செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 26
‘மெட்ராஸ் சென்ட்ரலில் இருந்து அடுத்த ஐந்து நிமிடத்தில் தில்லிக்குப் புறப்படவிருக்கும்…’ என்ற அறிவிப்பு, துளசி காதில் எட்டும் வரை இருந்த லாவக தன்மை மாற ஆரம்பித்தது.
அந்த நிமிடம் வரை.. “மூர்த்தி சார்.. பாத்தீங்களா? யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வருமாம். இது பழமொழி! நீங்க மட்டும் சும்மா சும்மா உங்க அம்மா அப்பாவ பாக்க போவீங்கல்ல.. இப்போ பாருங்க, நான் போறேன் என் அப்பாவ பாக்க. அழாம டாட்டா சொல்லி அனுப்புங்க” என்று மூர்த்தியிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாள்.
“நீ சொல்றது புதுமொழி. ‘ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்’.. இது தான் பழமொழி! அது இருக்கட்டும், நீ பத்திரமா போயிட்டு வா.. அப்பாவ பாத்ததும் என்னை மறந்திட மாட்டியே..” என்று புன்னகைத்தவனிடம்
“தெரியல மூர்த்தி சார். நினைவுல வச்சிருக்க ட்ரை பண்றேன்..” கிளுக்கி சிரித்தாள்.
“எல்லாம் என் நேரம்… ரெண்டு நாளுக்கு ஒரு தரம் நாலு மணி வாக்கில காலேஜுக்கு ஃபோன் போடு. அங்க பேச முடியலனா மாமி வீட்டுக்கு ஃபோன் போடு” என்றவனிடம்
“பாக்கறேன் மூர்த்தி சார். நான் அங்க பிஸியா இருப்பேன்..” என்று அதற்கும் பதில் பேசியவள்
“நைட்டுக்கு தயிர் சாதமும் மாமி வீட்டு மா வடுவும் வச்சிருக்கீங்கல்ல?” மறக்காமல் அவளின் சோற்று பிரச்சினையைக் கவனித்தாள்.
“இருக்கு துளசி மா… “
“நாளைக்கு காலைக்கு சாப்பிட புளியோதரை?”
“இருக்கு மா.. கூட்டிட்டு போற தடியன் பட்டினி போட மாட்டான் துளசி. அங்க போன பிறகு ஷாப்பிங் ஏதும் போறனா உன் கிட்ட இருக்க பணத்தில வாங்கிக்கோ.. யார் கிட்டயும் கேட்டுட்டு இருக்காத. உலகத்தில எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. யார் எது ஓசியா கொடுத்தாலும்.. கவனாம இரு! ஒழுங்கா சாப்பிடு. நல்லா தூங்கு!”
“ம்ம்.. நீங்களும் பத்திரமா ஊருக்கு போயிட்டு வாங்க..”
[the_ad id=”6605″]
“நீ வந்த பிறகு தான் போகணும். நீ ரொம்ப பத்திரமா இருந்துக்கோ. அவன் கிட்ட சண்டை போட்டு பர்ஸ்ட் க்ளாஸ் கூபே கம்பார்ட்மெண்ட் டிக்கெட்ட மாத்தி வாங்கினதே நீ தனியா இல்லாம கூட்டத்தோட இருக்கணும்னு தான். நைட் நேரம் பாத்ரூம் போகும் போது பத்திரம் துளசி மா. புது ஆட்கள் கூட எல்லாம் ரொம்ப பேசாத. அவங்க குடுக்கறத வாங்கி சாப்பிடாதா…” அவன் நூறாவது முறையாக ஆரம்பிக்கவும்..
“மூர்த்தி சார்… காதுல ரத்தம் வருது. நிறுத்துங்க. நான் ஒண்ணும் பேபி இல்ல… பத்திரமா போவேன்..” என்றெல்லாம் பீத்தல் பீதாம்பரமாய் பேசிக் கொண்டிருந்தவள்.. ப்ளாட்ஃபார்ம் அறிவுப்பு வரவும் அப்படியே பல்டி அடித்தாள்.
