்று.
என்னவென்று கூறுவாள்? உன்னை விட்டு ஓடிப் போக வாய்ப்பு கிடைத்தது என்றா? அவளால் போகத் தான் முடியுமா? ஒருவனோடு ஓடிப் போனதில் விளைவை அனுபவித்தவள் ஆகிற்றே.
“ஆமா மூர்த்தி சார். கொஞ்சம் குழப்பம் தான். என்ன பண்றதுன்னு தெரியலை மூர்த்தி சார். ஆனா இப்போ அது என்னன்னு கேக்காதீங்க. கண்டிப்பா உங்களுக்கு சொல்லாம நான் எந்த விஷயத்திலயும் எந்த ஒரு முடிவும் எடுக்கவே மாட்டேன்.” என்று அவனிடம் கூறினாலும்.. அது அவள் மனதுக்கு அவள் கூறிக் கொண்ட ஆறுதல்.
இது நடந்து மாதம் மூன்று ஓடிவிட மீண்டும் ஒரு முறை ரிஷி வந்தான்.. விடுதிக்கு! அவன் பேசிய விதத்திற்கு மன்னிப்பு கேட்டான். ராஜன் உடல் நிலை மோசம் என்றான். வீட்டிற்கு ஒரு முறை வரக் கோரினான்.
“இப்போ காலேஜ் இருக்கு.. வரமுடியாது. இயர் எண்ட-ல பார்க்கலாம்” என்று தட்டிவிட்டுச் சென்றாள். அவள் அறியவில்லை அவன் வருட முடிவில் வந்து நிற்பான் என்று. பாம்பு காலைச் சுற்ற முடிவு செய்தபின் யார் அதைத் தடுப்பது?
ராட்னியிடம் அதிக நாட்கள் இல்லை என்பதால், துளசியின் முடிவைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினான். அவள் முடிவைப் பொறுத்துத் தான் அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியும். அவள் அங்கு வருவாளா? இல்லை இவன் இங்கு இடம் பெயர வேண்டுமா? இதற்கு நடுவின் காதலை உரைக்க வேண்டும். அவள் மறுக்க மாட்டாள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை அவனுக்கு.
கல்லூரியில், தனிமையில் துளசியைப் பார்த்துக் கேட்டான், அவள் எடுத்திருக்கும் முடிவை.
[the_ad id=”6605″]
“இப்போவே என்னால முடிவு எல்லாம் எடுக்க முடியல ராட். அதுக்கு தான் ஒரு வருஷம் இருக்கே. மூர்த்தி சார் முகம் பார்த்துப் பேசக் கூட தைரியம் இல்ல… அப்புறம் எங்க இருந்து.. பேசி ஒரு முடிவு எடுக்க?” எனவும்.. மனதைத் திறக்க முடிவெடுத்தான் எட்வர்ட் ராட்னி.
“டுல்சி… இந்த சட்டர்டே என் கிராண்ட்பா வீட்டுக்கு வரியா… எம்.பி.க்கு கேஸட் ரெக்கார்ட் பண்ணலாம்.” அப்படியே அவளிடம் அவன் வீட்டில், எங்கு அவளைக் கண்டு, காதல் வலையில் விழுந்து இந்த முடிவை எடுத்தானோ… அதே மஞ்சள் ரோஜா தோட்டத்தில் வைத்தே அவன் காதலைக் கூறிவிட எண்ணம் கொண்டான். அவளுக்காக அவன் தோட்டத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தைப் பார்த்தால் கண்டிப்பாக அவள் அங்கிருந்து நகரக் கூட மாட்டாள். மஞ்சள் நிறத்தில் பூக்கும் ஒரு செடியையும் விட்டானில்லை, சூரிய காந்தி முதல் சாமந்தி வரை! வீட்டின் முன்னிருந்த ஏக்கர் நிலப் பரப்பும் இன்று வெறும் பச்சையும் மஞ்சளுமாக கண்ணை பறித்தது, எல்லாம் அவள் பார்த்து பூரித்தாள் என்றதற்காகவே..
“சனிக்கிழமையா? முடியவே முடியாது. நானே வாரத்துல ஒரு நாள் தான் அவர் கூட இருக்க முடியுது… அன்னைக்குப் போய் கூப்பிடுற? சண்டே பார்ப்போம்” என்றாள்.
“அவர்.. யார் டுல்சி?” அவனுக்கு தெரியாமல் அது யாரோ?
