செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 32_1
புயல் காற்றோடு மழை பெய்து ஓய்ந்த அமைதி வீட்டில்… அதுவும் அடுத்த பத்து நிமிடம் தான். அதன் பின் பந்தல் கட்ட ஆட்கள் வரவும், வீட்டு வேலை, திருமண வேலை என்று அனைவரையும் இழுத்துக் கொள்ள.. மீண்டும் வீடு பரபரப்பில் மூழ்கியது.
செல்வனுக்கு முகமும் உடலும் வலி பின்னியது. அதை விட மனம்! அண்ணன் அடித்த வலி சென்றுவிடும். அண்ணன் தன்னை தவறாக எண்ணி விட்டானே? ‘வாழ்கைல ஒரு கட்டுப்பாடு இல்லியா உனக்கு?’ மீண்டும் மீண்டும் அதே வரி தான் அவனைச் சுற்றி வந்தது. அப்படிப் பட்ட எண்ணத்தோடு செல்லவில்லை என்று அண்ணனுக்குத் தெளிவு படுத்த மனம் துடித்தது. ஆனால் அண்ணன் ‘யார் அவள்?’ என்று மீண்டும் கேட்டால்?
கூட்டி சென்றது ‘உனக்கு மனைவியாகப் போகிறவளை’ என்று எப்படிச் சொல்ல? துளசியைச் சந்தேகப் படுவானோ? திருமணம் நின்று விடுமோ? துளசியின் வாழ்க்கை? ‘உன் அண்ணான்னா எனக்கு உயிர்’ என்று கூறினாளே..
கட்டில் விளிம்பில் அமர்ந்து முழங்காலில் ஊன்றியிருந்த கைக்குள் முகம் புதைத்திருந்த செல்வன் தலையை ஒரு கை வருடவுமே அவனுக்குத் தெரிந்தது நிற்பது மூர்த்தி என்று.
செல்வன் உடல் குலுங்கவுமே.. “சாரி செல்வன். உன்ன அடிச்சதுக்கு இல்ல. உன்ன மட்டும் தண்டிச்சதுக்கு. நீ செஞ்சது தப்பு தான். இனி மேல் ஆழம் தெரியாம கால விடாத.” கூறியவனின் கையை பிடித்துக்கொண்டு எழுந்தவன்..
“இல்ல ண்ணா… நான் தப்பான எண்ணத்துல போகவே இல்ல. அந்த நோக்கமும் இல்ல. மலைக்கு நடுவில் இருக்க இடத்த காட்டணும்னு தான் கூட்டிட்டி போனேன்… நம்பு ண்ணா. உன் தம்பி தப்பானவன் இல்லண்ணா.. சத்தியமா அவங்க என் ஃப்ரெண்ட் ண்ணா. தப்பா மட்டும் நினைக்காதண்ணா… என் கூட பிறந்தவ மாதிரி அவங்க.. ப்ளீஸ் நம்பு ண்ணா.” மூர்த்தியின் முகம் பார்க்காமலே சொல்லி முடித்தவனுக்கு, தான் சென்றது துளசியோடு என்ற விஷயத்தைச் சொல்லத் தைரியமில்லை.
அவன் கூறாததை, தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மூர்த்திக்கு மனமில்லை.
“நைட் தனியா ஒரு பொண்ண கூட்டிட்டி என்ன தைரியத்தில போன? அவளுக்கு ஏதாவது ஆனா.. அவள காப்பாத்த உன்னால முடியுமான்னு யோசிக்க மாட்டியா? போற வழியில ஒரு பூச்சி கடிச்சு மயங்கி விழுந்தா அவள தூக்கிட்டு எங்க போவ? இல்ல.. உனக்கு ஏதாவது ஆனா.. அந்த பொண்ணு என்ன பண்ணும் அந்த இருட்டில? இதே நீ ஒரு பையன் கூட போயிருந்தா விஷயமே வேற!
