செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 23_2
மருத்துவமனை அழைத்துச் சென்று, மருந்து பையோடு விடுதியில் கொண்டு விட.. ஆட்டோவிலிருந்து இறங்கியவள் அவன் சட்டை ஓரத்தைப் பிடித்துக் கொண்டு சிணுங்க ஆரம்பித்தாள்.
“என்ன மா..?”
“என்னை விட்டு போகாதீங்க..” சிணுங்கினாள்.
“இங்க நான் இருக்க முடியாதே… நாலு நாளாவது காலேஜ் வராத. ரெஸ்ட் எடு. டெய்லி சாயங்காலம் நான் வந்து பாக்கறேன். சரியா?”
“மூர்த்தி சார்..” வலியில் சிணுங்கினாள்.
“என்ன துளசி மா..”
“தெரியல மூர்த்தி சார் எப்படியோ இருக்கு.. ரொம்ப வலிக்குது. பயமா வருது. என்னை விட்டு போகாதீங்க..”
“பயப்பட ஒண்ணும் இல்ல துளசி. ஃப்ராக்சர் இல்ல கைலயும் கால்லையும் ஸ்ப்ரெயின் தான். ஒரு பத்து நாள் வலி இருக்க தான் செய்யும். டாக்டர் சொன்னது கேட்டியா? நாலு நாள் கைய கால அசைக்காத. நிலாட்ட ஹெல்ப் கேளு. காயத்தில தண்ணி படாம பார்த்துக்கோ.. மாத்திர போட்டுட்டு படு… எதுனாலும் மாமி ஃபோன் நம்பருக்கு கால் போடு. விஷயத்த அவங்கட்ட சொன்னாலும் பிரச்சினை இல்ல. எந்த டைம்னாலும் போன் போடு. கோவிச்சுக்க மாட்டாங்க. பத்திரமா இருந்துக்கோ துளசி மா..” ஆயிரம் பத்திரங்கள் சொல்லி உள்ளே போகச் சொன்னான்.
அவள் நகர்ந்தாள் இல்லை. பாவம் போல் பார்த்து நின்றாள்.
“அப்படி பாக்காத துளசி..”
“ம்ம்ம்..” சட்டை நுனியைத் திருவி கொண்டே நிற்க
“பச்… போ.. போய் ரெஸ்ட் எடு. சின்ன காயம் தான். சரி ஆகிடும்” நிலாவை வரச்சொல்லி, அவளோடு அனுப்பிவைத்தான்.
[the_ad id=”6605″]
ஊன்றுகோலோடு நிலா துணையும் இருக்க.. நொண்டிக் கொண்டே அவள் செல்ல.. அவனுக்கும் அவளை விட்டுச் செல்ல மனமில்லை.
அடுத்த நாள் விடியற்காலை காகம் வரும் முன்னே மாமி வீட்டிற்கு அழைப்பு வந்தது. “டேய் அம்பி… உன்ன தான் டா மூர்த்தி… உன்ன தான் கேக்கறா பாரு.. வந்து பேசிண்டு போ..”. காலையிலேயே எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தவர் மூர்த்தியை அழைத்தார். விடுதியிலிருந்து வார்டன் என்றதுமே பதட்டம் ஒட்டி கொண்டது.
வார்டன் முன் நிற்க, அவர் துளசிக்கு “ஹை ஃபீவர்” என்றார்.
“நைட் அவளும் தூங்கல… அவ ரூம்-மேட்டையும் தூங்க விடல.. ஒரே அனத்தல்” என்றார்.
இது வரை அவனும் ‘இவ்வளவு தானா’ என்று தான் கேட்டு நின்றான்.
“நைட் பூரா ஒரே அனத்தல். கிட்ட போக முடியல. தூக்க மாத்திரை குடுக்க வேண்டியதா போச்சு. ஜுரம் ஓவர் ஆனதால கூட இருக்கலாம். எதுவா இருந்தாலும் இங்க வச்சுக்க முடியாது. கூட்டிட்டு போயிடுங்க. சரியானதும் வந்தா போதும்”
மூர்த்தி பார்வையாளர் அறையில் காத்திருக்க.. நிலா துளசியின் பெட்டியோடே வந்தாள்.