“அவர்ன்னா எனக்கு ஒரே ஒருத்தர் தான். என்னோடைய மூர்த்தி சார்” என்றாள் முகம் பளபளக்க.
அவளிடம் தன் விருப்பத்தை உரைக்கவேண்டும் என்றபின் தான் கவனிக்க ஆரம்பித்தான் அவள் ‘மூர்த்தி சார்’ புராணத்தை.
“எல்லாட்டுக்கும் மூர்ட்டி சார் டானா டுல்சி? அவர் உன் கார்டியன்.. தாட்ஸ் ஆல்! ஏன் எல்லாட்டுக்கும் பெர்மிஷன் வாங்கணுமா? ஐ டோண்ட் அண்டர்ஸ்டேண்ட்..”
அவனை விசித்திர பிராணியைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்.
“நீ உங்க வீட்டுல இருக்கன்னு வை. உன் அம்மா அப்பாட்ட சொல்லாம வெளியில போவியா? உன் இஷ்டத்துக்கு முடிவு எடுப்பியா? எனக்கு எல்லாமே அவர் தானே… சோ நான் அவர் கிட்டத் தானே எதுக்கும் போய் நிக்கணும். இதில என்ன உனக்கு புரியல?”
பாவம் அவனுக்கு உண்மையிலேயே புரியவில்லை. ‘எல்லாமே என்றால்?’ வினோதமாக தோன்றியது.
“நோ.. என் வீட்டுல எல்லாம் என் இஷ்டம் டான். மை லைஃப் மை டெசிஷன்”
“நான் அப்படி இல்லபா.. எனக்கு மூர்த்தி சார் முடிவு ரொம்ப முக்கியம். மூர்த்தி சார், எதனாலும் என் நல்லதுக்குத் தான் சொல்லுவார்.. செய்வார். அவர் பேச்ச மீற, என்னால முடியாதுப்பா.”
மூச்சுக்கு முந்நூறு முறை மூர்த்தியின் நாமம் உரைக்க என்ன அவசியம் என்றே புரியவில்லை. இருந்தும் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.
“வாட்டவர் சூட்ஸ் யூ” என்றுவிட்டான்.
“ஓக்கே.. சண்டே நான் வந்து உன்னையும் நிலாவையும் கூப்பிட்டுக்கும். மூன் கிட்ட சொல்லிடு டுல்சி.. அவ ஆண்ட் வீட்டுக்கு போயிடாம!”
நான்கு நாட்களில் ராட்னியில் இருப்பிடத்தில் நாடா ஒலிப்பதிவு இருக்க.. நிலாவும் துளசியும்… என்ன பாட்டை படிப்பதென்று முடிவு செய்து, சினிமா பாடல் புத்தகத்தகத்தையும் கல்லூரியிலிருந்து வரும் வழியில் வாங்கி வைத்தாயிற்று.
“இன்னைக்கு நைட் நாம ப்ராக்டீஸ் பண்ணலாம்.. இப்போ எனக்கு துணி துவைக்க சோப் இல்ல. வாங்க போகணும். உனக்கு எதுவும் வேணுமா?” நிலாவிடம் ஒரு குட்டி பட்டியலை வாங்கிக்கொண்டு, துளசி சுமார் நான்கு மணி அளவில் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
சாலை காலியாக இருக்கவே வேகம் எடுத்தாள். மூளை எதையோ அசைபோட… வாய் பாடல் ஒன்றை முணுமுணுக்க.. ஜோராய் காற்று முகத்தில் அடிக்க சைக்கிள் அவள் காலில் பறந்தது.
அவள் எதிரே வந்த நீல நிற கார் அவளை உரசிக் கொண்டு செல்ல.. பெண் தடுமாற.. கைக்கிள் கல்லில் இடறிச் சரிந்தது.
போன வேகத்திற்கு, சைக்கிளும் அவளும் ஒரு பக்கமாய் தேய்த்துக்கொண்டு போய் விழ, பாதிப்பு அதிகம். வலது கையை அசைக்க முடியவில்லை. கால் முட்டி என்ன ஆனதோ? உடல் முழுவதும் நடுங்க… எழுந்து நிற்க முடியவில்லை. கணுக்கால் பிசகிவிட்டிருக்க.. நின்றால் கால் உடைந்து விடும் போல் வலி.
துளசி விழுந்த அடுத்த நொடி.. கார் க்ரீச்சிட்டு நின்றது. ரிவர்சில் வந்த கார் அவளருகில் நிற்க.. கீழே கிடந்தவள் முன் ஒரு கை நீள.. தலை நிமிர்த்திப் பார்த்தாள்… ராட்னி நின்றிருந்தான்.