யோசிக்கணும் செல்வன். நாம ஒரு காரியம் செய்யறதுக்கு முன்ன யோசிக்கணும். குருட்டாம் போக்கில செய்யக் கூடாது. அதனால வர விளைவுகளை ஆராயணும். இன்னும் நீ சின்ன பையன் இல்ல. நீ தனி ஆளில்ல எப்படி வேணுனாலும் இருக்கலாம்னு நினைக்க. உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு.. (simplyearth.com) நீ செய்யற காரியம் வீட்டு ஆட்களை பாதிக்கும்னு நீ யோசிக்கணும். அந்த பொண்ணையும் அவ சம்பந்த பட்டவங்களையும் பாதிக்கும்.
நாலு பேரு உன்ன பார்த்தா அந்த பார்வைல ஒரு மரியாதை தெரியணும். அந்த மரியாதை அதுவா வராது. நம்ம நடத்தைய தான் பார்ப்பாங்க. நீ தப்பானவன் இல்ல.. ஆனா நீ ஒரு பொண்ணோட ராத்திரி முழுசும் மலைல தனியா இருந்தன்னு வெளில தெரிஞ்சா.. நல்லா இருக்குமான்னு மட்டும் யோசி!
இது சின்ன கிராமம். ஊர் உங்க ரெண்டு பேரையும் எப்படிப் பேசும்? அத அவ தாங்குவாளா? எதுனாலும் செய்யறதுக்கு முன்ன யோசி. இதையே நீங்க வெளி உலகத்தில செஞ்சிருந்தா தப்பா பேச மாட்டாங்க. நீ கூட்டிட்டு போறவள பத்திரமா கூட்டிட்டு வந்தா போதும். இடத்துக்கும் சூழலுக்கும் ஏத்த மாதிரி நியாயமும் தர்மமும் கூட மாறும்.
தைரியமா அவ யாருன்னு உன்னால சொல்ல முடியல இல்ல… ஏன்னு யோசி!”
கூறியவன் சென்ற பின்னும் செல்வனால் தலையை நிமிர்த்த முடியவில்லை. அண்ணனிடம் உண்மையைக் கூற முடியாத ஊமையாகிப் போனதை எண்ணி வருத்தப்பட மட்டும் தான் முடிந்தது.
அன்று இரவு உணவுக்கானதை எடுத்துக் கொண்டு மூர்த்தி தோட்ட வீடு சென்றான். பானுவுக்கு கோபம் மூர்த்தி மேல்.. “தம்பிய இப்படி தான் அடிப்பியா நீ? ரொம்ப முரடன் ஆகியிருக்க நீ. எங்க இருந்து கை நீட்டுற பழக்கம் உனக்கு? அவன் உன் கைய பிடிச்சிருந்தா உனக்கு தானே அவமானம்? சரி.. அவன விடு. இந்த பிள்ள என்ன டா பண்ணினா? உன்ன பாக்க வந்தவள திட்டி துரத்திட்டியாமே… நந்தினி சொன்னா. உன் வாத்தியார் வேலை எல்லாம் உன் ஸ்கூலோட வச்சுக்கோ. அங்கேயும் இப்படி தான் பிள்ளைங்கள அடிப்பியா?”
சிரித்து விட்டான். “இந்தா இதுல உருள கிழங்கு தீயல் இருக்கு. இதுல ஆப்ப மாவு. போ.. போய் ஆப்பம் ஊத்து. அவ மதியம் ஒழுங்கா சாப்பிட்டிருக்க மாட்டாளே?”
“ஆமா மூர்த்தி.. போராடி நாலு வாய் மயக்கிய மருச்சினியும் மீனும் சாப்பிட்ட வச்சேன். அவ்வளவு தான். அவள பத்தி எல்லாம் தெரிஞ்சு இருந்தும் பிள்ளய அழ விடு!! என்ன மனுஷனோ நீ?”
அவன் ஆப்பத்தோடு துளசியிருந்த அறைக்குச் செல்ல.. அவர் சோறும் மசித்த மரிச்சினியும் மீனுமாய் அடுக்களையில் அமர்ந்து கொண்டார்.
கதவை திறக்கும் சத்தம் கேட்டு முகம் நிமிர்ந்தவள் முன் தட்டோடு வந்தவன் எதையும் கேட்கவில்லை.
ஒரு வாய் அப்பத்தை நீட்ட.. “என்னை வாய மூடிட்டு போய் தொலைன்னு சொன்னீங்க மூர்த்தி சார்.” என்றாள் ஆதங்கத்தோடு.
