என் காதல் கனா 12
சதீஷிடம் கேட்க நிறைய விஷயங்கள் இருப்பினும், “தூங்கப் போகிறேன்”என்று விடைபெற்றுச் சென்றவனை ஏதும் செய்ய இயலாமல் தன் அறைக்குள் முடங்கிய விவேக்கிற்கு மனம் அமைதியாகவே இல்லை. சுஜினியின் மேல் தான் காட்டும் ஆர்வம் அவனுக்கே கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்த போதிலும், அதே ஈடுபாடு சதீஷிற்கும் இருக்குமோ என்ற சந்தேகத்தை விவேக்கால் மறக்க முடியவில்லை.
“ஒருவேளை சதீஷிற்கு சுஜி மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்குமோ….இது எப்படி கரெக்டாகும்? அதுலையும் அவன் ப்ரேக்கப் ஆகி இன்னும் முழுசா ரெண்டு மாசம் கூட ஆகலை…அதுகுள்ள இன்னொரு பொண்ணு மேல எப்படி இன்டிரெஸ்ட் வரும்? ஆனா, சுஜி கண்டிப்பா சதீஷ் மேல கொஞ்சம் ஆர்வமா இருக்கா? நான் தான் பார்த்தேனே, என் கூட பேசிட்டு இருக்கறப்பவும், அவ கண்ணு சதீஷ் எங்க இருக்கான்னு தேடினதையும், நிமிஷத்துக்கு ஒரு தடவை அவன் நிக்கறபக்கம் அவ பார்த்ததையும்… இதைக் கூட புரிஞ்சுக்காம எப்படி இருப்பேன்….இப்ப நான் என்ன செய்ய? நானா சதீஷ்ட்ட சுஜினி மேல இருக்கற இந்த அக்கறை பத்தி பேசட்டுமா? இல்லை அவனா பேசற வரைக்கும் காத்திருக்கனுமா?”
“சதீஷ் கண்டிப்பா தானா சுஜினி பத்தி எங்கிட்ட பேசமாட்டான். ஏன் இன்னைக்கே நான் சுஜினி பத்தி பேச்சு எடுத்தப்போ, நாசூக்கா கழண்டுகிட்டு போயிட்டான். சோ, அவனா வந்து பேசுவான்னு வெயிட் பண்ணறது முட்டாள்தனம். அதே நேரம், ஆறு வருஷ நட்பை விட, நேத்து வந்த இந்த சுஜினி எனக்கு முக்கியமா?”ஏன்று பலவாறாக யோசித்துக் கொண்டே கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தான். விவேக்கிற்கு இருந்த மனக்குழப்பங்களில் உறக்கம் என்பது எட்டாக்கனியாக இருந்தது.
சதீஷுடன் தன் நட்பு எத்தகையது என விவேக்கிற்குத் தெரியும். தனக்கு ஒரு பிரச்சனை என்னும் போது தன் அன்னைக்கு அடுத்தபடியாக தன் மேல் அக்கறை கொண்டவன் சதீஷ் மட்டுமே. ஒரு நாள் ஒரு பொழுது தான் வேறு, சதீஷ் வேறு என அவன் நினைத்ததில்லை. சதீஷின் குடும்பமும் அப்படியே. அவன் அன்னை, அப்பா, அண்ணன் முதல் அனைவருமே விவேக்கை தன் வீட்டுப் பிள்ளை போல் கவனித்துக் கொண்டுள்ளனர். எத்தனை முறை அவர்கள் வீட்டில் தங்கியிருப்பான், உண்டிருப்பான் என கணக்கே இல்லை. அப்படிப்பட்ட நண்பனுக்கு தான் துரோகியாகிப் போவேனோ என்ற கவலை வேறு தொற்றிக் கொண்டது விவேக்கிடம்.
