விக்ரம் என்ன செய்வது என்று புரியாமல் விஷாலியையும் அருணையும் மாறி மாறிப் பார்த்தபடிக் கதவருகிலேயே நின்றான்.
“அண்ணாஆ…”
விசும்பியபடியே விஷாலி விக்ரமைக் கட்டிக்கொண்டாள்.
“வி… விக்ரம்… நா… நா எதுவுமே பண்ணல…”
அருண் திக்கித் திணறித் தன் நிலையை விளக்க முயன்றான்.
“நீ எதுக்கு டா இவ ரூம்கு வந்த?”
விக்ரம் விஷாலியின் முதுகில் தடவிக் கொடுத்தபடியே அருணை விரோதமாகப் பார்த்துக் கேட்டான்.
“இல்ல விக்ரம், பால்கனில யாரோ இருந்தா மாதிரி இருந்துச்சு, என்னனு பார்க்க வந்தேன்…”
தன் ஆருயிர் நண்பனிடமே தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியிருப்பது அருணுக்கு என்னவோ போல் இருந்தது.
“விஷாலியோட ரூம் கதவு சாத்திதான இருந்துச்சு? நீ ஹால்ல படுத்திருந்த, உனக்கு எப்படி பால்கனில யாரோ இருந்தா மாதிரி தெரிஞ்சிருக்கும்?”
விக்ரம் நம்பிக்கையில்லாத குரலில் கேட்டான், அவனது பார்வை அருணின் கலைந்திருந்த சட்டையின் மீது சென்று மீண்டது.
அருண் என்ன சொல்வது என்று தெரியாமல் கூசிப் போனான்.
“இ- இவன் எப்ப உள்ள வந்தான்னே தெரியல அண்ணா… உடம்புல ஏதோ ஊர்ந்த மாதிரி இருந்துச்சு எழுந்து பார்த்தா…”
விஷாலி முடிக்காமல் மீண்டும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.
“வி- விக்ரம்… அவ பொய் சொல்றா… என்னை நம்பு… அவ… அவதான்…”
அருணும் திணறினான்.
“ஹே, என்னப்பா ஆச்சு? விஷாலி ஏன் அழுதுட்டு இருக்கா?”
கேட்டபடியே தேவி விக்ரமிற்குப் பின்னால் வந்து நின்றாள். விஷாலியையும் அருணின் முகத்தையும் அவனது நிலையையும் பார்த்தவளுக்கு விஷயம் ஓரளவுக்குப் புரிந்தது.
“விக்ரம், எங்கயோ தப்பு நடந்திருக்கு… நிதானமா என்ன ஆச்சுனு விசாரிப்போம்… முதல்ல எல்லாரும் ஹால்ல வந்து உக்-”
அவள் முடிக்கும் முன்பே விக்ரம் கோவமாகக் கத்தினான்,
“விசாரிக்க இது ஒன்னும் உன்னோட கேஸ் இல்ல, என் தங்கச்சி வாழ்க்கை… உன் வேலையப் பார்த்துட்டுப் போ!”
“ஹே… விக்ரம்… கோவப்படாத… பொறுமையா நான் சொல்றதக் கேளு…”
தேவி மெள்ள விக்ரமை நெருங்கி அவன் தோளில் கைவைத்தாள், விக்ரம் அவள் கையைத் தட்டிவிட்டான்,
“ஐ நோ ஹவ் டு ஹாண்டில் திஸ்… லீவ் அஸ் அலோன்!”
என்று விக்ரம் பல்லைக் கடிக்காத குறையாகச் சொன்னான்.
“விக்ரம்…”
அருண் ஏதோ சொல்ல முயல, தேவி அவனைக் கைக்காட்டித் தடுத்தாள்,
“விக்ரம், டேக் யுவர் டைம், என்ன ஆச்சுனு விஷாலிகிட்ட முழுசாக் கேட்டுட்டுப் பொறுமையா யோசி, அவசரப்பட்டு எதுவும் சொல்லிடாத! வி நீட் ஈச் அதர் நவ்!”