“நான் போக மாட்டேன்… மூர்த்தி சார். என்னை இங்க இருந்து கூட்டிட்டு போங்க.. எனக்கு யாரையும் பாக்க வேண்டாம்” என்று ஆரம்பித்தாள்.
அவள் அவஸ்தை புரியாமல், “வா கோமல் கிளம்பலாம்” என்ற ரிஷியின் அழைப்பு, அவள் எரிச்சலைக் கிளப்ப..
“நீ போ… எனக்கு தெரியும்” என்று அவனிடம் எரிந்து விழாத குறையாக அவனை விரட்டினாள்.
‘பளார்’ என்று இரண்டு வைத்து தர தரவென இழுத்து செல்ல மனம் துடித்தாலும், அவள் அருகில் நிற்பவனை பார்த்தபின் அப்படி ஒரு எண்ணம் எண்ணத்தில் மட்டும் தான் வரும்.
வாட்டம் சாட்டமாக பத்து பேரைக் கூட ஒரே நேரத்தில் அடித்து வீழித்திவிடுவான் போன்ற திடகாத்திரம் அவனிடம்.. இருந்தும் அந்த குட்டி பெண் மகுடிக்கு, பாம்பாய் ஆடினான். மற்றவரிடம் மகாராணி தோரணை காட்டும் அவளும் எதிரில் நிற்பவனிடம் குழந்தையாய் குழைய… பார்த்து நின்ற ரிஷிக்கு பற்றிக் கொண்டு வந்தது. இன்னும் எவ்வளவு நேரம் இதைச் சகிக்க வேண்டும் என்றிருந்தவன் வயிற்றெரிச்சலுக்கு பாலாய் இறங்கியது ப்ளாட்ஃபார்ம் அறிவிப்பு.
“சீக்கிரம் வா..” எழுந்த கோபத்தைத் துளி அளவு கூட காட்டாமல் தன்மையாய் கூறி விட்டு இரயில் பெட்டிக்குள் சென்றான். இவன் பாம்பா பழுதா? இன்னும் தெரியவில்லை.
இந்த நிமிடம் வரை மூர்த்தியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தவள் கண்கள் குளம் கட்ட ஆரம்பித்தது. முந்தானை நுனி எப்பொழுதும் போல் விரலில் சிக்கி இழுபட.. இதை எதிர்ப்பார்த்திருந்தவன்.. “துளசி மா…” என்று ஆரம்பிக்கவும்
“கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? எப்போ பார் துளசி மா.. துளசி மான்னு.. இப்போ நான் போகணும்ன்னு என்ன அவசியம் வந்துது? என்னை பெத்து வேண்டாம்ன்னு தூக்கிப் போட்டவர் எக்கேடு கெட்டு போனா எனக்கு என்ன? அது வீடா? புதை குழி… ரெண்டே நாள்ல மூச்சு முட்டி செத்தே போயிடுவேன். சொல்ல சொல்ல கேக்காம அங்க போய் அனுப்பு வைக்கறீங்க? உங்களுக்கு என்னைப் பிடிக்கவே இல்ல…” ஆவேசமாகக் கத்த ஆரம்பித்தவள் தேம்பும் நிலையைத் தொட்டிருந்தாள்.
இரண்டாம் வருட கல்லூரி விடுமுறை ஆரம்பித்திருக்க… சொல்லிச் சென்றது போலவே வந்து நின்றான் ரிஷி. “மாமா படுத்த படுக்கையா இருக்கார். எப்போ மூச்சு நிக்கும்ன்னு தெரியல வந்து ஒரு தரம் தலைய காட்டிட்டு போ.. நிம்மதியா மூச்சு நிக்கும்” என்று அழைத்தான்.
[the_ad id=”6605″]
அவள் எதற்கும் மசியவில்லை. ‘போடா டேய்… நீயும் உன் மாமனும்! அங்க வந்தா என் மூச்சு தான் நிக்கும்’ என்றுவிட்டாள். அப்பா என்ற ஆசை இருந்ததே இல்லை. தேவைப்பட்டு ஒரு முறை அடைக்கலத்திற்குச் சென்றாள். அது கிடைக்கவில்லை. வாஞ்சையோடு ஒரு முறை அப்பாவின் தோள் சாய்ந்தாள்… அதன் பின் அப்பா என்ற நபரை வீட்டில் பார்க்கக் கூட முடியவில்லை. அவளுக்கு அப்பாவாக இல்லாத அப்பாவை நினைத்தது கூட இல்லை. அதனால் அவசரமாக தானே சென்று கில்லட்டினில் தலை கொடுக்கும் பேராவல் எழவில்லை.
