செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 31_1
துளசி வந்து மூன்று வாரம் சென்றிருக்க, இன்னும் நான்கு நாட்களில், அவளுக்கும் மூர்த்திக்கும் திருமணம்.
வேலைகள் எல்லாம் வேகமாக நடந்தது. மண்டபம், அலங்காரம், கேட்டரிங், இவென்ட் மேனேஜரோடு பேச்சு வார்த்தை.. இப்படிப் பட்ட தொல்லைகள் இல்லாத கிராமப் புற திருமணம். கோவிலிலோ, திருச்சபையிலோ தாலி கட்டு முடியவும், அவர்கள் வீட்டை ஒட்டி இருக்கும் இடத்தில் விருந்து இருக்கும்.
பந்தலில் இருந்து விருந்து வரை அனைத்தும் ஊர் மக்களே எடுத்துச் செய்வதால், ‘எல்லாம் சரி வருமா’ என்று பயந்து நடுங்க வேண்டாம்.
எல்லா ஏற்படும் அதன் போக்கில் நடந்தேற துளசிக்கும் வீட்டு வாண்டுகளுக்கும் உடுப்புக்கு அளவு கொடுப்பது மட்டும் தான் வேலை. அதுவும் என்றோ முடிந்து போக அவர்கள் நாட்கள் என்றும் போல் சென்றது.
நகை வாங்கும் பேச்சு அடிபடவுமே கூறிவிட்டாள், “அப்பா நகை குடுத்துவிட்டாங்க அண்ணி.. அவர் பெட்டியில துணிக்கடியில வச்சிருந்தேன். அவர்ட்ட கேளுங்க அண்ணி” என. ஆகமொத்தம் அவளுக்கு துரும்பை தட்டி போடும் வேலை கூட இல்லாமல் போனது.
வந்த மறு தினம் முதலே பாரதி துளசி இடுப்பிலும்.. தங்கம் அவள் கைபிடித்தும், தோட்டத்தையும் குளத்தையும் சுற்றி வந்தனர். கருப்பனை கையில் பிடிக்கத் தான் முடியவில்லை. துளசி ஒரு பக்கம் கொஞ்சினால் தங்கம் ஒரு பக்கம் கொஞ்சுவாள். என்ன.. பாரதி கையில் மாட்டினால் மட்டும் அவனைப் பிச்சு பிடுங்கி விடுவாள் குழந்தை.
அனைவரும் துளசியோடு ஒட்டி உறவாடினாலும் நந்தினி மட்டும் அதிகம் வருவதில்லை. இழுத்துப்பிடித்து கடனே என்று, புன்னகை என்ற பெயரில் எதையோ உதிர்த்துச் செல்வாள். உள்ளுக்குள் எரிச்சல் இருந்துகொண்டே இருந்தது. ஏதோ அவள் வசந்த வாழ்வைப் பறித்தது துளசி தான் என்பது போல.
[the_ad id=”6605″]
பானு தோட்ட-வீட்டில் தங்கிவிட, தங்கம் மூர்த்தியே கதி என்று கிடக்க… அவனும் அவளைத் தாங்கு தாங்கு என்று தாங்க.. நந்தினிக்கு பொறுக்கவே முடியவில்லை. இப்படி தானே துளசியையும் கொஞ்சிக் கொண்டே சுற்றுவான்? அது தான் அவள் முழு எரிச்சலுக்குக் காரணம்.
மகள் துளசியைக் கண்டு எரிய.. தாயோ அப்படியே எதிர்ப்பதம். துளசியை அதிகம் செல்லம் கொஞ்சி தலை மேல் வைத்து ஆடியது பானு தான். கண்டிப்பாக அது மூர்த்திக்காக அல்ல. துளசியை உள்ளும் புறமும் மிகவும் பிடித்துப் போக அன்பு வெளிப்பட்டது.