விக்ரம் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக அவளை வெறித்துப் பார்த்தபடி நின்றான்.
[the_ad id=”6605″]
தேவி அருணைத் தன்னுடன் வரும்படிச் செய்கை செய்ய, அருணும் தயங்கித் தயங்கி விக்ரமையும் விஷாலியையும் தாண்டி அறைக்கு வெளியே வந்தான்.
”நாங்க காலைல 6 மணிக்கு வரோம், நீயும் கிளம்பி ரெடியா இரு… என்ன?”
என்றபடி தேவி அருணை அழைத்துக்கொண்டு செழியன் தங்கி இருந்த பக்கத்து அறைக்குச் சென்றாள்.
செழியனும் சத்தீசும் விழித்துக்கொண்டுதான் இருந்தார்கள். தேவராசு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்துக்கு முன்புவரை இவர்கள் உறங்க அவர் விழித்திருந்தார் என்று சத்தீசு தேவி கேட்காமலேயே சொன்னார்.
தேவி நடந்ததைச் செழியனிடம் சொன்னாள்.
“இது கண்டிப்பா அந்த சகனோட சதிதான், விஷாலி அவனோட வசியக் கட்டுப்பாட்டுலதான் இருக்கா!”
செழியன் அருணைக் கனிவுடன் பார்த்தார்.
“நீ இன்னும் கொஞ்சம் கட்டுப்பாட்டோட இருந்திருக்கனும், அருண்!”
“சார்!”
அருண் முறையிடுபவனைப் போல அவரை ஏறிட்டுப் பார்த்தான்.
“சரி சரி… அதை விடுங்க, அடுத்து நடக்க வேண்டியதப் பார்ப்போம்… விக்ரம் கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கான், அதனால இதப் பத்தியோ விஷாலி பத்தியோ யாரும் அவன்கிட்ட எதுவும் பேசாதீங்க… இப்ப தேவையில்லாம உணர்சிவசப்பட்டா நமக்குள்ள சண்டதான் வரும், அந்த சனியன்புடிச்ச சகன் எதிர்பார்க்குறது நடந்துடும்!”
தேவி இருவரையும் தீர்க்கமாகப் பார்த்தபடிச் சொன்னாள்.
இருவரும் ‘ஆம்’ என்று தலையாட்டி ஆமோதித்தனர்.
“சரி, உண்மையா விஷாலிக்கு என்னதான் ஆச்சு? அவ ஏன் இப்படி மாறி மாறி நடந்துக்குறா? நேத்து அவ எப்படி அந்த சகர்களோட வந்தா?”
தேவி செழியனைக் கேட்டபடியே இருக்கையில் வசதியாக அமர்ந்துகொண்டாள். அருண் நின்று கொண்டேதான் இருந்தான்.
“எனக்கு உறுதியா தெரியல… வராகமிகிரர் ஒரு தியரி வெச்சிருக்கார்… அது சரியா இல்லையானு அவருக்கே உறுதியா தெரியலனு நினைக்குறேன்…”
செழியன் ஒரு பெருமூச்சுடன் சொன்னார்.
“வரா- ஆமா, அவங்ககிட்டேர்ந்து ஏதாச்சு தகவல் வந்துச்சா?”
தேவி சட்டென்று நினைவுவந்தவளாகக் கேட்டாள்.
“இல்-”
செழியன் முடிப்பதற்கு முன்பே அவர்கள் முன் வேதாளப் பட்டன் காற்றிலிருந்து உருவானவனைப் போல வந்து நின்றான்.
“கிளம்புங்க, கோயிலுக்கு உடனே போகனும்… கோயில உடைக்க வந்துட்டாங்க!”
பரபரப்பாகச் சொன்னபடியே அவர்களை நெருங்கி வந்தான்.
“ஹே ஹே இருப்பா… என்ன ஏதுனு சொல்லாம நீ பாட்டுக்கு டக்குனு வந்து டக்குனு எங்களத் தூக்கிட்டுப் பறந்து போய்டுவ போலயே?”