[the_ad id=”6605″]
“தாங்க்ஸ்… நானே எழுந்துப்பேன். அடி எல்லாம் இல்லை” வந்த அழுகையை அடக்கிக் கொண்டு ஒரு வழியாய் எழுந்து நின்றாள். வலி உயிர் போக.. கை கால் உதறல் எடுக்க, அவனிடம் காட்டிக்கொள்ளாமல் இருக்க வெகுவாய் பாடுபட வேண்டியதாய் போயிற்று.
“கையில ப்ளட் வருடு டுள்சி… வா, கார்ல்ல உன்ன உன் ஹாஸ்டல்ல ட்ராப் பண்றேன்..” என்றான். கூடவே அவன் கூட்டாளிகள்.
அவளை இடிக்க வருவது போல் உரசி சென்ற அதே நீல நிற வண்டியைத் தான் ராட்னி காட்டினான். இது கண்டிப்பாக பிரீமியர் பத்மினி இல்லை. ஆனால் அவளுக்கு பத்மினிக்கும் மாருதி 800-கும், இருந்த வலியில் வித்திசாயசம் தெரியவில்லை. நீல நிறமும்.. அந்த கார் அவளைக் கூட்டிச் சென்ற இடங்களும் தான் மெல்லிய விரிசலாய் உள்ளே உருவானது.
“இதுவும் உன் காரா ராட்?”
“என் ஃப்ரெண்டுது தான் டுல்சி. நோ ப்ராப்ளம்.. வா. கார்ல ஏறு”
“இல்ல வேண்டாம்.. இது எல்லாம் ஒன்னுமே இல்ல. எனக்கு கிழ விழறது.. அடி படறது.. ரத்தம் சிந்தறது… எல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி. எனக்கு வலிக்கக் கூட இல்ல. நான் பார்த்துக்கிறேன்..” என்று அவன் உதவியை நிராகரித்து சைக்கிளை எடுத்தால் அதன் ஸ்போக்ஸ் எல்லாம் நாசம்.. சக்கரம் வளைந்து போயிருக்க. ஓட்ட முடியாது.
“எங்க போற? யுவர் ஹாஸ்டல் இஸ் தாட் வே டுள்சி..”
“சைக்கிள் ரிப்பேர் ஷாப் தெரு முக்குல இருக்கு..”
“ஓகே.. ஃபைன். நான் ஷாப்புக்கு உன் பை-சைக்கிலை கூட்டிட்டு வரும்..”
எப்படியோ சைக்கிளைப் பிடித்துக்கொண்டே நொண்டி நொண்டி கடை வரை வந்தாயிற்று. வலி தாள முடியவில்லை. இவன் போனால் போதும் போல் தோன்றியது. எவ்வளவு நேரம் தான் வலியே இல்லாதது போல் நடிப்பது? எப்பொழுதும் போல் அவள் மனம் ‘அவனை’ தான் தேடியது. மூர்த்தியிடம் வேஷம் போட வேண்டாம். அவள் அவளாக இருக்கலாம்.
“நீ போ ராட்னி.. நான் பார்த்துக்கிறேன்.. சின்ன காயம் தான். உன் ஃப்ரெண்ட்ஸ் அங்க உனக்காக காத்திருப்பாங்க..” அவன் என்ன கேட்டும் அடுத்த எந்த உதவியையும் ஏற்கவில்லை. கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் அனுப்பி வைத்தாள்.
கர்மமே கண்ணாய் வேலை பார்த்துக் கொண்டிருந்த கடைக்காரனிடம், “இத கொஞ்சம் பிக்ஸ் பண்ணி தாங்களேன்” என்று அங்கிருந்த ஸ்டூல் ஒன்றில் அமர்ந்து கொண்டாள்.
கடைகாரன் அதை ஆராய..“எவ்வளவு ஆகும்?” என்றவளைப் பார்த்தவன்,
“என்னம்மா.. கை எல்லாம் இரத்தம். கழுவி மருந்து போடுமா..” இலவச அறிவுரையோடு சைக்கிள் ரிப்பேருக்கு 20ரூபாய் கேட்க.. அவள் விழித்தாள்.
“என்னங்க இவ்வளவா?”
“வீல பாருமா… கம்மியா தான் கேட்ருக்கேன்… இருபது குடுக்கிறியா சரி பண்ணி தரேன்… இல்லியா வேற எங்கணா பாத்துக்கமா..”