“ஆமா சொன்னேன்.” நீட்டிய கையை எடுத்தானில்லை.
“என்னை ஹர்ட் பண்ணிட்டீங்க.. சாரி சொல்லுங்க” என்றாள் பிடிவாதமாய்.
“அதெல்லாம் கேக்க மாட்டேன். என் கோவத்த கிளறாம முதல்ல சாப்பிடு. அப்புறம் சொல்லு உன் நியாத்த.”
அவன் சத்தம் உயர்த்தாமல் சத்தம் போடவே… அமைதியாக வாய் திறந்தாள். இருவர் பார்வையும் மோதி நின்றபோதும் உண்டு முடியும் வரையும் இருவரும் ஒன்றும் பேசவில்லை.
பார்வை காதல் மொழி பேசவில்லை. மன்னிப்பை யாசிக்கவில்லை. தவறை சுட்டிக்காட்டவில்லை. பேசு என்று அவனும்… என்ன பேச என்று அவளும் பார்த்து நின்றனர் அவ்வளவு தான்.
உண்டு முடிக்கவும் அமைதியாக அவளருகில் அமர்ந்துகொண்டான். வாய் திறந்தானில்லை. திட்டியிருந்தாலோ.. அடித்திருந்தாலோ கூட தாங்கியிருப்பாள்.. இந்த மௌனம் கொன்றது. காதிலிருந்த ரத்தம் வரவே இல்லையே… ஏன்?
ஏதாவது கூறுவாள் என்று பார்க்க.. அவள் நகத்தைத் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். வாய் திறக்காதவளிடம் என்ன பேச.. அவன் எழ.. அவளும் எழுந்துகொண்டாள். அவன் முன் போய் நின்று கொண்டவள் அவன் கண் நோக்க.. அவனும் சளைக்காமல் பார்த்தான்.
“நீங்க செல்வன அடிச்சிட்டீங்க” அடுத்த குற்றம் சாட்டினாள்.
“உன்ன அடிக்கலன்னு வருத்தமா இருக்கா?” முறைத்துக் கொண்டே பதில் கேள்வி கேட்க.. அவளும் அடுத்த கேள்வியோடு நின்றாள்.
“ஏன் அடிச்சீங்க அவர?”
கடுப்பாகி போக, அவன் கதவை நோக்கிச் செல்லவும், கையை பிடித்துக்கொண்டாள்.
“வாழ்க்கைல ஒரு ரசனை வேணும் மூர்த்தி சார். இல்லேனா வாழ்க்கை சப்புன்னு இருக்கும். தலைக்கு மேல நாலு நட்சத்திரம் பார்த்த நான், லட்சம் நட்சத்திரம் பார்த்தேன்.. வானம் மேல மட்டும் இல்லாம அது என் பக்கத்தில கை தூரத்தில் இருந்துது. அந்த தண்ணி என்ன டேஸ்ட் தெரியுமா? அது தொண்டைல இறங்கும் போது ஐஸ் கட்டி தண்ணியா கரைஞ்சு போச்சு.. க்ரிஸ்பி வாட்டர்!
ஒரு பூச்சிக்குள்ள பல்பு மூர்த்தி சார்… நியாயப்படி நீங்க தான் என்னைத் திருட்டுத் தனமா அங்க கூட்டிட்டு போயிருக்கணும். எவ்வளவு ரொமாண்டிக்கா இருந்திருக்கும் தெரியுமா? பச்! எல்லாம் என் நேரம் ஒரு வயசான ரசனையே இல்லாத வாத்திக்கு வாழ்க்கை பட்டிருக்கேன்.. அவரும் ரசிக்க மாட்டார் என்னையும் ரசிக்க விட மாட்டார்.”
“இதுக்கு பதில் சொல்லு.. மலைல உங்கள மாதிரியே ரெண்டு மூணு பேரு திருட்டு தனமா வந்திருந்தா.. செல்வன அடிச்சு போட்டுட்டு உன் கிட்ட வந்தா?”
“வந்தா என் கை என்ன சும்மா இருக்குமா?”
