செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 25_1
கொல்லைப்புற படியில் காலை காபியோடு மூர்த்தியும் துளசியும் அமர்ந்திருக்க, காகம் கரைய.. அதற்கு தீனி வைத்தவன், மெல்லப் பேச ஆரம்பித்தான். அவனுக்குத் தெரியவேண்டி இருந்தது.. பயத்தின் காரணமும், அனத்தலின் காரணமும். அது என்ன நீல நிற கார்? யார் அதில் வந்தார்கள்? ஏன் அதைக் கண்டு பயந்தாள்?
“துளசி மா..”
அவன் முகம் பார்க்கும் வண்ணம் திரும்பிக் கொண்டவள், “சொல்லுங்க மூர்த்தி சார்..” என்றாள் ஆவலாய்.
“என்ன(னை) நம்பறியா?”
அவள் முறைக்க ஆரம்பிக்கவும்.. “கேட்டதுக்கு பதில் சொல்லு.. நான் உன்ன விட்டுடுவேன்னு நினைக்குறியா? நான் உன்ன பாத்துக்க மாட்டேன்னு நினைக்குறியா?” கூர்மையான பார்வை.. அவளைத் துளைத்தது. அவன் விளையாட்டுக்குக் கேட்கவில்லை என்பது திண்ணம்.
“ஏன் மூர்த்தி சார் இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் போய் அப்படி நினைப்பேனா? பச்.. போங்க மூர்த்தி சார். எனக்கு உங்க மேல கோபம் கோபமா வருது.” கோபித்துக்கொண்டாள்.
“நான் தான் கோவிச்சுக்கணும். வர வர நீ தான் என் கிட்ட எதலாமோ மறைக்கிற..”
பெண்ணிற்கு என்ன தோன்றியதோ… நேற்று ராட்னியுடனான பேச்சைக் கேட்டிருப்பாரோ? தவறிழைத்த பிள்ளையின் பயம் பற்றிக் கொள்ள.. அழுகை முட்டுக் கொண்டு வர… “எல்லாம் உங்கனால தான். உங்கள யாரு என் மேல ஆசை வைக்கச் சொன்னது அதனால தான்.. உங்கட்ட மறைக்க வேண்டியதா போச்சு..” எப்பொழுதும் போல் பழியை அள்ளி வாரி அவன் மேல் தெளித்தாள். ஆனால் நீல காரை மட்டுமே யோசித்தவனுக்கு அவள் பேச்சிலிருந்து தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. அமைதி காத்தால் அவளே ஒப்பித்துவிடுவாள் என்பதால் அமைதி காத்தான்.
“உங்களுக்கு ஏன் மூர்த்தி சார் போயும் போயும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசை?”
கடுப்பேற.. “நான் என்ன கேட்டேன்.. நீ என்ன பேசற?” அவள் கேட்ட கேள்வி அவனுக்கு பிடித்தமில்லை என்பதால் சத்தம் உயர்ந்தது.
அவன் த்வணி அவளுக்குக் கலக்கம் கொடுக்க.. “ஏன் மூர்த்தி சார்?” கேள்வியாய் பார்த்தாள்.
[the_ad id=”6605″]
“உன் ஃப்ரெண்டு நிலா சொன்னா… ஏதோ நீல கார்ல ஏற மாட்டேன்னு தூக்கத்தில அழுதியாமே? யார் கார்? எப்போ பார்த்த? ஏன் நீல கார்ல என்ன இருந்துது? அதுல இருந்த யாராவது உன் கிட்ட வம்பு பண்ணினாங்களா? எதையும் சொல்ல மாட்டியா? இன்னும் என்னல்லாம் சொல்லலை..? ஆமா நேத்து திடீர்ன்னு ஏதோ பக்கத்து தெருக்கு போறத பத்தி பேசுற மாதிரி இங்லாண்ட் போறத பத்தி பேசற?”
அடுக்களையில் பண்டம் திருடிய குழந்தை அம்மாவிடம் மாட்டும் வேளை இப்படி தான் விழிக்கும். அவளும் விழித்தாள். தப்பிக்கப் பழியை யார் மேல் போட? வசதியாக ராட்னி தான் கிடைத்தான்.
“அது அவன் தான் கேட்டான் ‘வரியா.. அங்க நல்லதா வேலை பாக்கலாம்’னு..”
“அதுக்கு?” காரம் குறையவில்லை.. நீல கார் போன திசை தெரியவில்லை. பருந்து நிறைந்த உலகில் இப்படி கோழி குஞ்சு தனியே ஊர்வலம் போகலாமா? அந்த கோபம் அவனிடம்.