அவளுக்கு அன்பான அப்பா என்றால்.. அதுவும் அவள் மூர்த்தி சார் தான்.
மூர்த்தி காதில் ரிஷி வந்த விஷயத்தைப் போட, அவள் மறுக்க மறுக்க.. இதோ, “பெற்றவனை ஒரு முறை கண்டுவிட்டு வா” என்று அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறான்.
“பச்… கிளம்பற நேரம் என்ன பேச்சிது? போயிட்டு அப்பாவ பாரு. இருபதே இருபது நாள் தான். பிடிச்சா மேல இரு. இல்லியா இந்த தடியன கூட்டிட்டு வந்து விட சொல்லு. மாட்டேன்னு சொன்னா.. எனக்கு ஃபோன போடு.. ரெண்டே நாள்ல அங்க இருப்பேன்…”
“உங்களுக்கு லீவ் விட்டப்புறம் கூட்டிட்டு போங்களேன். ரெண்டு பேருமா போயிட்டு ஒண்ணாவே வந்திடலாம். தங்க கூட வேண்டாம்..” இதே கேள்வியை அவளும் சலிக்காமல் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறாள்.
“அவன் உங்க அப்பாக்கு ரொம்ப முடியலன்னு வந்து நிற்கிறான். ரெண்டு வாரம் தாங்க மாட்டார்ன்னு சொல்றான். போயிட்டு வா துளசி மா..”
“இப்போவே என் கூட வாங்க…” சிணுங்க ஆரம்பித்தாள்.
“வந்திருப்பேன்.. உனக்கே தெரியும், அக்காவும் தங்கமும் ரெண்டு நாள்ல வராங்க. அவ ரொம்ப அழறாளாம். நான் வர முடிஞ்சா உன்ன தனியா அனுப்புவேனா?”
“போங்க மூர்த்தி சார்… எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருக்கீங்க! இப்போ எனக்குத் தான் உங்கள பிடிக்கல..”
“கோமல்…?” நடை மேடையில் நின்றிருந்தவளை ரிஷி உள்ளே வருமாறு அழைத்தான்.
“கடங்காரன் மாதிரி படுத்தரான் மூர்த்தி சார். இவன பார்த்தாலே எரிச்சலா வருது. இந்த எருமை எப்போ பாரு என்னை அறைவான் தெரியுமா. அவன் சொல்லுவான் என் கால ஒடச்சு அடுப்பில வைப்பான்னு.. இந்த ஜென்மத்த பாத்தாலே அப்போ எல்லாம் பயமா இருக்கும். இப்போ மாட்டும் வீட்டுக்குப் போனதும், என் கிட்ட வரட்டும் கைய ஒடைச்சு அடுப்பில வைக்குறேன்..”
மூர்த்தி சிரித்துக்கொண்டே “வா.. உள்ள போகலாம்..” உள்ளே அழைத்துச் செல்ல, “என்னை அடிச்சான்னு சொல்றேன்… சிரிக்கறீங்க?” எரிந்து விழுந்தாள்.
அவளுக்கு செல்ல விருப்பமில்லை. அதனால் வந்த எரிச்சல். அவனுக்குப் புரியாமல் இல்லை. பெற்றவனின் கடைசி நாட்களில் அவருக்கு நிம்மதி கொடுக்க நினைத்தான். இன்று இல்லை என்றாலும்.. என்றாவது ஒரு நாள் பெற்றவனை ஒரு முறை பார்த்திருக்கலாம் என்ற எண்ணம் அவளை வருத்தக் கூடாது என்பதற்காகவே வற்புறுத்தி அனுப்பிவைக்கிறான். அவளுக்கும் அது புரியாமலில்லை.. ஒத்துக்கொள்ள மனமில்லை.. அவ்வளவு தான்.