தேவி கிண்டலாகக் கேட்டபடியே எழுந்துகொண்டாள். செழியனும் எழுந்து நின்றார். சத்தீசு எழுந்து தேவராசுவையும் மற்ற காவலர்களையும் எழுப்பச் சென்றார்.
“ம்கும்! நான் உங்களுக்கு விளக்கம்லாம் சொல்லிக்கிட்டு இருந்தா அங்க கோயில பிரிச்சுப் போட்டுட்டுச் சிம்மாசனத்த எடுத்துட்டுப் போயிடுவானுங்க… வளவளனு பேசாம எல்லாரும் கிட்ட வாங்க…”
சொன்னபடியே அவர்களை நெருங்கியபடி அவர்களையும் நெருங்கி வரச் செய்கை செய்தான் வேதாளப் பட்டன்.
“இரு இரு, விக்ரமையும் விஷாலியையும் கூப்டுப்போம்…”
தேவி அவனைத் தாண்டி அறையின் வாசலை நோக்கிச் செல்ல எத்தனித்தாள்.
“ஹலோ… நான் முதல்ல அந்த ரூம்குத்தாங்க போனேனெ, அங்க யாரும் இல்ல, அதனாலதான் இங்க வந்தேன்!”
வேதாளப் பட்டன் கண்களை உருட்டியபடி ஆயாசத்துடன் சொன்னான்.
”வாட்? யாருமில்லயா? விக்-”
தேவி முடிக்கும் முன் வேதாளப் பட்டன் இடைவெட்டினான்,
[the_ad id=”6605″]
“இப்ப வரப்போறீங்களா? இல்ல பேசிக்கிட்டே இருக்கப் போறீங்களா? வாங்க, அங்க போய் எல்லாத்தையும் பேசிக்குவோம்… விக்ரமர் அங்கதான் போயிருப்பாருனு நினைக்குறேன்!”
சொன்னபடியே வேதாளப் பட்டன் ஒரு கையால் தேவியின் கையையும் இன்னொரு கையால் அருணின் கையையும் பிடித்துக்கொள்ள, தேவி செழியனையும், அருண் சத்தீசையும் பிடித்துக்கொண்டனர்.
“ஒரு நிமிஷம்-”
என்று தன் கையை விடுவித்துக்கொண்ட தேவி தேவராசை நோக்கி அவருக்கு சில உத்தரவுகள் கொடுத்தாள், அவரையும் பிற காவல் வீரர்களையும் கோயிலுக்குக் கிளம்பி வரச் சொல்லிவிட்டு, மேலும் சில ஏற்பாடுகளுக்கான யோசனையும் கொடுத்தாள்.
பின் வேதாளப் பட்டனின் கையைப் பிடித்துக்கொண்டு “போலாம்!” என்றாள்.
வேதாளப் பட்டன் தலையசைக்க அவர்களைச் சுற்றி இருந்த அறை அலையடிக்கத் தொடங்கி மெள்ள மங்கியது, அலையடித்தல் நின்றபோது அவர்களை முன் கங்கைகொண்ட சோழபுரத்தின் பெரிய கோயில் தன் வானளாவிய கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தது.
“வாவ்! வராகமிகிரரோட டிர்க்கை நீயும் கத்துக்கிட்டியா? குட்!”
தேவி வேதாளப் பட்டனின் தோளில் தட்டிக்கொடுத்தாள்.
“எப்டிக்கா இந்த ரணகளத்துலயும் ஜாலியா இருக்கீங்க?”
வேதாளப் பட்டன் இலேசாக கூச்சத்தில் நெளிந்தபடியே கேட்டான்.
“போலிஸ்காரிப்பா! எந்த ஆபத்தும் எந்தப் பிரச்சனையும் இல்லாதப்பதான் நான் ஜாலியா இருக்கனும்னா ஆயுசு பூரா என்னால ஜாலியாவே இருக்க முடியாது!”