“என்ன பண்ணி இருப்பா?”
“கிட்ட வரவன மொத்தியிருப்பேன்..”
இரு கையால் அவள் இரு கரத்தையும் அவளுக்குப் பின்னால் கொண்டு சென்று ஒற்றைக் கையால் அவள் இடையோடு இரு கைகளையும் பிடித்தவன்.. மறு கையால் அவள் நாடியின் அடியில் பிடித்து முகத்தைத் தூக்கிப் பிடித்து.. காலால் சுற்றி வளைக்கவும்… பெண்ணால் இம்மி நகர முடியவில்லை.
எல்லாம் நொடிப் பொழுதில் அவன் செய்திருக்க… அவனோடு ஒட்டி நின்றவளுக்கு அசைய முடியவில்லை. அவன் பார்த்த அந்த பார்வை.. அவளை ஏதோ செய்ய எச்சில் விழுங்கினாள்.
“வயசான வாத்தி கிட்ட இருந்தே தப்பிக்க முடியலியே துளசி மா..” என்றவன், அவள் முகம் நோக்கிக் குனிய அவளுக்கு அசைய முடியவில்லை.. ‘என்ன செய்யப் போகிறார்?’ கண் மட்டும் விரிந்தது. எச்சில் விழுங்கிய தொண்டை ஏறி இறங்க.. அதை நோக்கிக் குனிந்தவன் மீசை நாடியில் உரையவுமே, பெண்ணுக்கு மூச்சு முட்டியது. என்ன நினைத்தானோ.. குனிந்தவன் நிமிர்ந்தான்.
“ரசனை இருக்கு துளசி மா. நான் காட்டல அவ்வளவு தான். இதோ இப்போ ஏறி இறங்கின உன் தொண்டையும்.. என்னை அப்படியே உள்ள இழுக்கிற உன் தொண்டை குழிய கூட ஒரு ரசனையா தான் பாக்கறேன். பயப்படாத.. ரொமான்ஸ் எல்லாம் நல்லாவே வரும் உன் மூர்த்தி சாருக்கு… ஆனா நீ தாங்குவியா? சொல்லு.. நான் ரெடி தான்”
“வலிக்குது மூர்த்தி சார்..” என்றாள் ஈனஸ்வரத்தில்.
அவளை விட்டவன், “வாழ்க்கைய ரசி. வேகத்தோட விவேகமும் வேணும் அவ்வளவு தான்!” எனவும்.. அவளுக்கு அவன் கைக்குள் சிக்கிக் கொண்ட கோபம்.
“எல்லாம் இருக்கு.. உங்களுக்கு தான் ஒண்ணும் புரியல. சும்ம எதுக்கு எடுத்தாலும் கை நீட்டிகிட்டு!” என்றாள் காட்டமாக.
அவன் மௌனம் காக்க.. “என்ன பேச முடியலையா? உண்மை சுடுதா?” என்று அவன் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை மெல்லக் கிளறினாள்.
“நீ செஞ்சது அசட்டு தனம்ன்னு கூட புரியாத உங்கிட்ட பேச ஒண்ணும் இல்ல. நகரு துளசி.” கோபம் எழ அவளைத் தள்ளி நிறுத்திவிட்டு கதவில் கைவைக்க.. கதவுக்கும் அவனுக்கும் இடையே புகுந்து நின்றாள்.
ஒரு அங்குல இடைவெளியில் நிற்பவள் முகம் அவன் நெஞ்சை நோக்கி இருக்க… எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. ‘கோபித்துக் கொண்டாரா? இனி இவரை எப்படி மலை இறக்க? அவள் பக்கம் தவறில்லை என்று எப்படி உணர்த்த? நீங்க தான் ஓவரா ரியாக்ட் பண்றீங்க.. என்று எப்படி புரியவைக்க’ – இது தான் அவளின் யோசனை.
“ரெண்டு மணி நேரத்தில வந்திடலாம்ன்னு தான் போனோம்.. தெரியாம.. தூ..தூங்கிட்டோம்..” மெலிதான குரலில் நெஞ்சை பார்த்துக்கொண்டே உரைத்தாள்.
