செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 35
“கிளம்பறேண்டி கோந்தே. பெரிய குடும்பம். பார்த்து பக்குவமா இருடிமா. மனசுல தோன்றதெல்லாம் சட்டுனு பேசிடாத. அனுசரிச்சு போ.. எப்போ ஆத்துக்கு வர?”
“காலேஜ் டென் டேஸ்ல ஓப்பன் ஆகுது. அதுக்கு ஏத்த மாதரி வரணும் மாமி.”
திருமணம் முடிந்த அடுத்த தினமே மாமி, மாமா கிளம்பிவிட்டனர். அதற்கு அடுத்த நாள் சித்தி குடும்பம். சத்யனோடு ப்ரேம் குடும்பமும் கிளம்பி இருக்க… துளசியின் தோழர்களும் கேரளா பயணப்பட்டிருக்க.. வீட்டில் குடும்பத்தினர் மட்டுமே.
இரண்டு ஐ.பி.ஸ் கண்ணிலும் படாமல் போன மணி அடுத்து வந்த இரு தினங்களிலும் வந்தானில்லை.
விழாக் கோலம் பூண்டிருந்த வீடு மூன்று நாளில் இயல்பிற்கு திரும்பியது. தோட்ட வீட்டிற்கு தினமும் ஒருமுறை மூர்த்தியோடு சென்று வருவாள். மனதை மயக்கிய மலரை நுகரவும், புதிதாய் நட்ட இருவாட்சிக்கு நீர் ஊற்றவும் என! அந்த நேரம் மட்டும் தான் கணவன் மனைவிக்கான நேரம். மூன்று நாளாய் பானு அறையில் தான் அனைத்தும். இன்று தான் நாள் அமைய.. இன்று தான் துளசி அவள் அறைக்குச் செல்வாள்.
மரத்தடி சென்ற முதல் நாள் அவள் கண்களை மூடி மூச்சை உள்ளிழுக்க..
“என்ன துளசி மா?” என்றவனிடம்
“வாசம் மூர்த்தி சார்..”, என்று கையில் வைத்திருந்த குட்டிக் குட்டி மலர்களை கணவன் நாசிக்கு நேராய் நீட்டினாள்.
அவள் நிம்மதி படர்ந்த முகத்திற்காக இன்னும் கூட நான்கு மரங்களை நட்டு விடத் தோன்றியது.
“இது மகிழம் பூ துளசி. ரொம்ப பழைய மரம். இந்த ஏரியால இது அதிகமா பாக்க முடியாது. நிறைய ஹெல்த் பெனிஃபிட்ஸ் இருக்கு அதனால யாராவது கொண்டு வந்து நட்டிருக்கணும். இன்னைக்கு வரைக்கும் யாரும் இத திரும்பிக் கூட பார்த்தது இல்ல. உனக்கு இது மேல அப்படி ஒரு ஆசை.. ஊஞ்சல் கட்டவா?” ஏதாவது அவளுக்கு செய்துக்கொண்டே இருக்க ஆசை.
“ஊஞ்சல் வேண்டாம் மூர்த்தி சார். என்னமோ தெரியல மூர்த்தி சார். வந்த அன்னைக்கே என்னை இதோட மணம் இங்க இழுத்துட்டு வந்திடுச்சு. காலம் பூரா இதுக்கடியிலேயே இருந்திடலாம் போல் இருக்கு. காலம் முடிஞ்ச பிறகும், நம்ம கல்லறை கூட இதுக்கடியில இருக்கணும் மூர்த்தி சார்…”
சிரித்தான். “அதுக்கென்ன கட்ட சொல்லிடுவோம்.. அதுக்கு இன்னும் நூறு வருஷம் இருக்கு! இப்போ நீ உக்கார வசதி பண்ணி தரேன்.” சொன்னதோடு மறந்து போகவில்லை. அவன் துளசிக்காக மரத்தைச் சுற்றி திண்ணை போல் அகலமான திட்டைக் கட்ட ஏற்பாடு செய்தான்.