அவனுக்கு விளக்கம் அளித்தவாறே பிராகாரத்தைச் சுற்றி நோட்டம்விட்டாள். பழைய நந்திக்கு அருகே வராகமிகிரர் பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவர்களைத் தவிர கோயிலில் யாரும் இல்லை. வானத்தின் இளம் ஊதா நிறம் இன்னும் சிறிது நேரத்தில் விடியப் போகிறது என்பதைக் காட்டியது.
“என்ன டா, பரபரப்பா எங்களக் கூட்டிட்டு வந்த, இங்க யாரையுமே காணும்?”
தேவி சுற்றிலும் நோட்டம் விட்டபடியே கேட்டாள்.
“எல்லாரும் வெளிய இருக்காங்க…”
வேதாளப் பட்டன் கோயிலின் வாசலை நோக்கிக் கைக்காட்டினான்.
“உள்ள வரட்டும், ஒரு கை பார்த்துரலாம் அவங்கள…”
தேவி தன் கையில் இருந்த சகர்களின் ஈட்டியையும் வாளையும் உறுதியாகப் பிடித்துக்கொண்ட படியே சொன்னாள்.
“நோ ஃபைட்… ஒன்லி டாக்கிங்!”
வேதாளப் பட்டன் ஒரு பெரிய புன்னகையுடன் சொன்னான்.
“வாட்?”
தேவி அவனை ஒன்றும் புரியாமல் கேட்கும் போதே வாசல் வழியாக யாரோ உள்ளே வருவது தெரிய, அவர்கள் கவனம் அங்கே சென்றது.
“ஹலோ… நீங்களால் எப்படி உள்ள வந்தீங்க? கோயில்ல ரெனவேஷன் வொர்க் நடக்கப் போகுது… கோயிலுக்குள்ள யாரும் இருக்கக் கூடாது… உடனே வெளில வாங்க…”
என்று கையில் பிடித்திருந்த ஒலிபெருக்கியில் கத்தியபடியே ஒரு காவலர் மெள்ள உள்ளே வர, அவரோடு இன்னும் சில காவலர்கள் கேடயத்தையும் தடியையும் பிடித்தபடி அணிவகுத்து வந்தனர்.
“என்னையா நடக்குது இங்க? சகர்கள் வருவாங்கனு பார்த்த போலிஸ் வராங்க?”
தேவி ஆயாசமாகக் கேட்டபடியே உள்ளே வந்த காவலரை நோக்கி நகர்ந்தாள்,
“இன்ஸ்பெக்டர்… நானும் போலிஸ்தான்… நாங்க எந்தப் பிரச்சனையும் பண்ணல, அமைதியா உங்க கூட வரோம்!”
”மேடம், கைல இருக்குற வெப்பன்ஸ கீழ போட்டுட்டுக் கைய மேல தூக்குங்க… ப்ளீஸ்…”
அந்தக் காவலர் சொல்லவும் தேவி ஆயாசத்தில் கண்களை உருட்டினாள், வேண்டா வெறுப்பாக கையில் இருந்த ஈட்டியையும் வாளையும் குனிந்து கீழே வைத்துவிட்டு, எழுந்து கைகளை மேலே தூக்கியபடி நின்றாள்.
சத்தீசும் தன் கையில் இருந்த வாளைக் கீழே வைத்துவிட்டு அவ்வாறே நிற்க, செழியனும் வேதாளப் பட்டனும் கூட கைகளை உயர்த்தியபடி நின்றனர்.
அந்தக் காவலரும் அவர் பின்னால் வந்த படையும் மெள்ள அவர்களை நெருங்கி வந்தனர்.
அருகில் வந்ததும் அந்தக் காவலர் செய்கை செய்ய, அணிவகுப்பில் இருந்த ஒரு காவலர் வந்து இவர்கள் கீழே வைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சென்று மீண்டும் அணிவகுப்போடு கலந்து நின்றார்.