வந்த அன்று, மூர்த்தியின் அன்புக்குரிய பானு தான் மூர்த்தியின் சகலமும் எனும்போது கண்டிப்பாக அவருக்கு அவளைப் பற்றி தெரியவேண்டும் என்று எண்ணியவள் அன்று இரவே அவள் வாழ்வை புரட்டிப் போட்ட அனைத்தையுமே கூறிவிட்டாள். உண்மை அறிந்த பின் முடிவெடுக்கட்டும் என்று விட்டுவிட்டாள். கூறியவள் கண்ணயர.. பளிங்கு சிலையை பார்த்தே அமர்ந்திருந்தவர் அன்று இரவு மட்டுமா மனம் கலங்கி அழுதார்?
மனம் எல்லாம் கனத்து போனாலும்.. அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. தம்பிக்கும் எந்த விதத்திலும் குறையாதவர் என்று நிரூபித்தார் பானு!
“எல்லாத்தையும் தலை முழுகிட்ட தானே… இன்னும் எதுக்கு அதை பத்தி பேசற? நான் தான் கடைசி. இதுக்கு மேல இத பத்தி நீ பேசவும் கூடாது. நினைக்கவும் கூடாது” என்று முடித்துவிட்டார்.
வந்த அடுத்த நாளிலிருந்தே மூர்த்தி வேலை என சென்றதும் காலை நேரங்களில் தங்கம் துளசியோடு இருப்பவள் மாலை ஆனால் மாமனின் கழுத்தை கட்டிக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிடுவாள். அவள் சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் செல்வன் வந்துவிடுவான் துளசியிடம் கதையடிக்க. இருவரும் ஒரே வயதை ஒத்திருக்க மாலை அந்த வேளைக்காக இருவருமே காத்திருக்க ஆரம்பித்தனர். வீட்டில் “ஏன்?” என்று கேட்பவரிடம் படிப்பதாகக் கூறி சமாளித்தான்.
சின்ன அண்ணன் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் “உன்ன விட ரெண்டு வயசு சின்ன பொண்ணு உனக்கு பாடம் எடுக்குது. இப்பவாது அரியர முடிச்சு உன் மானத்த காப்பாத்து”, என்று கேலி கூட செய்தார்.
இப்படி பட்ட வார்த்தை எல்லாம் கேட்டு வருத்தப்பட்டால் இத்தனை அரியரோடு வாழ முடியுமா என்ன? தூசி போல் தட்டி விட்டான்.
அங்கு மின்சார விளக்கிலிருந்து வரும் வெளிச்சம் சொற்பமே. அதை வைத்துக்கொண்டு படிக்கவெல்லாம் முடியாது. மண்ணெண்ணை விளக்கைக் கொண்டு தான் படிக்க வேண்டும். அங்கு தெருவிளக்குகள் கிடையாது. அதனால் இரவு எட்டு மணிக்குள் உணவு வரை முடிந்து ஊரே அடங்கி விடும். காலை சேவல் கூவும் முன் பலருக்கு விடிந்தும் விடும். இரவு உணவு முடியும் வரை கையில் புத்தகத்தை வைத்துகொண்டு துளசியோடு நேரம் செலவழிப்பது செல்வனின் வழமை ஆனது.
பாடம் சொல்லிதருபவளுக்கு அவித்த மரிச்சினி, மாங்காய், ஐனி சக்கை, அவித்த சக்கை குரு (பலா கொட்டை), வருத்த முந்திரி.. இப்படி எதையாவது தினமும் கொண்டு வருவான். வயிற்றை நிரப்பிவிடுவதில் தமயனை உரித்து வைத்திருந்தான் சின்னவன். கொண்டு வரும் பண்டத்தை ஒன்றாய் பகிர்ந்து உண்ணும் அளவு நட்பு நீண்டது. மூர்த்தியின் தம்பி என்றதால் அவளும்…. அண்ணி என்றதால் அவனும் எந்த நெருடலும், தடையுமின்றி நெருங்கினர்.
அன்றும் அப்படி தான் இருவரும் புத்தகத்தைத் திறந்த வைத்துக் கொண்டு சக்கை அடையை விழுங்கியபடியே படிக்க ஆரம்பித்தனர். படிப்பு அரை மணி நேரம் சென்றது, அதன் பின் ஆரம்பமானது ஊர் கதை. சிறிது நேரத்தில் பேச்சு தன்னால் அவளின் விடுதியை நோக்கிச் சென்றது. அவளின் வீர தீர செயலை கேட்டவன்…
“இது எல்லாம் ஒண்ணுமே இல்ல.. நான் எல்லாம் இத விட செய்வேன்” என்று ஆரம்பித்தான்.