ஏற்கனவே வீட்டினரோடு துளசி பொருந்திப் போயிருக்கவே.. இந்த மூன்று நாட்களின் வீட்டோடும் அதன் வழக்கத்தோடும் பொருந்துவது அத்தனை கடினமாயிருக்கவில்லை. அனைத்தும் புதுமை தான். தெரு நீள முற்றம் பெருக்கி, முரட்டு மாட்டிடம் பால் கறந்து, அக்கானி காய்ச்சி, புட்டுக்கு மாவிடித்து, அடுப்பிற்கு சுள்ளி பொறுக்கி, புளி குத்தி, தேங்காய் தொலித்து, மீன் கழுவி, மரிச்சினி நறுக்கி, அவித்து, மசித்து… என்று வேலை இருந்துகொண்டே இருந்தாலும் அனைவரும் வேலையைப் பகிர்ந்து செய்தனர். அவளுக்கென்று தனியே வேலை இல்லை என்றாலும் யாருக்காவது உதவிக் கொண்டிருப்பதில் அலாதி சுகம் தான்.
புதிதாய் கால் ஊன்றிய கன்று போல் துள்ளலோடு மூன்று நாட்கள் முடிய, காலையில் வந்திறங்கியது கேரளா சென்ற கூட்டம். இரவு ரயிலில் பயணப்பட இருப்பவர்களை உபசரிப்பதில் நேரம் சரியாய் போனது துளசிக்கு. பயணப்படுவோருக்கு வாட்டிய வாழை இலையில் பொதி சோறு கட்டும் வரை வேலை இருக்கும்.
மதியம் போல் மணி வந்திறங்கினான். கோமல் கேரளாவிலிருந்து வந்திருப்பாள்.. அவள் மெட்ராஸ் செல்லும் முன் பார்த்துப் பேச வேண்டும்! அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.. அவள் இருக்குமிடம் கண்டிப்பாகத் தெரிந்தாக வேண்டும். இது தான் அவனின் ஒரே எண்ணம். சத்யனும் ப்ரேமும் வராமல் போயிருந்தால் இந்நேரம் அவளிடம் பேசி ஏதேனும் வழி கண்டுபிடித்திருப்பான்.
மூன்று மணி போல் மாமனார் பறித்த மாங்காய் எல்லாம் பின் முற்றத்தில், மாம்பால் கறை நீங்க, அடுக்கிக் கொண்டிருக்க… பாரதியைக் கையில் பிடித்துக் கொண்டு அவர் முன் போய் நின்றாள்.
“மாமா… எனக்கு இருபது மாங்கா தருவீங்களா?” என்று.
ஏனோ அவருக்குத் துளசியைப் பார்த்தால் குட்டி பாரதி போல் தான் தெரிந்தது. இப்படி எல்லாம் யார் இந்த வீட்டில் கேட்பது?
“எல்லாம் பச்ச மோளே..” என்றவர், புளிப்பு அதிகம் என்றார்.
அது தான் அவளுக்கு தேவைப்பட்டது. அமர் சொல்லிக் கொடுத்திருந்தான் ‘ஆம் கா பன்னா’ என்ற பானம் தயாரிக்க. மாங்காவை பார்த்ததும் ஆசை. அதற்குத் தேவைப்பட்ட கருப்பு உப்பு இல்லை என்றாலும் இருப்பது வைத்துச் செய்து கொடுக்க… அனைவருக்கும் பிடித்து போனது.
ஆண்பிள்ளை மனதை மட்டும் தான் வயிறு மூலம் அடைய முடியுமா என்ன? நந்தினி மனதை அடையும் வழியும் அது தான் போல். பெண்ணிற்கு மிகவும் பிடித்துப் போனது. மூன்று நாட்களாய் இப்படி தான் எதையாவது செய்து கொடுத்து பிள்ளைகளை வசியம் செய்திருந்தாள் துளசி.
[the_ad id=”6605″]
“அண்ணா வந்துட்டான். அண்ணாக்கு இது மாதரி புதுசா ஏதாவது ட்ரை பண்ண ரொம்ப பிடிக்கும்” என்றாள் நந்தினி, பானத்தை ருசித்தவாரே.
“எந்த அண்ணாவ சொல்ற?” துளசி தான் அனைவருக்கும் கொடுத்துவிட்டாளே..
“மாசி அண்ணா..” என்றாள்.
மாசியைத் தெரியவில்லை. மணி தானே தெரியும்.
“ஓ.. அப்போ அவங்களுக்கு கொண்டு போய் குடு.”