“அந்தாளையும் எழுந்து இங்க வரச் சொல்லுங்க…”
அந்தக் காவல் ஆய்வாளர் வராகமிகிரரை நோக்கிக் கைக்காட்டினார்.
“சார், அவர இப்ப எழுப்ப முடியாது, அவர் தியானத்துல இருக்கார்!”
வேதாளப் பட்டன் அந்த ஆய்வாளருக்கு முன் வந்து நின்று, அவரின் பார்வையில் வராகமிகிரரை மறைத்தபடிச் சொன்னான்.
“தியானமா? எனக்கு அதெல்லாம் தெரியாது… கோயிலுக்குள்ள யாரும் இருக்கக் கூடாது, கமான், அவர எழுந்து வரச் சொல்லுங்க, இல்ல நாங்களே எழுப்புறோம்…”
அவர் சற்றே கடுமையாகச் சொல்ல, வேதாளப் பட்டன் இன்னும் உறுதியாக அவருக்கு முன் நின்றான்,
“உங்களாலலாம்-”
அவன் முடிக்கும் முன் தேவி இடைவெட்டினாள்,
“இன்ஸ்பெக்டர், ஐம் தேவி ஐ.பி.எஸ்., அசிஸ்டண்ட் கமிஷனர், க்ரைம் இன்வஸ்டிகேஷன்ஸ், கிரேட்டர் சென்னை…”
தேவி தன் அதிகாரத்தை முன்னிறுத்த முனைந்தாள், அந்த ஆய்வாளரிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, அவர் தன் கடுமை குறையாமல் நின்றார்,
“தெரியும் மேடம்… எஸ்.பி. சார் வெளிலதான் இருக்கார், நேத்துலேர்ந்தே உங்களை சஸ்பெண்ட் பண்ணிருக்காங்களாம், உங்கக்கிட்ட சொல்லச் சொன்னார்!”
அதைக் கேட்டு தேவி ஒரு நொடி அதிர்ச்சியானாலும் உடனே அதைச் சமாளித்துக்கொண்டாள், தான் எதிர்பார்த்ததைவிட தீவிரமான அரசியல் பலம் கொண்டவனாக திக்ரசூதன் இருக்கிறான் என்பதை தேவி உணர்ந்துகொண்டாள்.
“நல்லது… நான் எஸ்.பி. சார் கிட்ட பேசனும்… வாங்க போலாம்…”
அவள் முன்னால் நடக்க அடியெடுத்து வைக்க அந்தக் காவல் ஆய்வாளர் அசையாமல் நின்றார்,
“மேடம், ப்ளீஸ் கோவாப்ரேட், கோயில்ல யாரும் இல்லாம காலி பண்ணனும்னு எனக்கு ஆர்டர், அவரையும் எழுந்து வரச் சொல்லுங்க, போவோம்!”
மீண்டும் வராகமிகிரரை நோக்கிக் கைக்காட்டினார்.
“இன்ஸ்பெக்டர், அவங்க சொல்றத-”
சத்தீசு பேசத் தொடங்க ஆய்வாளர் அவரை இடைவெட்டினார்,
“சார், நீங்களும் இன்ஸ்பெக்டர்தான? நீங்க சத்தீஷா? தேவராஜா? யாரா இருந்தாலும் சரி, உங்க ரெண்டு பேரையுமே ரீ அசைன் பண்ணிட்டாங்க, ரெண்டு பேரும் உடனே சென்னை கமிஷ்னர்கிட்ட ரிப்போர்ட் பண்ணனும், பண்ணாம இவங்க கூட இருந்த உங்களையும் சஸ்பெண்ட் பண்ணுவாங்கனு எஸ்.பி. சார் சொல்லச் சொன்னார்!”
[the_ad id=”6605″]
குரலில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் நிதானமாகச் சொன்னவர் மீண்டும் தேவியை நோக்கினார்,
“மேடம், உங்களுக்கு அலாட் பண்ண மத்த கமாண்டோஸையும் எஸ்.பி. சார் ரிகால் பண்ணிட்டார், உங்க மேல நிறைய சார்ஜஸ் போட்ருக்காங்க… சொல்றதக் கேளுங்க, ப்ளீஸ், எனக்கு ஒத்துழைப்பு தாங்க… கிளியர் திஸ் டெம்பிள்!”