கட்டிலில் இருந்து எழுந்து ஜன்னல் அருகில் நின்று சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம், சதீஷும் அவனது அறைவாசியான ரோனால்டும் டார்மிட்டரியில் இருந்து வெளிப்பட்டு, கல்லூரியின் வாயில் நோக்கி மெதுவாக நடப்பதைக் கண்ட விவேக்கிற்கு ஆச்சர்யமாக இருந்தது. “டயர்டா இருக்குன்னு சொன்ன சதீஷ், இப்போ இந்த ரான் கூட சேர்ந்து எங்க போறான். டயர்டா இருக்குன்னு எங்கிட்ட பொய் சொல்லி, என்னை அவாய்ட் பண்ணறானோ”என்று கண நேரத்தில் கணக்கிட்ட மனம், இவ்வளவு நேரம் நினைத்துக் கொண்டிருந்த எண்ணங்கள் பின்னுக்கு தள்ளிவிட்டு, “ஒருவேளை சுஜினியை பார்க்கத்தான் போறானோ”என கவலை கொண்டது.
அடுத்த நிமிடம், கைப்பேசியை எடுத்து, சுஜினியிடம் இருந்து ஏதேணும் அழைப்புகள் இருக்கின்றனவா என ஆராய்ந்தான். எதுவும் வந்திருக்கவில்லை. “அவ அனுப்பலைன்னா என்ன? நாம அனுப்புவோம்…” என்று மனம் கூற, வாட்ஸப்பில், “ஹாய்”என்று தட்டிவிட்டான். பதில் வரும் என்ற எண்ணத்தில் வெகு நேரம் கைப்பேசியின் திரையைப் பார்த்துக் கொண்டு ஜன்னலின் அருகேயே நின்றிருந்தான். மனம் வெகுவாக குழம்பிப் போயிருந்தது. உயிர் நண்பனை தவராக நினைக்கிறோமே என்ற குற்ற உணர்வு ஒருபக்கம், எனக்கு பிடிச்சிருக்குன்னு நான் காமிச்சும் சதீஷ் ஏன் இப்படி நடந்துக்கறான், அதும் ப்ரேக்கப் ஆகி முழுசா ரெண்டு மாசம் கூட ஆகாத போது? என்று சதீஷின் மேல் காரணமில்லா கோபமும் ஒருசேர எழுந்தது.
[the_ad id=”6605″]
சிறிது நேரத்திற்கெல்லாம் சதீஷும் ரானும் திரும்பி நடந்து வருவது தெரிந்தது. இருவர் கையிலும் எரிந்து கொண்டிருந்த கொள்ளிக்கட்டைகளைக் கண்டதும், “ஓ, தம் அடிக்க போயிருக்காங்க…அதுக்குள்ள நான் எவ்வளோ யோசிச்சுட்டேன்”என்று மனம் ஒருவாறு சமாதானமாகியது.
“நாளைக்கு எப்படியும் சதீஷ்ட்ட சுஜினி மேல எனக்கு இருக்கற இன்டிரெஸ்டை வெளிப்படையா சொல்லிடனும். இப்படி மனசுகுள்ள வச்சு பாதுகாத்து, நாளைக்கு அவ வேற ஒருத்தனுக்கு லவ்வராகரதை பார்க்க முடியாது. அதுலையும் சதீஷ்ட்டையே அவளை இன்பிரஸ் பண்ண ஐடியா கேட்கணும்…அப்போ கண்டிப்பா அவன் மனசு தெரிஞ்சு போகும். ஒருவேளை அவனுக்கு சுஜினியை பிடிச்சிருந்தா? அப்போ என்ன பண்ணறது?”என்று கேள்வி எழ, விவேக்கின் மூளை வேகவேகமாக கணக்குகள் போட்டது.