“நான் உங்கட்ட கேட்டு சொல்றேன்னு தான் சொன்னேன்..”
“எதுக்கு கேக்கணும்? உனக்கு போகணும்ன்னு தோணவே தானே கேக்கணும்ன்னு தோணி இருக்கு? யார் கூப்பிட்டாலும் கிளம்பிடுவியா? அப்போ நான் கூப்பிட்டனால தான் என் கூட இருக்கியா? அவ்வளவு தானா நான்?” கிளம்பிய கோபம் சலிப்பில் முடிய.. அவன் முடித்த வாக்கியம் அவள் கோபத்தைக் கிளப்பியது.
“போதும் மூர்த்தி சார்… ரொம்ப பெசறீங்க… எனக்கு எங்கேயும் போக விருப்பம் இல்ல. போகவான்னு குழம்பினதும் உண்மை தான்… அதுக்கு காரணமும் நீங்க தான்!”
“நான் தான் போக சொன்னேனா?” அவன் முறைக்க..
“இல்ல… போக சொல்லலை. ஆனா போக தோன்றதே உங்களால தான்”
என்ன சொல்ல வருகிறாள்? அவன் வாயே திறக்கவில்லை.
“நீங்க கவனிச்சிங்களா? என்னை பார்த்த அன்னையில இருந்தே நீங்க தான் எனக்காக ஏதாவது செஞ்சிட்டே இருக்கீங்க. நான் ஒரு லீச் மாதிரி… உடம்பு மேல ஒட்டிகிட்டு ரத்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிற லீச் மாதிரி, உங்க உழைப்ப மட்டும் உறிஞ்சி எடுக்கிறேன். என்னால் உங்களுக்கு என்ன பிரயோஜனம் சொல்லுங்க? இப்போவும் இல்ல… கல்யாணம் பண்ணினாலும் இருக்க போறது இல்ல.. என்னால உங்களுக்கு ஒரு மனைவியா இருக்க முடியாது. நான் உங்களுக்கு வேண்டாம்…” அவள் பேசி முடிக்கும் முன்னே அவன் எழுந்து உள்ளே சென்றிருந்தான்.
உணர்வுகள் என்றும் ஒன்று போல் இருப்பது இல்லை. கையிலும் மார்பிலும் ஏந்தியவளை வேறு எப்படி நினைக்க வேண்டும் என்று தெரியவில்லை அவனுக்கு. கோபம் கரைபுரண்டது.
‘தெருவில பாக்கிறவளை எல்லாம் தூக்கி கொஞ்சுற பொறுக்கின்னு நினைச்சுட்டாளா?’ எதையாவது அடித்து நொறுக்கும் அளவு கோபம். அப்படி எல்லாம் எளிதில் கோபம் கொள்பவன் அல்ல. அதுவும் தங்கம்… துளசி என்று வந்தால் கோபம் என்ற ஒன்றை பார்க்கவே முடியாது. ஆனால் அதையும் வரவைத்து புதிய சாதனை நிகழ்த்திவிட்டாள், அவன் துளசி.
நாளுக்கு நாற்பது முறைக் கையில் ஏந்துகிறான். கண்டவளாக நினைத்தால் தொட முடியுமா? உடலைத் துடைத்து, கலைந்த புடவையைச் சரி செய்து, வாந்தி எடுக்கும் போதெல்லாம் நெஞ்சிலும் முதுகிலும் தடவி விட்டு, கை விரல் இதழ் உரைய உணவை ஊட்டி, தலை வாரி.. பூ சூட்டி, முகம் கழுவி, பொட்டு வைத்து… இதை எல்லாம் மனைவி அல்லாதவளுக்குச் செய்ய முடியுமா? அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு இல்லை என்றால்.. இதை எல்லாம் ஏன் அவனிடம் ஏற்க வேண்டும்? யார் செய்தாலும் ஏற்றுக் கொள்வாளா? இருவருக்கும் இடையே என்ன தான் இருக்கிறது? ஏகத்திற்கும் கோபம்..
[the_ad id=”6605″]
முன்பு எப்படியோ… இன்றைய நிலையே வேறல்லவா? அவன் கட்டிலில்.. அவன் தலையணையில்.. அவன் போர்வைக்குள் என்ன நினைப்போடு படுத்திருக்கிறாள்?