“ம்ம்”
“பிரச்சினை ஆகும்ன்னு நினைக்கல. தம்பியும் நானும் தானேன்னு நினைச்சேன்.”
“ம்ம்”
“பிரிச்சினை தான் ஆகலியே! இருந்தும் நீங்க ரொம்ப தப்பா பேசிடீங்க. உங்க தம்பி எனக்கும் தம்பி தான்.”
“உங்க ரெண்டு பேர் பார்வைக்கு மட்டும் தான் அக்கா-தம்பி எல்லாம். ஊர் உலகம் அப்படி பாக்காது. இது மெட்ராஸ் இல்ல. நீங்க ஜோடி போட்டு சுத்தினது யார் கண்ணுலயாவது பட்டிருந்தா… நைட் பூரா மலைல தனியா இருந்தது ஒரே ஒருத்தருக்கு தெரிஞ்சிருந்தா.. ஊரே உங்கள தப்பா பேசி இருக்கும். அதுக்கப்புறம் என்னை உன் கழுத்தில எப்படி தாலி கட்ட விடுவாங்க?”
“மூர்த்தி சார்?”
“உனக்கு நான் வேண்டாமா?”
“ஏன் இப்படி பேசறீங்க? உங்க கூட நியர்லி இருபத்தி ஐஞ்சு நாள் ஒரே வீட்டுல இருந்திருக்கேன். நீங்க மட்டும் தான் ஒழுக்கத்தின் மறுபிறப்பா? உங்க தம்பி இல்லியா? என்ன ஒரு நம்பிக்கை தம்பி மேல? அப்படியே ஊர்ல இருக்க யாராவது பேசினா… நீங்க சும்மா போயிடுவீங்களாக்கும். சும்மா என் கிட்ட கதை பேசாதீங்க. எனக்கு உங்கள தெரியும். யார் என்ன சொன்னாலும் என் கழுத்தில நீங்க தான் தாலி கட்டுவீங்க.”
“நல்லா பேச கத்துகிட்ட நீ! பச்! சொல்ல வரத புரிஞ்சுக்கவே மாட்டேன்ற! அந்த ரௌடி பசங்க கண்ணுல நீங்க பட்டிருந்தா.. யோசிக்கவே முடியல துளசி. ஏன் இப்படி எதையுமே யோசிக்க மாட்டேன்ற? ஒரு தரம் பட்டதே ஆயுசுக்கும் மறக்க முடியல… இது நமக்கு தேவையா?”
“பாத்தோம்..” என்றாள்.
“என்னத்த?” குரல் மாறியது.
“அந்த மூணு பேர.. அவங்களும் எங்கள பாத்துட்டு துரத்தினாங்க.. ஆனா நாங்க தப்பிச்சுட்டோம். பிரச்சினை இல்ல மூர்த்தி சார்”
“என்ன… என்ன சொன்ன?” அவன் உயிர் துடித்தது. உடலில் மெலிதான நடுக்கும்.
துளசி என்பதால் மட்டுமே இன்னும் அவன் கை அவள் கன்னம் வருடவில்லை. அப்படி ஒரு கோபம் அவனுள். அடக்கிக் கொண்டான்.
“எதுவுமே என் கிட்டச் சொல்ல தோணலையா?”
“நீங்க திட்டுவீங்க…”
“அதனாலா..?” நெற்றி சுருங்கி.. புருவம் நெளிந்தது.
“தம்பிக்கு இடம் தெரியும். பிரச்சினை வராதுன்னு நினைச்சோம். உங்க தம்பி தானேன்னு நம்பி… உங்கட்ட அப்புறம் சொல்..லிக்..கலாம்..ன்னு..”
“எப்போ துளசி? எப்போ சொல்லலாம்ன்னு நினைச்ச? இப்போ கூட உனக்கு சொல்ற ஐடியாவே இல்லயே.. அவன அடிச்சதுக்கு தானே சண்டைக்கு வந்த… உண்மைய சொல்ல நினைக்கவே இல்லியே?”
“உங்கட்ட சொன்னா நீங்க விடமாட்டீங்க. அதனால அப்புறம் சொல்லலாம்ன்னு..”