“சுஜினிக்கு கேரக்டர் வைஸ்ன்னு பார்த்தா என்னை பிடிக்காம போக சான்ஸே இல்லை. ஆனா, அது ஒண்ணு மட்டும் தான் என்னோட ப்ளஸ். வீடு, குடும்பம், முக்கியமா வசதி, ஸ்டேட்டஸ் இதெல்லாம் யோசிச்சா, எல்லா விதத்திலையும் சதீஷ் என்னைவிட பலமடங்கு உயரத்தில இருக்கான். அதுலையும் அவன் வீட்டில லவ் மேரேஜ்னா எந்த பிரச்சனையும் கண்டிப்பா வராது. அதுவே, நான், அம்மா, சின்னம்மா, தம்பி, தங்கச்சிங்கன்னு ஒரு சின்ன பட்டாளத்தையே சமாளிக்கணும். இதெல்லாத்துக்கும் முன்னாடி, சுஜினிக்கு என்னை பிடிக்கணுமே? ஒரு வேளை சதீஷை பிடிச்சிருந்தா?” என்று மனம் கேள்விகளால் நிரம்பத் துவங்க,
“விடக்கூடாது. சுஜினிக்கு என்னை பிடிக்க வைக்கணும். என்னோட ப்ளஸ் என்னோட கேரக்டர், சதீஷோட மைனஸ் அவனோட கேரக்டர். சோ, சதீஷோட கேரக்டர் இதுதான்னு சுஜினி உணர்ந்தா கண்டிப்பா அவனை விரும்பமாட்டா. சூப்பர், இதான் பண்ணனும்…சதீஷ்ட்ட நாளைக்கே சுஜினியை எனக்கு பிடிச்சிருக்கு, அவளை இம்பிரஸ் பண்ண ஹெல்ப் பண்ணுனு கேட்டுடனும். அதே நேரம், சுஜினி கொஞ்சம் சதீஷ் மேல ஆர்வம் காமிக்கற மாதிரி தெரிஞ்சா, முடிஞ்ச வரைக்கும் அவனோட பழகவிடனும். சதீஷோட கேரக்டர் அவளுக்கு தானாவே பிடிக்காம போக நிறைய சான்ஸ் இருக்கு” என்று, இன்னது நடந்தால் இப்படி கையாள வேண்டும் என நிறைய யோசித்தவண்ணம் கட்டிலில் படுத்திருந்தான்.
இவ்வளவு யோசித்த விவேக்கின் மனம் இரண்டாக வேறுபட்டிருந்தது. ஒரு பொண்ணிற்காக, அதுவும், பார்த்து சில தினங்களே ஆன ஒருத்திக்காக, ஆறுவருட உயிர் தோழனை எதிர்க்கலாம் என போராட்டகுணம் வந்துவிட்டதே எங்கின்ற கவலை ஒருபக்கம். தன் நண்பனே தன் காதலுக்கு எதிரியாக நின்றுவிடுவானோ, அப்படி ஆகும் பட்சத்தில் தன்னால் சதீஷை எதிர்த்து, பகைத்துக் கொண்டு எப்படி இருக்க முடியும் என்ற கவலை ஒருபக்கம் என் இரண்டாக பிளவுபட்டுவிட்டது. மனதின் ஒரு மூலை திரும்ப திரும்ப, “சுஜி, சுஜினி”என்று அரற்றிக்கொண்டே இருக்க, அப்படியே உறங்கிப் போயிற்று.
அடுத்த தினம் சனிக்கிழமை என்பதால், கொஞ்சம் தாமதமாகவே கண்விழித்தான் விவேக். முன் தினத்தின் கவலைசாயல்கள் எதுவும் இன்றி, மனம் தெளிவாக இருந்தது. ஜன்னல் திரையை விலக்கியவன், பார்வை, கீழே வளர்ந்திருந்த அத்திமரத்தின் மேல் நிலைத்தது. காலையில் ஜாக்கிங் போவோர் வருவோர், கேம்பஸ்ஸில் குடியிருந்தவர்கள் நாய்களுடன் நடைபயின்ற அழகு, நாளிதழ் விற்கும் சிறுவர்கள் என காலை நேரம் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்த மனிதர்களை வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றிருந்தவனின் கவனம், அறைக்கதவு தட்டப்படும் ஓசையால் கலைந்தது. விவேக்கின் அறைத்தோழன், “வில்”என்று அழைக்கப்பட்ட வில்லியம் இன்னமும் உறக்கத்தில் இருக்க, விவேக் எழுந்து கதவினைத் திறந்தான். வெளியே சதீஷ் குளித்து முடித்து பளிச்சென்ற உடைகளுடன் சிரித்துக் கொண்டு “குமார்னிங்” என்றுரைத்தான்.