“நீங்க அண்ணா ரூம் பார்த்தது இல்லியே… சூப்பரா இருக்கும். நீங்க அண்ணாவையும் பாக்கல இல்ல.. வாங்க மேல தான்.. அண்ணாவையும் ரூமையும் பார்த்துட்டு வருவோம்” என்று நந்தினி மணி அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அறையில் அரவம் இல்லை. அவன் இல்லை போலும்.
“நந்து.. ஒருத்தர் இல்லாத போது அவங்க ரூம் போறது தப்பு. வேண்டாம் வா. உங்க அண்ணா வந்த அப்புறம் வரலாம்”
“இது அவன் கலெக்க்ஷன்ஸ் வைக்கற ரூம். இந்த ரூம்ல அதிகம் தங்க மாட்டான். எப்படிப் பார்த்தாலும் இது என் அண்ணா ரூம்.. நான் உள்ள போக யார கேக்கணும்? வாங்க..” உள்ளே இழுத்துச் சென்றாள்.
வீட்டிலேயே அவன் அறை தான் பெரிது போலும். இரண்டு அறையை இணைத்திருந்தான். இரு அறைக்கும் இடையே சுவர் இருந்தது. கதவில்லை. நான்கு கதவைப் புகுத்தும் அளவு இடைவெளி இருந்தது. அறை முழுவதுமே மரத்தால் இழைக்க பட்டிருந்தது. ஒரு வகை நல்ல நறுமணமும் உள்ளே தவழ்ந்தது. அவள் மனதை மயக்கும் அதே நறுமணம். தன்னை மறந்து நின்றாள். சுவர் முழுவதும் ஏதேதோ புகைப்படங்கள். பல இடங்களுக்குச் சுற்றித் திரிவான் போலும்.
படத்திலிருந்த இடங்கள் துளசியை ஈர்த்தது. இப்படி எல்லாம் கூட அழகான இடம் உலகில் உள்ளதா? மலரின் மேல் ரீங்காரமிடும் தேனியைக் கூட இத்தனை அருகில்.. அழகாக எடுக்க முடியுமா? மகரந்த தூளும் தேனியும்.. அவளை உள்ளே இழுத்தது. அடர் கருஞ்சிவப்பில் ரோஜாவா? கருப்பு நிறத்தில் கூட மலரா? மலைத்துப் போனாள்.
கண்ணைக் கவர்ந்த ஓவியங்கள். பெண் லயித்து நின்றாள்.
அபூர்வ சிலைகள். துளசிக்குத் தொட்டுப் பார்க்கும் ஆவல்.
நந்தினி ஒவ்வொன்றாய் காட்டி.. அதைப் பற்றி தனக்குத் தெரிந்ததெல்லாம் கூறினாள்.
“உங்கண்ணாக்கு நிஜமாவே நல்ல டேஸ்ட் நந்து. நேர்ல பார்த்தா கூட ஏதாவது ஒண்ண தான் பார்க்க முடியும். ஆனா இத்தன அழகும் ஒரே இடத்துல பாக்க.. கொடுத்து வச்சிருக்கணும் நந்து. பார்த்துட்டே இருக்கலாம் போல.. அத்தன அழகா இருக்கு.” கனவு உலகில் நின்று கதை பேசினாள்.
அறையிலிருந்த தடுப்பு சுவருக்குப் பின் நின்றிருந்தவன் பார்த்து நின்றான். அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை கோமல் இப்படி தன் அறையில் வந்து நிற்பாள் என்று. அவனின் ரசனையை ரசித்துக் கொண்டு! அவனை பாராட்டிக்கொண்டு!
“அச்சோ.. அருவாமனைய ஓரமா எடுத்து வைக்கம வந்துட்டேன். நீங்க பார்த்துட்டு இருங்க. நான் ஓடி போயிட்டு ஓடி வந்திடுறேன்.” என்று ஓடிப் போனாள் நந்தினி.
நிமிடங்கள் போவது தெரியாமல் ஒவ்வொன்றாய் பார்த்து நின்றாள். அவள் ஓவியங்களை பார்க்க.. அவன் அவனுக்குப் பிடித்த ஓவியத்தை ரசித்து நின்றான். ஆள் பாதி ஆடை பாதி என்ற கூற்று உண்மை தான் போலும். புது பெண் மிக அழகான தளிர் பச்சையில் அவனைப் புரட்டிப் போட்டு கொண்டிருந்தாள். ஆனால் பாவம் அவள் புது பெண் என்பது அவனுக்குத் தெரியவில்லை.