அவரது குரலில் மெல்லியதாய்க் கரிசனமும் பணிவும் இருந்தன.
“இன்ஸ்பெக்டர், உங்க நிலைமை எனக்குப் புரியுது, பட், நீங்க எங்க நிலைமைய கொஞ்சம் புரிஞ்சுக்க டிரை பண்ணுங்க… இது வெறும் அரசியல் அதிகார விளையாட்டு இல்ல, சம்திங் பியாண்ட் அஸ், சம்திங் வெரி சீரியஸ்…”
தேவியும் குரலில் கனிவோடு அவருக்கு விளக்க முயன்றாள்.
“மேடம்-”
அந்த ஆய்வாளர் பேசத் தொடங்கும் முன் கோயிலின் வாசல் பக்கம் பலர் உள் நுழையும் அரவம் கேட்க அவர்களின் கவனம் அங்குச் சென்றது.
உள்ளே சிலர் வருவதும், அவர்களைத் தொடர்ந்து ஆயுதமேந்திய ஒரு பெரிய காவல்படை வருவதும் தெரிந்தது.
வந்தவர்களில் அரியலூர் காவல்துறை கண்காளிப்பாளரும் அவருடைய அதிகாரிகள் சிலரும், நேர்த்தியான உடையில் இருந்த குடிமைப் பணி அதிகாரிகள் சிலரும் இருந்தனர்.
“மிஸ். தேவி, உங்க கூட வேஸ்ட் பண்ண எங்களுக்கு டைம் இல்ல! உடனே ரெனவேஷன் வொர்க்க தொடங்கலேனே கோயிலுக்கு ஏதோ பெரிய ஆபத்துனு நாங்க நம்புறோம்… உங்கள சஸ்பெண்ட் பண்ணத இன்ஸ்பெக்டர் சொல்லிருப்பாரு, உங்க மேல ரொம்ப சீரியஸ் சார்ஜஸ் போட்டிருக்காங்க, எந்தப் பிரச்சனையும் பண்ணாம அமைதியா ஒத்துழைப்பு தாங்க…”
அதிகாரத்தின் உறுதியும் அக்கறையின் கனிவும் கலந்து இருந்தது அவரது குரல்.
”சார்… உங்களுக்குப் புரியலனு-”
”உங்களுக்குத்தான் நாங்க சொல்றது புரியல மிஸ். தேவி! ப்ளீஸ் லிசன்…”
குடிமைப்பணி அதிகாரிகளில் ஒருவர் தேவியை இடைவெட்டினார்.
“சாரு அரியலூர் கலெக்டர்! மிஸ்டர். முகிலன் ஐ.ஏ.எஸ்.!”
கண்காணிப்பாளர் அந்த அதிகாரியை தேவிக்கு அறிமுகம் செய்ய, தேவியும் “சர்!” என்று உடலை நிமிர்த்தி அவருக்கு வணக்கம் செய்தாள்.
“சர், ப்ளீஸ், நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க, இது வெறும் அரசியல் விளையாட்டு இல்ல, சம்திங் வெரி சீரியஸ்-”
“அதையேத்தான் நாங்களும் சொல்றோம், மிஸ். தேவி! இது அரசியல் விளையாட்டு இல்ல, கோயிலோட ஸ்ட்ரக்சுரல் இண்டகிரிட்டி காம்ப்ரமைஸ் ஆகிருக்குனு வந்த ரிப்போர்ட்ஸ பேஸ் பண்ணித்தான் இந்த ரெனவேஷன் சாங்ஷன் ஆயிருக்கு!”