[the_ad id=”6605″]
“நீ விஷயத்தை சொல்லு தம்பி… எது ஒண்ணும் இல்லன்னு அப்புறம் பார்ப்போம்.”
“நீ என் ஃப்ரெண்ட் அதனால சொல்றேன்… ஆனா நீ அண்ணாட்ட கூட இத பத்தி மூச்சு விடக் கூடாது. சத்தியத்துக்குக் கட்டு பட்டா மட்டும் தான் சொல்லுவேன். என்ன.. உன்னால என் சீக்ரெட்ட காப்பாத்த முடியுமா?”
அவன் பீடிகை, ஆர்வத்தைத் தூண்ட.. அவள் உள்ளங்கையில் ‘து’ என்று துப்பி.. “கையா காட்டு” என்று அவன் கையை பிடித்து சத்தியம் செய்தாள்.
“சட்டுன்னு சொல்லேன் செல்வா..”
“சும்மா பேச்சுக்கு சத்தியம் சொன்னா ஆகாத… கைல எல்லாம் துப்பணுமா..? சரி சொல்றேன் கேட்டுக்கோ..”
சுற்றும் முற்றும் பார்த்தான்… ஒருவரும் இல்லை. சுவாரசியம் கூட… ஆர்வம் தலைக்கேற, “இம்ம்… சொல்லு சொல்லு..” துள்ளினாள்.
“வீட்டுல எல்லோரும் தூங்கின பிறகு வெளில ஃப்ரெண்ட்ஸ்சோட விடிய விடிய ஊர் சுத்துவேன்.”
“என்ன தம்பி சொல்லற? எப்படி செல்வா? மாட்ட மாட்ட?”
“பச்… ஐயா ப்ளான் அப்படி. நைட் எல்லாரும் படுக்கிற நேரம் மூர்த்தி அண்ணா ரூம்-ல படிக்க போறாத சொல்லிட்டு உக்காந்துபேன். அண்ணா ரூம்க்கு மட்டும் ரெண்டு கதவு. லைட் ஆஃப் பண்ணிட்டு மண்ணெண்ணை விளக்க ஏத்தி வச்சிட்டு உக்காந்திருப்பேன். வீடு அடங்கினதும்.. அந்த ரூமோட சைடு கதவு வழியா வெளியில போய்டுவேன். எண்ணை தீந்ததும் விளக்கு அணைஞ்சிடும், அம்மா நான் தூங்கிட்டதா நினைச்சுபாங்க. நாங்க சினிமாக்கு.. மலைக்கு-ன்னு எங்கேயாது சுத்திட்டு விடியறதுக்குள்ள வந்திடுவோம். நைட் எல்லாம் கண் விழிச்சு படிச்சேன்னு என்னை அடுத்த நாள் எழுப்பக் கூட மாட்டாங்க. அப்போ ரெஸ்ட் எடுத்துப்பேன். நான் போறதும் தெரியாது வரதும் தெரியாது”
“அடபாவி… சமத்து மாதிரி இருந்துட்டு என்ன என்ன வேலை பண்ற? அடிக்கடி போவியா?”
“மாசத்துக்கு ஒரு தரமாது போவேன்..”
யோசிக்கவே பிரமிப்பாய் இருந்தது. ஊர் அடங்கிய பின் பேய் போல் தனியே.. உடல் சிலிர்த்தது. இயற்கையிலேயே இருக்கும் துடுக்குத்தனம் எட்டிப் பார்த்தது.
“ஏய் ஏய்.. என்னையும் கூட்டிட்டு போயேன் செல்வா..”
“நீ சின்ன பொண்ணு! உன்னால எல்லாம் முடியாது.”
“உன்னால முடியும் என்னால முடியாதா?”
“அண்ணாக்கு தெரிஞ்சா..?”