ஒரு பெரிய புகைப்படம். அதில் ஒருவன் இருந்தான். நல்ல களையான முகம். எங்கோ பார்த்த முகம். எங்கே? யோசனையாய் நின்றிருந்தாள். யோசனை மட்டும் தான்! அன்று தோட்ட வீட்டின் முன் பார்த்தாளே.. அவன் தான்! ஓ அவன் தான் நந்தியின் அண்ணனா?
“கோமல்..” என்று அழைத்துக் கொண்டே வந்தான் மணி. முதலில் அவள் கவனிக்கவில்லை. யோசனையில் இருக்கவே கவனிக்கவில்லை.
மீண்டும் “கோமல்..” என்ற அழைப்பு செவிப்பறையை சேருமுன் இதயம் வின்னென்றது. கௌரவ் என்ற அரக்கன் இப்படி தான் அழைப்பான். அவன் இங்கு எப்படி?
“கோமல்” என்றான் மீண்டும். மென்மை… அதே காதல் கலந்த தவிப்பு! குரல் மட்டும் வேறு! திரும்பி பார்த்தாள் இல்லை. திரும்பினால் பேய் இருக்கும் என்று தெரிந்தபின்னும் திரும்பிப் பார்க்க ஆவல் இல்லை. உடல் முழுவதும் ஒரு படபடப்பு.
பின்னால் ஆள் நிற்பது தெரிந்தது. அவள் வீட்டிலேயே யார் இது? உடல் லேசாக நடுங்கியது.
“ஹாய்..” என்றான்.
அவள் வீட்டுல் யாரும் அவளை ஒன்றும் செய்ய முடியாது! இருக்கும் தைரியத்தை எல்லாம் திரட்டி.. ஏதோ அப்போது தான் கவனிப்பது போல்.. தலையை மட்டும் திருப்பியவள்.. புருவம் சுருக்கி, “ஹாஆஆய்?” என்று இழுத்தாள். புகைப்படத்தில் இருப்பவன்! ஹப்பா… மூச்சு மீண்டது.
“நீங்க கோமல் தானே” என்றான் மராட்டியில்.
[the_ad id=”6605″]
பெண்ணிற்குக் காலின் கீழ் தரை நகர்ந்தது. தரை நகர்ந்து பூமி விழுங்கி விடுமா? கால் விரல் கொண்டு அதை நழுவாமல் பிடித்துக் கொண்டாள். இவனுக்குத் தன்னை தெரியுமா? அங்குப் பார்த்திருப்பானோ? வெளியே சொல்லிவிடுவானா? அரை நொடியில் அரண்டு போனாள்.
“நீங்க பேசறது புரியல? என்ன பாஷை?” பொய்யுரைத்தாள். அவன் நெற்றி சுருங்கியது ஒரு வினாடியே. அங்கெல்லாம் மொழி தெரியாத பெண்கள் தானே அதிகம்.
“மராட்டி. உங்கள பார்த்தா நார்த் மாதிரி இருந்துது. பாம்பேயா இருக்குமோன்னு நினைச்சேன்..” போட்டு வாங்க முயன்றான்.
“இல்ல.. ஆனா உங்களுக்கு எப்படி?”
“எனக்கு ஆறு லேங்வேஜ் தெரியும். நீங்க எந்த ஊர்?” அவனுக்கு அவளை பற்றி எல்லாம் தெரியவேண்டி இருந்தது.
“நான் டெல்ஹி! உங்க கலேக்ஷன்ஸ் ரொம்ப அழகா இருக்கு” என்றாள் புன்னகை முகமாய். அவளுக்கு தன்னை பற்றி பேசுவதில் விருப்பமில்லை. அவனை பற்றி தெரிந்து கொள்ள நாட்டமில்லை.
ஒரு சிலதை காட்டி அதை விளக்க ஆரம்பித்தான். ஏதோ பூகோளம் பற்றிய புத்தகம் படிப்பது போல் தோன்ற.. தூக்கம் இழுத்தது.
“நந்தினி கூட வந்தேன்.. என்னைத் தேட போறாங்க.. அப்புறம் பார்ப்போம்..” அவள் கிளம்ப எத்தனிக்க.. அவன் கேட்க விஷயங்கள் உள்ளதே.. எப்படி விடுவான்?