“சார்..” என்று யோசனையோடே ஆரம்பித்தவள் “இப்படி எல்லாம் ஆனதே இல்ல சார். தூக்கத்தில என்னன்னமோ சொன்னா சார். ‘கார்ல ஏற மாட்டேன்.. நீல கார் வேண்டாம்.. வர மாட்டேன்… விடு.. வலிக்கும்.. காப்பாத்துங்க மூர்த்தி சார்.. போகாதீங்க மூர்த்தி சார்’ன்னு இன்னும் என்னன்னமோ.. சொல்லிடே இருந்தா.. தூக்கத்தல ஒரே அழுக. என்னால கிட்ட போகவே முடியல. அடிக்கிறா சார். ஒரே பயமா போச்சு. உங்க பேர தான் சொல்லிட்டே இருந்தா..”
‘மீண்டுமா? இதற்கு முடிவே இல்லையா?’ முகத்தில் ஒன்றும் காட்டி கொள்ளவில்லை. “ஹை ஃபீவர் இருந்தனால இருக்கும். பார்த்துகிட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ் வெண்ணிலா. கவல படற மாதிரி ஒன்னும் இருக்காது. நான் பார்த்துக்கிறேன்” வெளி வார்த்தையாக கூறினாலும் உள்ளுக்குள் பதட்டம் தொற்றிக்கொண்டது.
நேற்று கூறிய ‘பயம்’? என்னத்த பாத்து பயந்தா? அவள் கூறினால் உண்டு!
விடுதியில் வேலை செய்யும் பெண் கைதாங்கலாய் துளசியைக் கூட்டிவர.. துவண்டு போயிருந்தாள். நேற்று பார்த்த பெண்ணா இவள்? நிமிர்ந்து நிற்கவும் முடியவில்லை. தலை கலைந்து.. உடை நலுங்கி.. கந்தலாய் வந்து கொண்டிருந்தாள்.
“துளசி மா..” சத்தம் வருவேனா என்றது. அன்று முழுவதும் மருத்துவமனையில் கண் திறவாது அவள் கிடக்க.. படுத்து கிடந்தவள் மேலிருந்து கண் எடுத்தானில்லை மூர்த்தி. ஒரே ஒரு நாளில் அவன் ஓவியம் உருக்குலைந்து போயிருந்தது.
அவள் விட்டுச் சென்ற அதே வீடு.. எப்படி விட்டுச் சென்றாளோ அப்படியே அவளுக்காக காத்து நின்றது.
கைதாங்கலாக அழைத்து வந்தான். எதையும் பார்க்கும் நிலையில்லை அவள். நிற்கவும் முடியாமல்.. நடக்கவும் முடியாமல் ஆட்டோவிலிருந்து இறங்கி கேட்டை தாண்டிய அடுத்த நொடி கையிலேந்தியிருந்தான்.
அடுத்த மூன்று நாட்கள் ஜுரம் குறையவும் இல்லை, கண் திறக்கவும் இல்லை, அனத்தல் நிற்கவும் இல்லை. ‘மூர்த்தி சார்… மூர்த்தி சார்.. காப்பாதுங்க’ என்று அழுபவளை விட்டு எங்குச் செல்லுவான்?
அவன் கட்டிலின் தான் கிடத்தியிருந்தான். அருகிலேயே அமர்ந்திருந்தவன், கை பிடித்துக் கூறிக்கொண்டே இருந்தான்… “உன்னை விட்டு எங்கேயும் போகல துளசி மா.. பாரு இங்க தான், உன் கூடவே இருக்கேன் பார்” என்று.
அரைத் தூக்கமும்.. விழிப்புமாகக் கிடந்தாலும் மார்பில் சாத்தி கஞ்சி ஊட்டி, மருந்தை நேரம் தவறாமல் கொடுத்து, கழிவறை வாசல் வரை தூக்கிச் சென்று சேவகம் செய்து, உடல் சூட்டை நீரால் தணித்தவனை உணர முடிந்தது.
மூன்று நாள் பின் “மூர்த்தி சார்..” வெளிவந்தது.
முகம் வாடி இருந்தாலும் கண் விழித்திருந்தாள். அருகிலேயே இருந்தான். தலையை வருடிக்கொண்டே.. “பயமுறுத்திட்டத் துளசி” என்றான்.
“ஒழுங்கா என்னை பார்த்துகிட்டீங்களா?” குட்டி பெண் சிரித்தாள்.
“ரெண்டு கண்ணு… ஒரு மூக்கு… ரெண்டு காது… ஒன்னரை கை.. ஒன்னரை கால்… பத்திரமா இருக்கா பார்த்துக்கோ..” மூக்கை பிடித்து ஆட்ட.. புன்னகைத்துக் கொண்டே மெல்ல எழுந்திருக்க முயல.. கையும் காலும் வலி பின்னியது.
“அப்போ மீதி அரை காலும்.. அரை கையும் போச்சா?”