ஏதோ கோபம்.. கட்டுப்படுத்த முடியவில்லை. எழுந்து உள்ளே வந்தவன்.. அவள் முன்னே தங்கியிருந்த அறையில் சென்று கண்மூடி படுத்துக் கொண்டான். தூங்கவில்லை என்றாலும் உள்ள குமுறலை அடக்க வழி தெரியாமல் படுத்துவிட்டான்.
அவரவர் நியாயம் அவரவருக்கு. அவனால் நடக்க முடியும்.. உள்ளே சென்றுவிட்டான். படியிலிருந்து எப்படி ஒற்றைக் கையும் ஒற்றைக் காலையும் கொண்டு எழுந்திருக்க? அமர்ந்தே இருந்தாள்.
இதோ.. இதற்குத் தான் திருமணம் வேண்டாம் என்றாள். நான்கு நாள்… நான்கு வாரம்.. ஏன் நான்கு மாதம் கூட காத்திருப்பான். அதன் பின் அவன் ஏக்கத்திற்கு யார் பதில் கூறுவது? அவன் தேவைகள் அவனுக்கு மறுக்கும் வேளை அவனுக்கு இப்படி தானே கோபம் வரும்? இருவர் வாழ்வும் நரகமாகாதா? ஒற்றை நீல நிற கார்.. இன்னும் அந்த நினைவிலிருந்தே அவளால் வெளி வர முடியவில்லையே…
எத்தனை கை பட்டுத் துடித்த மேனி.. மீண்டும் ஒரு உடலுறவு.. எப்படி முடியும் என்று அவளுக்குத் தெரியவில்லை. அது மூர்த்தியோடே என்றாலுமே அவளுக்குத் தெரியவில்லை எல்லைகளைத் தாண்டும் அளவு அவளால் முடியுமா என்று. முடியாமல் போனால்?
மூர்த்தியை அளவிற்கு அதிகமாகப் பிடிக்கும். கடந்து சென்ற நாட்கள் சொர்கமாக தோன்றியது. அவனோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் சொர்கம் தான். இது மட்டுமே போதும் என்றால்… இந்த அளவோடு உறவு நிற்குமென்றால் அவளும் தயார் தான். ஆனால் திருமண பந்தத்திற்கு அளவு ஏது? மூர்த்திக்கு தாம்பத்தியம் மறுத்தால் அதுவும் துரோகம் தானே.. அவன் தொட்டு அது அவளுக்கு அருவருப்பாக மாறினால்? இருவர் வாழ்வும் நரகம்.
மீண்டும் அதே ‘மூர்த்தி வேண்டும்.. மூர்த்தி வேண்டாம்’ நிலை! காரணம் பயம்!
அரை மணி நேரமாகியும் அவன் வரவில்லை. அழுகை பீரிட்டு வந்தாலும் அழவில்லை. எல்லா இன்பமும் அரை மணி நேரத்தில் கரைந்தே போனது.
கையறு நிலை என்பதை எத்தனை முறை ருசி பார்க்க? இதை எல்லாம் நினைக்கும் பொழுது தான் கண்காணா தேசத்திற்குச் செல்ல தோன்றுகிறது.
குடித்த காபி வெளிவரத் துடித்தது.
“மூர்த்தி சார்…” அவள் விளிப்பு அவனைப் போய்ச் சேரவில்லை. “மூர்த்தி சார்…” இயலாமை அழுகையாய் வரும் போல் தோன்றியது. தனித்து வாழக் கூட திராணி இல்லாத உனக்கு எதற்கு உணர்வு..? மற்றவர் கை பார்த்து நிற்கும் உனக்கு எதற்கு ஒரு வாழ்க்கை? கழிவிரக்கம் பற்றிக்கொண்டது.
எழுந்திருக்க முயன்றாள். இடது கையை ஊன்றி.. வலது காலில் மட்டும் பலம் கொடுத்துப் பாதி எழுந்துவிட்டாள். கையை தரையிலிருந்து எப்படி எடுப்பது? எடுத்தும் விட்டாள். பின்னோடு உருண்டு கீழே விழுந்தாள். அடிபட்டது உடல் மட்டும் அல்ல… உடலோடு மனதும் தான். வலி உச்சத்தைத் தொட்டாலும் மூர்த்தியை அழைத்தாளில்லை.
சத்தம் கேட்டு வந்தவனுக்குப் பேரதிர்ச்சி. ஓடிச்சென்று கழுத்துக்கடியில் கைவைக்க, முகத்தை திருப்பிக் கொண்டாள். “சாரி துளசி. ரொம்ப சாரி துளசி மா..” தூக்க முனைய..