“ஹாய் டா….குட்மார்னிங்”என்று பதிலளித்த விவேக், சதீஷின் கண்களைக் நேராகப் பார்க்காமல் பதிலளித்தான். “இன்னும் குளிக்காம இருக்க? ரெடி ஆகலையா? ஆட்டோ பார்ட்ஸ் கடைக்கு இன்னைக்கு காலையில வரசொல்லியிருந்தாங்களே…நியாபகம் இல்ல?”என்று பேசிக்கொண்டே உள்ளே நுழைந்த சதீஷ் உறங்கும் வில்லியம்மின் பின்னால் மெல்லிய குத்து ஒன்றை வைத்து, “வேக்கப் மேன்” என்று மொழிந்துகொண்டே வில்லியமின் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தான். சதீஷ் குத்தியதால் தூக்கம் கலைந்த வில்லியம், மெதுவாக அசைந்து மறுபக்கம் திரும்பி, மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான்.
[the_ad id=”6605″]
“அட, ஆமால்ல..இன்னைக்கு போகணும்கறதே மறந்துபோச்சு….ஒரு பத்து நிமிஷம் இரு, நான் ரெடியாகிட்டு வந்திடரேன்”என்று அவசரமாக துவலையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் விரைந்தான் விவேக். சதீஷும் விவேக்கும், பார்ட் டைம் வேலைக்காக, ஆர்கன் சிட்டி செண்டரின் அருகில் இருந்த அந்த பெரிய ஆட்டோமோட்டிவ் பார்ட்ஸ் விற்பனை செய்யும் கடையில் இன்று வரசொல்லியிருந்தனர். நகரின் மிக முக்கியமான கடை என்பதால் பகுதி நேர வேலைகள் நிறைய இருந்தன. இன்று நேர்கானலில் தேர்வானால், அடுத்த வார திங்கட்கிழமையில் இருந்து பகுதி நேர வேலையில் சேர்ந்து கொள்ளலாம்.
சதீஷிற்கு இந்த வேலையும், அதில் கிடைக்கும் உபரி வருமானமும் அவசியம் என்றில்லாவிட்டாலும், விவேக் தனியாக செல்வானே என்ற காரணத்திற்காக தானும் உடன் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தான். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரோனால்ட் தானும் வருவதாக தெரிவித்தான். சிறிது நேரத்தில் விவேக் தயாராகி வர, சதீஷ் மற்றும் ரானுடன் வில்லியம்ஸின் ஹோண்டா சிவிக் காரிரை வாங்கிக் கொண்டு, ஆர்கன் டவுன் ஸ்குவேரில் அமைந்துள்ள “பெஸ்ட் ஆட்டோ பார்ட்ஸ்” கடையினை நோக்கி பயணித்தனர்.
வழியில் ரான் மட்டுமே பேசிக் கொண்டு வந்தான். விவேக்கும், சதீஷும் அவரவர் எண்ணத்தில் மூழ்கியிருக்க, ரானின் பேச்சு கேட்பாறில்லாமல் காற்றில் கரைந்து போயிற்று. சிறிது நேரப் பயணத்தில் ஆட்டோ பார்ட்ஸ் கடை வந்துவிட்டிருந்தது. ஆர்கன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் ஏற்கனவே கடையின் பகுதி நேர ஊழியர்களாக இருந்ததால், மூவருக்குமே வேலை கிடைத்தது.
“ஷேல் வி கிராப் சம்திங் டு ஈட்?”என்று ரோனால்ட் தன் வயிற்றை தடவிக் கொண்டு மொழிய, மூவரும் ஆர்கன் சென்டிரல் பார்க்கின் அருகில் நின்றிருந்த பல ஃபுட் ட்ரக்குகளில் இருந்து ஆளுக்கு ஒரு சாண்ட்விச்சும், டயட் கோக்கும் வாங்கிக் கொண்டு, பார்க் பென்சில் சாவகாசமாக அமர்ந்து மதிய உணவை உண்ணத்துவங்கினர்.
சுஜினியைப் பற்றி எப்படி பேச்சை எடுப்பது என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்த விவேக்கிற்கு தோதாக, சதீஷே சுஜினியைப் பற்றி பேசத் துவங்கினான். ரான், இருவர் பேசுவதையும் காதில் போட்டுக் கொண்டே, தன் ஹேம்–சீஸ் சாண்ட்விச்சின் மீது முழு கவனத்தையும் வைத்திருந்தான்.