“அது தான்.. யாருக்கும் தெரியாம கூட்டிட்டு போக உனக்கு தெரியுமே?” அசால்டாய் பதில் கூறினாள்.
“பொட்டு வெளிச்சம் இருக்காது. பேய் பூதம் எல்லாம் சுத்தும்…” பயமூட்டினான்.
“பச்… நீ கூட நிஜமா தான் சொன்னேன்னு நினைச்சேன். நீ கத விட்டிருக்கிற. இதுக்கு என் ஹாஸ்டல் கதையே மேல்… ஏன்னா அது உண்மை..” அவனைச் சீண்டினாள்.
“நீ இருட்டுக்கு பயப்படுவன்னு தான் முன்னமே சொன்னேன்… ஒரு வார்னிங்க்காக!” சரணடைந்தான்.
“உண்மைன்னு கூட்டிட்டு போய் நிரூபி!” சவால்விட்டாள்.
“நிஜமாவா?” கூட்டாளி கிடைக்கவே அவன் கண் மின்னியது.
“இம்ம்..” வேகமாய் தலை அசைத்தாள்.
“நைட் ஒன்பதுக்கு எல்லாம் அக்கா தூங்கிடுவாங்க. தூங்கினதும் அரை மணி நேரம் கழிச்சு பின்னாடி வாசலுக்கு வா. மாட்டு கொட்டகை கிட்ட காத்திருக்கேன். வாழ்க்கையில நீ அனுபவிச்சே இருக்காத அனுபவம் உனக்கு காட்டறேன்.. மொத்தமா ரெண்டே மணி நேரம் தான். நடுராத்திரிக்குள்ள வந்திடலாம். போனதும் தெரியாது வந்ததும் தெரியாது.” என்றுவிட்டு சென்றான்.
வெளிச்சம் இல்லாத ஊரில், நான்கு நாளில் திருமணம் வைத்துக்கொண்டு இந்த சாகசம் எல்லாம் தேவை தானா என்று இருவருமே யோசிக்கவில்லை. மூர்த்தியிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. செல்வன் கூட்டிச் சென்று அவனே கூட்டி வந்து விட்டுவிடுவான். யாருக்கும் தெரியப் போவதில்லை என்று எண்ணியவள் வாய் திறந்தாளில்லை.
எட்டரைக்கு பானு உறங்கிவிட்டார். துளசிக்கு இதயம் அதி வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.. ஆர்வம் கூடியது. எங்குக் கூட்டிச் செல்லப் போகிறான்? அதுவும் தெரியாது. ஆனால் உள்ளம் துள்ளியது செய்யவிருக்கும் திருட்டுத் தனத்தை நினைத்து.
திருட்டு பயம் இல்லாத ஊர். வெளியே வயலுக்குச் செல்லும் வேளை கோழிக்கும் நாய்க்கும் பயந்து கதவைச் சாத்தி வைப்பார்களே ஒழியப் பூட்ட மாட்டார்கள். அப்படியே பூட்ட நேர்ந்தாலும் கட்டளை கால் மேல் தான் சாவி இருக்கும்.
அதனால் இருட்டில் திருடன் பதுங்கி இருப்பான் என்ற பயமில்லை. இரவில் சிலர் வீட்டின் உள் தூங்க, பலர் வராண்டாவின் கண்ணயர்வர். ஜன்னல் வழி வெளியே பார்த்தாள். இருட்டு அவளை வா என்று ஆசையாய் கரம் நீட்டி அழைத்தது.
‘இது உனக்குத் தேவையா துளசி?’ மனம் கேட்டது? பதில் எல்லாம் அவளிடம் இல்லை. என்ன தான் அப்படி அவன் காட்டப் போகிறான்.. பார்த்துத் தான் விடுவோமே என்ற ஆவல்.
அவன் கூறியது போலவே காத்திருந்தான். வீட்டின் அருகில் இருக்கும் சேனலை கடக்க வேண்டும் என்றான். அது ஒரு கட்டை பாலம். ஒரு கால் தான் பதிக்க இடம் இருக்கும். இருட்டில் டார்ச் வெளிச்சத்தில் அவன் வேகமாய் நடக்க… அவனுக்கு ஈடு கொடுக்க சற்று கடினமாகத் தான் இருந்தது.