“போகும் போது சிரிச்ச முகமா கிளம்பு. நீ வந்ததும் உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு, ஊருக்கு அன்னைக்கே நான் கிளம்பிடுவேன். சோ.. இதுக்கப்புறம் நாம ஒழுங்கா பாத்துப் பேச நாப்பது நாள் ஆகும்!”
பெண் முகம் சூம்பிப் போனது..
அவள் இருக்கை வரை கூட்டிச் சென்று விட்டான். சக பயணிகளை நோட்டம் விட்டான். ரயில் கிளம்ப நிமிடமே இருக்க… “பார்த்துக்கோ” என்று ஹிந்தியில் ரிஷியிடம் கூறியவன்.. “பாத்து போயிட்டு வா துளசி..” என்றான்.
அவள் கண்ணிலிருந்து நீர் கொட்டவா என்று அவனைப் பார்த்துத் துடித்து நிற்க அவனுக்குமே எப்படியோ போல் ஆகிவிட்டது. அவன் நகரவும் கூடவே நடந்தாள். கதவின் அருகில் செல்லவும் எதையும் யோசிக்காமல் மூர்த்தியில் விரலைப் பிடித்துக் கொண்டாள். “வேண்டாம் மூர்த்தி சார். நான் போகல. எனக்கு எதுவோ தப்பா படுது. அவங்க யாருக்கும் என்னைப் பிடிக்காது.. கொடுமை படுத்துவாங்க. இப்போ மட்டும் எங்க இருந்து பாசம் வழியுதாம்.”
அவனின் செல்ல மகள் போல் பார்த்துக் கொண்டவளை அனுப்பி வைக்க அவனுக்கு மட்டும் வேண்டுதலா? “ஒண்ணும் இல்ல துளசி மா. உன் அப்பா.. உன் சின்னம்மா.. ரெண்டு பேர் கிட்டயும் ஃபோன்ல பேசிட்டு தான் அனுப்பி வைக்குறேன். உனக்காக காத்திட்டு இருக்காங்க. பாம்பே பத்தி மூச்சு விடாத. எதனாலும் தைரியமா ஃபேஸ் பண்ணு.. அது உன் அப்பா வீடு..”
மூர்த்தி கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். “என்னோடு வா” என்றாள். “போக வேண்டாம்” என்றாள். ரயில் கிளம்ப ஆரம்பித்தது. அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.. “சென்று வா” என்றுவிட்டான்.
“நம்ம வீட்டுக்கு போலாம் மூர்த்தி சார்.. நான் அங்க போகல. அவங்க என்னை ஏதாது செஞ்சிடுவாங்க. கூடவே இருப்பேன்னு.. கிடைச்ச ஃபர்ஸ்ட் சான்சுலயே கழட்டி விடறீங்க… நீங்க ரொம்ப மோசம். வீட்டுக்கு வரேன்.. நான் போக மாட்டேன்.” தைரியம் எல்லாம் வடிந்து.. அழ ஆரம்பித்தாள்.
[the_ad id=”6605″]
பிஞ்சு விரலை பிரிக்க பாடாய் பட்டுவிட்டான். முதல் முறை அவனை பற்றிய விரல்களை பிரிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. விரலை மெல்ல பிரித்து எடுத்துவிட்டுக் கொண்டே.. “உலகத்தில நீ எந்த மூலைக்கு போனாலும் தைரியமா இருக்கணும். உடம்ப பாத்துக்கோ. மனச போட்டு குழப்பிக்காத. பத்திரம் துளசி மா! நீயே ஆச பட்டா கூட நான் உன்ன விடமாட்டேன். சந்தோஷமா போயிட்டு வா” ஓட ஆரம்பித்த ரயிலிலிருந்து இறங்கினான். “நீ என் உயிர் துளசி..” நடை மேடையில் நின்றிருந்தவன் தலை மறையும் வரை பார்த்தே நின்றாள். என்ன முயன்றும் கண்ணில் நீர் நின்றபாடில்லை.