“சர், வித் ஆல் ட்யூ ரெஸ்பெக்ட்… ஆயிரம் வருஷமா உறுதியா நிக்குற கோயில்ல நேத்து ராத்திரி திடீர்னு ஸ்ட்ரக்சுரல் வீக்னஸ் வந்துடுச்சா? நீங்க சொல்றது உங்களுக்கே நியாயமா இருக்கா?”
தேவியின் குரலில் சற்றே கிண்டல் கலந்திருந்தது.
“மிஸ். தேவி! உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல… ஐ ஹேவ் மை ஆர்டர்ஸ்… நீங்க இப்படிப் பிரச்சனை பண்ணுவீங்கனும் தெரியும், அதான் நானே இங்க வந்தேன், கமாண்டோ பட்டாலியனையும் கூட்டிட்டு வந்திருக்கோம்… கடைசியா சொல்றேன், அமைதியா கோவாப்பரேட் பண்ணுங்க, டோண்ட் மேக் திஸ் எ மெஸ்!”
ஆட்சியர் கடுமையான குரலில் பதில் சொன்னார்.
”சார்-”
“ஹலோ, கலெக்டர் சார்… நல்லா இருக்கீங்களா? நீங்க காஞ்சிபுரத்துல இருந்தப்ப பார்த்தது…”
என்ற குரலைக் கேட்டு தேவி வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த முகத்தோடு பின்னால் திரும்பிப் பார்த்தாள். அருண், செழியன், சத்தீசும் கூட வியப்புடன் பார்க்க, விக்ரம் புன்னகை விளையாடும் முகத்துடன் நின்று கொண்டிருந்தான். அருகில் விஷாலியும் இருந்தாள்.
’இவன் எப்படி வந்தான்’ என்று தேவியும் மற்றவர்களும் யோசித்துக்கொண்டிருக்க, விக்ரம் ஆட்சியரை நெருங்கிக் கைக்குலுக்கினான்,
“சார், சி.எஸ். லைன்ல இருக்காரு… ப்ளீஸ்!”
என்று தன் கைப்பேசியை ஆட்சியரிடம் நீட்ட, அவரும் வாங்கி “யெஸ் சார், ஓக்கே சார்” என்று பேசினார்.
”ஆல்ரைட்! மிஸ்டர். விக்ரம், இப்போதைக்கு ரெனவேஷன நிறுத்த சொல்றாரு… பட், எனக்குப் புரியல, உடனே ஆக்ஷன் எடுக்கலேனா கோயில் இடிஞ்சிரும்னு எங்களுக்கு வந்த ரிபோர்ட் சொல்லிச்சு, இன்னும் ரெண்டு மூனு நாள்ல இந்த ஏரியால ஒரு ட்ரெமர் வேற வரலாம்னு ப்ரெடிக் பண்ண ரிபோர்ட்டும் இருக்கு… அதுக்குத்தான் இவ்ளோ அவசர அவசரமா வேல பண்ண வெக்குறாங்கனு நெனச்சேன்!”
ஆட்சியரின் குழப்பம் அவரது முகத்திலும் குரலிலும் அப்பட்டமாகத் தெரிந்தது.
“சார், இது வேற பிரச்சனை… இப்ப என்னால முழுசா விளக்க முடியாது… அப்புறம் பொறுமையா விளக்கு-”
விக்ரம் முடிக்கும் முன்பே ஆட்சியரின் கைப்பேசி ஒலிக்க, அவர் சற்று நேரம் திரையை உற்றுப் பார்த்துவிட்டு எடுத்துப் பேசினார்.
மீண்டும் சில “யெஸ் சார், ஓக்கே சார்”-களுக்குப் பின் கைப்பேசியை முடக்கியவர் விக்ரமையும் தேவியையும் கலவரமான முகத்துடன் பார்த்தார்.
“என்ன ஆச்சு சார்?”
“ரெனவேஷன நிறுத்த வேணாம்னு சொல்றாங்க…”
“வாட்? இப்பதான சி.எஸ். கிட்ட பேசினீங்க? அவர்தான் நிறுத்த சொல்லிட்டாரே? இப்ப யாரு வேணாம்னு சொல்றது!”