இந்த வாய்க்காலோடு அவர்கள் கிராம எல்லை முடிய.. அவர்கள் சென்று கொண்டிருப்பதோ அடுத்த ஊர் எல்லைக்குள். இந்த எல்லைக் கோடுகள் எல்லாம் வெறும் பஞ்சாயத்திற்கும், அரசாங்கத்திற்கு மட்டும் தான் என்பதால் இன்று வரை அவர்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை.
இருவரும் பேசிக்கொண்டே செல்ல பாதை நீண்டு கொண்டே சென்றது. பகலில் அங்கு நடப்பதே கடினம். இரவில்.. அந்த சரிவான பாதையில்… வித்தியாசமான உருண்டை பரல்கள் கொண்ட நடைபாதையில் உருண்டு விழாமல் நடப்பதே பெரிய சவால் நிறைந்த சாகசம் தான்.
நீர் நிலையைத் தாண்டி, சாலையைத் தாண்டி, வயலை தாண்டி, வாழைத் தோட்டம் தாண்டி, வெள்ளரி தோட்டம் தாண்டவும்..
“யாப்பா… இன்னும் இவ்வளவு தூரம் பா?” என்று வாய் பிளந்தாள்.
எதிரில் தெரிந்த சின்ன மலையைக் காட்டினான். மலை என்றும் கூறலாம் குன்றென்றும் கூறலாம். மிஞ்சிப் போனால் நூறடி இருக்கும்.. அவ்வளவு உயரம் தான். ஆனால் பரந்து விரிந்து நல்ல அகலம். செங்குத்தான பாறை இல்லை என்பதான் அவன் எளிதில் ஏற.. கொஞ்சம் திணறினாலும் அவளும் ஏறிவிட்டாள்.
“உன்ன கொல்ல போறேன் பாத்துக்கோ. நிம்மதியா வீட்டுல தூங்கி இருப்பேன். எதையோ காட்டறேன்னு இருட்டில பூதம் மாதிரி தெரு தெருவா சுத்த விடுற!”
“உன் வாழ்க்கைல மறக்க முடியாத அனுபவமா கண்டிப்பா இருக்கும் மைனி.. புலம்பாம வா.. இன்னும் ரெண்டே நிமிஷம் தான்..”
வீட்டு மாடி போல் தட்டையாக இருந்தது. எதிரில் இரண்டாள் உயரத்துக்கு பெரிய பாறை. அருகே மற்றொரு பாறை. இரண்டு பறைகளுக்கு பின்னால் உயரமான செங்குத்தான பாறை ஒன்று. அதில் ஏற முடியாது. அங்குக் காண எதுவுமே இல்லை. மலை முடிந்து போயிருந்தது.
[the_ad id=”6605″]
அவன் நின்றுவிட.. “என்ன செல்வா? இது தானா? குட்டியா ஒரு மலை மேல நிக்கறோம். சுத்தி இருட்டு… ஏதோ நிலா புண்ணியத்தில எதிர்ல இருக்க நீ தெரியற… இதுல என்ன இருக்கு பாக்க? போ செல்வா..” சலித்துக் கொண்டாள்.
“இந்த ரெண்டு பாறைக்கு நடுவில சின்னதா கேப் இருக்கும்… கொஞ்சம் நசுங்கிட்டே தான் போகணும்… வா. ”
“செல்வா… உன்ட்ட சொல்றதுக்கு என்ன…? எனக்கு உங்கண்ணன்னா உயிர். அவருக்கும் என் மேல ரொம்ப இஷ்டம். இருந்திருந்து இப்போ தான் எங்களுக்கு கல்யாணம் ஆகபோகுது. இந்த நேரம் பாறை நசுங்கிச் சாக வேண்டாம் பா.. வா கிடைச்ச எக்ஸ்பீரியன்ஸ் போதும் வீட்டுக்கு போகலாம்.”
“மைனி.. சும்மா உளறாத. ஒண்ணும் ஆகாது. உன் சைசுக்கு ஈசியா போயிடலாம். வா.”