கைக்கட்டி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன், “சீட்டுக்கு போலாமா?” என்று கேட்கவும், ‘இவன் எதுக்கு வந்தான்?’ நினைத்தவாள், திரும்பாமலே.. கண்ணை அழுத்தித் துடைத்துக் கொண்டாள். கொஞ்சல், சிணுங்கல், குழந்தைத் தனம் மூர்த்தியோடு சென்றிருக்க, ஒன்றும் நடவாதது போல், “ம்ம்…” என்று அவனை முன்னே செல்லுமாறு கை அசைத்தாள்.
‘இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல..’ என்று நினைத்தவன், “ஹப்பா.. எப்படி தான் பாக்கிறவன் மேல எல்லாம் ஆசை பீராஞ்சுகிட்டு வருதோ?.. ச்சீ..”, சத்தமாக முணுமுணுத்துக் கொண்டே நடந்தான். காதில் விழுந்தாலும், அவன் பேச்சு அவளைக் காயப் படுத்தவில்லை என்பதால் பதில் பேசாமல் பின்னோடு நடந்தாள்.
ரயில் நிற்கும் வரை தான் தேள் கொட்டுமா இல்லை மீண்டும் அடுத்த ரயில் ஏறும் வரை விஷத்தை விழுங்க வேண்டி வருமா? அவளுக்குத் தெரியவில்லை. அவன் முகத்தில் கோபமோ வெறுப்போ எதுவும் இல்லை. இவன் நல்லவனா? கெட்டவனா? முகத்திலிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
‘இவன் எல்லாம் ஒரு ஆளா’ என்பது போல் ஓடிக்கொண்டிருந்த மரங்களைப் பார்க்க ஆரம்பித்தாள். ஜன்னல் வழியே மரங்கள் பின்னோக்கி செல்ல முதன் முதலாய் மூர்த்தியோடான பயணம் நினைவில் வந்தது. மனம் லேசானது.
‘மூர்த்தி சார்..’ அன்று உடல் நலம் சரியாகி விடுதிக்குச் செல்ல வேண்டிய நாள் தான் கடைசியாக மூர்த்தியை தொட்டது. அதன் பின் இன்று. கை விரலைப் பார்க்க அவன் தான் தெரிந்தான். அப்பேர் பட்ட முரடனுக்கு அவள் பிஞ்சு கையை விலக்குவதில் தான் எத்தனை சிரமம்? கண் மூடி சாய்ந்து கொண்டாள். அசை போட ஆயிரம் நினைவுகள் இருக்க அனைத்தும் அலை அலையாய் நெஞ்சைத் தொட்டு இதமாய் வருடிச் சென்றது.
“கண்ண மூடுங்க மூர்த்தி சார்..” என்றாள், அன்று கிளம்பும் வேளை.
ஏன் என்றே கேட்காமல் கண் மூடியவன் கழுத்தில் அவள் வாங்கிய தங்கச் சங்கிலி போட உயரம் எட்டவில்லை. “கண்ண திறந்துட்டு உக்காருங்க!” அமர வைத்து தலை வழி போட முடியாத சின்ன சங்கிலியைக் கழுத்தைச் சுற்றி போட்டு அதன் கொக்கியை கடித்து இறுக்கிவிட.. அவன் மீசை உரசிய அவள் கன்னம் இன்று குறுகுறுத்தது. அவன் பார்த்த பார்வை.. அவன் பேசிய வார்த்தைகள்… இதழ் தானாய் விரிந்தது.
அன்று மடியில் வைத்து காதல் பேசியவன் அதன் பின் அத்தகைய பேச்சும் பேசவில்லை… காதல் பார்வையும் பார்க்கவில்லை. காதல் ரோமியோ மீண்டும் கணக்கு வாத்தியாக மாறியிருந்தான்.
கடைசியாக வெளியே செல்லும் முன், “என்னை உங்க தங்கமா நினைச்சுக்கோங்க..” என்றவளை அவன் புரியாத பார்வை பார்க்கவும் கட்டி அணைத்திருந்தாள். முறுக்கேறியிருந்த தசையை உணரவில்லை… கருங்கல் தேகத்திற்குள் புதைந்திருந்த மென்மையான அந்த இதயத்தின் ஓசை.. இதோ இந்த இரயில் சத்தத்திற்கு நடுவிலும் நன்கு கேட்கிறதே.. “நீ என் தங்கம் தான் துளசி..” என்று தலை வருடி விட்டானே.. உச்சந்தலையிலிருந்து கீழ் நோக்கி இறங்கியது மெல்லிய மின்சார அதிர்வு.