“சோ, நேத்து அந்த பொண்ணுகிட்ட ஃபோன் நம்பர் வாங்கினயே….மெசேஜ் பண்ணியா? ரிப்ளை பண்ணாளா?”என்று கோக் பாட்டிலை ஒரு தரம் உரிஞ்சி உள்ளிளுத்துவிட்டு சதீஷ் வினவினான். விவேக்கிற்கு சதீஷ் தானாக இந்தப் பேச்சை எடுத்தது வசதியாக இருந்தது.
“ம்ம்…நான் அனுப்பினேன்..அவ ரிப்ளை பண்ணலை…”என்ற விவேக், சதீஷ் அடுத்து ஏதேணும் பேசி, வேறு டாபிக் மாற்றும் முன்னர், “சத்தீ, எனக்கு இந்தப் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு மச்சி…அவளை எப்படி இம்பிரஸ் பண்ணறதுன்னு கொஞ்சம் சொல்லேன்…”என்று விஷயத்தை வெளிப்படையாக சதீஷிடமும், ரானிடமும் சொல்லியிருந்தான். ரான், சதீஷின் முகம் எங்கேணும் மாறுதல் காட்டுகிறதா என ஆராய்ந்தவன், அர்த்தமுள்ள பார்வையை சதீஷிடம் செலுத்தினான்.
சதீஷிற்கு, ரானின் பார்வை புரிந்து தான் இருந்தது. அதைவிடவும், விவேக்கின் அவசரம் கலந்த பேச்சு சிரிப்பை வரவழைத்தது. “எங்க நான் சுஜினியை பிடிச்சிருக்குன்னு சொல்லிடுவேனோன்னு அவன் முந்திகிட்டு சொல்லறான் பாரு”என்று மனம் நினைத்த போதும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “டே, நானே ஒரு லவ் ஃபெயில்யர் கேஸ்…எங்கிட்ட ஐடியா கேட்கற…ரான் கிட்ட கேளு…இதுவரைக்கு என்ன ஒரு ஆறு ஏழு லவ் பண்ணியிருப்பான், இல்ல ரான்”என அமைதியாக தான் உண்டு தன் சாண்ட்விட்ச் உண்டு என இருந்த ரோனால்டை பேச்சில் சேர்த்துக் கொண்டான்.
“வாட்? யு ஆர் ஆஸ்கிங்க மீ?”என்று ரான் சிரித்த போதும், ஆர்வமாக தன் அறிவுரைக்காக காத்திருந்த விவேக்கைக் காண பாவமாக இருந்தது ரானிற்கு. அதனால் தன் அனுபவங்களை கொஞ்சம் பகிர்ந்து கொண்டான். ஜூனியர் ஸ்கூலில் தன் காதலி ஹெலென், ஹை ஸ்கூலில் உடன் பயின்ற கெல்லி, வீட்டின் அருகே இருந்த மெல்லிசா என ஆறு ஏழு பெண்களைப் பற்றி, அவர்களுடன் ஏற்பட்ட பிரிவுகள் குறித்தும் தயக்கமின்றி பகிர்ந்து கொண்டான்.
“டே, உன் கர்ள்ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டா விவேக் கேட்கறான். அவனுக்கு எப்படி அந்த பொண்ணை இம்பிரஸ் பண்ணறதுன்னு டிப்ஸ் மட்டும் சொல்லு”என்று சதீஷ் கலாய்க்க, கன்னத்தில் செம்மை படர்ந்தது ரானிற்கு.
“ஒ.கே…உங்க நாட்டு பொண்ணு பத்தி எனக்கு ஐடியா இல்லை.. பட் பேசிக்கலி பொண்ணுக இப்படி இப்படி இருப்பாங்கன்னு ஒரு கெஸ் இருக்கு…அதை வேணா சொல்லவா?”என்று ரான் சீரியஸாக கேட்க, விவேக் தலையை தலையை அசைத்தான். தன் மதிய உணவில் கருத்தாக இருந்த சதீஷும் கூட, ரான் என்ன தியரி சொல்லப் போகிறான் என்பதைக் கேட்க ஆவலாக இருந்தான்.