இருந்த ஆர்வம் எல்லாம் கரைந்திருக்க… இருட்டும், தனிமையும், பூச்சிகளின் சத்தமும் பயத்தை உள்ளுக்குள் கிளப்ப ஆரம்பித்தது. பயம் வரவும் முதலில் வந்து நின்றது அவள் மூர்த்தி சார் தான். கேட்டிருந்தால் மூர்த்தியே கூட்டி வந்திருப்பாரே.. நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மூர்த்திக்கு விஷயம் தெரிந்தால்? அவன் தான் அதிக பயத்தை ஏற்படுத்தினான். அவளால் மூர்த்தியிடம் மறைக்க முடியுமா? அவசர பட்டு செல்வனிடம் செய்த சத்தியம்?
“வா மைனி..” பாறைகளின் நடுவே பிதுங்கிக் கொண்டே இருவரும் மறுபக்க மலையை அடைந்தனர். அவள் முற்றிலும் வெளிவரும் முன்..
“என்னை நம்பி கண்ண மூடு மைனி… நாலடி தான். கீழ விழாம பாத்துக்கிறேன்..”
‘அண்ணனும் தம்பியும் அதையே சொல்லுங்க!’ வாய்க்குள் முணுமுணுத்தவள்,
“என்ன செல்வா… ஏற்கனவே டார்ச்சையும் அணைச்சிட்ட.. துழாவிட்டே தான் வரேன். இதுல கண்ணு திறந்திருந்தா என்ன.. மூடி இருந்தா என்ன? கீழ தள்ளி கைய கால உடைச்சிடாத. உங்கண்ணனுக்கு தெரிஞ்சதும் மீதி இருக்க கைய கால அவரே ஒடைச்சிடுவார்”
“கண்ணையும் உன் வாயும் கொஞ்சம் மூடேன்.. மைனி”
அவன் கூற ஏதோ நம்பிக்கையில் கண்ணை மூடி கையை நீட்ட.. நான்கடி கூட்டிச் சென்றான்.
“கொஞ்சம் பள்ளம் பாத்து கால் வை..” என்றான்
“கண்ணை திற” என்றான்
களைத்த காலுக்கடியில் ஐஸ் கட்டி குளுமை. கண்ணைத் திறந்தால்… காலுக்கடியில் வெள்ளி நீரில் நட்சத்திர கூட்டம். அத்தனை பெரிய பாறையை யார் குடைந்தது? ஆழம் இல்லை. தெளிந்த நீர் ஊற்று. குழந்தைகளுக்கான நீச்சல் குளம் போல் அமர்ந்து மகிழலாம். கண் தன்னால் விரிந்தது.
அவளை தனியே விட்டுத் தள்ளிச் சென்று தலைக்கடியில் கைகொடுத்துப் படுத்துக் கொண்டான்.
இரண்டு சுவருக்கு நடுவே இப்படி ஒரு அழகா? பறைக்குள் நீர் ஊற்றா? ஆண்டவன் படைப்பே வியப்பானது தான்.
சிறிது நேரத்தில் அவன் பக்கம் சென்று அமர்ந்து கொள்ள.. அவனோ வானை வெறித்தான்.
“படுத்துக்கோ மைனி… வானத்த பாரு..” என்றான்.
கரு நீல வானம்.. அள்ளி தெளித்த நட்சத்திர கூட்டம்… நடுநாயகமாக நிலா.. இது போதாதென்று அவர்களைச் சுற்றித் திரிந்த மின் மினி பூச்சிகள்.
குளிர்ந்த நீர் பட்ட ஈர முகத்தை வருடிய மண் வாசம் பொதிந்த தென்றல் காற்றும், தலை மேல் மின்னிக் கொண்டிருந்த வானமும்.. அருகே வானைத்தை தன்னுள் அடக்கிய தெளிந்த நீர் நிலையும்… பிரமிப்பைக் கொடுத்த ஆயிரம் மின் மினி பூச்சிகளும்… இருவரையும் மோன நிலைக்கு தள்ளியது.