“காதலா துளசி?” மனம் கேட்டது. உதட்டுக்குள் கள்ளச் சிரிப்பு வந்து மறைந்தது. காதலோ எதுவோ.. மூர்த்தியின் நினைவில் மூழ்கிப் போகப் பிடித்தது. இன்று நேற்று இல்லை… உடல் நலம் சரியாகிச் சென்ற அன்றிலிருந்தே அவன் நினைவில் மூழ்கிப் போவதே முழு நேர வேலையாகிப் போனது.
அவள் உள்ளம் போல் இல்லாமல் வெளியே இருள் கவ்விக்கொண்டிருக்க… நிலா மங்கை வந்திருந்தாள். நிலவும் தென்றலும் கூட சுடுமா? தலைவன் இல்லை என்றால் எல்லாம் சுடும் என்று தான் தோன்றுகிறது. சுசீலா அவர்களின் திறன் இருந்தால் கண்டிப்பாகப் பாடியிருப்பாள்.. “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு..” பாடல் வரிகள் உள்ளுக்குள் இசைக்க.. கண்ணை மூடிக் கொண்டாள்.
உள்ளுக்குள் எழுந்த பிரகாசம் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும்.. அவள் முக பாவங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவன், “என்ன லவ்வா?” என்றான். கண் திறந்து பார்த்தாள். அவன் முகத்தில் இளக்காரம். பதில் கூற பிடிக்கவில்லை. மீண்டும் கண் மூடிக் கொண்டாள். எப்படி கண்டுகொண்டான்?
காதல் வந்தால் முகம் காட்டி கொடுத்துவிடுமோ? ராட்னிக்கு கூட தெரிந்திருந்ததே?. ஒரு நாள் தானே மூர்த்தியோடு தன்னை பார்த்தான்? கண்டுகொண்டானே? ஒலிநாடா பதிவின் போதே கேட்டுவிட்டான்.
ராட்னி..! இன்று இங்கிலாந்தில் இருப்பான். அவன் பெற்றோர்களோடு. மனம் விமான நிலையம் சென்றது. இவளும் சென்றிருந்தாள் விமான நிலையத்திற்கு அவனை வழி அனுப்ப.
தமிழ் கலக்காத ஆங்கிலத்தில் பேசினான். “சில காதல்.. சொல்லாம கடந்து போறது அதுக்கு மரியாதை. சில காதலை மறைச்சு வைக்கிறது பாவம். நீ பண்றது தப்பு. உன் காதல ஒத்துக்கோ. வாழ்க்கை ரொம்ப அழகானது. மனசில இருக்க காதல மறைச்சு வாழ்க்கையை வீண் பண்ணாத. விரும்பிறவரோட சேர்ந்து வாழ பாரு. விட்டுட்டுப் போக நினைக்காத. அது துரோகம். அவர் முடிவ அவர் எடுக்கட்டும். அவருக்கு என்ன வேணும் வேண்டாம்ன்னு நீ முடிவு எடுக்காத. அந்த உரிமை அவருக்கு மட்டும் தான். உனக்கு வேணுமா வேண்டாமா.. அத மட்டும் நீ முடிவு பண்ணு! முடிவு நல்லதா எடு! நீ ரொம்ப அழகான பொண்ணு. உன் மனசு மாதிரியே உன் வாழ்க்கையும் நல்லா இருக்கும். என்னை மறந்திடாத.” விமானம் ஏறும்முன் கடைசியாக இவளிடம் கூறி சென்றான், ஒரு அன்பான நண்பனாக.
ஒலிநாடா பதிவின் போதே இவர்கள் காதல் பற்றி அவன் கேட்க இவள் கூறியிருந்தாள்.. “பிடிக்கும் ராட். அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஆனா அவருக்கு நான் பொருத்தமில்லன்னு தோணிட்டே இருக்கு!” என்று! அதற்கு தான் விமானம் ஏறும் முன் மூர்த்தியின் சிறந்த மாணவன் என்பதை அவன் லெக்சர் மூலம் நிரூபித்தான்!