“டெல்ஹி சொன்னீங்க இல்ல? இருங்க உங்களுக்கு ஒண்ணு காட்டறேன்.” அவன் சட்டென்று நகரவும்.. மேசை மீது நந்தினி விட்டுச் சென்ற பானம் கீழே விழ போக, அது கீழே விழும் முன் பிடித்திருந்தான். பாதியும் மேசை மீது சிந்தியது. கீழே சிதறிய துளிகளை இருவருமே கவனிக்கவில்லை.
“இந்த ட்ரிங்க் கொடுக்கத் தான் வந்தோம்” அவள் கூற… “தாங்க்ஸ்..” ஒரு வாய் அருந்தியவன்.. “வாவ். ஆம் கா பன்னா. ரொம்ப நல்லா இருக்கு. ஒரு நிமிஷம் இருங்க வரேன்..” என்று அதை மீண்டும் மேசை மீது வைத்துவிட்டு உள்ளே சென்றான். அவளிடம் பேச்சை வளர்த்து விஷயம் கரக்க வேண்டும்.
‘இவனுக்கு எப்படி கோமல் என்ற பெயர் தெரியும்? தோட்ட வீட்டில் இருக்கும் வேளை சித்தப்பா.. யாரேனும் கூப்பிடுவதை கேட்டிருப்பானோ? இருக்கும்! இந்த குடும்பத்தை சேர்ந்தவன் அவளை, மகாராஷ்டிரா பாலைவன கிரமங்களில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பம்பாயில் வீட்டை விட்டுப் போனதில்லை அதனால் அங்குப் பார்த்திருக்க வாய்ப்பில்லை!
நிமிடங்கள் நகர… அங்கிருந்து செல்ல தோன்றியது. கூறிவிட்டுச் செல்ல காத்திருந்தாள். முதுகு பின் நடந்து வரும் சத்தம் கேட்டது. துளசி திரும்ப நினைத்து ஒரு அடி பின்னோடு காலை எடுத்து வைக்க.. மர தரையில் சிந்தியிருந்த பானம் வழுக்கிவிட்டது.
அவள் விழும்முன் பின்னோடு இடுப்பைப் பிடித்து நிருத்தி தோளைச் சுற்றி கை போடவுமே… “ச்சு.. என்னது இது? தள்ளி நில்லுங்க.. நாம தனியா இல்ல” என்றாள்.
சிரித்தான். “எப்படி துளசி மா? பாக்காமலே கண்டு பிடிச்சுட்ட?”
“ம்ம்கும்… கீழையே விடாம தூக்கிட்டே சுத்தின உங்க முரட்டு கைய எனக்குத் தெரியாதா?” சிரித்தாள்.
[the_ad id=”6605″]
அவள் விழ போகும் போதே தடுப்பைத் தாண்டியிருந்த மணிக்கு மூர்த்தியின் வரவு பிடிக்கவில்லை. அதுவும் அவளின் இடுப்பைத் தொட்டதும்.. தோளில் கை வைத்ததும் கொலை வெறியைக் கிளப்பியது. கோமல் அவனைத் திட்டாமல் சிரித்த முகமாய் பேசிக்கொண்டிருப்பது பயங்கர எரிச்சல்.
“எப்படி கண்டுபிடிச்சீங்க?” மூர்த்தியின் முகம் பார்த்தாள். சுற்றி இருந்த அழகெல்லாம் அவனை பார்த்த பின் மறந்தே போனது.
“நந்தினி உன்ன கூட்டிட்டு வந்ததப் பார்த்தேன்.. அவ மட்டும் கீழ வரவும் உன்ன தேடி நான் வந்தேன். உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்க்கவும் உன் கண்ணுக்கு நான் காலைல இருந்து தெரியவே இல்ல?” சொன்னவன் கன்னக் குழி தெரிந்தது. மூர்த்தியைப் பார்த்துக் கொண்டே இருக்கப் பிடித்தது.
“பத்து நிமிஷ முன்ன தொண்டைக்கடியில எதையோ இறக்கினீங்களே.. யார் குடுத்ததாம்?”
“என்னமோ என்ன மட்டும் தனியா கவனிச்ச மாதரி பேசற?”