அவனிடம் பதிலில்லாமல் போகவே மெல்லத் தலை தூக்க… அவன் முகம் சரியில்லை. என்ன யோசிக்கிறான் என்று புரியவில்லை. சின்ன ஏமாற்றம் அவனிடம். அவளுக்குப் புரியும் பாஷையில் பேசவில்லை என்பது புரிந்தது.
‘மீண்டும் கோபத்தைத் தூண்டி விட்டுவிட்டேனோ?’ தவறை சரி செய்ய முயன்றாள். தன்போல் த்வனி மாறியது. குரலில் நடுக்கம்.. “தப்பு பண்ணிட்டேனா மூர்த்தி சார்? கண்டிப்பா சொல்லி இருப்பேன் மூர்த்தி சார்..”
“எப்போ துளசி? எல்லாம் முடிஞ்ச பிறகா?” உணர்ச்சியற்ற குரல் அவளை அசைத்துவிட, “மூர்த்தி சார்?” கலங்கினாள்.
“ஊர்ல இருக்க எல்லாவனையும் நம்பிப் போக உனக்கு ஒரு காரணம் இருக்கு. செல்வன இருபது நாளா தெரியுமா? அவன நம்ப முடிஞ்சுது! ஆனா.. என்னை உன்னால நம்பவே முடியல? உனக்காக நான் இருப்பேன்… உனக்காக எதுவும் செய்வேன்னு உனக்கு தோணவே மாட்டேங்குது. எனக்கு புரியல துளசி… என் காதல உணர்த்த எனக்கு தெரியல போல.. இல்ல அத உணர உனக்கு பிடிக்கலியான்னு கூட தெரியல..”
துளசி கண்ணில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. ஏதோ விளையாட்டாக ஆரம்பித்தது. அவனை இப்படிக் காய படுத்தும் என்று தெரியாமல் போனதே..
“மூர்த்தி சார்.. எனக்கு உங்கள பிடிக்கும்.. ரொம்ப பிடிக்கும் நம்புங்க. ஏதோ விளையாட்டா..”
“நிறுத்து துளசி. பிடித்தம் வேற.. விருப்பம் வேற. இது கூட எனக்கு உரைக்கவே இல்ல பாரேன்! நான் தான் தப்பா நினைச்சுட்டேன் போல!
உனக்கு இந்த கல்யாணத்து மேல கொஞ்சமாது பிடித்தம் இருந்திருந்தா இந்த வேலை செஞ்சிருக்க மாட்ட.
உனக்கு என் மேல கொஞ்சமாது காதல் இருந்திருந்தா.. நடு ராத்திரி கிளம்பி வெளில போகறதுக்கு முன்ன என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருப்ப… இல்ல சொல்லியாது இருப்ப!
உனக்கு என்னைப் பத்தியும் கவல இல்ல… நமக்கு நடக்க இருக்கக் கல்யாணம் பத்தியும் கவல இல்ல. உனக்கு உன் விருப்பம்.. உன் சந்தோஷம் அது மட்டும் தான்.”
“ஏன் மூர்த்தி சார் இப்படி எல்லாம் பேசறீங்க? பயமா இருக்கு மூர்த்தி சார்… அப்படி பேசாதீங்க. நிஜமா விரும்பறேன் மூர்த்தி சார்.”
“பச்.. வேண்டாம் துளசி.. எனக்காக எதுவும் பேசாத! உனக்கு நான் வேண்டாம்ன்னு நினைச்சா சொல்லிடு. இந்த கல்யாணம் வேண்டாம்ன்னா சொலிடு. ஏதோ நான் உன் பின்னாடியே தொங்கறேன்னு எனக்காக தியாகம் எல்லாம் பண்ண வேண்டாம். உனக்கு பிடிக்காட்டி கல்யாணம் வேண்டாம் துளசி!”
கதவில் சாய்ந்திருந்தவள் சிலையாய் மாறிப் போக, அவளைத் தள்ளி நிறுத்திவிட்டு, “நாளைக்கு ஈவ்னிங் ட்ரெயின்ல டிக்கெட் போடுறேன். செல்வன் உன்ன ஹாஸ்டல்ல விட்டிடுவான். உன் இஷ்டம் போல இரு துளசி.” வெளியே சென்றுவிட்டான்.