விக்ரம் கடுப்பும் ஆயாசமும் நிறைந்த குரலில் கேட்டான்.
“சி.எம்.!”
ஆட்சியர் உணர்ச்சியற்ற குரலில் அழுத்தமாகச் சொன்னார்.
என்ன பதில் சொல்வது என்று விக்ரமும் தேவியும் யோசித்துக்கொண்டிருக்கும் போது, ஆட்சியரைத் தாண்டி ஒருவன் முன்னால் வந்து நின்றான்.
பழைய திரைப்பட வில்லனைப் போல ஆளுயர வெளி ‘கோட்டு’ம், தொப்பியும், முகத்தை மறைக்கும் கண்ணாடியுமாக இருந்தவன், பேசியபடியே தன் தொப்பியையும் கண்ணாடியையும் கழட்டினான்,
”கலெக்டர் சார், வேலைய ஆரம்பிங்க… உங்களுக்கு பி.எம். கிட்டேர்ந்து ஃபோன் வரணும்னாகூட சொல்லுங்க, வர வெக்குறேன்…”
முகத்திலும் ஏளனப் புன்னகையுடன் மேல்நாட்டு நேர்த்தியான வணிக உடையில் தங்கள் முன் நின்ற திக்ரசூதனைப் பார்த்து விக்ரமும் மற்றவர்களும் திகைப்பில் ஆழ்ந்தனர்.
“ஹா ஹா ஹா…”
ஒரு சில நொடிகள் அங்கு நிலவிய அமைதியைக் குலைத்த அந்தச் சிரிப்பு வந்த திசையில் அனைவரின் பார்வையும் செல்ல, அங்கு வராகமிகிரர் மிக வசீகரமான புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தார்.
“திக்ரசூதா… படை பலம், அரசியல் அதிகாரம் என்று நீ எதைக் கொண்டு வந்தாலும் உன்னால் விக்ரமாதித்யரின் சிம்மாசனத்தைக் கைப்பற்றவே இயலாது… ஹா ஹா ஹா…”
மீண்டும் பெரிதாக நகைத்தபடியே வராகமிகிரர் கோயில் விமானத்தை நோக்கித் திரும்பி நின்றார்.
கண்களை மூடிக் கைகளை மார்பிற்கு அருகே குவித்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்தபடியே சில நொடிகள் நின்ற அவர், சட்டெனக் கண்களைத் திறந்து கைகளைக் கோயில் விமானத்தை நோக்கி நீட்டினார்-
கோயிலின் விமானத்தைச் சுற்றி ஒரு பொன்னிற ஒளி கசியத் தொடங்கியது…
விடிவதற்குச் சுமார் ஒன்றிரண்டு மணி நேரமே இருந்த அந்த அதிகாலையின் மெல்லிய இருட்டில் கங்கை கொண்ட சோழபுரப் பெரிய கோவிலின் வானளாவியல் அந்த விமானம் முற்றிலும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போல மஞ்சள் ஒளியில் மிளிர்ந்தது…
அங்கிருந்தவர்களின் கண்கள் வியப்பில் அகல விரிந்தன, திக்ரசூதனும், செழியனும், வேதாளப் பட்டனும் மட்டும் அதைச் சாதாரணமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்…
மெள்ள அந்த ஒளி தீவிரமாக, வராகமிகிரர் சட்டெனத் தன் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி இருபுறமும் விரித்தார்-
கோயிலின் கற்கள் தனித்தனியாகக் கழண்டு, ஒன்றுக்கொன்று சிறிது இடைவெளிவிட்டு காற்றில் பிரிந்து மிதந்தன…
முப்பரிமாண ஜிக்-சா (jig-saw) புதிரின் பாகங்களைப் போலப் பிரிந்து அந்தரத்தில் நின்ற கோயிலின் கற்களைப் பார்த்து அனைவரும் வியப்பின் உச்சத்தைத் தொட்டனர்!
தொடரும்…