“என்னை தொடாதீங்க… போங்க என்னை விட்டுட்டு போங்க..” கத்த ஆரம்பித்தாள்.
“சாரி துளசி.. சும்மா தான் படுத்தேன்.. கண் அசந்துட்டேன். சாரி துளசி..” அவள் மறுக்க மறுக்க தூக்கிக் கொண்டான்.
“என்னை விடுங்க.. என்னை எங்கயாது தர்மாஸ்பத்திரில கொண்டு போட்டுடுங்க… என்னை விடுங்க..” கால் ஏகத்திற்கும் வலிக்க, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வர.. அவனிடமிருந்து திமிற.. அவனோ, நெஞ்சோடே அவளைச் சேர்த்து அணைத்துக்கொண்டான். ஒன்றும் பேசவில்லை.
அவள் எதிர்ப்பு அடங்கிப் போனது. மார்போடு ஒன்றிக்கொண்டாள். மனதோடு உடலும் வலிக்க, “என்னால முடியல மூர்த்தி சார்.. பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு…” அழுகையில் நடுவில்… உணர்வுகளின் உச்சத்தில் வெடித்தாள்.
உள்ளே சென்று மெத்தையில் அமர்ந்தவன் மடியை விட்டு துளசியை இறக்கினான் இல்லை. அவளின் அழுகையும் நின்றபாடில்லை. அவன் அணைப்பின் வலிமை கூடியதே தவிர குறையவில்லை. அவனுக்குமே தவறிவிட்ட உணர்வு. ‘அவள் தள்ளிச் சென்றால் விட்டு விட வேண்டுமா? பிடித்தம் இல்லாமல் தள்ளி போனால் அது வேறு. மனம் முழுவதும் தன்னை ஏந்தி நிற்பவளின் வலியை உணராமல் போனேனே..’ இன்னும் இறுக்கிக் கொண்டான். இரண்டு வலிக்குமே அந்த ஒற்றை அணைப்பு இதமாகத் தான் தோன்றியது.
“அடிபட்டிடுச்சா?”
“ம்ம்…” விசும்பல் சத்தம் மட்டுமே..
“சாரி..” உச்சந்தலையில் கன்னம் பதித்துக் கொண்டான்.
“பரவால… நான் தானே விழுந்தேன். நீங்களா தள்ளிவிட்டீங்க?” குட்டி துளசி எட்டிப்பார்த்தாள்.
“தப்பு பண்ணிட்டேன் துளசி. உன் பக்க நியாயத்த யோசிக்கவே இல்ல. சாரி. நிஜமாவே சாரி. சரி ஆகிடும். கண்டிப்பா சரி ஆகிடும்.” நிமிர்த்தி மடியில் அமரவைத்தவன் கன்னம் துடைத்து.. கண் பார்த்து கூறினான்.
“படிப்பு முடியட்டும். இன்னும் ஒரு வருஷம் இத பத்தி பேசவே வேண்டாம். ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ.. நான் எந்த எதிர்பார்ப்போடும் உனக்கு இதெல்லாம் செய்யல. என் கடமை இது. சில உறவுகளுக்குள்ள கணக்கு பார்க்க முடியாது. உனக்கு எப்படின்னு தெரியல… என்னைக்கு நீ உன் வாயால..’இவர் தான் என் புருஷன். இவருக்கு நான் ஒம்பது பிள்ளைங்கள பெத்து குடுப்பேன்’னு சபதம் போட்டியோ, அன்னைக்கே நீ தான்னு முடிவு பண்ணிட்டேன்.
நீ வேணும்னா உன் சபதத்தை மறந்திருக்கலாம். என் மனசுல நீ தான் என் மனைவின்னு பதிச்சுட்டேன். மாத்த முடியாது. மூனரை வருஷமா உன்னையே மனசில நினைச்சு வாழ்ந்திட்டு இருக்கேன். நீ வாயத் திறந்தாலே ‘நான் வேண்டாம். யாரையாது கல்யாணம் பண்ணிக்கோங்க’-ன்னு சொல்லும் போது என் மனசு எப்படி பாடுபடும்ன்னு கொஞ்சமாது நினைக்கிறியா?
[the_ad id=”6605″]
இதையே நான் உன் கிட்ட சொன்னா… உன்னால தாங்க முடியுமா? அப்படி பேசுறதே தப்பு துளசி மா. விளையாட்டுக்கும் இனி மேல் அப்படி சொல்லாத. நீ தான் எனக்கு… நான் தான் உனக்கு.. அது நீ தாலி கட்டி என் கூட இருந்தாலும் சரி இல்ல நான் வேண்டாம்ன்னு நீ என்னை விட்டு போனாலும் சரி, நீ மட்டும் தான் எனக்கு. உன்னால எப்படி வேற ஒருத்தன உன் வாழ்க்கையில நினைக்க முடியாதோ அப்படி தான் என்னாலையும்..”