இருவர் மட்டும் தான் உலகம் என்பது போல் பேசிக் கொண்டிருக்க.. நந்தி வந்தது. சாரி.. மணி வந்தான்.
மணியின் மனம் கணக்குப் போட்டது. மூர்த்திக்கு இவள் நெருக்கம் என்றால்… மூர்த்தி மூலமாகத் தான் பேச வேண்டும். முதல் முறை இன்முகமாய் மூர்த்தி முன் வந்தான். மூர்த்திக்கு ஆச்சரியமே..
“எப்படி இருக்க மணி?” என்றான்.
“ம்ம்.. இருக்கேன். திடீர் வேலை. கல்யாணத்துக்கு இருக்க முடியலை. வாழ்த்துக்கள்” என்றான், திருவாய் திறந்து.
“தாங்க்ஸ். இவ துளசி.. என் வைஃப்.”
‘என்ன? என்ன சொன்னான்?’ மணிக்கு தலை சுற்றியது.
“துளசி.. இவன் தான் மாசிலாமணி. மணின்னு கூப்பிடுவோம். அக்கா பையன்”
“அறிமுகமாயிட்டோம்..” துளசி புன்னகைக்க.. மணியில் கண் நிலைத்து நின்றது அவள் கழுத்தில். எப்படி கவனிக்காமல் விட்டான்? அது அவர்களுக்கே உரிய முறுக்கு தாலிக் கொடியாயிற்றே…
மணி கையில் வைத்திருந்த சலவைக் கல் தாஜ்-மகால் கீழே தவற… மூர்த்தி அது சிதறாமல் பிடித்து மேசை மேல் வைத்தவன், “பாப்போம் மணி..” என்றவன்.. “வா துளசி..” என்று அழைத்து சென்றான்.
அம்மாவின் மடி தனக்கு மட்டுமே வேண்டும் என்று நினைத்தான். ஆனால் மூத்த மகன் இவன் இருக்க… ஒரு வயது பெரியவன் மூத்த மகனாய் மூர்த்தி, அம்மா மடியில் தலை வைத்திருந்தான். அப்பாவிடம் ஓடுவான்… அப்பா மூர்த்தியைத் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடி கொண்டிருப்பார். எதிலும் மூர்த்தி நின்றான்.. இவனுக்கு முன். பிடிக்கவில்லை, அன்றும்.. இன்றும்!
இரண்டு மாத தங்கம் கூட மூர்த்தியின் விரலைத் தான் பிடித்து சூப்பினாள். அது ஏன்? அனைவருக்கும் அவன் தான் பிடித்தமா? தான் எதிலும் முதன்மை இல்லையா? எங்கும் எதிலும் மூர்த்தி தானா? கோபம்.. இயாலமை.. எரிச்சல்… எல்லாம் மலையாய் இருவர் நடுவில். இன்று? அவன் கனவு கன்னியை.. மனைவி என்று கைபிடித்துச் செல்கிறான்.
இவள் தன் கனவு கன்னி இல்லையோ? இது கோமல் இல்லையோ? ‘கோமல்’ என்றதிற்கு திரும்பவில்லையே… துளசி என்றானே..? மனம் வலித்தது. ஓரளவுக்கு இவள் போல் தானே அவளும் இருந்தாள். கோமல்..? அவளைப் பார்க்கவே முடியாதா? அடிபட்டுப் போனான். மனம் வறண்டு போனது.
மூர்த்திக்கு மட்டும் தேவதை போல் ஒருத்தியா? இதிலும் மூர்த்தி உயர்ந்து நிற்பானா? ‘அவளாக இருந்திருக்க கூடாதா? கவர்ந்து சென்றிருப்பேனே..’
ஒரு முறை ஒருவனிடம் தோற்றுப் போகலாம். வாழ் நாள் முழுவதும் ஒருவனிடம் தோற்றுக் கொண்டே போக வேண்டுமா? தன்னை விட எதில் உயர்ந்து விட்டான்? ஏன் தனக்கு மட்டும் இந்த அநியாயம்? தன்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தானே.. அவனிடம் இருப்பதைப் பிடுங்கினால் அவனுக்கும் வலிக்குமா? மனம் குமுறியது.
ரௌத்திரம்.. உள்ளுக்குள் அனல். தணிக்க முடியாத சூளையின் வெப்பம். ஆனால் இவள் அவளாக இல்லாத போது என்ன செய்ய?