[the_ad id=”6605″]
“நாலே நாலு நாள்.. சரியாகிடும். சரி இப்பொ எதுக்கு நெளியற? பாத்ரூம் போகணுமா?”
“ம்ம்..” நெளிந்தாள்.
அவன் என்றும் போல் துக்கிக் கொள்ளவும்.. “மூர்த்தி சார்…. நடக்குறேனே..” என்றாள்.
“ம்ம்… நடக்கலாம்.. நடக்கலாம்..” பாத்ரூம் உள்ளே இறக்கிவிட்டவன்.. “கதவு சாத்தி இருக்கட்டும்… உள்ள பூட்ட வேண்டாம்.” என்று கதவை சாத்திவிட்டு வெளியே கொல்லைப் புற படியில் சென்று அமர்ந்து கொண்டான். முட்டி மடிக்க முடியாது. இந்தியப் பாணி கழிவறை அது. அவளுக்காக ஏதேதோ புது உபகரணங்கள். மூன்று நாளாய் கனவு போல் நடந்தது எல்லாம் இன்று தான் மூளையை எட்டியது. எத்தனை சிரத்தை எடுத்து பார்த்துக்கொள்கிறான். எதற்குமே ஏங்கவிடாமல்.. தனிமை தெரியாமல்.. தேவை இது என்று உணருமுன்னே அனைத்தையும் ஒரு பொறுப்போடே, அளவில்லா அன்போடே நிறைவேற்றும் இவன் என்ன மனிதன்? நீண்ட மூச்சை தான் அவளால் விட முடிந்தது.
மெதுவாக சுவரை பிடித்து நொண்டிக்கொண்டே வாசலுக்கு வந்தாள். வெளியே அமர்ந்திருந்தான்.
“என் ஊஞ்சல் மூர்த்தி சார்.”
“ஆமா துளசி.. இங்க எல்லாமே உன்னது தான். உனக்காகவே காத்திருக்கு.”
இருவகை அர்த்தம் அதில் புதைந்திருக்க.. அவளுக்கு புரியாமலில்லை. அவளிடம் பதிலில்லை. “நிக்க முடியல மூர்த்தி சார். உங்க பக்கத்தில உக்காரட்டா..?”
“வா உள்ள போலாம்… உன்னால இங்க முட்டி மடிச்சு உக்கார முடியாது.”
நகராமல் அவள் சுவரைப் பிடித்து நிற்க… தூக்கிச் சென்றான்.
“சொல்லிட்டு தூக்குங்க மூர்த்தி சார்.. பயமா இருக்கு”
“கீழ போட மாட்டேன் துளசி”
“தெரியும் மூர்த்தி சார். என்னை துக்குறேன்னு நீங்க விழுந்திடாதீங்க..” அவனுக்கும் அதில் புதைந்திருந்த அர்த்தம் புரிந்தது.
“தனியா நிக்கறதுக்கு… உன் கூட சேர்ந்தே விழறத விரும்பறேன். ஆனா நம்பு… நானும் விழமாட்டேன். உன்னையும் கீழ போட மாட்டேன்.” என்றான் அவள் கண் பார்த்துக்கொண்டே…
எவ்வளவு நேரம் கண் பார்க்க…? ஆசை தீர இருவரும் பார்த்துக்கொண்டே தான் இருந்தார்கள். என்றும் இல்லாமல் இன்று அவன் கண் அவன் காதலை அப்பட்டமாகக் காட்டியது. அதில் தொலைந்து போக, அவள் மனம் விருப்பம் தெரிவித்தது. கையை அவன் கழுத்தைச் சுற்றி போட்டுக்கொள்ளத் துடித்தது. அசைக்க முடியாமல் போனது கை மட்டும் அல்ல அவளின் மனமும் தான். அவளின் இயலாமை அவளுக்கு தெரியாதா?
“பெட் வந்து ரொம்ப நேரமாச்சு மூர்த்தி சார்..”
பதில் பேசாமல் படுக்க வைத்து விட்டு அடுக்களை சென்றான். இருவரிடமும் ஒரு வித அமைதி.
வீட்டில் இருவர் மட்டுமே.. எவ்வளவு நேரம் அமைதி காக்க முடியும்? அவன் தான் இறங்கி வந்தான். என்றும் போல் வெந்நீரில் முகம், கழுத்தைத் துடைத்து.. தலை வாரிக் கொண்டே கேட்டான், குரலில் தயக்கம் தெரிந்தது.
“துளசி.. நீ வயசு பொண்ணு.. ஓரளவுக்குத் தான் என்னால உன்ன பார்த்துக்க முடியும். ஊர்ல இருந்து அக்காவ வர சொல்லட்டா? உனக்கு உதவியா இருப்பாங்க?”