“சாப்பிடலாமா?” ரிஷி அவளை விமான நிலையத்திலிருந்து மீட்டு வந்தான்.
கேட்டவன், கடையிலிருந்து வாங்கி வந்திருந்த உணவு பொட்டலத்தில் மூழ்க.. இவளும் தயிர் சாதம் மா வடுவோடு ருசி உணராமலே அதை கட்டிக்கொடுத்தவன் நினைப்பில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.
இரயில் பயணம் முடியும் வேளை மீண்டு வருவாள் என்று பார்க்க.. சென்ற இடத்தில் வெறுமை மீண்டும் மீள முடியா நினைவலைகளில் மூழ்கடித்தது.
ராஜனை பார்த்தாள். உருமாறியிருந்தார். பேச்சு திக்கித் திக்கி வந்தது. ரிஷி கூறியது போல் ராஜனின் நிலை இல்லை. உடல் தேறியிருப்பார் போல. பக்கவாதத்தால் படுத்த படுக்கை என்றாலும் கடைசி மூச்சிற்கு இன்னும் பல வருடம் இருந்தது. மகளைக் காக்கத் தவறியதில் அழுத்தம் கூடிப் படுத்துவிட்டாராம்.. மாதுரி கூறினாள்.
[the_ad id=”6605″]
என்ன புதுமையோ மாதுரி நன்றாகவே பேசினாள். ரிஷி வீட்டு பக்கம் வந்தாலும் அவளிடம் வரவில்லை என்பது நிம்மதி. விழுந்தடித்துக் கொண்டு ஓடும் அளவிற்குக் கொடுமையாக இருக்கவில்லை என்றாலும் நிமிடம் கூட கரைய மறுத்தது. ராஜன் அறையிலிருந்த ஒலி பதிவு பெட்டி, மாடியில் இருந்த அவள் அறைக்கு வரவும் ஒருவழியாகப் பழைய சினிமா பாடல்களின் வரிகளோடு நிமிடங்கள் கரைந்தது. நான்கு நாட்கள் நத்தையாக நகர்ந்தது. அவளுக்கு மட்டும் தான் அந்த வீட்டில் நேரம் கழியவில்லை. மற்றவர்கள் கால்களுக்குச் சக்கரம் தேவைப்பட்டது. வீட்டில் ஏதோ விஷேசம் என்றனர். வீட்டில் தோரணமும்.. சொந்தங்களின் சிரிப்பு சத்தமும் புது வரவு.
வந்த அன்று மூர்த்தியோடு பேசியது.. அடுத்த முறை அழைத்த வேளை அவன் கல்லூரிக்கு வந்திருக்கவில்லை என்றனர். மாமி வீட்டில் ஆள் இல்லாமல் போகவே மூர்த்தியோடு பேச இயலவில்லை. மூர்த்தியின் சத்தம் கேட்காமல் மூச்சு முட்டியது. அவன் இல்லாமல் வாழ முடியாது என்பது விடிவெள்ளி போல் பளிச்சென்று தெரிய.. “மூர்த்தியின் பாதியாக வேண்டும்” என்றது மனது.
அவளுக்கு மூர்த்தியோடு பேசவேண்டும். ஆனால் மூர்த்தி பேசும் நிலையில்லை என்று யார் அவளிடம் கூறுவது?
துளசி தில்லி மண்ணை மிதித்த மறு தினம் பானு, தங்கத்தோடு மெட்ராஸ் வந்திறங்கினார். வந்த அன்றே அவர் வந்ததின் நோக்கம் தெரிந்துவிட்டது. அடுத்து வந்த தினங்களில், தங்கம் மட்டும் தான் பேசி திரிந்தாள்.
“ஏதோ உன் காலேஜ்ல ஒரு பொண்ண பிடிச்சிருக்குன்னு சொல்லியிருந்தியே மூர்த்தி..”
அடுத்த நொடி, “ஆமா க்கா.. துளசி..” அவன் ஆரம்பிக்க..
“அவ வேண்டாம் மூர்த்தி” என்று முடித்துவிட்டார்.