“சீ கைஸ்…. பொண்ணுகளுக்கு பின்னாடியே போய் பேசறது, அவங்களுக்காக வெயிட் பண்ணறது இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். அதாவது, தனக்காக இவ்வளோ டைம் ஸ்பெண்ட் பண்ணறான்னு நினைப்பாங்க… ஒன்லி திங் தே வாண்ட் இஸ் யுவர் அடெண்ஷன் அண்ட் டைம்..”என்று தன் அபிப்பிராயத்தை ஆங்கிலத்தில் மொழிந்தான். ரானின் கருந்து மற்ற இருவருக்குமே ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது.
“முதல் பால்லையே நான் அவுட்.. என்னால அவளோ டைம்லாம் ஸ்பெண்ட் பண்ண முடியுமா என்ன? ஆனா விவேக் பொறுமைசாலி. நிஜம்மாவே ரொம்ப நல்லவன். உண்மையா சொன்னா எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா அவளை விவேக்கு கண்ணைமூடிட்டு கல்யாணம் பண்ணிவைப்பேன். விவேக் அவளோ நல்லவன்” என ரானின் முதல் அறிவுவுரையைப் பற்றி தன் மனதில் நினைத்துக் கொண்டான் சதீஷ்.
[the_ad id=”6605″]
“குட்…சோ, அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்..ஆனா எங்க? எப்போ பார்த்து பேசிக்கறது? ஏதாவது ஐடியா குடுடா சத்தீ” என விவேக் ரானின் யோசனையை ஏற்றுக் கொண்டு, சதீஷிடம் வினவினான். சிறிது நேர யோசனைக்குப் பின்,
“விவேக், மண்டேல இருந்து நாம வீக்லி ஃபோர் டேஸ், பார்ட் டைம் ஜாப்க்கு கேம்பஸ்ல இருந்து டவுன் ஸ்குவேர் வரணும். அதே மாதிரி, நைட் ஒன்பது மணிக்கு வேலை முடிச்சுட்டு திரும்பணும்…சோ, அந்த பொண்ணு, அவ ரெஸ்டரெண்ட் வேலை முடிச்சிட்டு எப்போ வர்றா என்ன ஏதுன்னு கண்டுபிடி… டெய்லி அவகூட நடந்து வர்ற மாதிரி பார்த்துக்க. கேஸ்யுவலா இருக்கும். அப்பட்டமா அவளுக்காக கூட நடக்கற மாதிரி தெரியாது. அதே சமயம், டவுன் ஸ்குவேர்ல இருந்து கேம்பஸ்ஸுக்கு நடந்து வர எப்படியும் டுவண்டி மினிட்ஸ் ஆகும்…சோ, வாரத்தில நாலு நாள் அவ கூட நீ ஸ்பெண்ட் பண்ணலாம்…என்ன…”என்று சதீஷ் கூறிய யோசனை, விவேக்கிற்கு சதீஷின் மேல் இருந்த சந்தேகம் அனைத்தையும் போக்கியிருந்தது.
“யா, இந்த யோசனை ரொம்ப பெட்டர்…அந்த பொண்ணு கூட நீ க்லோஸ் ஆக இது நல்ல ஒரு வாய்ப்பா இருக்கும்”என ரானும் தன் சம்மதத்தைத் தெரிவித்தான். அதுமட்டும் இன்றி, சுஜினியின் மீது சதீஷிற்கு எந்த எண்ணமும் இருக்க வாய்ப்பில்லை என்று விவேக்கிற்கு நன்றாக விளங்கியிருந்தது. அப்படி ஏதேணும் இருப்பின், இப்படி நல்ல யோசனையை வழங்கியிருக்க மாட்டான் அல்லவா என மனம் சமாதானம் அடைந்தது.
அதைவிடவும், தன் மனதில் சுஜினியைப் பற்றி இப்படி அபிப்பிராயம் இருப்பதையும் சதீஷிடன் சொல்லிவிட்ட மகிழ்ச்சியில் திளைத்தது. இந்த இனிய மன நிலையுடனேயே அந்த வார இறுதி இனிமையாகக் கழிந்தது.