அவள் பதில் பேசவில்லை. வேறு யாரேனும் வந்துவிட்டால்.. இவன் ஒதுங்கிவிடுவானே?
“என்ன துளசி? வர சொல்லட்டா?”
“ஏன் மூர்த்தி சார்… பாரமா தோன்றேனா?”
தலை வாரி முடிக்கவும் அவள் முன் வந்து நின்றான்.
“நீ வேணும்னே வம்பு பண்ற.. தெரியுதா? நான் பேசறது புரியாத மாதிரி பேசாத. உன்னால நிக்க முடியல. கைய அசைக்க முடியல. இன்னும் ஒரு வாரம் இப்படி தான் போக போகுது.
நீ வந்த அன்னைக்கு போட்டிருந்த அதே புடவையோட படுத்துகிடக்கற. உடம்பில தண்ணி காட்ட வேண்டாமா? துணி மாத்த வேண்டாமா? இதுக்கும் மேல என்னால ஒப்பன்னா பேச முடியாது. யோசிச்சு சொல்லு”
[the_ad id=”6605″]
“யோசிக்க ஒன்னும் இல்ல. யார் வந்தாலும் நீங்க சொன்ன எதுவும் செய்ய விட மாட்டேன். யோசிச்சு நீங்களே இதுக்கு ஒரு வழி கண்டுபிடிங்க. பாத்ரூம் பிரச்சனையை ஃபிக்ஸ் பண்ணின மாதிரி.”
அவன் அவளைப் பார்க்க.. அவளும் சளைக்காமல் அவனைத் தான் பார்த்தாள்.
“காதல் இல்லையாம்… ஆனா, ஒய்யாரமா கையில் படுத்துப்பாளாம்.. இவள தூக்கிட்டே வீடு முழுசும் சுத்தணுமாம். பொண்டாட்டி மாதிரி உக்காந்த இடத்தில இருந்தே கண்ண உருட்டி உருட்டி மிரட்டுவாளாம். கழுத்தில ஒரு தாலிய வாங்கிட்டு இந்த வேலையை செய்னா அதையும் வாங்கிக்க மாட்டாளாம். கேட்டா, வேற எவளையாவது நான் கல்யாணம் பண்ணிக்கணுமாம். வேற ஒருத்தி கழுத்தில தாலிய கட்ட விட்டுடுவாளாக்கும்? சும்மா மனுஷன் பொறுமையை சோதிச்சுகிட்டு!” அவள் காது கேட்கவே முனகிச் சென்றான்.
“மூர்த்தி சார்” அவள் விளிப்புக்கு நின்றவனை வெறுப்பேற்றினாள்.
“ரேடியோ-ல பாட்டு போடுவான் மூர்த்தி சார். கொஞ்சம் போட்டுட்டு போறது..” நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.
வானோலி பெட்டியை உயிர்பித்துவிட்டு ஒரு முறை அவளைத் திரும்பி பார்த்தவன், வெளியே சோஃப்பாவின் சென்று நன்றாய் சாய்ந்து அமர்ந்து கொண்டான். மனதில் உல்லாசம்.
“பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ..”
கைகள் இரண்டையும் தலைக்குப் பின் கோர்த்துக்கொண்டு.. பின்னியிருந்த கால்களை ஆட்டிக்கொண்டே கண் மூடி அமர்ந்திருந்தவன் உதட்டில் மந்தகாச புன்னகை. கொஞ்ச நாட்களாகவே அவன் மேல் முழுவதும் அவள் வாசம் தானே… அவள் பேச்சு அவனுக்கு ராகம் தான். அவள் பெயர் உச்சரிக்கும் இதய ஓசை தாளமே தான்… பாடல் வரிக்கு புது அர்த்தம் கொடுத்துக் கொண்டான்.
மூர்த்தி பேசி சென்றதையே அசை போட்டுக் கொண்டிருந்தவள் இதழோரம் கீற்றாய் ஆரம்பித்த புன்னகை, நீண்டு.. அதன் நீளம் அடங்காமல் போகவே.. பல்லுக்கிடையில் சிக்கிக்கொண்டு மென்மையாய் கடிபட்டது அந்த கீழ் உதடு.
வானொலி பெட்டி ஏற்கனவே பாதி பாடலை பாடி முடிந்திருக்க… மீதி பாடல், அதை கேட்டுக் கொண்டிருந்த இரு நெஞ்சங்களையும் உள்ளுக்குள் இழுத்தது.
“வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது…”