இப்படியே இருந்துவிட ஆசை… அவன் மடியில், மார்பில் புதைந்திட ஆசை தான். ஆனால்?
கட்டிலில் அமர்ந்தவள், “உங்களுக்குப் புரியவே மாட்டேங்குது மூர்த்தி சார்..” விசும்பலோடே உரைத்தாள். “அன்னைக்கு ரோட்டில ஒரு நீல கார் பார்த்தேன்… பயம் வர ஆரம்பிச்சிடுச்சு. நான் டெல்லில இருந்து போன போது அந்த மாதிரி ஒரு ப்ளூ கலர் கார்ல தான் என்னை ஒவ்வொருத்தன் வீட்டுக்கும் கொண்டு போவானுங்க.. அங்க யாரும் என்னை வச்சு வேடிக்கை பார்க்கல மூர்த்தி சார். ஒவ்வொரு முறையும் ஓநாயோட கோர ஆசைக்கு நான் பலியானேன். தெரியா கூடாத வயசில அனுபவிக்க கூடாதா அசிங்கம் எல்லாம் அனுபவிச்சேன். எனக்கு அது எதுவுமே மறக்க முடியல. நினைக்கக் கூட பிடிக்காத விஷயம் மண்டையை விட்டு வெளில போகாம என்னை கொல்லுது. எனக்கு கல்யாணம் வேண்டாம். எனக்கு உடலுறவு வேண்டாம் மூர்த்தி சார். என்னால உங்களுக்கு மனைவியா இருக்க முடியும்னு தோணல. சில விஷயம் எல்லாம் நினைக்கக் கூட வெறுப்பா இருக்கு மூர்த்தி சார். நான் என்ன பண்ணட்டும்?” அவன் முகத்தைப் பார்க்காமல் குனிந்து, கண்ணை மூடி உரைத்துவிட்டாள். இதற்கு மேல் அவள் நிலையைத் தெளிவாய் உரைக்கவே முடியாது.
அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். எந்த அசைவும் இல்லாமல் போகவே கண் திறந்து பார்க்க.. அவன் யோசனை படிந்த முகத்தோடு அவளையே பார்த்து அமர்ந்திருக்க, அவளே மீண்டும், “இது எல்லாம் இல்லாம வழலாம்ன்னு கதை சொல்லாதீங்க. உங்களுக்கு குடும்பம் குழந்தைங்க வேண்டாமா? வேணும் மூர்த்தி சார். உங்கள மாதிரி நல்லவங்க குழந்தைங்க இந்த பூமியை நிறப்பணும்.”
எதுவுமே பேசமால்.. பார்த்தே அமர்ந்திருந்தான்.
“அப்போ எதுக்கு ஒரு வாரமா என் கூட இருக்கன்னு கேக்காதீங்க.. எனக்கு உங்கள விட்டா வேற யாரும் இல்ல. அதனால தான். வேற உறவு இருந்திருந்தா உங்கள நான் தொல்லை பண்ணி இருக்கவே மாட்டேன்.”
“ஓ..?”
“உங்க கூட இருக்க பிடிக்குது. காதல் இல்ல.. நன்றி உணர்ச்சி தான் மண்டி கிடக்கு மனசு பூரா! ஒரு ஃப்ரெண்டா நினைச்சுக்கோங்க மூர்த்தி சார். நானும் அப்படியே நினைச்சுக்கிறேன்..” மீண்டும் அதே புள்ளியில் வந்து நின்றாள்.
“ம்ம்ஹூம்..” ‘நல்லா தான் ஆரம்பிச்ச… ஃபினிஷிங் சரி இல்லியே துளசி..’
அவன் மார்போடு மார்பாய் இப்பொழுது தானே ஒட்டிகொண்டிருந்தாள்? பேச்சைக் கேட்டவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ‘ஃப்ரெண்ட எல்லாம் இப்படி தான் கட்டி பிடிப்பாளாமா?’
ஒன்று மட்டும் அவனுக்குப் புரிந்தது. இவள் சரி சொல்லி இந்த திருமணம் நடக்கப் போவது இல்லை. மனதில் இருக்கும் காதலையும் ஒத்துக்கொள்ள மாட்டாள், இணங்கி மனைவியாகவும் மாட்டாள்.