“வானம் இவ்வளவு பெருசா? லட்சம் நட்சத்திரம் பார்த்தே இல்ல செல்வா.. இந்த மின்னாம்பூச்சி.. ஒண்ணு ரெண்டு தான் பார்த்திருக்கேன் என் பாட்டி வீட்டில.. இத பாக்க ஆயிரம் கண்ணு வேணும்.”
“…”
“தாங்கஸ் செல்வா”
“மூர்த்தி அண்ணா தான் என்னோட பத்தாவது பர்த்டேக்கு.. எனக்கு இத காட்டினது. எனக்கு அண்ணா மாதிரி உடம்ப ஏத்தணும்னு ஆசை. ஆனா அப்புறம் இங்க இப்படி வர முடியாது. அதனால தான் இப்படியே சுத்தறேன்..”
அவன் தான் பேசினான். வீட்டுக் கதைகள் எல்லாம் கூறினான். “மூர்த்தி அண்ணா எங்க வீட்டுல ரொம்ப ஸ்பெஷல். எல்லாருக்குமே அண்ணா பாத்துப் பாத்து செய்வான். வீட்டுக்கு எப்பாவது வந்தாலும் வீட்டுல நடக்கற விஷயம் எல்லாம் தெரியும். அண்ணா எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.
அண்ணன் தான் இந்த உலகத்தைக் காட்டினது. மெட்ராஸ் கூட்டிட்டு போய் அடுத்த உலகத்தையும் அண்ணா தான் காட்டினான். எனக்கு படிப்பு வராது.. ஒண்ணுக்கும் நான் லாயக்கில்லைன்னு நினைச்ச நினைப்ப மாத்தினது அண்ணா தான்.
எனக்கு படிப்பு மண்டைல ஏறல.. வீட்டில பசங்க ஒருத்தரும் மதிக்கவே மாட்டாங்க. அண்ணா மட்டும் தான் ‘உன்னால முடியும்… ட்ரை பண்ணு. அப்படியும் பிடிக்கலனா.. உனக்கு பிடிச்சத கண்டுபிடுச்சு செய். திறமை இல்லாத மனுஷனே இல்ல. எது செஞ்சாலும் ஈடுபாடோட செய்’ன்னு சொல்லுவான்.
வாழ்க்கைல நல்லது கெட்டது நிறையச் சொல்லி தந்திருக்கான். அண்ணா எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
நீ கூட ரொம்ப ஸ்பெஷலா தான் இருக்கணும்னு நினைச்சேன். நான் நினைச்சது சரி தான் மைனி. நீ ரொம்ப ஸ்பெஷல்.
என் மைனி அளவுக்கு இந்த ஊர்ல ஒருத்தி அழகு இல்லன்னு நினைச்சேன். ஆனா வெளி அழகு மட்டுமில்ல.. உன் மனசு அப்படியே மூர்த்தி அண்ணா மாதிரி. ரொம்ப பாசமா இருக்க.. எனக்கு சொல்ல தெரியல.. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு, மத்த ரெண்டு மைனியும் அம்மா மாதிரி தான். கொஞ்சம் ஒதுக்கம் இருக்கும்… ஆனா நீ என் ஃப்ரெண்ட். இருபது நாள்ல க்லோஸ்சா நான் யார் கிட்டயும் ஆனதே இல்ல. தாங்க்ஸ் மைனி”
நீண்ட மௌனம். தென்றல் காற்று தாயாக மாற.. மூர்த்தி கனவில் வந்தான். எப்பொழுது கண்ணயர்ந்தார்கள் தெரியாது. எவ்வளவு நேரமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்? தெரியாது.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்… விடியும் முன் ஒருவரும் அறியாமல் வீடு போய்ச் சேரவில்லை என்றால்… அண்ணன் வருங்கால மனைவியோடு இரவை கழித்தான் செல்வன், என்ற சொல் ஒரு குடும்பத்தை அழித்துவிடும்.
அந்த நெருப்பில் துளசியோடு, செல்வனோடு மூர்த்தியும் அழிந்து போய்விடுவான்.
விளையாட்டு அவசியம், ஆர்வம் அவசியம்.. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்து அறிவது இன்னும் அவசியம்.