சோப்புக்கும், நோட்டு புத்தகத்துக்கும் கொண்டு வந்த சில்லறை மட்டும் தான் அவளிடம்.
[the_ad id=”6605″]
விடுதிக்குச் செல்லலாம் என்று நினைத்து எழுந்து நின்றால் கால் நடுங்கியது.. ஏற்கனவே பல முறை அடிவாங்கிய கணுக்கால் தெம்பை இழந்திருந்தது.
நேரம் பார்த்தாள். “இங்க ஃபோன் இருக்காங்க?”
“பக்கத்து மள்ளிக கடைல இருக்குமா..” கடையை ஒட்டியிருந்த அடுத்த கடையை கை காட்டினான்.
கடைக்குச் சென்றவள் நேரே அழைத்தது மூர்த்தியைத் தான். அவன் கல்லூரியில் இருப்பான் என்று அவள் அறிந்திருக்க அவனுக்கு தொலைப்பேசியில் அழைத்தாள்.
ஐந்தே நிமிடத்தில் வந்து நின்றான். அது வரை இருந்த தைரியம் எங்குச் சென்றதோ தெரியவில்லை.. அவனைப் பார்த்ததும் உதடு தன்னால் துருத்த… கண் கலங்கியது.
பார்த்துவிட்டான்… “துளசி…?” குரலில் கலக்கம்.
பேச கூட இல்லை.. பேச முடியவில்லை. உதடு துடிக்க.. மடித்து வைத்திருந்த கையை அசைக்க முடியாமல் காட்டி நின்றாள்.
“அச்சோ.. ஆண்டவா.. என்ன துளசி மா…? எப்படி..?” என்று கேட்டுக்கொண்டே அவள் கை பிடித்துப் பார்க்க.. அவள் தேம்ப ஆரம்பித்துவிட்டாள்.
“ஆட்டாதீங்க மூர்த்தி சார். வலி தாங்க முடியல. கை எரியுது. கால் முட்டி வலிக்குது! ஆங்கிள் ஒடைஞ்சிடுச்சு போல நிக்க கூட முடியல” தேம்பினாள்.
தோழர்களை பேசி அனுப்பிவைத்துவிட்டுத் திரும்பி வந்தவன் கண்ணில் எல்லாம் பட்டது. மூர்த்தி துளசியை அவசியத்திற்கு அதிகமாக நெருங்கி நிற்கவில்லை.. ஆனால் இருவரின் நெருக்கம் இடறியது.
“ரொம்ப வலிக்குதா மா.. அழாத துளசி.. வீங்குதே கை. டாக்டரை பார்க்கலாம்..” அவன் கொஞ்சல் பேச்சும்.. அவள் குழந்தையாய் மாறியதும்.. கேட்கவில்லை என்றாலும் பார்க்க முடிந்தது. அவன் சாரும் இல்லை.. அவள் மாணவியும் இல்லை என்பது யாரும் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கவில்லை.
“என் காலும்…” உதடு பிதுக்கினாள். புடவை கிழிந்திருந்தது. “என்ன துளசி.. பச். பார்த்து ஓட்ட மாட்டியா? ஆண்டவா.. நடந்திடுவியா?”
[the_ad id=”6605″]
விழுந்து கிடந்த போதும் இவனிடம் உதவியை எதிர்பார்க்கவில்லை. வலியே இல்லை என்றவள்.. மூர்த்தி கையை விட்டாளில்லை. விசும்பலையும் நிறுத்தினாள் இல்லை.
பார்த்த ராட்னி நின்ற இடத்தில் நின்றுவிட்டான். ராட்னிக்கும் தெரியும் தான் மூர்த்தி அவள் உறவென்று.. ஆனால் என்ன உறவு என்று முதல் முறை யோசிக்க தோன்றியது.
முழங்கைக்குக் கீழே தோல் கிழிந்து இரத்தம் கசிந்து கொண்டிருக்க. அங்கிருந்த கடையில் நீர் வாங்கி கழுவி விட்டு, கைகுட்டையால் அவள் முகம் துடைத்து, “க்ளீனிக் போலாம் வா..” என்று அவன் பைக் அருகில் அழைத்துச் சென்றான்.
“சைக்கிள் மூர்த்தி சார்..”
“பச்… ரொம்ப அவசியம் இப்போ… நான் பார்த்துக்கிறேன். நீ ஏறு வண்டியில”
அவர்கள் பைக்கில் கிளம்பவும்.. எட்வர்ட் ராட்னி இதழோரம் வெற்று புன்னகை.